Saturday, January 30, 2010

கவிதாவின் கவிதைகள்


கென்ற வாரம் கவிதாவின் 'என் எதேன் தோட்டம்' என்ற கவிதை நூலுக்கு திருப்பூர் தமிழ் சங்கம் பரிசு வழங்கி இருக்கிறது என்ற செய்தி கிட்டிற்று.தமிழ் நாட்டில் அத்தகைய பரிசு வெளிநாட்டில் வாழும் ஒரு ஈழத்துப் பெண்ணுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

அவரது கவிதைகள் சிலவற்றை யுகமாயினி சஞ்சிகையில் முன்னர் வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்.வீரியமான சிந்தனை வீச்சுக்கள் கொண்ட கவிதைகள் அவை.உதாரணத்துக்கு அவரது இரண்டு கவிதைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சுயம் இழந்து வாழும் ஒரு பெண்ணைப் பற்றி அவர் இப்படி எழுதுகிறார்.

மூலைகள்

இது எனது வீடு
இந்த வீட்டின்
ஒவ்வொரு மூலையும் என்னுடையவை.
ஒவ்வொரு மூலையும் தனித்துவமானவை.

இதோ
இந்த மூலையில்
இரண்டு பாத்திரம்,நாலு கரண்டி
ஒரு அடுப்பு
எல்லாம் எனது.

எதிர் மூலையில்
எனக்கென்று வாங்கித் தந்த
பெரும் இயந்திரங்கள்
துணிகள் துவைக்கவும்
காயப் போடவும்.

ஒவ்வொரு அறையிலும்
பெரிய அலுமாரிகள்
காய்ந்ததை அடுக்கவென்று.

வலப் பக்கம்
இருக்கும் மூலையில் தான்
படுக்கையறை
படுக்கவும்...
கலைக்கவும்...

பின் விரிக்கவும்!

அதன் இடப்புறமும்
எனது மூலைதான்
ஒரு தொட்டில்
பால் போத்தல்கள்
பொம்மைகள்
அழுக்குத் துணிகள்

டீ.வி
மேசை
இருக்கைகள்.
அதன் மேல் எறியப் பட்ட
பொருட்கள்.

அடுக்கவும் துடைக்கவும்
சாப்பாட்டு மேசை.
தூசி தட்ட பலவித பொருட்கள்.

எல்லாம்
என்னுடையவை தாம்.

என் சுயவாழ்வு தவிர.



அவரது இன்னொரு கவிதை இப்படிப் பேசுகிறது.அக்கவிதையின் தலைப்பு

நான்,எனது மகள்

அவர்கள் இவர்கள் என்று
எல்லோருமாய்
உருவகித்த என்னில்

இப்போதெல்லாம்
தேடிக் கொண்டிருக்கிறேன்

எங்கேயாவது மிச்சமிருக்கிறதா
நான்?

மிஞ்சிக் கிடக்கும்
என்னில் துளிர்விடும்
மகள்
நாளை தேட மாட்டாள்
அவளை

அவளுக்குரிய வட்டங்கள்
போடப்படும்
அவளது கைகளால்

காத்திருக்கிறேன்
நம்பிக்கையோடு
அவளுக்குக் கொடுக்கவென்று!

நன்றி; யுகமாயினி இதழ் 17.

வாழ்த்துக்கள் கவிதா!

Monday, January 18, 2010

வைரமுத்துவின் தமிழ் சுவை


பொதுவாக ஒரு புத்தகம் படிக்கின்ற போது அதில் சொல்லப் பட்டிருக்கிற கருத்தில் தான் முழுக் கவனமும் குவிவது வழக்கம்.அதனைச் சொல்லும் மொழியை எழுத்தாளன் எவ்வளவு லாவகமாகக் கையாளுகிறான் என்பது வைரமுத்துவின் கள்ளிக் காட்டு இதிகாசத்தைப் படித்த போது தான் உணர முடிந்தது.பேராசிரியர் சிவத்தம்மியிடம் இருந்த தமிழ் வீச்சு ஒரு விதமான வீரியத்தோடும் கம்பீரத்தோடும் இருக்கும். புதிய சொல்லாக்கங்களைக் கொண்டு வருவதில் அவர் வல்லவர்.அப்போதெல்லாம் அவ்வாறான சொற்களை எழுதி வைத்துக் கொள்வது வழக்கம்.எஸ்.போ ஒரு பன்முகப் பார்வை என்ற புத்தகத்திலும் அவ்வாறான அழகிய சொற்கள் முத்துக்களாய் எங்கும் சிதறிக் கிடந்தன.

அண்மையில் வாசிக்கக் கிடைத்த வைரமுத்துவின் கள்ளிக் காட்டு இதிகாசத்திலும் அக்கதையை விட அதனைச் சொல்லும் வைரமுத்துவின் தமிழையே அதிகம் ரசித்தேன். ஒரு இதிகாசம் என்பதற்கான சகல தாற்பரியங்களையும் கொண்டிருக்கிறது அது.பெரும் மக்களைக் கொண்ட பூமிப் பரப்பு, பல கதை மாந்தர்,எக்காலத்துக்கும் பொருந்தத் தக்கனவாய் சிதறிக் கிடக்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்,வசீகரமான கதைப்பாங்கு,...என ஒரு உலகத்தையே கண்முன் கொண்டு வருகிறார்.

இப்பதிவில் நான் ரசித்த சில வைரமுத்துவின் தமிழ் சுவையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1)மனம் புண்பட ஒருவன் பேசி விட்டுப் போனான் என்பதை,
'உள்காயம் படுகிற மாதிரி அவன் அடித்து விட்டுப் போனான்'

2)பொதுவாக மழை பெய்து விட்டுப் போன பின் வானம் தெளிவாக இருக்கும். அதன் பின் வருகின்ற மஞ்சள் வெய்யில் பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கும்.ஒருவரின் மனம் தெளிவாக இருந்தது என்பதை சொல்ல வைரமுத்து இவ் உவமையை அழகாகப் பயன் படுத்தி இருக்கிறார்.இயற்கையை உற்று நோக்கி சிலாகிக்கும் ஒருவரால் அச் சொல்லின் தாற்பரியத்தை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியும்.
'மழை அடிந்த வானம் தெளிவாக இருந்தது மாதிரி'என்பது அச் சொல்லடி.

3)ஒரு முதியவர் தளர்ந்து போய் நடந்து போனார் என்பதை
'அவர் தன் உடம்பையும் உசுரையும் கைத் தடிக்கு மாற்றி ஓசை இல்லாமல் ஊர்ந்தார்' என்கிறார்.

4)இன்னொரு இடத்தில்'உள்ளீடில்லாத சட்டை ஒன்று நடந்து போவது மாதிரி'என்று ஒரு உவமை சொல்கிறார்.

5) கற்பனையில் அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்று சோகிக்கிற தன்மை ஒன்று மனித வர்க்கத்தில் இருக்கிறது.அதனை அவர் 'கற்பனா சோகம்' என்கிறார்.அழகான ஒரு சொற் பிரயோகம்.

6)ஒரு பெண் பிறந்த வீடு வந்து புகுந்த வீட்டு சோகம் சொல்கிறாள். அதற்கு அவர் 'கண்ணீரில் வார்த்தைகளைக் கரைத்தாள்' என்கிறார்.

7) பாமர மக்கள்; கடும் உழைப்பாளிகள். அவர்கள் படுக்கைக்குப் போனால் அயர்ந்து உறங்குவார்கள். அதனை ஒரு வசனத்தில் கூறுகிறார்.'அவர்கள் மூச்சு விடும் பிணங்களாய் தூங்குகிறார்கள்'

8) ஒரு பெண் விதியின் கோரப் பிடிக்குள் அகப் பட்டு நொந்து போகிறாள். அதனை அவர்,'ஆடத் தெரியாத ஒருத்தியின் கையில் அடிக்கடி தவறி விழும் சொட்டாங்கல்லாய் தப்பும் தவறுமாய் அவளை ஆடி விட்டது காலம்'( அது கொக்கான் வெட்டு விளையாட்டு என்பது என் அனுமானம்)

9)ஒருவன் விரசமான வார்த்தைகளைப் பேசினான் என்பதை,'எச்சிலை வார்த்தையில் ஒழுக விட்டு'என்கிறார்.

இப்படி இன்னும் பல இருக்கின்றன சுருக்கம் கருதி இதனை இப்போது நிறுத்துகிறேன்.

*****************************

மேலும் சில மரபுத் தொடர்களையும் ஆங்கங்கே சொல்லிச் செல்கிறார்.

* எப்போதுமே ஞாபகப் படுத்தினால் தான் காயம் வலிக்கும்.

*உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா.

*சில பேர் தான் பிள்ளைகளைப் பெறுகிறார்கள். பல பேர் பத்து மாதம் சுமந்து பிரச்சினைகளையே பெறுகிறார்கள்.

*கல்யானம் என்பது இன்னோர் உயிரின், மனசு - உடம்பு - வயிறு மூன்றையும் திருப்தி செய்வது.

*மழைக்கு ஒதுங்கப் போய் கிணற்றுக்குள் விழுந்த கதையாக.

*பிறந்த போது குளிப்பாட்டுவது ஜீவாத்மாக்களுக்குத் தெரிவதில்லை; இறந்த பிறகு குளிப்பாட்டுவது பரமாத்மாக்களுக்குத் தெரிவதில்லை.

*பால் திரையத் தொடங்கும் நேரம் பாத்திரத்துக்குத் தெரிவதில்லை.

*விளக்குமாறக் கட்டி வைக்கவும் ஒரு கத்தாளை நார் இல்லாமலா போய் விடும்?

*சுடு காட்டைக் கடந்து போகிறவன் தன் பயத்தை மறக்கச் சத்தம் போட்டு பாடிக்கொண்டு போவது மாதிரி தன் குறையை மறைக்க அடுத்தவர் குறையை அசை போடுகிறது மனிதக் கூட்டம்.

*ஓட்டையா இருக்கிறதெல்லாம் நாதஸ்வரமாகாது;ஒட்டடையா இருக்கிறதெல்லாம் துணியாகாது.

*பூமியும் காலமும் சுத்திற சுத்தில மனுசக் கூட்டம் எங்கெங்க இடம் மாறி விழுமுன்னு யாருக்கும் தெரியாது.

*வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் விழுந்தாலும் மரத்திலிருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புத் தான்.மழைத் துளியில் எறும்பு மூழ்கினாலும் கடலுக்குள் கப்பல் மூழ்கினாலும் துயரம் துயரம் தான்.

இதனை எழுதிய போது ஒரு பாடல் ஒன்று ஞாபகம் வந்தது.

"பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பார்க்கும்
பருக்கையற்ற
கூழுக்கு போட உப்பு இல்லை என்பார்க்கும்
முள் குத்தித் தைத்த
காலுக்குத் தோல் செருப்பு இல்லை என்பார்க்கும்
கனக் தண்டி
மேலுக்குப் பஞ்சணை இல்லை என்பார்க்கும்
விசனம் ஒன்றே"

*ரெண்டு விதமான சாவு இருக்கு மனுசனுக்கு. ரத்தமும் சதையும் எலும்புமா கிடக்கிற இந்த உடம்புக்கு நேருதே - அது ரெண்டாஞ் சாவு. உடம்பு சாகு முன்னே மனசு செத்துப் போகுது பாருங்க - அது தான் முதல் சாவு.

மனுசன் செத்தாலும் சாகலாம்; மனசு செத்திரக் கூடாது.


வைரமுத்துவின் வைர வரிகள் அவை.

Wednesday, January 13, 2010

தைத்திருநாள் வாழ்த்துக்கள்; 14.01.10



இயற்கை தான் மனிதனின் ஆசான்.தன் இருப்பு, அசைவு இரண்டிலும் அறிவு போதிக்கிறது அது.வானமும் பூமியும் வகுப்பறைகளாய் யுகம் தோறும் யுகம் தோறும் அது பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறது.புத்தி உள்ளவன் புரிந்து கொள்கிறான்.வலி உள்ளவன் அறிந்து கொள்கிறான்.

மனிதனின் படைப்பென்று பூமியில் ஏதுமில்லை.மனிதன் வெறும் கண்டு பிடிப்பாளனே தவிர படைப்பாளனல்லன்.அப்படிப் பார்த்தால் மொழி ஒன்று தான் மனிதனின் படைப்பு.மொழி கூட ஒலியின் வரி வடிவம் தான்.ஒலி மனிதனின் படைப்பல்ல;கண்டு பிடிப்புத் தான்.

- வைரமுத்து. கள்ளிக் காட்டு இதிகாசம்.-

புதிய நூற்றாண்டின் தொழில் நுட்ப யுகத்தில் வாழ்வதாகப் பெருமை கொள்ளும் மானிட சமூகம் இன்று இடம் பெறும் புயல், பூகம்பம், வெள்ளப் பெருக்கு, கடும் வெப்பம், கடும் குளிர்,சுனாமி,காட்டுத் தீ போனற இவற்றைக் கட்டுப்படுத்த என்ன செய்ய முடிந்தது?வரு முன் அறிந்து கொண்டதே தவிர குறைந்த பட்சம் மழை எங்கு பொழிய வேண்டும் என்பதையாவது தீர்மானிக்க முடிந்ததா?மேற்கூறிய இயற்கை அனர்த்தங்களை இல்லாது செய்ய முடிந்ததா?

அதனாலேயே இயற்கையை வழி பட்டது நம் இனம்.இயற்கையே இறைவனானது இந்திய இந்துத் தமிழ் பண்பாட்டில் தான். இந்து மத வேதங்களும் உபநிடதங்களும் அதனை தெய்வீகத்தோடு போற்றுகிறது.
இயற்கையோடும்
நன்றி உணர்வோடும் ஒப்புரவோடும் வாழ்ந்த பண்பாடு சூரியனைக் கொண்டாடியது.

அது தான் தைத் திருநாள்.

தைத்திருநாள் வாழ்த்துக்கள்!

Friday, January 1, 2010

01.01.10


Sunday, November 29, 2009

மாவீரர் தியாகங்களுக்கு!


முதலில் ஒரு மனிதனாயும் பின்பு ஒரு போராளியாயும் இருந்த மக்கள் மனங்களை வென்ற வில்வன் என்று அழைக்கப்படும் சண்முகநாதன் என்ற போராளியின் நினைவுகளுக்கும் மற்றும் உயிர் நீத்த 'அனைத்து' போராளிகளுக்கும் மக்களுக்குமாக ஒரு கண்ணீர் அஞ்சலி.

Thursday, November 12, 2009

ஆரோக்கியமான குடும்ப உறவு

!

ஒரு தமிழ் பெண்ணுக்குத் தன் கணவன், வீடு, குடும்பம், பிள்ளைகளே உலகம்.அதற்காக அவள் பம்பரமாகச் சுழல்கிறாள்.தன் வாழ்வையே அதனைச் சுற்றி அமைத்துக் கொள்கிறாள்.இவற்றுக்கப்பால் தன் அடையாளங்களை, விருப்பு வெற்றுப்புகளை தன் ஆற்றல்களை, திறமைகளை அவள் பெரும்பாலும் அறிந்து கொள்வதில்லை.அதனை அறிய நாட்டம் கொள்வதுமில்லை.பிள்ளைகளின் உயர்வே தன் சுகம்,குடும்ப வாழ்வே தன் வாழ்வின் எல்லை என்று அமைத்துக் கொள்வதால் பெரும்பாலான பெண்களால் அதனைத் தாண்டி ஒரு உலகம் இருப்பதை அறிய முடியாதிருக்கிறது.

நம்முடைய பண்பாடும்,சமூக அமைப்பும் அவ்வாறான ஒரு வாழ்க்கை முறையையே பெண்ணுக்கு அறிமுகப் படுத்துவதால் உருவங்கள் சிதைக்கப்பட்ட பெண்ணாய்; குடும்ப அங்கத்தவர் வாழ்வையே தன் உருவம் எனக் கொண்டவளாய் அவள் வாழ நிர்ப்பந்திக்கப் படுகிறாள்.படித்த நல்ல பதவியில் இருக்கின்ற பெண்களால் கூட அதைத் தாண்டி தனக்கான தன்னுடைய உருவத்தை அடையாளம் காண முடியாதிருக்கிறது.

மாறாகத் தன் திறமையை,ஆற்றலை, தன் சுயத்தை அடையாளம் காணும் ஒருவர் தன் வாழ்வில் வரும் பல சிக்கல்களுக்கு இலகுவாகவும் தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் தீர்வுகளைக் கண்டு கொள்ளலாம் என்பது மிக எளிமையான உண்மை.

இருந்தபோதும் குடும்பவாழ்வும் அதன் மீதான கரிசனையும் அதனுடனான வாழ்வும் எல்லாக் குடும்பப் பெண்களுக்கும் இன்றியமையாத ஒன்றே.

அண்மையில் வேலை சம்பந்தமாக இடம் பெற்ற கருத்தரங்கொன்றில் ஆரோக்கியமான குடும்ப உறவு முறை பற்றிப் பேசப்பட்டது.அதில் குறிப்பிடப்பட்ட சில கருத்துக்கள் ஆரோக்கியமான குடும்ப உறவு முறை எவ்வாறு இருக்கும் என்பது பற்றி இவ்வாறு கூறுகிறது.கருத்தரங்கில் சொல்லப்பட்ட முக்கியமான குறிப்புகள் இவை.

1. கணவனும் மனைவியும் இணைந்திருக்கும் போதே தாம் தாமாகவும் இருக்க முடியும்.

2.ஒருவரிடம் இருக்கும் திறமையை அடுத்தவரால் வெளிக்கொணர முடியும்.

3.ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க முடியும்.

4.ஒருவரை ஒருவர் மாற்றவோ ஆளுமைப்படுத்தவோ முயல மாட்டார்கள்.

5.ஒருவரை ஒருவர் முழுமையாக நம்புவார்கள்.

6.ஒருவரை ஒருவர் மகிழ்வோடு அனுபவிப்பார்கள்.

7.ஒருவரில் ஒருவர் வசதியாயும் இயல்பாயும் இருப்பார்கள்.

8.ஒருவரின் தீர்மானங்கள், உணர்வுகள், சிந்தனைகளை மதிப்பார்கள்.

9.தம்மோடும், ஒருவர் மீதொருவரும் நேர்மையாக இருப்பார்கள்.

10. ஒருவரது குறை நிறைகளை ஏற்றுக் கொண்டு தமக்குள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவார்கள்.

11. ஒருவரின் குறை நிறைகளை ஏற்றுக் கொள்வார்கள்.

12. எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் எல்லா விடயங்களையும் பேசக் கூடியவர்களாக இருப்பார்கள்.




சில நாட்களின் முன்( ஒக்ரோபர் 23ம் திகதி) hellorayar.blogspot.com என்ர வலைப்பூவில் மிஸ்டர் றைட் என்பவர் பதிவிட்டிருந்த கீழே உள்ள கட்டுரையும் அதற்குப் பொருத்தமாக இருப்பதால் அக்கட்டுரையையும் அப்படியே இங்கு மறு பதிவிடுகிறேன். அவருக்கு என் நன்றி.

'கோ.. கோ.. ஈகோ' என்று ஈகோவைத் தூக்கித் தூர எறியுங்கள். 'தோல்விகள்கூட காதலில் வெற்றிகளே' என்பது கில்லாடிகளுக்குத் தெரியும்!
ஆனால், பெரும்பாலானவர்களுக்கு இது தெரியாததால்... திரும்பிய பக்கமெல்லாம் 'டைவர்ஸ்' குரல் கேட்கிறது.
"இது சரிப்பட்டு வரவே வராது... இனி டைவர்ஸ்தான் ஒரே வழி!"என இப்போது முண்டியடிப்பவர்களில் முக்கால்வாசி பேர் இளம் தம்பதிகள்! உலகம் முழுக்க ஆண்டுதோறும் விவாகரத்து எண்ணிக்கை எகிறிக் கொண்டே போவதாக கவலை தருகின்றன புள்ளிவிவரங்கள்.

“சரிப்பட்டு வரலேனா டைவர்ஸ் பண்ணிக்கோப்பா!"என்பதுதான் லேட்டஸ்ட் அறிவுரை வேறு!

என்னவாயிற்று நம் குடும்ப வாழ்க்கை, கலாசாரத்துக்கு?!

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு கணவனும், மனைவியும் வேலைக்கு ஓடும் இந்தக் காலத்தில், இருவரும் இருந்து பேச, எண்ணங்களை பகிர்ந்துகொள்ள நேரம் கிடைப்பதில்லை. வார இறுதி நாட்கள், விடுமுறை என அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு கிடைக்கும் நேரத்திலும், பேச்சு விவாதமாகி, முடிகிறது சண்டையில். சண்டை நீண்டு, கடைசியில் கேட்கிறது விவாகரத்து!


''ஒருவரின் குணம், குற்றம், விருப்பு, வெறுப்பு, ஆசை, விரக்தி... என அனைத்தையும் அவர் மற்றவர்களுக்கு உணர்த்துவது, அவரின் உரையாடல் மூலம்தான். கணவன்மனைவிக்கு இடைப்பட்ட அந்த உரையாடலில், சண்டைகளும் சச்சரவுகளும் இயல்புதான். ஆனால், அதையெல்லாம் மீறி அவர்களின் வார்த்தைகளில் 'நான் உனக்காக இருக்கிறேன்' என்ற அன்பு அடிக்கடி உணர்த்தப்பட்டு, உணரப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் தாம்பத்யத்தின் உயிர்!" என்று இல்லற விதி சொல்கிறார் ரினாடா பாரிஸ். இவர், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உளவியலாளர். மனித உறவுகள் பற்றிய சிறப்புச் சிந்தனையாளர் (Relationship Specialist).

கடந்த பதினைந்து ஆண்டுகளாக, அமெரிக்காவில் குடும்ப விரிசல்களை சரி செய்து கொண்டிருக்கும் இந்த குடும்பநல ஆலோசகரின் முயற்சியால் ஆயிரக்கணக்கான விவாகரத்துகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த அனுபவங்களையெல்லாம் வைத்தே... ஆறு நூல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார் ரினாடா பாரிஸ்.


''உலகம் முழுக்க இருக்கும் தம்பதிகளை அவர்களுக்கு இடையேயான உரையாடலின் அடிப்படையில் ஐந்து வகைகளுக்குள் அடக்கி விடலாம். நீங்கள் எந்த வகை என்பது, உங்கள் சுயமதிப்பீட்டுக்கு..." என சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும் ரினாடா, ஒவ்வொரு வகையையும் பிரித்து மேய்கிறார். அவரின் வார்த்தைகள், தம்பதிகள் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே மனோ ரீதியாக பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளும் 'ரொமான்ஸ் லென்ஸ்' என்றே சொல்லலாம்.

'அமைதித் தம்பதி' (The Silent Couple): இதுதான் முதல் வகை. அமைதி என்றதும் உம்மணாமூஞ்சி என்று நினைத்து விடாதீர்கள். இவர்கள் நிறைய பேசுவார்கள்!

'பார்த்தீங்களா... எல்லை தாண்டி இந்தியாவுக்குள்ள சீனா பண்ற அட்டகாசத்தை..!'

'சுற்றுச்சூழல் பத்தி அருந்ததிராய் எழுதியிருக்கற அந்தப் புத்தகத்தைப் படிச்சீங்களா?'

இப்படி உலக நடப்புகளை எல்லாம் பேசித் தீர்ப்பார்கள். ஆனால், தங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்!

'ஏன் டல்லா இருக்கிறே? எதாவது பிரச்னையா?' என்றெல்லாம் அக்கறையாக விசாரிக்க மாட்டார்கள். அப்படியே விசாரித்தாலும், 'ஒண்ணுமில்ல' என்று சொல்லிவிட்டால், 'சரி ஏதோ பர்சனல் (!) பிராப்ளம் போல' என்று விட்டுவிடுவார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்காது. ஆனால், ஆத்மார்த்த புரிதலோ, அன்போ இருக்காது. 'வீட்டில் நமக்கு ஒரு துணை உண்டு' என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்... அவ்வளவுதான்!

'சண்டையைத் தவிர்க்கும் தம்பதி' (The Argument -Avoiding couple): இது இரண்டாவது வகை. 'சரி விடும்மா... நீ சொல்றபடியே பண்ணிடலாம்!' என்பது இந்த வகை தம்பதிகளின் உரையாடல் முடியும் புள்ளி. 'தேவையில்லாம எதுக்குச் சண்டை' என அடுத்தவர் சொல்வதை ஒப்புக் கொள்வது, அல்லது ஒன்றுமே பேசாமல் மௌனமாகி விடுவது இவர்களின் வழக்கம். எனவே, மனதிலிருப்பதை வெளிப்படையாக, அந்நியோன்யமாக இவர்கள் பேசிக்கொள்வதும் ரொம்பக் குறைவு. பேச ஆரம்பிப்பார்கள். திடீரென ஒரு கருத்து வேற்றுமை வரும். உடனே ஒருவர் சைலன்டாகிவிடுவார்.

சண்டைக் கோழி தம்பதி (The Argument-Avoiding Couple): 'எப்போ சண்டை வரும்' என்று காத்திருக்கும் மூன்றாவது வகை. 'சாப்பாட்டுல ஏதோ குறையுதே...' என்று எதார்த்தமாகச் சொன்னாலும், 'உங்க அம்மா சமைச்சா மட்டும்தான் உங்களுக்குப் புடிக்கும்' என்று சீறுவார்கள். பூதக் கண்ணாடி போட்டு தன் பார்ட்னரிடம் குற்றம் கண்டிபிடித்து சண்டை பிடிக்கும் சீரியஸ் கேஸ் இவர்கள். பெரும்பாலும் இவர்களின் உரையாடல்கள் மனக்கசப்பில்தான் முடியும். இவர்கள் பெரும்பாலும் நிம்மதியின்றி மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருப்£ர்கள்.

'நட்புத் தம்பதி' (The Friends/Partners Couple): இவர்கள் நான்காவது வகை! நல்ல நட்புடன் அலுவலகம், குடும்பம் என பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். கேஷ§வல் கப்பிள் என்று இவர்களைச் சொல்லலாம். ஆனாலும், இவர்களுக்கிடையே அழுத்தமான குடும்ப உறவு, தாம்பத்ய நெருக்கம் இருக்காது. இருந்தும், வெளியிலிருந்து பார்ப்பவர்களால் எந்தக் குறையும் சொல்ல முடியாத குடும்பம் இது.

'நெருக்கமான தம்பதி' (The Fully Intimate Couple): இவர்கள் ஐந்தாவது வகை. 'இதுக்கு முன்னாடி ஒருத்தியை காதலிச்சு நாலஞ்சு வருஷம் சுத்தினேன்' என்பதுவரை வெளிப்படையாக பேசுவார்கள். எந்த விஷயத்தையும் ஒருவருக்கு ஒருவர் மறைக்க மாட்டார்கள். அடுத்தவரை அப்படியே ஏற்றுக் கொள்தலும், அர்ப்பணித்தலும்தான் இதன் ஹைலைட். அதனாலேயே ஆழமான குடும்ப உறவும், புரிதலும் இவர்களுக்கிடையில் இருக்கும். சொல்லப்போனால், இப்படி வாழ்வதற்கு அதிக பக்குவமும், அன்பும் தேவை. மிகச் சில தம்பதிகள்தான் இந்த வகைக்குள் வருவார்கள்!

இப்படி வகைப்படுத்தும் ரினாடா பாரிஸ், அனைவரும் இதில் ஐந்தாம் வகைக்கு முன்னேறுவதற்காக, தங்களுக்கு இடையேயான உரையாடலை அந்நியோன்யமாக எப்படி ஆக்கிக் கொள்ளலாம் எனபதற்கும் அற்புதமான ஆலோசனைகளையும் சொல்கிறார். அவை

முதலில், கணவன் மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசும் பழக்கம் வரவேண்டும்.

உரையாடல்களில் மிக முக்கியமான விஷயம், மரியாதை. அடுத்தவர் சொல்வதை கவனமுடனும், நேர்மையாகவும் கேட்கவேண்டும். 'நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்' என்று நின்றால், நோ யூஸ்!

பொறுமையும் அவசியம். உங்கள் பார்ட்னர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து, பின் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். க்ளைமாக்ஸ் பார்க்காமல் தியேட்டரை விட்டு வெளியேறி கருத்து சொல்வது தப்பில்லையா?! எனவே, அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, நடுவில் குதிக்காதீர்கள். எந்த முடிவையும் இருவரும் கலந்து பேசி எடுங்கள்!

உங்கள் துணையின் நம்பிக்கைகளை, விருப்பு, வெறுப்புகளை புண்படும்படி விமர்சிக்காதீர்கள்.

''உங்களாலதான்..." என்று குற்றம் சுமத்திப் பேசாதீர்கள். குற்றம், அனுமார் வால் போல நீண்டு கொண்டே இருக்கும்!

மனம் திறந்து உண்மையைப் பேசுங்கள். ஒருவேளை நீங்கள் பேசியது பொய் என்று துணைக்கு தெரியவரும் பட்சத்தில், உங்கள் மீதுள்ள நம்பிக்கை சிதைந்து, பின் உங்கள் உரையாடல் எப்போதுமே 'ஹெல்த்தி'யாக இருக்காது!

சின்னச் சின்னப் பாராட்டுகள் மிகவும் முக்கியம்


உங்கள் துணை பேசுவதை கேட்காதீர்கள் (!)... கவனியுங்கள்! அதென்ன வித்தியாசம்? அவர் பேசும் வார்த்தைகளை காதில் வாங்குவது, கேட்பது; மனதில் வாங்குவது, கவனிப்பது. அவர் என்ன சொல்கிறார், என்ன மனநிலையில் சொல்கிறார், என்ன நோக்கத்துக்காகச் சொல்கிறார் என்பதெல்லாம் கவனித்தால்தான் புரியும்.. உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை இந்தக் கவனிப்புதான் சொல்லும்! அதிகம் கவனித்தால், அதிகம் அந்நியோன்யமாவீர்கள்


நன்றி : அவள் விகடன்

Thursday, November 5, 2009

சற்றே சிரிக்க...




கணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது...


மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?
கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையா சொன்னான்!!
--------------------------------------------------------------------------------
மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு

--------------------------------------------------------------------------------
மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது...

--------------------------------------------------------------------------------
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்...எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே...!
--------------------------------------------------------------------------------
மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு.

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு.
--------------------------------------------------------------------------------


மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.

--------------------------------------------------------------------------------

கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்.

1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது.
---------------------------------------------------------------------------------

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை
மனைவி: இதை எத்தனை தடவை கொடுக்கனும் அவருக்கு
டாக்டர்: இது அவருக்கு இல்லை...உங்களுக்கு
---------------------------------------------------------------------------------
புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க...!??
---------------------------------------------------------------------------------

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்கேட்ககூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?

நன்றி; தோழி, கெளரி.




--------------------------------------------------------------------------------