Sunday, November 29, 2009

மாவீரர் தியாகங்களுக்கு!


முதலில் ஒரு மனிதனாயும் பின்பு ஒரு போராளியாயும் இருந்த மக்கள் மனங்களை வென்ற வில்வன் என்று அழைக்கப்படும் சண்முகநாதன் என்ற போராளியின் நினைவுகளுக்கும் மற்றும் உயிர் நீத்த 'அனைத்து' போராளிகளுக்கும் மக்களுக்குமாக ஒரு கண்ணீர் அஞ்சலி.

Thursday, November 12, 2009

ஆரோக்கியமான குடும்ப உறவு

!

ஒரு தமிழ் பெண்ணுக்குத் தன் கணவன், வீடு, குடும்பம், பிள்ளைகளே உலகம்.அதற்காக அவள் பம்பரமாகச் சுழல்கிறாள்.தன் வாழ்வையே அதனைச் சுற்றி அமைத்துக் கொள்கிறாள்.இவற்றுக்கப்பால் தன் அடையாளங்களை, விருப்பு வெற்றுப்புகளை தன் ஆற்றல்களை, திறமைகளை அவள் பெரும்பாலும் அறிந்து கொள்வதில்லை.அதனை அறிய நாட்டம் கொள்வதுமில்லை.பிள்ளைகளின் உயர்வே தன் சுகம்,குடும்ப வாழ்வே தன் வாழ்வின் எல்லை என்று அமைத்துக் கொள்வதால் பெரும்பாலான பெண்களால் அதனைத் தாண்டி ஒரு உலகம் இருப்பதை அறிய முடியாதிருக்கிறது.

நம்முடைய பண்பாடும்,சமூக அமைப்பும் அவ்வாறான ஒரு வாழ்க்கை முறையையே பெண்ணுக்கு அறிமுகப் படுத்துவதால் உருவங்கள் சிதைக்கப்பட்ட பெண்ணாய்; குடும்ப அங்கத்தவர் வாழ்வையே தன் உருவம் எனக் கொண்டவளாய் அவள் வாழ நிர்ப்பந்திக்கப் படுகிறாள்.படித்த நல்ல பதவியில் இருக்கின்ற பெண்களால் கூட அதைத் தாண்டி தனக்கான தன்னுடைய உருவத்தை அடையாளம் காண முடியாதிருக்கிறது.

மாறாகத் தன் திறமையை,ஆற்றலை, தன் சுயத்தை அடையாளம் காணும் ஒருவர் தன் வாழ்வில் வரும் பல சிக்கல்களுக்கு இலகுவாகவும் தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் தீர்வுகளைக் கண்டு கொள்ளலாம் என்பது மிக எளிமையான உண்மை.

இருந்தபோதும் குடும்பவாழ்வும் அதன் மீதான கரிசனையும் அதனுடனான வாழ்வும் எல்லாக் குடும்பப் பெண்களுக்கும் இன்றியமையாத ஒன்றே.

அண்மையில் வேலை சம்பந்தமாக இடம் பெற்ற கருத்தரங்கொன்றில் ஆரோக்கியமான குடும்ப உறவு முறை பற்றிப் பேசப்பட்டது.அதில் குறிப்பிடப்பட்ட சில கருத்துக்கள் ஆரோக்கியமான குடும்ப உறவு முறை எவ்வாறு இருக்கும் என்பது பற்றி இவ்வாறு கூறுகிறது.கருத்தரங்கில் சொல்லப்பட்ட முக்கியமான குறிப்புகள் இவை.

1. கணவனும் மனைவியும் இணைந்திருக்கும் போதே தாம் தாமாகவும் இருக்க முடியும்.

2.ஒருவரிடம் இருக்கும் திறமையை அடுத்தவரால் வெளிக்கொணர முடியும்.

3.ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க முடியும்.

4.ஒருவரை ஒருவர் மாற்றவோ ஆளுமைப்படுத்தவோ முயல மாட்டார்கள்.

5.ஒருவரை ஒருவர் முழுமையாக நம்புவார்கள்.

6.ஒருவரை ஒருவர் மகிழ்வோடு அனுபவிப்பார்கள்.

7.ஒருவரில் ஒருவர் வசதியாயும் இயல்பாயும் இருப்பார்கள்.

8.ஒருவரின் தீர்மானங்கள், உணர்வுகள், சிந்தனைகளை மதிப்பார்கள்.

9.தம்மோடும், ஒருவர் மீதொருவரும் நேர்மையாக இருப்பார்கள்.

10. ஒருவரது குறை நிறைகளை ஏற்றுக் கொண்டு தமக்குள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவார்கள்.

11. ஒருவரின் குறை நிறைகளை ஏற்றுக் கொள்வார்கள்.

12. எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் எல்லா விடயங்களையும் பேசக் கூடியவர்களாக இருப்பார்கள்.




சில நாட்களின் முன்( ஒக்ரோபர் 23ம் திகதி) hellorayar.blogspot.com என்ர வலைப்பூவில் மிஸ்டர் றைட் என்பவர் பதிவிட்டிருந்த கீழே உள்ள கட்டுரையும் அதற்குப் பொருத்தமாக இருப்பதால் அக்கட்டுரையையும் அப்படியே இங்கு மறு பதிவிடுகிறேன். அவருக்கு என் நன்றி.

'கோ.. கோ.. ஈகோ' என்று ஈகோவைத் தூக்கித் தூர எறியுங்கள். 'தோல்விகள்கூட காதலில் வெற்றிகளே' என்பது கில்லாடிகளுக்குத் தெரியும்!
ஆனால், பெரும்பாலானவர்களுக்கு இது தெரியாததால்... திரும்பிய பக்கமெல்லாம் 'டைவர்ஸ்' குரல் கேட்கிறது.
"இது சரிப்பட்டு வரவே வராது... இனி டைவர்ஸ்தான் ஒரே வழி!"என இப்போது முண்டியடிப்பவர்களில் முக்கால்வாசி பேர் இளம் தம்பதிகள்! உலகம் முழுக்க ஆண்டுதோறும் விவாகரத்து எண்ணிக்கை எகிறிக் கொண்டே போவதாக கவலை தருகின்றன புள்ளிவிவரங்கள்.

“சரிப்பட்டு வரலேனா டைவர்ஸ் பண்ணிக்கோப்பா!"என்பதுதான் லேட்டஸ்ட் அறிவுரை வேறு!

என்னவாயிற்று நம் குடும்ப வாழ்க்கை, கலாசாரத்துக்கு?!

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு கணவனும், மனைவியும் வேலைக்கு ஓடும் இந்தக் காலத்தில், இருவரும் இருந்து பேச, எண்ணங்களை பகிர்ந்துகொள்ள நேரம் கிடைப்பதில்லை. வார இறுதி நாட்கள், விடுமுறை என அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு கிடைக்கும் நேரத்திலும், பேச்சு விவாதமாகி, முடிகிறது சண்டையில். சண்டை நீண்டு, கடைசியில் கேட்கிறது விவாகரத்து!


''ஒருவரின் குணம், குற்றம், விருப்பு, வெறுப்பு, ஆசை, விரக்தி... என அனைத்தையும் அவர் மற்றவர்களுக்கு உணர்த்துவது, அவரின் உரையாடல் மூலம்தான். கணவன்மனைவிக்கு இடைப்பட்ட அந்த உரையாடலில், சண்டைகளும் சச்சரவுகளும் இயல்புதான். ஆனால், அதையெல்லாம் மீறி அவர்களின் வார்த்தைகளில் 'நான் உனக்காக இருக்கிறேன்' என்ற அன்பு அடிக்கடி உணர்த்தப்பட்டு, உணரப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் தாம்பத்யத்தின் உயிர்!" என்று இல்லற விதி சொல்கிறார் ரினாடா பாரிஸ். இவர், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உளவியலாளர். மனித உறவுகள் பற்றிய சிறப்புச் சிந்தனையாளர் (Relationship Specialist).

கடந்த பதினைந்து ஆண்டுகளாக, அமெரிக்காவில் குடும்ப விரிசல்களை சரி செய்து கொண்டிருக்கும் இந்த குடும்பநல ஆலோசகரின் முயற்சியால் ஆயிரக்கணக்கான விவாகரத்துகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த அனுபவங்களையெல்லாம் வைத்தே... ஆறு நூல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார் ரினாடா பாரிஸ்.


''உலகம் முழுக்க இருக்கும் தம்பதிகளை அவர்களுக்கு இடையேயான உரையாடலின் அடிப்படையில் ஐந்து வகைகளுக்குள் அடக்கி விடலாம். நீங்கள் எந்த வகை என்பது, உங்கள் சுயமதிப்பீட்டுக்கு..." என சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும் ரினாடா, ஒவ்வொரு வகையையும் பிரித்து மேய்கிறார். அவரின் வார்த்தைகள், தம்பதிகள் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே மனோ ரீதியாக பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளும் 'ரொமான்ஸ் லென்ஸ்' என்றே சொல்லலாம்.

'அமைதித் தம்பதி' (The Silent Couple): இதுதான் முதல் வகை. அமைதி என்றதும் உம்மணாமூஞ்சி என்று நினைத்து விடாதீர்கள். இவர்கள் நிறைய பேசுவார்கள்!

'பார்த்தீங்களா... எல்லை தாண்டி இந்தியாவுக்குள்ள சீனா பண்ற அட்டகாசத்தை..!'

'சுற்றுச்சூழல் பத்தி அருந்ததிராய் எழுதியிருக்கற அந்தப் புத்தகத்தைப் படிச்சீங்களா?'

இப்படி உலக நடப்புகளை எல்லாம் பேசித் தீர்ப்பார்கள். ஆனால், தங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்!

'ஏன் டல்லா இருக்கிறே? எதாவது பிரச்னையா?' என்றெல்லாம் அக்கறையாக விசாரிக்க மாட்டார்கள். அப்படியே விசாரித்தாலும், 'ஒண்ணுமில்ல' என்று சொல்லிவிட்டால், 'சரி ஏதோ பர்சனல் (!) பிராப்ளம் போல' என்று விட்டுவிடுவார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்காது. ஆனால், ஆத்மார்த்த புரிதலோ, அன்போ இருக்காது. 'வீட்டில் நமக்கு ஒரு துணை உண்டு' என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்... அவ்வளவுதான்!

'சண்டையைத் தவிர்க்கும் தம்பதி' (The Argument -Avoiding couple): இது இரண்டாவது வகை. 'சரி விடும்மா... நீ சொல்றபடியே பண்ணிடலாம்!' என்பது இந்த வகை தம்பதிகளின் உரையாடல் முடியும் புள்ளி. 'தேவையில்லாம எதுக்குச் சண்டை' என அடுத்தவர் சொல்வதை ஒப்புக் கொள்வது, அல்லது ஒன்றுமே பேசாமல் மௌனமாகி விடுவது இவர்களின் வழக்கம். எனவே, மனதிலிருப்பதை வெளிப்படையாக, அந்நியோன்யமாக இவர்கள் பேசிக்கொள்வதும் ரொம்பக் குறைவு. பேச ஆரம்பிப்பார்கள். திடீரென ஒரு கருத்து வேற்றுமை வரும். உடனே ஒருவர் சைலன்டாகிவிடுவார்.

சண்டைக் கோழி தம்பதி (The Argument-Avoiding Couple): 'எப்போ சண்டை வரும்' என்று காத்திருக்கும் மூன்றாவது வகை. 'சாப்பாட்டுல ஏதோ குறையுதே...' என்று எதார்த்தமாகச் சொன்னாலும், 'உங்க அம்மா சமைச்சா மட்டும்தான் உங்களுக்குப் புடிக்கும்' என்று சீறுவார்கள். பூதக் கண்ணாடி போட்டு தன் பார்ட்னரிடம் குற்றம் கண்டிபிடித்து சண்டை பிடிக்கும் சீரியஸ் கேஸ் இவர்கள். பெரும்பாலும் இவர்களின் உரையாடல்கள் மனக்கசப்பில்தான் முடியும். இவர்கள் பெரும்பாலும் நிம்மதியின்றி மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருப்£ர்கள்.

'நட்புத் தம்பதி' (The Friends/Partners Couple): இவர்கள் நான்காவது வகை! நல்ல நட்புடன் அலுவலகம், குடும்பம் என பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். கேஷ§வல் கப்பிள் என்று இவர்களைச் சொல்லலாம். ஆனாலும், இவர்களுக்கிடையே அழுத்தமான குடும்ப உறவு, தாம்பத்ய நெருக்கம் இருக்காது. இருந்தும், வெளியிலிருந்து பார்ப்பவர்களால் எந்தக் குறையும் சொல்ல முடியாத குடும்பம் இது.

'நெருக்கமான தம்பதி' (The Fully Intimate Couple): இவர்கள் ஐந்தாவது வகை. 'இதுக்கு முன்னாடி ஒருத்தியை காதலிச்சு நாலஞ்சு வருஷம் சுத்தினேன்' என்பதுவரை வெளிப்படையாக பேசுவார்கள். எந்த விஷயத்தையும் ஒருவருக்கு ஒருவர் மறைக்க மாட்டார்கள். அடுத்தவரை அப்படியே ஏற்றுக் கொள்தலும், அர்ப்பணித்தலும்தான் இதன் ஹைலைட். அதனாலேயே ஆழமான குடும்ப உறவும், புரிதலும் இவர்களுக்கிடையில் இருக்கும். சொல்லப்போனால், இப்படி வாழ்வதற்கு அதிக பக்குவமும், அன்பும் தேவை. மிகச் சில தம்பதிகள்தான் இந்த வகைக்குள் வருவார்கள்!

இப்படி வகைப்படுத்தும் ரினாடா பாரிஸ், அனைவரும் இதில் ஐந்தாம் வகைக்கு முன்னேறுவதற்காக, தங்களுக்கு இடையேயான உரையாடலை அந்நியோன்யமாக எப்படி ஆக்கிக் கொள்ளலாம் எனபதற்கும் அற்புதமான ஆலோசனைகளையும் சொல்கிறார். அவை

முதலில், கணவன் மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசும் பழக்கம் வரவேண்டும்.

உரையாடல்களில் மிக முக்கியமான விஷயம், மரியாதை. அடுத்தவர் சொல்வதை கவனமுடனும், நேர்மையாகவும் கேட்கவேண்டும். 'நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்' என்று நின்றால், நோ யூஸ்!

பொறுமையும் அவசியம். உங்கள் பார்ட்னர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து, பின் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். க்ளைமாக்ஸ் பார்க்காமல் தியேட்டரை விட்டு வெளியேறி கருத்து சொல்வது தப்பில்லையா?! எனவே, அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, நடுவில் குதிக்காதீர்கள். எந்த முடிவையும் இருவரும் கலந்து பேசி எடுங்கள்!

உங்கள் துணையின் நம்பிக்கைகளை, விருப்பு, வெறுப்புகளை புண்படும்படி விமர்சிக்காதீர்கள்.

''உங்களாலதான்..." என்று குற்றம் சுமத்திப் பேசாதீர்கள். குற்றம், அனுமார் வால் போல நீண்டு கொண்டே இருக்கும்!

மனம் திறந்து உண்மையைப் பேசுங்கள். ஒருவேளை நீங்கள் பேசியது பொய் என்று துணைக்கு தெரியவரும் பட்சத்தில், உங்கள் மீதுள்ள நம்பிக்கை சிதைந்து, பின் உங்கள் உரையாடல் எப்போதுமே 'ஹெல்த்தி'யாக இருக்காது!

சின்னச் சின்னப் பாராட்டுகள் மிகவும் முக்கியம்


உங்கள் துணை பேசுவதை கேட்காதீர்கள் (!)... கவனியுங்கள்! அதென்ன வித்தியாசம்? அவர் பேசும் வார்த்தைகளை காதில் வாங்குவது, கேட்பது; மனதில் வாங்குவது, கவனிப்பது. அவர் என்ன சொல்கிறார், என்ன மனநிலையில் சொல்கிறார், என்ன நோக்கத்துக்காகச் சொல்கிறார் என்பதெல்லாம் கவனித்தால்தான் புரியும்.. உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை இந்தக் கவனிப்புதான் சொல்லும்! அதிகம் கவனித்தால், அதிகம் அந்நியோன்யமாவீர்கள்


நன்றி : அவள் விகடன்

Thursday, November 5, 2009

சற்றே சிரிக்க...




கணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது...


மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?
கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையா சொன்னான்!!
--------------------------------------------------------------------------------
மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு

--------------------------------------------------------------------------------
மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது...

--------------------------------------------------------------------------------
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்...எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே...!
--------------------------------------------------------------------------------
மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு.

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு.
--------------------------------------------------------------------------------


மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.

--------------------------------------------------------------------------------

கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்.

1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது.
---------------------------------------------------------------------------------

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை
மனைவி: இதை எத்தனை தடவை கொடுக்கனும் அவருக்கு
டாக்டர்: இது அவருக்கு இல்லை...உங்களுக்கு
---------------------------------------------------------------------------------
புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க...!??
---------------------------------------------------------------------------------

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்கேட்ககூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?

நன்றி; தோழி, கெளரி.




--------------------------------------------------------------------------------

Thursday, October 22, 2009

வீடு


எனக்கோர் வீடு வேண்டும்
நாலு சதுர அறைகளும்
நன் நான்கு மூலைகளும்
நீள் சதுர விறாந்தைகளும் அற்றதோர்
வீடு வேண்டும் எனக்கு.

என்னைச் சுளற்றும் கடிகாரமும்
என்னோடே வளரும் சுவர்களும்
சுற்றி உயர்ந்து இறுகிய
கல் மதில்களுமற்றதோர்
வீடு வேண்டும் எனக்கு.

பூட்டற்ற கதவுகளுடன்
சாத்த முடியாத ஜன்னல்களுடன்
எப்பக்கமும் வாயிலாக
வீடொன்று வேண்டும் எனக்கு.

குளிரில் கொடுகி
வெயிலில் உலர்ந்து
மழையில் குளித்து
காற்றில் அசைந்து என் பூக்கள்
பறந்து பரவசம் எய்த

ஒரு வட்ட வீடொன்று வேண்டும் எனக்கு
வானத்து வளைவுடன்




ஆழியாழ். நன்றி -மை-

ஒரு கவிதை உனக்குப் புரியவில்லை என்றால் அது உனக்குரிய கவிதை அல்ல - யாரோ -

Sunday, October 4, 2009

காரியாலய போஸ்டர் ஒன்று



வேலை இப்படித்தான் நம்மைப் பிளிந்தெடுக்கிறது.:-)
அன்பும் சில வேளைகளில் அப்படி ஆக்கி விடுகிறது.:-(

Tuesday, September 8, 2009

வென்ற்வேத்வில் தமிழ் கல்வி நிலையக் கலைவிழா

சென்ற சனிக்கிழமை 06.09.09 அன்று வென்ற்வேத்வில் தமிழ் பாடசாலை மாணவர்களின் கலைவிழா மாலை 2 மணியளவில் மிகக் கோலாகலமாகவும் சிறப்பாகவும் நடந்தது.சுமார் 500மாணவர்களையும் சுமார் 40 ஆசிரியர்களையும் கொண்டியங்கும் இக் கல்வி நிலையம் இரண்டு வளாகங்களில் நடைபெறுகிறது.நடப்புக் கல்வியாண்டின் அதிபராக திரு. நாகேஸ்வரன் அவர்கள் விளங்குகிறார்.

1988ம் ஆண்டு 30 மாணவர்களுடனும் 4 ஆசிரியர்களுடனும் ஆரம்பித்த இக்கல்வி நிலையம் இன்று இரண்டு வளாகங்களில் சனிக்கிழமை தோறும் மாலை 2.00 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை தமிழை அடுத்த சந்ததிக்கு வழங்கும் பணியில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறது.

அங்கு கல்வி கற்கும் சில பெரிய வகுப்புச் சிறார்களின் படங்கள்(ஆசிரியர்களுடன்) சிலவற்றை உங்கள் பார்வைக்காக இங்கு தந்துள்ளேன்.






இன்றய வருடம் " ஒற்றுமையே பலம்" என்ற தலைப்பை முன் வைத்து இடம் பெற்ற கலைவிழாவின் அடி நாதத்தை விழாவில் இடம் பெற்ற நிகழ்ச்சிகள் மெருகேற்றி அரங்கேற்றின.ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒன்றை ஒன்று மிஞ்சும் விதமாக அமைந்திருந்தன.

வருடந்தோறும் இடம் பெறும் இம்மாதிரியான கலைவிழாக்கள் வருங்காலத்தில் தமிழ் வாழும் என்பதற்குக் கட்டியம் கூறி நிற்கிறது.

கீழே உள்ள படங்கள்இரண்டும் இரண்டு வளாகங்களிலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களைக் கொண்டிருக்கிறது.இவை கலைவிழா ஆண்டுமலரில் இருந்து பெறப்பட்டன.


Wednesday, August 26, 2009

இலக்கியத்தில் விருந்தோம்பல்



இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

என்கிறது திருக்குறள்.செல் விருந்தினை ஓம்பிவிட்டு வரு விருந்தினைப் பார்த்திருப்பவருக்கு நல்விருந்து வானவர்களிடமிருந்து வர இருக்கிறது என்றும் மேலும் கூறிச் செல்கிறது குறள்.

நாட்டுக்கு நாடு; இடத்துக்கிடம்; வீட்டுக்கு வீடு; பண்பாட்டுக்குப் பண்பாடு உபசரிக்கும் முறைகளும் விருந்துகளும் வேறுபாடுடயன.தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பும் முறை பற்றி ஒரு பாடல் உண்டு.அது விருந்தினை அளிப்பவருக்கு இருக்க வேண்டிய ஒன்பது பண்புகள் பற்றிக் கூறுகின்றது.

'விருந்தின னாக ஒருவன் வந்து எதிரின்
வியத்த;நன் மொழி இனிது உரைத்தல்;
திருந்துற நோக்கல்;'வருக'என உரைத்தல்;
எழுதல்;முன் மகிழ்வன செப்பல்;
பொருந்துமற்று அவன்தன் அருகுற இருத்தல்;
'போம்' எனில் பின்செல்வ தாதல்;
பரிந்துநன் முகமன் வழங்கல்;இவ் வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே!'

ஒருவர் விருந்தினராக நம் எதிரில் வந்தால்

*புது மகிழ்ச்சியைக் காட்ட வேண்டும்
*உபசாரமான இனிய சொற்களைப் பேச வேண்டும்
*அன்பு கனிந்த முகத்தோடு அவரைப் பார்க்க வேண்டும்
*வாருங்கள் என்று வரவேற்க வேண்டும்
*இருக்கையில் இருந்தால் இழுந்து வரவேற்க வேண்டும்
*மகிழ்ச்சியான சொற்களைப் பேச வேண்டும்
*விருந்தினருக்குத் தக்க முறையில் இருக்க வேண்டிய நெருக்கத்தில் இருக்க வேண்டும்
*அவர்கள் விடை பெறும் போது அவர்கலோடுபோக வேண்டும்
*அவர்களுக்கு வெற்றிலை பாக்கு சிற்றுண்டி என்பன கொடுத்து உபசரிக்க வேண்டும்

என்று அந்த 9 பண்புகளையும் பாடல் வடிவில் கூறுகிறது தமிழ் இலக்கியம்.

மேலும், ஒளவையார் சற்றுக் காட்டமாக விருந்தினர் ஒரு வீட்டுக்கு வருவதும் உபசரிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை இப்பாடலில் சற்று இடித்தே உரைக்கிறார்,

'மாடில்லான் வாழ்வு,மதியில்லான் வாணிப, நன்
நாடில்லான் செங்கோல் நடாத்துவதும் - சூடும்
குருவில்லா வித்தை,குணமில்லாப் பெண்டு,
விருந்தில்லா வீடு விழல்'

என்கிறார்.செல்வமில்லாதவனுடய வாழ்க்கையும் மதிநுட்பமில்லாதவனுடய வாணிபமும் நல்ல நாடில்லாதவனுடய செங்கோலும் நல்ல ஆசிரியனில்லாத கல்வியும் நல்ல குணமில்லாத பெண்களும் விருந்தினரில்லாத வீடும் வீண் -பயனற்றது என்கிறார் அவர்.

அக்காலத்தில் சில குடும்பத்தினர் சிறப்பாக பெண்கள் விருந்தினரைச் சிறப்பாகப் போற்ற வில்லைப் போலும். அது பற்றியும் ஒளவையார் சில இடங்களில் பாடியுள்ளார்.

அன்பில்லாமல் இட்ட அமுதினை உண்ணும் போது ஏற்பட்ட வலியினை அவர் பாடுகிறார் இப்படி,

காணக்கண் கூசுதே! கையெடுக்க நாணுதே!
மாணொக்க வாய் திறக்க மாட்டாதே!- வீணுக்கென்
என்பெல் லாம்பற்றி எரிகிறது;ஐயையோ!
அன்பிலாள் இட்ட அமுது!

விருந்தினரை உபசரிக்காத குடும்பத்துப் பெண்டிரைப் பற்றியும் அவர் பல இடங்களில் சாடியுள்ளார்.'கூறாமல் சன்னியாசம் கொள்' என்றும் 'நெருப்பினிலே வீழ்ந்திடுதல் நேர்' என்றும் அவ்வாறான குடும்பத்துப் பெண்டிரைக் கொண்ட கணவர்மாருக்கு அவர் புத்திமதியும் கூறுகிறார்.பின்வரும் பாடல் அது போன்ற ஒன்று தான்.குணக் கேடு கொண்ட மனைவியைக் கொண்ட கணவன் படும் பாட்டை அவர் இப்படி விபரிக்கிறார்,

'இருந்து முகந்திருத்தி,ஈரோடு பேன்வாங்கி,
'விருந்து வந்ததென்று' விளம்ப,- வருந்தி
ஆடினாள்;பாடினாள்;ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்'

ஆனால்,மிகக் கோபக் காரரான காளமேகம் சற்று வேடிக்கையும் நகைச்சுவயும் ததும்ப ஒரு பாடல் பாடுகிறார்.நல்ல வெய்யில் நேரம்! தொண்டை எல்லாம் வரண்ட தாகம்! இடைச்சி ஒருத்தி மோரோ மோர் என்று கூவியவாறு மோர் கொண்டு போகிறாள்.வாங்கி அருந்திப் பார்க்கிறார் காள மேகம்.அதுவோ மிக தண்ணீர் மிக்கதாகப் படுகிறது அவருக்கு.பெண் கையால் கிட்டிய மோர் அல்லவா! வைய மனம் வரவில்லை;நகைச்சுவையோடு பாடல் பிறக்கிறது அவருக்கு, இப்படி;

'கார்' என்று பேர் படைத்தாய்
ககனத்து உறும்போது
'நீர்' என்று பேர் படைத்தாய்
கொடுந்தரையில் வந்ததற்பின்
வார் ஒன்று மென்முலையார்
ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
'மோர்' என்று பேர் படைத்தாய்
முப்பேறும் பெற்றாயே'

மோரே! நீ வானத்தில் இருக்கும் போது மேகம் என்ற பெயரைக் கொண்டிருந்தாய்.பரந்த மண்ணுலகைச் சேர்ந்தவுடன் நீர் என்று பெயர் கொண்டாய். கச்சையணிந்த மென்மையான தனங்களையுடைய இடைச்சியர் கையில் சேர்ந்தவுடன் மோர் என்ற பெயரை பெற்றுக் கொண்டாய்.இவ்வாறு கார்,நீர், மோர் என்று மூன்று பெயரையும் பெற்றதால் முப்பேறும் பெற்றுவிட்டாய்.அதிகளவு நீர் கலக்கப்பட்ட மோர் என்பதை சிறிய எள்ளலும் நகைச்சுவையும் இழையோடப் பாடியிருக்கிறார் காள மேகம்


'மோப்பக் குழையும் அனிச்சம் - முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து'

அல்லவா?