Monday, April 22, 2013

தாய் Land ன் ஸ்வர்ண பூமியில் இருந்து......1....



இந்தப் புது வருடம் எங்களுக்கு தாய்லாந்தில் அமைந்திருந்தது.

எதிர் பாராத சம்பவங்களால் வாழ்க்கை அமைந்திருக்கிறது என்பதற்கு இந்தப் பயணம் நல்லதொரு உதாரணம். உண்மையில் என் திட்டப்படி கொழும்பில் நடைபெற இருக்கும் ஆவண மாநாட்டுக்குசெல்வது என்பது தான் என் நோக்கம். அதற்காக என் ஆய்வுக் கட்டுரையின் முன் வரைபுகள் அனுப்பி வைக்கப்பட்டு அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு மாநாட்டில் கட்டுரை வாசிப்பதற்கான கால நேரத்தையும் அவர்கள் அனுப்பியிருந்தார்கள்.எனக்கு ஒரே ஒரு வேலை தான் மிச்சமிருந்தது. அது யாழ்ப்பாணம் சென்று சில புகைப்பட ஆவணங்களை கட்டுரையோடு இணைக்க வேண்டும். அதனால் மாநாட்டுக்கு முன்னர் வட பகுதி சென்று அவற்றை எடுத்து கட்டுரையோடு இணைப்பது என் பிரதான நோக்கம்.

அதற்காக ஏற்கனவே வேலைத்தலத்தில் விடுமுறைக்கு விண்ணப்பித்து நண்பர்கள் உறவினர்களுக்கான பரிசுப்பொருட்களையும் நேரம் இருக்கிற நேரங்களில் வாங்கி பெட்டியை நிரப்பி இருக்கின்ற நேரத்தில் அவுஸ்திரேலிய அரசாங்க அறிவித்தல் ஒன்று தன் பிரஜைகளை இலங்கைக்கு செல்வதை அதிலும் குறிப்பாக வடபகுதிக்குச் செல்வதை மீள்பரிசீலனை செய்யுமாறும் அவ்வாறு அவர்கள் செல்லும் பட்சத்தில் அவர்களது பாதுகாப்புக்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது என்ற அறிவித்தல் வானொலிவழியாக வீடு வந்து சேர்ந்ததில் குடும்பம் குழம்பியதோடல்லாது போக வேண்டாம் என்ற தடையுத்தரவையும் பிறப்பித்து விட்டது.எனக்கும் சற்றுப் பயமாக இருந்ததென்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.2004 ந் பின் கால் வைக்கவில்லை.

நூலக நிறுவனத்தாரோடு தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கிய போது அவர்கள் பெருந்தன்மையோடு அதனை ஏற்றுக் கொண்டதுடன் படங்கள் எடுப்பித்துத் தருவதற்கான உதவிகளைத் தம் தொண்டர்கள் மூலமாக தம்மால் செய்து தர முடியும் என்றும் கட்டுரையைத் தங்களுக்கு அனுபுமாறும் அவர்கள் தெரிவித்தது  மனதுக்கு பெருத்த நிறைவினை அளித்தது.

அந்த ஆய்வுக் கட்டுரை அவர்களால் உருவாகியது. அவர்களுக்கே அது உரித்தாகும்.என்றேனும் ஒரு விரைவு நாளொன்றில் அவர்கள் மூலம் பிரசுரமாகி உங்கள் பார்வைக்கும் அது கிட்டக் கூடும்.

இப்போது எனக்கு முன்னால் இருந்த பெரிய பிரச்சினை இந்த விடுமுறையை - எடுத்த விடுமுறையை என்ன செய்வது என்பதாகும். பெரிய விடுமுறையை வேறு எடுத்து விட்டிருந்தேன். அதில் நீண்ட சேவைக்கான விடுமுறையும் அதில் அடக்கம். சரி ஒரு 4 நாட்களுக்கு தாய்லாந்துக்குப் போகலாம் என்று பல நாடுகள் பட்டியலில் இருந்து தாய்லாந்தைத் தெரிவு செய்தோம்.

வாருங்கள் என்னோடு. பயணம் 11.4.13.

இப்போது நாங்கள் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட இருப்பிடத்துக்குப் போகப் போகிறோம். ஸ்வர்ண பூமி 
( தாய்நிலம்: Thailand. - தங்க பூமி Suvarnabhumi )கீழே இருக்கின்ற படங்கள் விமான நிலையத்தின் உள்ளே விமானத்தில் இருந்து இறங்கி வருகின்ற உள்ளகப் பாதை. சுவரோரங்களில் தென்பட்ட  சித்திரக்காட்சிகளில் சில.








இந்த உருவ அமைப்பு பாதை நடுவில் செய்யப்பட்டிருக்கிறது. விளையாடுகின்ற இந்தச் சிறுவர்களைப் பார்த்த போது பிராமணச் சிறுவர்களை அது நினைவுறுத்தியது.




இது அந் நாட்டு வாடகைக் கார்.பல வண்ணங்களில் அவை ஓடுகின்றன. பெரும்பாலானவை ரொயோட்டா கார்கள் தான்.இந்தக் காருக்குள் ஏறிய போது மல்லிகைப் பூ வாசம் குப்பென்று வீசியது.இந்தப் பாமர கார் ஓட்டுனருக்கு அத்தனை கடவுள் பக்தி. பலவிதமான சுவாமிப் படங்களும் தாயத்துக்களும் சில்லறைக்காசுகள் ஒட்டப்பட்ட தன் படமுமாக விசித்திரமான ஒரு கார் காட்சி உள்ளே. ஆனால் மிகவும் அப்பாவி மனிதர்கள்.பாமர புன்னகையோடு அம்மனிதன் நம்முடய இருப்பிடம் கேட்டு காரைக் கிளப்பு முன்னும் இந்த மல்லிகைப்பூச்சரத்தோடு இருந்த பலவித சலங்கைகளோடு கூடிய ஒரு கூட்டம் சாமியரை வணங்கி காரைக் கிளப்பும் போது மனிதன் என் மனதில் எங்கோ போய் விட்டார்.


ஊர் புதுசு தானே நமக்கும் என்று சற்றே பேச்சுக் கொடுத்தால் மனிதருக்கு துப்பரவாக ஆங்கிலம் தெரியவில்லை. ஆனால் அவருடய சிரிப்பு சற்றே புதினமாக இருந்தது. 


இந்த இடங்களால் திரும்புகின்ற போது ‘பட்டினம், பட்டினம்’ என்று சொல்லக் கேட்டேன். கவனியுங்கள் City என்பதற்கு அவர்கள் பாசையில் பட்டினம் என்று அர்த்தம். தமிழ்! தமிழ்!!





இரண்டு பாசைகளும் மோதிக் கொண்டதில் பொறுக்கிய விடயங்கள் எதற்கும் பேரம் பேசு. வாடகைக் கார்களை உன் ஹொட்டலில் இருந்து  முதலிலேயே கட்டனம் பேசி அமர்த்திக் கொள். என்பவைதான். 

எனக்கு அடக்க முடியாத ஒரு ஆர்வம் என்னவென்றால் ஏன் இந்த மனிதர் காரின் உட்புறம் முழுக்க பல நாட்டுக் காசுகளையும் காரின் உட்பகுதியின் மேற்புறமெல்லாம் பொலித்தீன் உறைகளில் பக்குவமாகப் போட்டு ஒட்டி வைத்திருக்கிரார் என்பது தான்.ஏற்கனவே எல்லோரும் அவரிடம் பேச்சுக் கொடுத்துக் களைத்துப் போயிருந்தார்கள். பயணக் களைப்போடு இந்த மனிதருக்கு ஒரு விடயத்தை விளங்கப் படுத்துவது பெரிய கடினமான காரியமாகப் பட்டது. எனக்கும் களைப்பாய் இருந்த போதும் ஆர்வம் அதை மிஞ்சி விட்டதால் ஏன் அவற்றை இங்கே ஒட்டி வைத்திருக்கிறாய் அப்பனே என்று கேட்டேன். அதற்கு நான் விளங்கிக் கொண்ட பதில் இத்தனை நாட்டவர்களையும் தான் ஏற்றி இறக்கி இருக்கிறாராம். அந்தந்த நாட்டுத் தாள் காசுகளை அவர்களின் நினைவாக தான் ஒட்டி வைத்திருக்கிறாராம். பார்! அவுஸ்திரேலியா நாட்டுக் காசு இங்கே இல்லை என்றார்.மிக்க மகிழ்ச்சியோடு ஒரு தாள் காசை எடுத்து நீட்டிய போது அந்த முகத்தில் தான் எத்தனை சந்தோஷம்! தான் அதனை முன் பக்கத்தில் இருக்கின்ற இடைவெளியில் ஒட்டப் போவதாக சொல்லி மகிழ்ந்தது அந்த பாமர நெஞ்சம். 

என் சினேகிதி நீ எதற்காக இரண்டு $100 அமெரிக்க டொலர்களை ஒட்டியிருக்கிறாய்? ஞாபகார்த்தத்துக்கு ஒன்று போதாதா என்ன ? மற்றதை உன் செலவுக்கு வைத்துக் கொள்ளலாமே சும்மா எதற்கு வீணாக்குகிறாய் என்று கேட்டாள். நோ நோ இதெல்லாம் என்ர collections அதனை என்ன காரணம் கொண்டும் நான் தொடமாட்டேன் என்று மிகத் தீவிரமாகச் சொன்னார். 

அத்தோடு 12.13.14 அவர்களுடய புது வருடம் என்ற செய்தி எமக்கு ஆச்சரியமாக இருந்தது. அடடா, நம்முடய புது வருடப் பிறப்பன்று தானா அவர்களுக்கும் புது வருடம் என்று வியந்த போது, வருடத்திலேயே இந்த மூன்று நாட்களும் தான் கடையடைப்புடனான பொது விடுமுறை நாட்கள் என்ற தகவல் நமக்கு புதிய செய்தியாக இருந்தது. பல கேள்விகள் நம்மிடம் இருந்த போதும் மொழிப் பிரச்சினையால் கேட்க முடிய வில்லை.

பிறகின்ற புது வருடம் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கூறி சற்றே மேலதிகமாய் பணமும் கொடுத்து ஹொட்டேல் வாசலில் இறங்கிய போது நேரம் மாலை 6.30. 

பற்களை எல்லாம் பழுதாக்கியிருந்த போதும் தயங்காமல் சிரித்த படி பயணப்பொதிகள் யாவற்றையும் இறக்கி வாசலுக்குள்ளாக வைத்துவிட்டு நின்ற அந்த மனிதனின் முகம் இப்போதும் அந்த அழகிய பாமரப்  புன்னகையோடு மனதில் நிழலாடுகிறது.


இப்போது ஹொட்டேலுக்குள் வந்தாகி விட்டது.  

தொடரும்...............

















Friday, April 19, 2013

Author Talk..........



நேற்றய தினம் மதியம் 1.00 மணியில் இருந்து 2.00 மணி வரை “The Creative Seed" என்ற புத்தகத்தை எழுதிய ஆசிரியர்  Lilian Wissink தன் புத்தகம் பற்றிப் பேசப்போகிறார் என்ற செய்தி சில வாரத்துக்கு முன்னரே என் தொழில் முகவரிக்கு வந்திருந்தது. Parramatta நூலகம் அதனை ஏற்பாடு செய்திருந்தது. தலைப்பும் நோக்கமும் அழகாய் இருந்ததால் என் பெயரைப் பதிவு செய்திருந்தேன். கூடவே வருவார்கள் என்ற நம்பிக்கையில் இரு கலைஞர்களுடய பெயர்களையும் அவர்களைக் கேட்காமலே கொடுத்தும் விட்டிருந்தேன்.



நேற்றுக் காலை மற்ற இருவரும் தம் விருப்பமின்மையைத் தெரிவித்த போது மனது மெல்ல சோர்ந்து போனது. வாசிப்புப் பிரியை; கலைகளின் ரசிகை என்பதைத் தவிர என்னிடம் வேறு எந்த தகுதிகளும் இல்லை. கலை என்பது அழகுணர்ச்சியுடனான ஆக்க பூர்வ வெளிப்பாடுகளைக் கொண்டமைவது. அதில் ஈடுபடுகிறவர்கள் மிக சொற்பமானவர்களே. புதிதானவற்றைக் காண அறிய, பரீட்சிக்க, கலந்துரையாட அத் துறைகளில் ஈடுபடுபவர்களே ஏன் கதவுகளை இழுத்துப் பூட்டிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.



எனினும் நான் போனேன். கச்சிதமான மேல் மாடி அறை ஒன்றில் தேநீர், கோப்பி, கேக், பிஸ்கட் வகையறாக்களோடு 9.10 பேர் வந்திருந்தார்கள். சின்னதான ஒரு microphone ஓடு புத்தக ஆசிரியரும் புன்னகையோடு பிரசன்னமாயிருந்தார். அவரவர் தமக்குப் பிடித்தமான உணவுப் பதார்த்தங்களோடு கதிரைகளில் அமர, நூலகர் புத்தக ஆசிரியரை அறிமுகப் படுத்தி ஆசிரியரைப் பேச அழைத்தார்.

புன்னகையோடு இன்று தன் பேச்சு எவ் எவற்றை உள்ளடக்கி இருக்கும் என்பதை சுருக்கமாகக் கூறி, தன் வாழ்க்கையின் எதிர்பாராத ஒரு பக்கத்தில் இருந்து பேச்சை ஆரம்பித்து, இந்தப் புத்தகத்தினை எழுதக் காரணமாய் இருந்த பின்னணி பற்றியும்; அப்புத்தக உருவாக்கத்தோடு தனக்கேற்பட்ட அனுபவங்கள் பற்றியும்; புத்தகம் சொல்லுகின்ற கருப்பொருள் என்ன என்பது பற்றியும்; அது நமக்கு என்னென்ன வகையில் பயன் படக் கூடும் என்பது பற்றியும் அன்பும் கனிவும் உறுதியும் நம்பிக்கையும் நேர்மையும் மிளிர மென்மையாக உரையாற்றினார். தெளிவான ஆங்கிலம். அச்சொட்டான அக்கறை மிக்க பேச்சு.



அதன் பின் கலந்துரையாடலுக்கான நேரம். பலருக்கும் பல விதமான கேள்விகள். சொற்பமான பேரே வந்திருந்த போதும் அவ்வளவு பேரும் ஈடுபாடும் தேவையும் விருப்பமும் உள்ளவர்களாகவும் நட்புணர்வும் அன்பும் வாய்க்கப்பெற்றவர்களாக இருந்ததும் ஒரு ரம்யமான சூழலை அங்கு ஏற்படுத்தியிருந்தது. ஒவ்வொருவருடய கேள்விகளும் மற்றவருக்கும் பயன் படும் விதமாகவும் உதவும் விதமாகவும் அமைந்திருந்தமை ஒரு கண்ணியமான கூட்டம் அது என்பதற்குப் போதுமான ஆதாரமாக இருந்தது.

அது முடிய நூலகர் வந்து அடுத்த மூன்று மாதத்திலும் என்னென்ன புத்தகங்கள் பேசப்பட இருக்கின்றன என்ற தகவலைக் கூறி நன்றி கூறி நிகழ்ச்சியை மிகச் சரியாக 2.00 மணிக்கு நிறைவு செய்தார்.

புத்தக ஆசிரியர் தம் முன் சுருக்கத்தில் குறிப்பிட்டிருந்த படி ஒரு சிறு பயிற்சித்தாளை நமக்குத் தந்தார்.

அடிப்படையில் அவர் ஒரு உளவளதுணையாளர், சுய மேம்பாட்டு திட்டவியலாளர். முன் சுருக்கத்தில் குறிப்பிட்டிருந்த படி தந்த அந்த கேள்வித்தாள் நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் பயன் பெறும் என்று தோன்றுவதால் அதனைத் தமிழ் படுத்தி இங்கே தருகிறேன்.

1.என் மகிழ்ச்சிக்காக எப்போதும் நான் செய்ய விரும்புகின்ற ஒன்று......

2.எனக்கு வேலைப்பழு இல்லாவிட்டால் நான் எப்பவும் செய்ய விரும்புகின்ற ஒன்று........

3.நான் சிறு பிள்ளையாக இருந்த போது நாம் எப்போதும் செய்து மகிழ்ந்த ஒன்று.......

4.என் புத்திளமைப் பருவத்தில் நான் மிக அனுபவித்துச் செய்த ஒன்று.......

5.என்னால் இப்போதும் செய்தால் மகிழ்வேன் என்று நான் கருதுகின்ற ஒன்று( படம், ஓவியம் வரைதல்,செதுக்கு வேலை, எழுத்து, கலைப்பொருட்கள் செய்தல், வாத்தியக் கருவி வாசித்தல், பாடுதல், ஆடுதல்.....)

6.எனக்கு விருப்பம்.........

7.காலங் கடந்து விட்டது, எனக்கு திறமை இல்லை என்ற நினைப்பை நான் கடந்து விட்டால் நான் செய்வேன் என்று நினைக்கின்ற ஒன்று.......

8.எனக்கு நான் அனுமதி தர நினைத்தால் தர விரும்பும் ஒன்று.......

9.எனக்கே எனக்கான நேரத்தை எனக்கென நான் ஒதுக்கும் போது நான் செய்ய நினைப்பது..............

10.என் இளமைக்கால என்னோடு நான் பேச நினைத்தால் நான் சொல்ல நினைப்பது.............................

11.இன்றில் இருந்து இன்னும் ஐந்து வருடத்துக்குள்.........

12.என்னுடய அடுத்த கட்ட நடவெடிக்கை.....................

புத்தகம் நமக்குள் இருக்கின்ற நம்மை; நமக்கு மட்டுமாக வாய்த்திருக்கும் ஓர் அழகியலை  எப்படி அடையாளம் காண்பது அதனை எப்படி வளர்த்தெடுப்பது அதில் நாம் காணக்கூடிய ஆத்மார்த்த திருப்தி என்பது பற்றியது. அந்த ஆத்ம திருப்தியில் தொனிக்கும் தெய்வீகத்தை அது பேசுகிறது. உனக்குள் இருக்கும் உன்னை கண்டு பிடி என்பதே அதன் தொனிப்பொருள். அதற்கு அது கைபிடித்து வழிகாட்டிச் செல்கிறது. புத்தகத்துக்குள் போவதற்கு முன் என்ற பகுதியை மாத்திரம் இப்போது வாசித்து முடித்திருக்கிறேன். ஒரு பேரன்புத்தாயாக தன் பாசமிகு பிள்ளையை கை பிடித்து ”உள்நோக்கி”  பக்குவமாய் நம்மை அழைத்துச் செல்கிறது அது.

தன்னைக் கண்டு பிடிக்கும் மார்க்கம் அங்கே புலப்படுகிறது.

இது நிற்க!

ஏன் நம்மவர்கள் இவற்றில் எல்லாம் ஈடுபாடே காட்ட மாட்டேன் என்கிறார்கள்? எம்முடய புத்தக வெளியீடுகளை ஒரு தடவை நினைத்துப் பார்க்கிறேன்...............அங்கே வியாபார யுக்திகளே மலிந்து கிடக்கின்றன.

கடையில் வாங்குகின்ற ஒரு புத்தகத்தைப் போலல்லாது ஆசிரியரின் கலந்துரையாடலுக்குப் பின்பான இப் புத்தகம் தனித்துவமான கட்புலனுக்கு உட்படாத ஏதோ ஒரு சிறப்பம்சத்தை தன்னுள் உள்ளடக்கி இருக்கிறது.  புத்தகத்தை அதன் அத்தனை பரிமானங்களோடும் அறிய புரிய ஆசிரியரது கையெழுத்தோடு உள்ள அவ்வுயிருள்ள சொத்தை ஸ்பரிசிக்கும் தோறும் எனக்கு மட்டுமேயான ஒரு முழுமை நிறைந்த உள்வாங்கலைக் கொண்ட ஒரு வஸ்துவாக அது பரினமிக்கிறது. அதன் முழுமையான அர்த்தங்களோடும் உள்வாங்கல்களோடும் அப்புத்தகம் புதியதொரு பரிமானத்தைத் தருகிறது.

நான் உயிரோடு இருக்கும் வரை இப் புத்தகத்துடனான என் உறவு மற்றெவருக்கும் கிட்டாத ஒரு சிறப்பு மிக்கதாய் இருக்கும். அந்த எழுத்தாளரோடு; அந்தக் குரலோடு; அந்த அனுபவங்களோடு; அந்தத் தோற்றப் பொலிவோடு; உரையாடல்களுக்கு வழங்கிய பதில்களோடு; அந்தக் கையெழுத்தோடு மேலும் அன்றய தினத்தோடு அது பின்னிப் பிணைந்த வாறு இருக்கும்.

உயிரோடு எப்போதும் என்னோடு வாழப் போகும் அது எனக்கு மட்டுமேயாக எத்தனை பெரிய வாசலை பூரண மகிழ்வு நிறைந்த மனநிலையோடு அது எனக்காகத் திறந்து விடுகிறது.

பிடித்த ஒரு துறைசார் புத்தகத்தை முழுமையாக அதன் அத்தனை தாற்பரியங்களோடும் உள்வாங்க வேண்டுமானால் இவ்வாறான நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும். ஆசிரியரையும் அது உருவான விதத்தினையும் பின்னணியினையும் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆசிரியரின் திகதியிட்ட கையெழுத்தோடும் பிரியங்களோடும் புத்தகத்துக்கான முழுப் பெறுமதியைக் கொடுத்து புத்தகத்தை பெற்றுக் கொள்ள  வேண்டும்.

கூடவே அந்த நிகழ்ச்சியும்  சலசலப்பெதுவுமில்லாமல் சொற்பமான தீவிர வாசிப்பு பிரியர்களோடு நிறைவு பெற வேண்டும்.

இதே மாதிரி.

Tuesday, April 9, 2013

இலட்சுமணக் கோடுகளும் எல்லை தாண்டாத கலைகளும்


கையெழுத்துப் பிரதிகளும் அச்சுயந்திர சாலைகளும் மையூறும் பேனாக்களும் தலைப்பாகை கட்டிய தமிழுமாக கொலுவீற்றிருந்த இலக்கியம் காட்சிப்பொருளாய் வரலாற்றுப் பக்கங்களின் கடந்து போனதொரு அத்தியாயமாய் ஆகிப் போனது காலத்தின் கட்டாயமாயிற்று. கால ஒளியில் துலங்கும் ஒரு நட்சத்திரமாய் எதிர்காலத்தில் அது நின்று ஜொலிக்கக் கூடும்.

விரும்பியோ விரும்பாமலோ நாம் அவற்றைக் கடந்து வெகுதூரம் வந்தாயிற்று. அது காலம் இட்ட கட்டளை. டிஜிட்டல் என்றொரு மாய உலகம் சிருஷ்டிக்கப் பட்டு புதிய உலகப்பண்பாடு ஒன்று தனித்தனி வீடுகளுக்குள்ளும் குடியிருக்கும் சிறு சிறுஅறைகளுக்குள்ளும் புகுந்து கொண்டு வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் புத்துருவாக்கி திருப்பித் தந்திருக்கிறது.

அது வீட்டில் இருந்து தொடங்கி வீதியில் இறங்கி, வாகனங்களில் பயணித்து, அலுவலகத்தில் உட்புதுந்து, மீண்டும் வீதி வாகனம் வழி திரும்பி, வரவேற்பறையில் உட்கார்ந்து ரீவி பார்த்து, சமையல் அறையில் பதார்த்தங்கள் செய்து, உறங்கப் போகும் வரை ஒரு மனிதனை தன் அத்தனை செயல் பாடுகளூடாகவும் அவனைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இதனை முதலாம் இரண்டாம் மூன்றாம் உலக நாடுகள் என்று பார்த்தால் என்ன, வளர்ந்த நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள் என்று பார்த்தால் என்ன; செல்வந்த நாடுகள் வறிய நாடுகள் என்று வகை பிரித்துக் கொண்டாலென்ன? - இவை எல்லாவற்றிலும் அது வேறுபாடு எதுவும் காட்டாமல் புகுந்து கொண்டு விட்டது.

உலகத்தில் 4000க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. அதில் எட்டே எட்டுத் தான் செம்மொழி என கொண்டாடுகிறோம். அதில் தமிழ் ஒன்று என்று பெருமைப் பட்டுக் கொள்ளுகிறோம். யாதும் ஊரே! யாவரும் கேளிர்!! என நாம் இந்தியா இலங்கை என்ற எல்லைகளுக்கப்பால் உலகம் முழுக்கப் பரந்து போனோம். - அதற்குக் காரணம் என்னவாக இருப்பினும் கூட - புலம்பெயர்ந்தோரின் புலம்பல் இலக்கியம் சொல்லும் ஏக்கப் பாடல்களுக்கப்பால் ’எல்லாம் நன்மைக்கே’ என்பதற்கமைய இப்போது தமிழ் இணையத்துக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. உலகத் தமிழர் என்று ஓர் புதிய அடையாளம் தமிழுக்கு வாய்த்திருக்கிறது. தாம் தாம் வாழும் நாடுகளின் பண்பாடுகள் வாழ்க்கை முறைகள் முன்னெப்போதும் இல்லாத வாறு தமிழுக்குள் சுவறுகின்றன. எல்லைகளற்ற கல்வி வேலைவாய்ப்புகள் புதிய புதிய விதைகளை வாழ்க்கை முழுக்கத் தூவிச் செல்கின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும்  அவை தம் வனப்பினை எழுதிச் செல்கின்றன.

இப்போது நாங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருவோம். சரி சிட்னிக்குள் நுழைவோம். அந்தச் சிறு சட்டத்துக்குள் நம்மை பொருத்திப் உருப்பெருக்கியால் உருப்பெருக்கிப் பார்ப்போம்.இங்கு தமிழர்கள் குடியிருக்கத் தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கு மேலிருக்கும். கலை இலக்கியம் என்ற வரையரைக்குள் நாம் வரைந்து காட்டிய சித்திரங்களும் வர்ணங்களும் எதைப் பேசுகின்றன? எப்படிப் பேசுகின்றன? ஏன் பேசுகின்றன? எதைப் பிரதி பலிக்கின்றன? கலையும் இலக்கியமும் சமூகத்தின் கண்ணாடி என்றால் புதிய தொழில்நுட்பத்தை பயன் படுத்தி அவுஸ்திரேலிய வாழ்புலத்தின் செல்வாக்கை உள்வாங்கியவாறு வெளிவந்த கலைப்படைப்புகள் எவை எவை?

நாடகக் கலை தவிர்ந்த கலையும் இலக்கியமும் வந்த பாதையை திரும்பிப் பார்த்து அழுது, விம்மிப்,பொருமி, பெருமிதப்பட்டு க் கொண்டு இருக்கிறதே தவிர புதிய சமூக அடையாளங்களை கலை இலக்கிய ஆவணங்களாய் ஆபரணங்களாய் ஆக்கியதாய் தெரியவில்லை.

நம் சந்ததிக்கு நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம்? பண்பாட்டுத் தொடரோட்டத்தில் தடி இப்போது நம் கையில். தொன்மையில் அல்ல தொடர்ச்சியில் இருக்கிறது பண்பாட்டுக்கான கையளிப்பு. மாறிச் செல்லும் அதன் இயல்புகளை நாம் பதிந்து செல்லக் கூடாதா?

விடுபட்ட ‘பேசாப்பொருள்கள்” என்னென்னெ? ஏன் அவை விடுபட்டன? - இக்கேள்விகள் கலை இலக்கிய கர்த்தாக்களுக்கு; இலக்கிய சிருஷ்டிகளுக்கானவை.

ஒரு வருடம் ஒன்றில் எத்தனை அரங்கேற்றங்கள் நிகழ்கின்றன?
எத்தனை கவிதைகள் புனையப் படுகின்றன?
எத்தனை எத்தனை இசை வல்லுனர்கள் பட்டம் பெற்று வெளியேறுகிறார்கள்?
வாசிக்கும் வல்லமையுடம் எத்தனை எத்தனை விதமான வாத்தியக்கருவிகளும் கலைஞர்களும் ‘மெளனப்பொக்கிஷங்களாய்’ கடலுக்குள் முத்தாய் புதையுண்டு போயிருக்கிறார்கள்?

- இவர்களிடம் இருந்து ஏன் ஒரு புதிய படையல் “சொந்தப் பார்வையில்” புத்துருவாக்கம் பெறவில்லை? மரபு தாண்டாத கேள்விகளாய் - இவை இன்னும் ஏன் கற்பப் பைக்குள்ளேயே படுத்துறங்குகின்றன? சமாதி நிலை கொள்கின்றன?

ஏதோ ஒரு நூற்றாண்டில் பாடியதையே மீண்டும் மீண்டும் பாடி -
ஏதோ ஒரு நூற்றாண்டில் ஆடிய பரதத்தையே மீண்டும் மீண்டும் ஆடி -
வாசித்துக் காட்டிய விற்பன்னங்களையே மீண்டும் மீண்டும் வாசித்து -
பழம்பெருமையையே மீண்டும் மீண்டும் மேடைகளில் முழங்கி -
இன்னும் இன்னுமாய்......

மரபுகளைப் பிடித்திழுத்து பலவந்தமாய் சேலைகட்டி வைத்திருப்பதில் கழிந்து போயிற்று கடந்த காலங்கள்.

குறும் படம் ஒன்றைக் அதன் அத்தனை தாற்பரியங்களோடும் கைத்தொலைபேசி ஒன்றினாலேயே உருவாக்கி விடலாம்!

சிறந்த கவிதை ஒன்றை உள்ளூர் கலைஞர்களின் கலைக் கருவிகளினால் மெல்லிசைப்பாடலாய் கொஞ்சம் மினைக்கெட்டால் குறுந்தகட்டில்  பொதித்து வைத்து விடலாம்.

வெளிச்சத்துக்கு வராத விடயங்களை இலக்கியமாக்க தேவை மொழியும் மனத்துணிச்சலும் நேர்மையும் கொஞ்சம் மனசும் மட்டும் தான்.

ஒரு பரதநடனத்தில் புதிய நடன உத்திகளைப் புகுத்தி புது நடன வடிவம் ஒன்றை அறிமுகப்படுத்தத் தேவை கற்பனை வளமும் கலாஞானமும் தான்.

டிஜிட்டல் உலகில் நாம் செய்யக்கூடியது என்ன என்ற கேள்வியை உங்கள் சிந்தனைக்கும் ஆற்றலுக்கும் விட்டு விடுகிறேன்.

தேங்கிய குட்டையில் எத்தனை நாளைக்கு மீன் பிடித்த படியும்....
அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்த படியும்....
வீண்பெருமையை மேடைகளில்  பேசிய படிக்கும்......

“ஊர் வாசத்தை தென்றலே நீ கொண்டு வருக”

அது நறுமணமாய் இருப்பினும் துர்நாற்றமாய் வீசினும் அதுவே நாம் எனும் வீச்சுடன் -







Monday, March 18, 2013

கல்கி “நடை”

அன்ன நடை, சிங்க நடை, கம்பீர நடை, நளின நடை, மெது நடை, விரைவு நடை என நடைகள் பலவிதம்.

அட, நான் சொல்வது வசனநடை.

சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு மூலமாக நம்மை காவியகாலத்துக்குள் வாழ வைத்த பெருமை கல்கியைச் சாரும். எம்மை நூற்றாண்டு தாண்டி பின் நோக்கிக் கூட்டிச் சென்ற நடை அது! கல்கியின் இந்தக் காவிய நடையை அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனால், தெரியாத ஒரு நடையும் அவரிடம் இருந்தது. அதனை நான் சொல்வதை விட அதனை அப்படியே தந்தால் தான் நல்லது.

ஜனவரி 1954ல் அவர் இலங்கைக்கு வந்து திரும்பிய பின் ‘இலங்கையில் ஒரு வாரம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய முதலாவது அத்தியாயம் இது.

கல்கிநடை!

 இலங்கையில் ஒரு வாரம்


தமிழ் நாட்டுக்கு மாபெரும் தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆசை என் உள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தது; என் இரத்தத்தில் கொதித்துக் கொண்டிருந்தது; என் இருதயமாகிற வெளியில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது.

சென்ற ஆகஸ்டு மாதத்தில் திடீரென்று அந்த ஆசை பொங்கிப் பெருகி விட்டது. “ எனக்கு ஏதாவது போக்குக் காட்டாவிட்டால் பூகம்பம், பெருவெள்ளம் முதலிய உற்பதங்களாக உருவெடுப்பேன்!” என்று பயமுறுத்திற்று. அஸ்ஸாமிலும் உத்தரப் பிரதேசத்திலும் இப்படி யாரோ தேசத் தொண்டு செய்யும் ஆர்வத்தை அமுக்கி வைத்ததினாலேயே அங்கெல்லாம் மேற்கூறிய உற்பதங்கள் நேர்ந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் என்ன? ஆனால் நான் அத்தகைய தவறு எதுவும் செய்யவில்லை: அதாவது தேசத் தொண்டு செய்யும் ஆர்வத்தை அமுக்கி விட வில்லை. அந்த ஆர்வத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று யோசித்துப் பார்த்தேன். அதற்கு இரண்டே இரண்டு வழிகள் தான் என் முன்னால் தென்பட்டன.

ஒன்று, காங்கிரஸ் மகா சபையின் அக்கிராசனப் பதவிக்குத் தேர்தலுக்கு நிற்கவேண்டும். அல்லது குறைந்த பட்சமாக, மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்காவது நின்று தொலைக்க வேண்டும்! இது ஒரு வழி!

ஆனால், இந்த வழியில் சிறிது புகுந்து பார்த்ததில் எத்தனை எத்தனையோ தடைகள் மலைபோல குறுக்கிட்டது. இந்த வழியில் தொண்டு செய்யவேண்டும் என்ற ஆசை எனக்கு முன்னதாகவே பலருக்கு ஏற்பட்டிருந்தது என்பதை நன்கு அறிந்தேன். அவர்கள் வெகு தூரம் முன்னேறி என்னைப் போன்றவர்கள் அந்த வழியில் பிரவேசிப்பதற்கே இடமில்லாமல் செய்து விட்டார்கள். அவர்கள் யார் யார் எனில் பொய், புளுகு, போர்ஜரி,கள்ளக் கையெழுத்து, கள்ள மார்க்கட்டு, லஞ்சம், சிபாரிசு - ஆகிய மகானுபவர்கள் தான். அடிப்படையில் காங்கிரஸ் அங்கத்தினர் கையெழுத்து வாங்குவதிலிருந்தே அத்தகையோர் விடாமுயற்சியுடன் வேலை செய்து வந்திருக்கிறார்கள். அத்தகைய ஆகாஸ சூரர்களுக்கு முன்னால் நாம் எங்கே? ஆகவே எனக்குத் தெரிந்திருந்த இரண்டாவது வழியைத் தான் நான் தேட வேண்டியதாயிற்று.

அந்த இரண்டாவது வழி, தமிழ் நாட்டிலிருந்து சில நாளைக்கு எங்கேயாவது போய்விட்டு வருவதே. தமிழ் நாட்டில் இப்போது தலைபோகிற பிரச்சினையாயிருப்பது உணவுப் பிரச்சினை: அதாவது உணவு இல்லாத பிரச்சினை. உணவு இல்லாத கேடு காரணமாக சில ஸ்திரீகள் குழந்தைகளை விற்பதாகச் செய்திகள் வந்தன. இன்னும் சில தாய்மார்கள் வயிற்றில் உள்ள குழந்தைகளைக் கூட விலைகூறி விற்று விடுவதாகச் செய்திகள் பிரசுரமாயிற்று. உணவு இல்லையென்று குழந்தைகளைப் பெற்றவர்கள் விற்றால் வாங்கிக் கொள்ளுகிறவர்கள் அக் குழந்தைகளை என்ன செய்வார்கள் என்பது தெரியவில்லை. இப்படிப்பட்ட பயங்கரமான நிலைமையில் ஒருவர் ஒரு வாரகாலமாவது வெளிநாட்டுக்குச் சென்று விட்டு வந்தால் அந்த வரையில் உணவு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவி செய்ததாகுமல்லவா? இப்படியே ஒவ்வொருவரும் செய்தால்  அதாவது வெளிநாட்டுக்குப் போய் ஒரு வார உணவை மீத்தால் நமது உணவு மந்திரி முன்ஷீ மிகவும் குஷியடைந்து நம்மை வாழ்த்த மாட்டாரா? நாம் திரும்பி வரும் போது ஸ்ரீ ரோச் விக்ரோரியா நமக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்க மாட்டாரா?

எனவே, வெளி நாட்டுக்குப் போவதன் மூலம் தமிழ் நாட்டுக்குத் தொண்டு செய்வது என்று தீர்மானித்தேன். எந்த வெளி நாட்டுக்குப் போவது என்று யோசித்த போது முதலில் கொரியா ஞாபகம் வந்தது. உடனே தளபதி மக். ஆர்தருக்கு ஒரு தந்தி கொடுத்தேன்.”உதவிக்குப் புறப்பட்டு வரத் தயார்: உடனே ஒரு ஸுபர் போர்ட் பம்மர் விமானம் அனுப்பவும்” என்று. “விலாசத்தார் அகப்படவில்லை” என்று தந்தி திரும்பி வந்து விட்டது! அடுத்த படியாக நமது அண்டை நாடாகிய இலங்கையை நினைத்துக் கொண்டேன். இலங்கை மந்திரி ஒருவர் தமிழ் நாட்டின் கதியை நினைத்து உருகி, “பத்தாயிரம் டன் அரிசி கடன் கொடுக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். சில காலத்துக்கு முன்பு இலங்கை தனக்கு வேண்டிய அரிசிக்கு இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது சக்கரம் சுழன்று, இலங்கை இந்தியாவுக்குக் கடன் தருவதாகச் சொல்லுகிறது. இந்த அதிசயமான நிலைமையின் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டாமா? உண்மையாகவே மனமிரங்கி இலங்கை மந்திரிகள் அரிசி கொடுக்கிறார்களா?  அல்லது “அழுகிய  வாழைப்பழத்தை மாடுகூடத் தின்னாவிட்டால்  புரோகிதருக்குத் தானம் கொடுத்து விடு!” என்று கோமுட்டி செட்டியார் கதையில் சொன்னாரே, அந்த மாதிரி இலங்கை சர்க்கார் சொல்லுகிறார்களா?

இதை நேரில் தெரிந்து கொண்டு வருவதற்காக இலங்கைக்குச் சமூகம் கொடுப்பது என்று தீர்மானித்தேன். ( நாம் இங்கே ‘விஜயம் செய்தல்’ என்று சொல்வதை நமது யாழ்ப்பாணச் சகோதரர்கள் சமூகம் கொடுத்தல் என்று சொல்லுகிறார்கள்) இலங்கை போவதற்கு இன்னும் சில முகாந்திரங்களும் எனக்குக் கிடைத்தன.

1. கொழும்பு தமிழ் சங்கத்தார் தங்களுடய எட்டாம் ஆண்டு விழாவில் வந்து கலந்து கொளள வேண்டும் என்று என்னைக் கேட்டிருந்தார்கள். அதற்குத் தேவையான போக்கு வரவு வசதிகளை ‘ஒழுங்கு செய்து’ தருவதாகவும் சொல்லியிருந்தார்கள்.

2.தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் அடுத்த ஆண்டு தமிழ் திருவிழாவை இலங்கையில் நடத்தவேண்டும் என்ற அழைப்பை ஒப்புக் கொண்டிருந்தார்கள். அவ்விதம் இலங்கையில் தமிழ் விழாவை நடத்துவதற்குப் பூர்வாங்க ஏற்பாடுகளை ‘ஒழுங்கு செய்து’ விட்டு வரும்படி ஸ்ரீ பெரியசாமித் தூரனையும் என்னையும் கேட்டுக் கொண்டார்கள்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான இன்னொரு காரணம் இருந்தது. பதினொரு வருஷத்துக்கு முன்னால் ஒரு தடவை நான் யாழ்ப்பாணம் சென்று திரும்பினேன். பிறகு எங்கெங்கே சென்றாலும், எந்தத் தமிழர் கூட்டத்தில் பேச நேர்ந்தாலும், ஒரு செய்தியைத் தவறாமல் சொல்லி வந்தேன். அது என்னவென்றால் “உண்மையான தமிழ் அன்பைக் காணவேண்டுமென்றால் யாழ்ப்பானத்திலே தான் காணவேண்டும்” என்பது. பம்பாயிலும் கல்கத்தாவிலும் டில்லியிலும் இன்னும் தமிழ் நாட்டிற்குள் சென்ற சென்ற இடங்களில் எல்லாம் இதை நான் சொன்னதுண்டு. மற்ற இடங்களில் வசிக்கும் தமிழர்களிடம் தமிழ் அன்பு இல்லாமலில்லை. ஆனால், சில இடங்களில் உள்ள தமிழர்கள் தங்கள் தமிழ் அன்பை ஒளித்து வைத்துக் கொள்கிறார்கள். துப்பறியும் நிபுணர்களைக் கொண்டு அதைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. இன்னும் சில இடங்களில் வெடிமருந்து வைத்துப் பாறையைப் பிளந்தால் தமிழன்பு சிறு ஊற்றாக மேலே வருகிறது. இன்னும் சில இடங்களில் தமிழ் அன்பு வேறு பாஷைகளின் மீது துவேஷமாகப் பரிணமித்துக் கோர தாண்டவமாடுகின்றது. ஆனால் யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பானத் தமிழர்கள் உள்ள இடங்களிலும் தமிழ் அன்பு வெளிப்படையாக அதனுடய இனிமையான வடிவத்தில் பொங்கிப் பெருகுவதைக் காணலாம்.

இப்படியாகப் பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததைக் கொண்டே சொல்லி வந்தேன். திடீரென்று சில நாளைக்கு முன் ஐயப்பாடு தோன்றி  விட்டது. பத்து ஆண்டுகளுக்குள் உலகத்தில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்து விடுகின்றன. வாழ்க்கையிலும் பல மாறுதல்களைக் காண்கிறோம். பன்னிரெண்டு வருஷத்துக்குள் புதுப்பிக்காவிட்டால்  பதிவு செய்த பத்திரம் கூடக் ‘காலாவதி” ஆகிவிடுவதாகக் கேள்விப்படுகிறோம்.அப்படியிருக்க யாழ்ப்பாணத்தாரின் தமிழ் அன்பு மட்டும் ஒரு மாமாங்கம் ஆகியும் அப்படியே நிலைத்திருக்கும் என்பது என்ன நிச்சயம்? மறுபடியும் ஒருதடவை போய் பார்த்து விட்டு வந்தாலன்றி அதைப்பற்றி இனிக் கூட்டங்களில் சொல்லக்கூடாது. ஆனால் தமிழ் கூட்டங்களில் அதைப்பற்றிச் சொல்லக் கூடாதென்றால் வேறு என்னத்தைச் சொல்வதற்கு இருக்கிறது?

எனவே, இலங்கைக்குச் சென்று யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு ‘சமூகம்’ அளித்து விட்டு வருவது என்று தீர்மானித்து, அதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்ய ஆரம்பித்தேன்.

இலங்கைக்குப் போக ஒழுங்கு செய்வது என்பது சமான்யமான காரியமல்ல.’பாஸ்போர்ட்’ வாங்க வேண்டும்: ’விஸா’ வுக்கும் என்ன வித்தியாசம் என்பதைப் பற்றி ஆராய்ந்து மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும். இன்னும், பண்டைக் காலத்தில் இலங்கையை வெற்றி கொள்ளச் சென்ற வீரத்தமிழர்களைப் போலவே உடம்பில் குத்துக் காயங்களுடன் புறப்பட வேண்டும். அம்மை ஊசி இரண்டு இடங்களில் குத்திக் கொள்ள வேண்டும்: காலரா ஊசி இன்னும் இரண்டு இடத்தில் குத்திக் கொள்ள வேண்டும்.

அம்மை ஊசி என்னை அப்படி ஒன்றும் தொந்தரவு செய்துவிடவில்லை. இலேசாக விட்டுவிட்டது. ஆனால் காலரா ஊசி குத்திக் கொண்ட அன்று கொஞ்சம் சுரம் வந்திருந்தது. ஊசி குத்திய டாக்டரை ரெலிபோனில் அழைத்து ‘சுரம் வந்திருக்கிறது!’ என்றேன். ‘சும்மா வரட்டும்; பறவாயில்லை: எனக்கு பரபரபாயிருக்கிறதே! என்றேன். ‘ஆப்டித்தான் கொஞ்சம் பரபரப்பாயிருக்கும். காலரா ஊசியே அப்படித்தான். அதற்குக் கொஞ்சம் கூட புத்தியே இல்லை. தராதரம் தெரிவதில்லை. எழுத்தாளர் - பத்திராதிபர் என்று கூடப் பயப்படாமல் கொஞ்சம் தொந்தரவு கொடுக்கும். ஆனால் ஒரு நாளில் அது போய் விடும்!’ என்றார் டாக்டர்.

“ அப்படியா செய்தி? இருக்கட்டும்! இந்தக் காலரா ஊசியைப் பற்றி ஒரு தடவை வெளுத்து வாங்கிவிட வேண்டியது தான்!” என்று முடிவு செய்தேன்.

ஆனால், காலரா ஊசியினால் ஏற்பட்ட ஒரு நன்மை அதைப்பற்றி பழிவாங்கும் எண்னத்தை மாற்றிக் கொள்ளச் செய்தது.

சுரத்துடன் அறையில் படுத்திருந்த போது வெளியே யாரோ சிலர் வந்தார்கள். “கல்கி இருக்கிறாரா?” என்று விசாரித்தது என்காதில் விழுந்தது. பதில் கூறிய பிள்ளை  “இருக்கிறார்; ஆனால் அவருக்கு காலரா இனாகுலேஷன்...” என்று சொல்வதற்குள், வந்தவர்கள், சரி, சரி! பிற்பாடு வந்து பார்த்துக் கொள்ளுகிறோம்” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினார்கள். வந்தவர்கள் அவ்வளவு அவசரமாகத் திரும்பிச் சென்றதை அதற்கு முன் நான் அறிந்ததே இல்லை! “காலரா” என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே ஓட்டம் பிடித்தார்கள்!

இதையெல்லாம்ம் இங்கே விபரமாக எடுத்துக் கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவெனில், வருகிற 1951ம் வருஷம் ஏப்பிரல் மாதத்தில் தமிழ் நாட்டிலிருந்து தமிழன்பர்கள் பலர் இலங்கைக்குப் போகவேண்டிய அவசியம் ஏற்படும். மதுரையிலும் திருவாரூரிலும் கோயம்புத்தூரிலும் நடந்தது போன்ற மாபெரும் தமிழ் திருவிழா அடுத்த முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கிறது. அந்த விழாவுக்கு போக விரும்பும் தமிழ் அன்பர்கள் இப்போது முதலே பிரயாண வசதிகளுக்கு ஒழுங்கு செய்யத் தொடங்குவது நலமாயிருக்கும்.


Monday, March 11, 2013

கலாசாரக் கலப்புகள்

இன்றய வேலை நேர இடைவேளையில் வாசிக்கக் கொண்டுபோன ஆனந்தவிகடனில் ராஜு முருகனின் ஆக்கத்தில் வந்திருந்தது ஒரு வாசகம். 

மனைவிக்கும் கணவனுக்குமான புரிதலை ஒரு வீணை திருத்தும் ஒருவரின் வாயிலிருந்து வருவதாக அந்த வாசகம் அமைந்திருந்தது. (ஆ.வி.6.3.13.பக்:90) அது இது தான். ”.....இது ஒரு அண்டஸ்டாண்டிங். ...பெருமாளுக்கும் நமக்கும் இருக்கிற மாதிரி......” 

உனக்கு தெரியும் ’நான் ‘ஆர் என்று. அந்தரங்க ஒழிவு மறைவு அகத்திலும் புறத்திலும் இல்லாத  ஒரு இயல்பாய் இருப்பதற்கான ‘இருக்கும்’  வசதி! இந்த ’இடத்தைப்’ பெற்றுக் கொள்ளும் வரைதான் புது மணத்தம்பதிகளிடையே முரன்பாடுகள் அதிகரித்துக் காணப்படும். அந்த முரன்பாடுகள் கூட ஒருவித  இருப்புக்கான நகர்ச்சி தான். அதன் பின்,அது ஒரு தனித்துவமான அந்தரங்கப் புரிதல்! நிறையையும் குறைகளையும் பரஸ்பரம் கண்ட பின்னர் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு வாழ்க்கைப் பாதைக்கு எனக்கு என்றென்றைக்கும் நீ தான் என்று வாழும் ஒரு பந்தம்.



( இதனை எழுதுகின்ற போது ஓர் இணையத்தளத்தில் “எனக்கான நாணயமான கடவுளாக மாதா இருந்திருக்கிறாள்” என்று ’சின்ன மடுமாதா... குருசுமரத்தடியில்....’ என்ற தலைப்பில் ப.வீ. ஸ்ரீரங்கன் எழுதி இருந்த மென்மையில் ஊறிய அவரின் ஆத்மானுபவ வரி நினைவில் நிழலாடிப் போகிறது.)


இப்படியான புரிதல்கள் ஏனோ சில தம்பதிகளிடத்தே நிகழாமலும்; சில குடும்பங்களுக்குக் கிட்டாமலும் போய் விடுகின்றன. வெளிநாடுகளில் அது இன்னும் இயல்பாகி விடுகிறது. 

பெண்களையும் ஆண்களையும் தமிழ் சமூகம் திருமணத்துக்கு தயாராக்குவதில்லை என்ற குற்றச்சாட்டு என்னிடத்தில் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. கனவுகளோடு இருக்கிற: கனவுகளோடும் கற்பனைகளோடும் மட்டும் இருக்கிற  இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் சங்கடங்களும் ஆளுமை முரண்பாடுகளும் கூட திருமணத்தில் இருக்கிறது என்ற உண்மை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். 

ஒரு பிரச்சினையை சமாளிக்கும் வல்லமையை ; விட்டுக் கொடுத்தலின் வெற்றியைப் பற்றி எல்லாம் கூடச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தனியே பட்டமும் பதவியும் பணமும் சந்தோஷமும் குதூகலமும் தான் வாழ்வென ஒரு மேம்போக்கான எண்ணத்தோடு வாழ வருபவர்களால் குறிப்பாக வெளிநாட்டு வாழ்வில் அவை தெரியப்படுத்தப் படுவதே இல்லை.


நேற்றய தினம் என் வேலைத் தோழி ஒருத்தியின் வீடு குடிபுகுதல் விழா. தெரிந்தெடுக்கப்பட்ட நண்பர்களுக்கு மாத்திரமான அழைப்பிதழ் என்று வருந்தி வருந்தி அழைத்திருந்தாள். அவள் வியற்நாமியப் பெண்.

அப்படி அவள் என்னை அழைத்ததற்கு தனிப்பட்ட ஒரு காரணமும் இருந்தது. இரண்டு பிள்ளைகளுக்கு தாயான விவாகரத்துப் பெற்றுக் கொண்டு தனித்து வாழ்ந்து கொண்டிருந்த அவளோடு இப்போது இணைந்து வாழ்வது எம்மோடு வேலை செய்யும் ஒரு தமிழ் இளைஞன். அவ் இளைஞனும் திருமணமாகிய சொற்ப வருடங்களுள் விவாக ரத்துப் பெற்றுக் கொண்டவன் தான்.


அவர்கள் இப்போது வீடு வாங்கி குடிபுந்திருக்கிறார்கள். அதற்குப் பெயர் "Living together." இங்கு பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள். கணவன் மனைவி உறவுக்கு அப்பாற்பட்ட சேர்ந்து வாழும் உறவு. அது அவுதிரேலிய சட்ட திட்டங்களால் அங்கீகரிக்கப் பட்டது. திருமணம் செய்து கொள்ளாமலே அவர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும்; சொத்துக்களைச் சேர்ந்து வாங்கவும் சட்டம் அவர்களை அனுமதிக்கிறது. விரும்பிய நேரம் பிரிந்தும் செல்லலாம். அதற்கு அவர்களைச் சட்டம் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. நீதிமன்றம் ஏறி இறங்கத் தேவை இல்லை. திருமணம் ஆகி விட்டதே என்பதற்காக சேர்ந்திருக்க வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் அவர்களுக்கு இல்லை.அன்பும் பிணைப்புமே அவர்களை இணைத்து வைத்திருக்கிறதே தவிர, சட்டமும் சமூகமும் அல்ல.  நட்பும் புரிந்துணர்வும் சார்ந்த ஒன்றாக இருக்கும் இந்த உறவுஅது. 

விரும்பாத இடத்து வலிகள் எதுவும் இன்றியே பிரிந்து போகவும் அனுமதிக்கிறது அது. கணவன் மனைவி என்ற சட்ட ரீதியான உறவு மாதிரி இது தேவையற்ற மனக்கிலேசங்களைத் தருவதில்லை: பிடித்திருக்கிறதா இணைந்திருக்கிறோம்: பிடிக்கவில்லையா நண்பர்களாகவே பிரிந்து விடுகிறோம்: அதற்கு தயாரான மனநிலையிலேயே எப்போதும் இருப்பதால் ஒருவர் மீது ஒருவர் எப்போதும் அன்போடும் உண்மையோடும் நட்போடும் உண்மையான அக்கறையோடும் வாழ்கிறோம் என்கிறார்கள்.

நாம் வேலை செய்கிற பகுதி வேறாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் கடந்து செல்லும் சந்தர்ப்பம் நிகழும் போதெல்லாம் சில தமிழ் சொற்களைக் இப் பெண் என்னிடம் இருந்து கேட்டறிந்து கொள்வாள். தமிழ் பெண்கள் நீளக் கூந்தல் வைத்திருக்கிறார்கள் என்று தானும் நீளக் கூந்தல் வளர்க்கத் தொடங்கி விட்டாள். விதவிதமான சமையல் செய்து அசத்துவாள். வீட்டு உள்ளக அலங்காரங்களில் மிகுந்த சிரத்தை எடுத்து இணையங்களிலும் கடைகளிலும் தேடி தன் அடையாளம் தெரியும் படியாக அலங்கரிப்பாள்.


வாழ்க்கை சந்தர்ப்பங்களால் நிறைந்திருக்கிறது: வாய்ப்புகள் எங்கனும் கொட்டிக் கிடக்கிறது. காலமோ மிகச் சொற்பமாக இருக்கிறது. வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழவே எல்லோரும் பிரியப்படுகிறார்கள்.அது ஒரு விதமான ஓட்டப் போட்டி மாதிரி. சேர்ந்து ஓட முடியாதவர்கள் தோற்றுப் போகிறார்கள். அல்லது அவர்களின் ஓட்டவேகத்தோடு ஓடுபவர்களோடு துணை சேர்ந்து கொள்கிறார்கள். மெல்ல ஓடுகிற தமிழ்பெண்ணைத் தோற்றுப் போனவளாகச் சமூகம் காண்பது தான் ஒரு சோகம்.

இந்த வியற்நாமியப் பெண் ஒரு தமிழ் ஆணின் விருப்பங்களை அப்படிப் புரிந்து வைத்துக் கொண்டிருந்தாளா அல்லது அவளது இயல்பே அது தானா என்று தெரியவில்லை. அவள் அதி அற்புதமாக தன் துணையைப் புரிந்து கொள்ள ; அன்பைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறாள் அல்லது அத்தகைய அன்போடு இருக்கிறாள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அத்தனை பட்சத்தோடும் அக்கறையோடும் அன்றைக்கும் அவள் நடந்து கொண்டாள். ’அன்பே’ என அவள் தமிழில் அவனை அழைப்பது அவன் மீதான அவளின் அன்பின் வெளிப்பாடெனவே எனக்குத் தோன்றுகிறது. என்னை அவள் தன் வீட்டுக்கு அழைக்கும் போது ’நீங்கள் வந்தால் ..............மிகுந்த சந்தோஷைப்படுவார்.’ அதற்காகவேனும் வாருங்கள் என்று அழைத்திருந்தாள்.( வேலையில் இருவரும் வேறு வேறு தளங்களில் வேலை செய்கிறார்கள்)


அங்கு நான் போன போது தாமதமாகி விட்டது. பல உணவுகள் பலராலும் பகிரப்பட்டு விட்டன. அங்கு, அவள் வீட்டில், எடுத்த உணவுப் பொருட்களையும் வீட்டின் வடிவமைப்பையுமே இங்கு காண்கிறீர்கள். (இணையத்தளங்களில் தனிப்பட்டவர்களின் படங்களைப் பிரசுரிப்பதில் எனக்குச் சம்மதமில்லாததால் வீட்டின் முழுப்பரிமானங்களோடும் இருக்கின்ற அவர்களுடய பல  படங்கள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன)

இந்தப் பதிவில் நான்கவதாக இருக்கிற படம் ஸ்பிறிங் றோல் என அழைக்கப் படுகிறது.சோறினை சமைத்து அதனை மாவாக அரைத்து தட்டையான பேப்பர்களாகச் செய்து பக்குவப்படுத்தி காயவைத்து சீனக் கடைகளில் விற்கிறார்கள். அவற்றை வாங்கி அந்த வட்டப் பேப்பரை சுடு நீரில் போட்டவுடன் அது வெந்து மென்மையான துணிபோலாகி விடுகிறது. அதற்குள் றால், கரட், வெங்காயத்தாள், மற்றும் பிற மரக்கறிகளை நீள வாக்கில் வெட்டி நடுவில் வைத்து உருட்டி ஒட்டி விடுகிறார்கள். அதனை சோசில் தொட்டு சாப்பிடுகிறார்கள். செய்ய இலகுவானது: சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. வயிற்றை இலகுவில் நிரப்பி விடத்தக்கதும் கூட. நேரமும் கனக்க எடுக்காது. நாம் விருந்தினர் வந்தால் பஜ்ஜி,வடை, பகோடா என்று செய்வது போல இவர்கள் திடீரென வரும் விருந்தாளிகளுக்கு இதனைச் செய்து கொடுக்கிறார்கள்.


எனக்கு மிகப்பிடித்திருந்தது அதற்கடுத்ததாக இருந்தது தான் . கரும்புத்துண்டை நடுவில் வைத்து றால் சுவை கொண்ட தசைக் கலவையால் அதனைச் சுற்றி உருட்டி பொரித்து கொடுக்கிறார்கள்.கரும்பின் சுவை றாலிலும் றாலின் சுவை கரும்பிலும் ஊறி அது ஒரு அதிசய சுவையாக இருந்தது. புதினமான ஒரு சாப்பாடு. 


ஏனைய பல உணவுகளையும் பான வகைகளையும் படமெடுப்பது அநாகரிகமாகப் பட்டதால் எடுக்கவில்லை. கீழே இருக்கின்ற படம் அவர்களின் முன் பக்க புல் வெளியில் இருக்கும் செம்மறியாடும் குட்டியும். சீமேந்தில் செய்தது.


கீழே இருக்கும் இந்தப் படம் அவள் வீட்டுப் படிக்கட்டின் மூலையில் அமைந்திருக்கிறது.





கீழே இருக்கும் சூரியனோடு இருக்கிற இந்தப் படம் அவளின் வீட்டின் வரவேற்பறையின் ஒரு பக்க சுவர்.

நாம் எல்லாம் சாமியை தனியான அறையில் வைத்து விட்டு சாமியறை அல்லது பெரியறை என்று பெயரும் இட்டு ஆசாரமாக இருப்போம். அவர்களோ இறந்த அன்புகுரியவர்களுக்கு அந்த இடத்தைக் கொடுத்து மெழுகுவர்த்தி ஏற்றி பூக்களும் வைத்து விட்டுத், தாம் வணங்கும் புத்தரை வீட்டு வரவேற்பறையில் பெரும் இடம் ஒன்று கொடுத்து வைத்திருக்கிறார்கள். அதனைத்தான் முதல் இரண்டு படங்களிலும் காண்கிறீர்கள்.


HAPPY HARMONY DAY! 
21.03.2013












Sunday, March 3, 2013

Bower Bird

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணாத்திப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
பதினாறு வயதானால் பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்


ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில்
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

கவிஞர் வைரமுத்துவின் இந்த வரிகளை நினைக்க வைத்தது உலகின் சுறுசுப்பான உயிரினங்கள் பற்றிய சிறு குறிப்பொன்று.



மனிதர்கள் சுசுறுப்பானவர்கள் என்று ஒரு பொதுவான அபிப்பிராயம் இருக்கிறது. உண்மையில் மனிதர்களை விட சுறுசுறுப்பில் மிஞ்சியவர்களாக தேனீக்கள்,பென்குயின்கள்,மண்புழு,கறையான்,Cleaner Wrasse என்ற ஒருவகை மீனினம்,Bower Bird என்ற ஒரு பறவை இனம், ஆபிரிக்கக் காட்டுநாய், பெண்சிங்கம், நீர் நாய், எறும்பு எனப்பட்டியலிடுகிறது அந்தக் குறிப்பு.



என்னை ஆச்சரியப்பட வைத்தது Bower Bird என்ற பறவை. சுறுசுறுப்பில் இது ஆறாம் இடத்தைத் தட்டிக் கொண்டிருக்கிறது. இன விருத்திக்காக; முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக கூடு கட்டுவது தானே பறவைகளின் இயல்பு.  ஆனால் இந்தப் பறவை தன்னுடய சந்தோஷத்திற்காகக் கூடு கட்டுகிறதாம். அழகிய முறையில் கலாரசனையோடு அது தன் வீட்டை  வடிவமைக்கிறதாம். அதுவும் வழக்கமாகப் பறவைகள் கூடு கட்டப் பயன்படுத்தும் குச்சிகள் தும்புகளால் அல்லாமல் நிறமுள்ள கூழாங்கற்கள், பூக்கள், வளவளப்பான சிப்பிகள், மரத்துண்டுகள், சின்னச் சின்ன வண்ணமான பொருட்களால் தன் கூட்டை தனித்துவமான முறையில் வடிவமைக்கிறதாம். எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் தனித்துவமாகத் தெரியத்தக்க விதத்தில் கண்களை ஈர்க்கும் வகையில் அது தன் வீட்டை இணக்கிக் கொள்கிறது என்று அக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.


அதிசயம் என்னவென்றால் அது பாடுபட்டு கலாரசனையோடு வீட்டை இணக்கி விட்டு அதன் அழகில், ரசனையில் மயங்கி அதற்கு முன்னால் நின்று ஒரு ஆட்டம் போடுமாம். அந்த ஆட்டத்தில் மயங்கி பெண்பறவை இந்த ஆண்பறவையைத் தேடி  வந்து சேர்ந்து கொள்ளுமாம்!

’கலைஞக் குருவி’ போலும்! ரசிகை சோடி சேர்ந்து கொள்கிறது!

அதிசயமாக இல்லை?