Sunday, February 21, 2010

சொற் பிரபஞ்சம்... தொடர்ச்சி...


முதல் பதிவை எழுதிய பின்பு தான் மறை மலை அடைகளார் ஞாபகத்தில் வந்தார். அவரை எவ்வாறு சொல்லாமல் விடலாம்?தனித்தமிழ் இயக்கத்தை நடத்தி அதன் அழகைப் பட்டை தீட்டி அதனைச் செயல் வடிவிலும் செய்து காட்டி மறைந்தவரல்லவா அவர்!

அவரது தமிழ் சொல்லாடல் இன்னொரு வசீகரம் பேசும்.அது தர்மத்தால் சூழப் பட்ட தமிழ்.நீதியிலும் சத்யத்திலும் தோய்த்தெடுத்த தமிழ்.அவரது எழுத்துக்களை வாசிக்கும் தோறும் தர்ம தேசத்தில் வாழுவதை மனமுணரும்.தீமைகளே இல்லாததும் புண்ணிய ஷேத்ரமுமான தர்மபுரியில் மனம் நிலைத்திருக்கும்.சாதாரண உலகுக்கு வரும் போது தான் அவரது உயரத்தையும் அங்கு எம்மையும் அழைத்துச் சென்ற அவரின் சிறப்பையும் அறிய முடியும்.அது அவரால் தமிழுக்குக் கிட்டிய சிறப்பு.அவரது புத்தகங்களில் எதை எடுப்பது? எதை விடுவது? எல்லாமே நழுவ விட்டு விட முடியாதவை.

சரி, இனி விடயத்துக்கு வருவோம்.




1)-(இவை 'எஸ்போ ஒரு பன் முகப் பார்வை' என்ற புத்தகத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்)-


...கலாசாரத் தூதனாக இந்த நூலை அனுப்பலாம்.

வரண்ட முகமன் /வித்துவ ஏமாப்பு / ஈரமுள்ள தீ

மண் அப்பிய எழுத்தோவியம்

கருத்து எதிர் நீச்சல்

ஓட்டம் அலட்சியமாக இருந்தாலும் பொருள் கவனமாகத் தீர்மானிக்கப் பட்டது.அதன் இலக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்டது.

பல வண்னப் பூக்களை அள்ளிச் சொரிந்தது போலவும் மலையினின்று அருவி சரேலெனக் கொட்டுவது போலவும் வரிசை கட்டிக் குருகினம் பறப்பது போலவும் சொற்களால் பொழியும் கை வண்ணம்.

யாழ்ப்பாணத்து மானத்தைக் காக்கும் கிடுகு வேலிகள் யாழ்ப்பாணத்துச் சிக்கனத்தையும் பண்பாட்டையும் தாங்கி நிற்கின்றன.

உண்மைத் தோற்றத்தில் பேயறையப் பட்ட சிலர்

கலா சத்தியம்

உள்ளுணர்வின் உதிர்வு முறுவல் என்னும் நிகழ்வு.

உதட்டத் தாண்டாத உவகை.

கூலிக்கமர்த்தி போலித் துயர் பாடி..

புத்தி ஜீவித சர்வாதிகாரம்

ஆரோக்களின் நகை(த்தல்)

சுய வெப்பிசாரம் / சிந்தனைக் களம்

ஆண்மாவைப் பீடித்துள்ள பிணி

சதா மாற்றமடைந்து கொண்டே இருக்கும் நமது சூழ்நிலைக்கேற்ப எம்மையும் நாம் மாற்றிக் கொள்ளா விடின் நம் வாழ்வு தேங்கிய குட்டையாய் விடும்.(இது பற்றி அ. முத்துலிங்கம் 'நான் தயார்' என்றொரு சிறப்பான சிறுகதை எழுதி உள்ளார்)

மன்னிப்புக் கோரலும் என் கைகுலுக்கலுக்குள் இருக்கும்.

தமுக்கம் / இலக்கிய அரசியல்

தமிழ்த்துவ அக்கறை

ஆக்க வீச்சு மொழிக்குள் வித்தை புரிகிறது.

தங்களைத் தகவமைத்துக் கொள்கிறது.

கெட்டி தட்டிப் போன நடுத்தர வர்க்கத்துக்கும் பொருந்தும்

தீவிரப் பட்ட தத்துவத் தேடல்

மன உலகம் மொழிக்குள் பிடிக்கப் படுகிறது

உண்மையின் உபாசகனாய் வாழ்தல்

அந்தரங்க உழைச்சல் / நளின நயம்

நெருப்புப் பார்வை / சோக விமோசனம் / தத்துவ கடைசல் / சொற் சிக்கனம்

திட்டமிட்ட புத்தி ஜீவித இருட்டடிப்பு

புதிய உச்சங்கள் / புதிய சிகரங்கள்

அடைப்புக் குறிக்குள் படைப்பு நிகழ்த்தாது சத்தியம் நுரை
க்கின்ற முழு உயிர்ப்பும் தெறிக்க பிரளய கால ஊழி வெள்ளமாய்...

சிருஷ்டி ரகசியம்

மலரின் கர்ப்ப நிலை மொட்டு.

தவ வேள்வி / இலக்கிய மேட்டிமை

எரியும் விளக்கில் கை வைத்தால் சுடும்.அதனால் விளக்கையே அணைத்து விடலாமா? விளக்கும் வேண்டும் விவேகமும் வேண்டும்.

கற்பு ஒருகால கட்ட வளர்ச்சி ஏற்படுத்திய ஒழுங்கு.

அவரவர் பயம் அவரவர் தர்மம்.

வாழ்க்கையை வாய்ப்பாடாய் சுருக்கி விடும் சில மனித மனம்.

காலத்தின் நாக்கு / காம வாடை வீசும் வார்த்தைகள்

அயர் தட்டிய காயமாய் தோற்றம் காட்டும் சமுதாயம்.

மரபுடைப்பும் சுய விடுதலையும்.



இந்த உலகத்தைப் பார்ப்பது நம் கண்ணல்ல மனம்.(கீதை)



2)'வினவு வின செய்' என்றோர் இணையத் தளம் ஈழப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் பல அரசியல் கட்டுரைகளை வெளியிட்டது.தமிழை அதன் ஆக்ககாரரில் ஒருவர் மிக அநயாசமாக ஒரு ஆக்ரோசமிக்க வீரனின் வாளைப் போலப் பயன் படுத்தியிருந்தார்.அந்த வாள் வீச்சின் சுழற்சியையும் அதன் லாவகத்தையும் பார்ப்பதற்காகவே அக் கட்டுரைகளை மீண்டும் மீண்டும் வாசித்திருக்கிறேன்.அதிலிருந்து சில.

ஒரு காரசாரமான் அரசியல் கட்டுரையின் இறுதியில் அவர் இவ்வாறு கூறி முடிக்கிறார்.

".....என்பன போன்ற கேள்விகளுடன் எதிர் வாதத்திற்குச் சில பதிவர்கள் தயாராக இருக்கக் கூடும்.முதலில் கூரை ஏறி கோழி பிடிக்கும் கதையைப் பேசுவோம்.வானமேறி வைகுந்தம் போகும் வழியைப் பற்றி அப்புறம் விவாதிக்கலாம்".

ஈழத்தமிழனின் விடுதலை பற்றி எங்களைத் தவிர வேறு யாரும் பேசக் கூடாது என்று மற்றவர்களின் குரல்வளையை நெரித்த 'வீரம்'.....

3)'பனிக்குள் நெருப்பு' என்ற புத்தகத்திலிருந்து;-

உன்னத ஊழியம்

குழு நலப் பஜனை

தமிழின் பிரம்மத்துவம்



4)இறுதியாக மேலும் சில...

கொப்புளானா என்ற சிறுகதையில் அ.முத்து லிங்கம் ஒரு குடும்பப் பெண்னை இப்படியாக வர்ணித்திருந்தார்.

"பத்மாவதிக்கு ஆறாம் வகுப்பு மாணவி போல முகம்.ஒரு கூட்டத்தில் தொலைந்து போனால் கண்டு பிடிக்க முடியாது.எல்லோருடய முகமும் அவருடையது போலவே இருக்கும். பார்த்தவுடன் அனுசரித்துப் போக வேண்டும் என்ற உணர்வை அது தூண்டி விடும்"


5)ஒரு முறை 'சும்மா' வாசிக்க என்று கொண்டு சென்ற தினக்குரல் பத்திரிகையில்(29.கார்த்திகை 2009; பக்.39)சிற்பி பாலசுப்ரமணியம் என்பவர் மகாகவியின் 'பொருள் நூறு' என்ற புத்தகத்தைப் பற்றி பனுவல் ஒன்று எழுதி இருந்தார்.அவரது கவிதைகள் பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்.

"அலையலையாக ஏறி இறங்கும் வாழ்க்கையில் ஒரு பூம்படகாக கவிதையை மிதக்க விட்டார்.அதன் மெல்லிய அசைவில் இசையையும் தாள கதியையும் இனம் காணும் படி செய்தார்.வானத்தையும் பூமியையும் ஏறிட்டுப் பார்த்து ஒரு தத்துவ தரிசனத்தைக் கனக்க கனக்க முன் வைக்காமல் சாளரத் திரையினூடே தெரியும் நந்த வனம் போல - மெல்லிய காற்றில் அதிரும் வீணைத் தந்தி போல - தத்துவங்களை உணர வைத்தார்"

பாற்கடலின் ஆழம் மந்தர மலைக்குத் தெரிந்ததில் வியப்பென்ன!இது நம் நாட்டு மகாகவியை அறியாதவர்களுக்காக அவரது பாடல் ஒன்று.



"சிறு நண்டு மணல் மீது படமொன்று கீறும்
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
வெறு வான வெளி மீது மழை வந்து சீறும்
வெளி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்"

மேலே சொன்ன சிற்பியின் நயம் பாடலோடு இசைவது போலில்லையா?

Friday, February 19, 2010

சொற் பிரபஞ்சமும் எழுத்தாளனின் எழுத்தாளுமையும்


எப்போதும் ஒரு புத்தகம் படிக்கும் போது அப் புத்தகம் கொண்டிருக்கிற உள்ளடக்கத்தைக் காட்டிலும் தான் சொல்ல வந்த கருத்தை அவ் எழுத்தாளன் எந்த விதமாகத் தமிழைப் பயன்படுத்திச் சொன்னான் என்பதினை அறிவதில் ஆர்வம் எனக்கதிகம்.வசீகரத் தமிழ் நகைச்சுவைத் தமிழ், செந்தமிழ், இலகு தமிழ், மையக் கருத்தைச் சுற்றி சுற்றி வரும் தமிழ், நேரடியாக எந்த வித அலங்காரங்களுமற்று விடயத்துக்கு வரும் தமிழ்,அலங்கார வார்த்தைகள் மட்டுமே கொண்டிருக்கும் தமிழ் ... என அவை எழுத்தாளருக்கு எழுத்தாளர் கைகளுக்கு ஏற்ப வேறு படும்.

இது விடயத்தில் மெல்லிய நகைச்சுவை இழையோட நாசுக்காக எழுதும் அ. முத்துலிங்கம் எனக்கு மிகப் பிடித்தமான ஓர் எழுத்தாளர்.மிக இயல்பாக பேசுவது போல எழுத வல்லவர் அவர்.புதிய கலைச் சொற்களை ஆங்கிலத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழி பெயர்த்து தமிழுக்கு வளம் சேர்ப்பதில் பேராசிரியர் கா. சிவத் தம்பி வல்லவர்.மொழி விளையாடிச் செல்லும், வசப் படும் அவருக்கு.கிடுகு வேலிப் பாரம்பரியம்,வரலாற்றுப் பின் புலம்,போன்றவை இப்போதும் மனதில் நிற்பவை.பண்டித மணி. கணபதிப் பிள்ளை அவர்களின் எழுத்துப் பாங்கு வசீகரமாய் விளங்கும்.அவரது தமிழ் தேனில் நனைத்தெடுத்த இனிப்புப் பண்டம் போல விளங்கும்.மிக சுவை மிக்கது.சாரமும் கொண்டது.தமிழின் தித்திப்பை கையால் குழைத்துத் தீத்தும் கரம் அவரது.அனுபவத்தாலும் அறிவாலும் வயது மிக முதிர்ந்த ஒருவர் ஆதரவோடு ஒரு சிறு குழந்தையை வாழ்க்கைப் பயணம் நெடுகிலும் அழைத்துச் செல்வது போலிருக்கும் அவரது தமிழ்.

அழகான சொற்களைச் சேகரித்து வைக்கும் பழக்கம் பல்கலைக் கழகத்தில் ஆரம்பித்தது எனக்கு.சிவத்தம்பி அவர்கள் பாடம் நடத்தும் போது பாடத்தை விட்டு விட்டு சொற்களால் என் கொப்பியின் கடசிப் பக்கங்கள் நிரம்பும். அவை எல்லாம் புலப் பெயர்வோடு கைநழுவிப் போய் விட்டன என்றாலும் வைரமுத்துவின் ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கிய பின் மீண்டும் எழுத்தாளர்களின் மொழியாளுமை பற்றிய தேடல் ஆட்கொள்ளத் தொடங்கி விட்டது.அதன் பின் எப்போதோ அவவப்போது ஆங்காங்கே எழுதி வைத்த சொல் துண்டங்கள் எங்கே எனத் தேடி காணாமல் அலுத்திருந்த ஒரு பொழுதில் தற்செயலாகக் கிட்டிய கொப்பித் துண்டொன்றின் கடசிப் பக்கத்தில் எழுதப் பட்டிருந்த சில 'சூரியத் துண்டுகளை' ஒரு பதிவாக இங்கிடலாம் என்ற எண்ணத்தின் விளவு இது.

(எங்கு பெற்றுக் கொண்டது என்று தெரியவில்லை)வண்னக் குஞ்சரம் கட்டிய தூரிகைக்கு தலைப் பாகை கட்டிய என் பேனாவின் வணக்கம்.

'தேவதைகள் செல்ல அஞ்சும் இடங்களுக்கெல்லாம்' உல்லாச யாத்திரை போக எஸ்போ அஞ்சுவதில்லை.(எஸ்போவின் எழுத்துப்பற்றி இ.பா)

இது ஒரு ரொமாண்டிக் கவிஞனின் சூரிய நமஸ்காரம்.(யாரோ ஒருவரது கவிதைக்கு எழுதப் பட்டிருந்த விமர்சனம்)

இலக்கிய ரசனை என்பது மொழியைத் தாண்டி உள் மனத்து அழகுணர்ச்சியின் அடையாளம்.கவிதை சொல் தீட்டும் ஓவியம்.உள் மனப் பயணம்.

சொற்களுக்கு ஆசிரியர் ஆடை கட்டியிருக்க வேண்டும்.பேனா முனையில் உறங்காது அவர் கண்கள் உட்கார்ந்திருக்கின்றன.

கட்டித்த தமிழ் / வித்துவ ஆரவாரம் / பாமர பவ்வியம் / தமிழ் நடை வல்லபம் / நியாயப் பிரழ்வு.

தோற்றோர் தம் தமிழ் அரிப்புகளுக்கு வடிகாலாக விமர்சனத்தைக் கொள்ளுதல்

விண்ணாணம்

இலக்கிய வித்துவ சேஷ்டைகள்

விண்ணாணம்/ வித்துவச் சாடல் / அவக்கேடு/ உண்மையின் தரிசனம்

ரொய்லட் பேப்பர் கலாசாரம்

இலக்கிய சல்லாபம்

அம்பையின் எழுத்தாளுமை ( எஸ்போவைப் பற்றியது)'அவர் எழுதிய எல்லாவற்றையும் அவற்றின் முன்னுரை,இடையுரை,பின்னுரை,புகழுரை,நுழைவாயில்,முன்னீடு, கோபுரவாசல்,திருக்கடைக் காப்பு,ஆச்சரியக் குறி,கேள்விக்குறி,இவற்றுடன் படிக்க முடிந்தது.'வளரிளமைப் பருவ அறிவற்ற அபிநயப் போக்கு, சாணக்கிய சாதனை,பிரச்சாரம் என்ற ஒன்றால் அது அவற்றை நலமெடுத்து விடும் மரபுடைப்பு

(இந்திரன் என்பவர் எழுதியது)ஏராளமான நீதி விசாரணைகளும் தீர்ப்புகளும் நிரம்பிய இந்த சமூகத்தை விட்டகன்று குளிர்ந்த கல்லறைகளும் வேப்பமர நிழலின் காற்றும் அமைதியில் மனித வாழ்வின் அநித்தியத்தைப் பாடும் குயில்களும் நிரம்பிய சுடுகாட்டில் அமரும் போது தான் நாம் வாழ்வதின் அர்த்தம் என்ன? நல்லதும் கெட்டதுக்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? சுதந்திரத்தின் அர்த்தம் என்ன? மனிதனுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகள் என்ன? நாம் சவாலை எப்படி எதிர் கொள்ள வேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடை காணலாம்.


உயிர் பெருக்குஅவனவன் ஆற்றலோடு அவனவன் நிமிர்வு.


அடுத்த பதிவில் சொல் பிரபஞ்சம் பற்றிய பதிவு தொடரும்....

Sunday, February 7, 2010

சிட்னியில் சில எழுத்தாளர்கள் - சில தகவல்கள்

சென்ற வார நடுப்பகுதியில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கும் கவிஞர் வைதீஸ்வரனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டிற்று. அவரது அனுபவ ஞானமும், பட்டறிவும், இயல்பாற்றலும் நாம் எல்லோரும் அறியவும் பெற்றுக் கொள்ளவும் பெரிதும் வேண்டத் தக்கன.அவருடனான ஒரு அனுபவப் பகிர்வும் பயிற்சிப் பட்டறையையும் சிட்னியில் வைக்கத் தீர்மானித்துள்ளோம்.

கவிதை மற்றும் இலக்கியங்கள் மீது ஆர்வமுடையோர் பற்றிய விபரங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். ஆர்வமுள்ள பங்கு பெற்று பயன் பெற விரும்புவோர் உங்கள் எண்ணிக்கைகளை எமக்கு அறியத் தந்தால் மண்டப வசதிகளையும் இருக்கை வசதிகளையும் ஒழுங்கு செய்ய உதவியாயிருக்கும்.

சென்ற ஆண்டின் (1999)முற்பகுதியில் மெல்போர்ன் மாநகரில் நடந்து முடிந்த எழுத்தாளர் விழாவுக்கு இலங்கையிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் சில எழுத்தாளர்கள் வருகை தந்திருந்தார்கள்.அதில் பிரதானமாக மலையகத்திலிருந்து வருகை தந்திருந்த தெளிவத்தை யோசெப் அவர்களும் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த திரு.திருமதி ஜெய மோகன் அவர்களும் அவர்களோடு கூடவே மெல்போர்னிலிருந்து வந்திருந்த முருகபூபதி அவர்களும் சிட்னி மாநகரைச் சுற்றிப் பார்க்கவும் எழுத்தாளர் சந்திப்புகளில் கலந்து கொள்ளவும் வந்திருந்தார்கள். அப்போது எடுக்கப் பட்ட படங்கள் இவை.



மேலே இடமிருந்து வலமாக நிற்பவர்கள் முறையே திரு.தெளிவத்தை ஜோசெப்,திரு.முருக பூபதி, திரு.ஜெயமோகன், திருமதி ஜெயமோகன்.

படம் எடுக்கப் பட்ட இடம்; சிட்னி மாநகர் மத்தி.ஆர்ட் கலரிக்கு முன்னால்.

Saturday, January 30, 2010

கவிதாவின் கவிதைகள்


கென்ற வாரம் கவிதாவின் 'என் எதேன் தோட்டம்' என்ற கவிதை நூலுக்கு திருப்பூர் தமிழ் சங்கம் பரிசு வழங்கி இருக்கிறது என்ற செய்தி கிட்டிற்று.தமிழ் நாட்டில் அத்தகைய பரிசு வெளிநாட்டில் வாழும் ஒரு ஈழத்துப் பெண்ணுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

அவரது கவிதைகள் சிலவற்றை யுகமாயினி சஞ்சிகையில் முன்னர் வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்.வீரியமான சிந்தனை வீச்சுக்கள் கொண்ட கவிதைகள் அவை.உதாரணத்துக்கு அவரது இரண்டு கவிதைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சுயம் இழந்து வாழும் ஒரு பெண்ணைப் பற்றி அவர் இப்படி எழுதுகிறார்.

மூலைகள்

இது எனது வீடு
இந்த வீட்டின்
ஒவ்வொரு மூலையும் என்னுடையவை.
ஒவ்வொரு மூலையும் தனித்துவமானவை.

இதோ
இந்த மூலையில்
இரண்டு பாத்திரம்,நாலு கரண்டி
ஒரு அடுப்பு
எல்லாம் எனது.

எதிர் மூலையில்
எனக்கென்று வாங்கித் தந்த
பெரும் இயந்திரங்கள்
துணிகள் துவைக்கவும்
காயப் போடவும்.

ஒவ்வொரு அறையிலும்
பெரிய அலுமாரிகள்
காய்ந்ததை அடுக்கவென்று.

வலப் பக்கம்
இருக்கும் மூலையில் தான்
படுக்கையறை
படுக்கவும்...
கலைக்கவும்...

பின் விரிக்கவும்!

அதன் இடப்புறமும்
எனது மூலைதான்
ஒரு தொட்டில்
பால் போத்தல்கள்
பொம்மைகள்
அழுக்குத் துணிகள்

டீ.வி
மேசை
இருக்கைகள்.
அதன் மேல் எறியப் பட்ட
பொருட்கள்.

அடுக்கவும் துடைக்கவும்
சாப்பாட்டு மேசை.
தூசி தட்ட பலவித பொருட்கள்.

எல்லாம்
என்னுடையவை தாம்.

என் சுயவாழ்வு தவிர.



அவரது இன்னொரு கவிதை இப்படிப் பேசுகிறது.அக்கவிதையின் தலைப்பு

நான்,எனது மகள்

அவர்கள் இவர்கள் என்று
எல்லோருமாய்
உருவகித்த என்னில்

இப்போதெல்லாம்
தேடிக் கொண்டிருக்கிறேன்

எங்கேயாவது மிச்சமிருக்கிறதா
நான்?

மிஞ்சிக் கிடக்கும்
என்னில் துளிர்விடும்
மகள்
நாளை தேட மாட்டாள்
அவளை

அவளுக்குரிய வட்டங்கள்
போடப்படும்
அவளது கைகளால்

காத்திருக்கிறேன்
நம்பிக்கையோடு
அவளுக்குக் கொடுக்கவென்று!

நன்றி; யுகமாயினி இதழ் 17.

வாழ்த்துக்கள் கவிதா!

Monday, January 18, 2010

வைரமுத்துவின் தமிழ் சுவை


பொதுவாக ஒரு புத்தகம் படிக்கின்ற போது அதில் சொல்லப் பட்டிருக்கிற கருத்தில் தான் முழுக் கவனமும் குவிவது வழக்கம்.அதனைச் சொல்லும் மொழியை எழுத்தாளன் எவ்வளவு லாவகமாகக் கையாளுகிறான் என்பது வைரமுத்துவின் கள்ளிக் காட்டு இதிகாசத்தைப் படித்த போது தான் உணர முடிந்தது.பேராசிரியர் சிவத்தம்மியிடம் இருந்த தமிழ் வீச்சு ஒரு விதமான வீரியத்தோடும் கம்பீரத்தோடும் இருக்கும். புதிய சொல்லாக்கங்களைக் கொண்டு வருவதில் அவர் வல்லவர்.அப்போதெல்லாம் அவ்வாறான சொற்களை எழுதி வைத்துக் கொள்வது வழக்கம்.எஸ்.போ ஒரு பன்முகப் பார்வை என்ற புத்தகத்திலும் அவ்வாறான அழகிய சொற்கள் முத்துக்களாய் எங்கும் சிதறிக் கிடந்தன.

அண்மையில் வாசிக்கக் கிடைத்த வைரமுத்துவின் கள்ளிக் காட்டு இதிகாசத்திலும் அக்கதையை விட அதனைச் சொல்லும் வைரமுத்துவின் தமிழையே அதிகம் ரசித்தேன். ஒரு இதிகாசம் என்பதற்கான சகல தாற்பரியங்களையும் கொண்டிருக்கிறது அது.பெரும் மக்களைக் கொண்ட பூமிப் பரப்பு, பல கதை மாந்தர்,எக்காலத்துக்கும் பொருந்தத் தக்கனவாய் சிதறிக் கிடக்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்,வசீகரமான கதைப்பாங்கு,...என ஒரு உலகத்தையே கண்முன் கொண்டு வருகிறார்.

இப்பதிவில் நான் ரசித்த சில வைரமுத்துவின் தமிழ் சுவையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1)மனம் புண்பட ஒருவன் பேசி விட்டுப் போனான் என்பதை,
'உள்காயம் படுகிற மாதிரி அவன் அடித்து விட்டுப் போனான்'

2)பொதுவாக மழை பெய்து விட்டுப் போன பின் வானம் தெளிவாக இருக்கும். அதன் பின் வருகின்ற மஞ்சள் வெய்யில் பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கும்.ஒருவரின் மனம் தெளிவாக இருந்தது என்பதை சொல்ல வைரமுத்து இவ் உவமையை அழகாகப் பயன் படுத்தி இருக்கிறார்.இயற்கையை உற்று நோக்கி சிலாகிக்கும் ஒருவரால் அச் சொல்லின் தாற்பரியத்தை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியும்.
'மழை அடிந்த வானம் தெளிவாக இருந்தது மாதிரி'என்பது அச் சொல்லடி.

3)ஒரு முதியவர் தளர்ந்து போய் நடந்து போனார் என்பதை
'அவர் தன் உடம்பையும் உசுரையும் கைத் தடிக்கு மாற்றி ஓசை இல்லாமல் ஊர்ந்தார்' என்கிறார்.

4)இன்னொரு இடத்தில்'உள்ளீடில்லாத சட்டை ஒன்று நடந்து போவது மாதிரி'என்று ஒரு உவமை சொல்கிறார்.

5) கற்பனையில் அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்று சோகிக்கிற தன்மை ஒன்று மனித வர்க்கத்தில் இருக்கிறது.அதனை அவர் 'கற்பனா சோகம்' என்கிறார்.அழகான ஒரு சொற் பிரயோகம்.

6)ஒரு பெண் பிறந்த வீடு வந்து புகுந்த வீட்டு சோகம் சொல்கிறாள். அதற்கு அவர் 'கண்ணீரில் வார்த்தைகளைக் கரைத்தாள்' என்கிறார்.

7) பாமர மக்கள்; கடும் உழைப்பாளிகள். அவர்கள் படுக்கைக்குப் போனால் அயர்ந்து உறங்குவார்கள். அதனை ஒரு வசனத்தில் கூறுகிறார்.'அவர்கள் மூச்சு விடும் பிணங்களாய் தூங்குகிறார்கள்'

8) ஒரு பெண் விதியின் கோரப் பிடிக்குள் அகப் பட்டு நொந்து போகிறாள். அதனை அவர்,'ஆடத் தெரியாத ஒருத்தியின் கையில் அடிக்கடி தவறி விழும் சொட்டாங்கல்லாய் தப்பும் தவறுமாய் அவளை ஆடி விட்டது காலம்'( அது கொக்கான் வெட்டு விளையாட்டு என்பது என் அனுமானம்)

9)ஒருவன் விரசமான வார்த்தைகளைப் பேசினான் என்பதை,'எச்சிலை வார்த்தையில் ஒழுக விட்டு'என்கிறார்.

இப்படி இன்னும் பல இருக்கின்றன சுருக்கம் கருதி இதனை இப்போது நிறுத்துகிறேன்.

*****************************

மேலும் சில மரபுத் தொடர்களையும் ஆங்கங்கே சொல்லிச் செல்கிறார்.

* எப்போதுமே ஞாபகப் படுத்தினால் தான் காயம் வலிக்கும்.

*உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா.

*சில பேர் தான் பிள்ளைகளைப் பெறுகிறார்கள். பல பேர் பத்து மாதம் சுமந்து பிரச்சினைகளையே பெறுகிறார்கள்.

*கல்யானம் என்பது இன்னோர் உயிரின், மனசு - உடம்பு - வயிறு மூன்றையும் திருப்தி செய்வது.

*மழைக்கு ஒதுங்கப் போய் கிணற்றுக்குள் விழுந்த கதையாக.

*பிறந்த போது குளிப்பாட்டுவது ஜீவாத்மாக்களுக்குத் தெரிவதில்லை; இறந்த பிறகு குளிப்பாட்டுவது பரமாத்மாக்களுக்குத் தெரிவதில்லை.

*பால் திரையத் தொடங்கும் நேரம் பாத்திரத்துக்குத் தெரிவதில்லை.

*விளக்குமாறக் கட்டி வைக்கவும் ஒரு கத்தாளை நார் இல்லாமலா போய் விடும்?

*சுடு காட்டைக் கடந்து போகிறவன் தன் பயத்தை மறக்கச் சத்தம் போட்டு பாடிக்கொண்டு போவது மாதிரி தன் குறையை மறைக்க அடுத்தவர் குறையை அசை போடுகிறது மனிதக் கூட்டம்.

*ஓட்டையா இருக்கிறதெல்லாம் நாதஸ்வரமாகாது;ஒட்டடையா இருக்கிறதெல்லாம் துணியாகாது.

*பூமியும் காலமும் சுத்திற சுத்தில மனுசக் கூட்டம் எங்கெங்க இடம் மாறி விழுமுன்னு யாருக்கும் தெரியாது.

*வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் விழுந்தாலும் மரத்திலிருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புத் தான்.மழைத் துளியில் எறும்பு மூழ்கினாலும் கடலுக்குள் கப்பல் மூழ்கினாலும் துயரம் துயரம் தான்.

இதனை எழுதிய போது ஒரு பாடல் ஒன்று ஞாபகம் வந்தது.

"பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பார்க்கும்
பருக்கையற்ற
கூழுக்கு போட உப்பு இல்லை என்பார்க்கும்
முள் குத்தித் தைத்த
காலுக்குத் தோல் செருப்பு இல்லை என்பார்க்கும்
கனக் தண்டி
மேலுக்குப் பஞ்சணை இல்லை என்பார்க்கும்
விசனம் ஒன்றே"

*ரெண்டு விதமான சாவு இருக்கு மனுசனுக்கு. ரத்தமும் சதையும் எலும்புமா கிடக்கிற இந்த உடம்புக்கு நேருதே - அது ரெண்டாஞ் சாவு. உடம்பு சாகு முன்னே மனசு செத்துப் போகுது பாருங்க - அது தான் முதல் சாவு.

மனுசன் செத்தாலும் சாகலாம்; மனசு செத்திரக் கூடாது.


வைரமுத்துவின் வைர வரிகள் அவை.

Wednesday, January 13, 2010

தைத்திருநாள் வாழ்த்துக்கள்; 14.01.10



இயற்கை தான் மனிதனின் ஆசான்.தன் இருப்பு, அசைவு இரண்டிலும் அறிவு போதிக்கிறது அது.வானமும் பூமியும் வகுப்பறைகளாய் யுகம் தோறும் யுகம் தோறும் அது பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறது.புத்தி உள்ளவன் புரிந்து கொள்கிறான்.வலி உள்ளவன் அறிந்து கொள்கிறான்.

மனிதனின் படைப்பென்று பூமியில் ஏதுமில்லை.மனிதன் வெறும் கண்டு பிடிப்பாளனே தவிர படைப்பாளனல்லன்.அப்படிப் பார்த்தால் மொழி ஒன்று தான் மனிதனின் படைப்பு.மொழி கூட ஒலியின் வரி வடிவம் தான்.ஒலி மனிதனின் படைப்பல்ல;கண்டு பிடிப்புத் தான்.

- வைரமுத்து. கள்ளிக் காட்டு இதிகாசம்.-

புதிய நூற்றாண்டின் தொழில் நுட்ப யுகத்தில் வாழ்வதாகப் பெருமை கொள்ளும் மானிட சமூகம் இன்று இடம் பெறும் புயல், பூகம்பம், வெள்ளப் பெருக்கு, கடும் வெப்பம், கடும் குளிர்,சுனாமி,காட்டுத் தீ போனற இவற்றைக் கட்டுப்படுத்த என்ன செய்ய முடிந்தது?வரு முன் அறிந்து கொண்டதே தவிர குறைந்த பட்சம் மழை எங்கு பொழிய வேண்டும் என்பதையாவது தீர்மானிக்க முடிந்ததா?மேற்கூறிய இயற்கை அனர்த்தங்களை இல்லாது செய்ய முடிந்ததா?

அதனாலேயே இயற்கையை வழி பட்டது நம் இனம்.இயற்கையே இறைவனானது இந்திய இந்துத் தமிழ் பண்பாட்டில் தான். இந்து மத வேதங்களும் உபநிடதங்களும் அதனை தெய்வீகத்தோடு போற்றுகிறது.
இயற்கையோடும்
நன்றி உணர்வோடும் ஒப்புரவோடும் வாழ்ந்த பண்பாடு சூரியனைக் கொண்டாடியது.

அது தான் தைத் திருநாள்.

தைத்திருநாள் வாழ்த்துக்கள்!