Monday, June 20, 2011

ஊதாப் பூக்கள் ((Jacaranda tree)



வான் முட்ட உயர்ந்து நிற்கும் ஊதாப் பூ மரம்.



தனித்துவம் பிரகாசிக்க கம்பீரமாய் ஊதாப் பூ மரம்.



மக்களிடையேயும் நிழல்குடை பிடித்த படி ஊதாப்பூ மரம்.



வீட்டுக்கும் காவலாய்...



வீதியோரம் விழாக் கோலமாய்.....



கொட்டிய பின்னும் கம்பளமாய்.......

(படங்கள்: நன்றி, கூகுள் இமேஜ்)

Thursday, June 16, 2011

ஓர் இலையின் குரல்




உலகம் சற்றே நிதானிக்கின்றது.

ஓட்டத்தை நிறுத்தி பின்னோக்கிப் பார்க்கிறது.

எதையோ தவற விட்டதாய் உணர்கின்றது.

இயற்கையுடனான தொடர்பறுந்து நேரத்தோடும் விஞ்ஞான தொழில் நுட்பத்தோடும் ஓடிப் பல வருட மைல்களையும் நூற்றாண்டுகளையும் கடந்தாயிற்று என்ற சோக உண்மை உறைக்க ஸ்தம்பிக்கிறது உலகு, மனதும்.

ஓடிக் களைத்து மூச்சு வாங்குகிறது 21ம் நூற்றாண்டு உலகம்.சந்திரனை எட்டி, அணு ஆயுதங்களைக் கொட்டி, நாடுகளோடு நாடுகள் மோதி முட்டுப் பட்டு நிற்கிறது நவீன நாகரிகம்.

இனிப் போக இடமில்லை என்றான போது பூமி வெப்பப் பந்தாகிப் போனது.இயற்கை இப்போது உரத்தும் அதட்டியும் பேசத் தொடங்கி விட்டது.மனச்சாட்சியின் குரலாய் விஸ்தாரம் எடுக்கிறது அது.விரக்தி விளைந்திருக்கும் மயாண மனப் பரப்பில் அது துல்லியமாய்க் கேட்கிறது.

குரல் இடியாய் காதில் விழுகிறது.நிவாண உண்மையாய் அது விகசிக்கிறது!

அது சுனாமியாக,நில அதிர்ச்சியாக,வெள்ளப் பெருக்காக,புயற்காற்றாக, காட்டுத் தீயாக பூகம்பமாக,சொல்லுகின்ற செய்தி ஒன்று இருக்கின்றது. அந்தப் பயமுறுத்தும் செய்திக்கு நம் விஞ்ஞானத்திடம், தொழில் நுட்பத்திடம் பதில் ஏதும் இல்லை.

அது இன்னும் நம்மைப் பயமுறுத்துகின்றது.

நாம் எங்கு தோற்றோம்? எங்கு தோற்றோம்?

மனிதம் தோற்ற பொழுதுக்கும் இயற்கையின் குரலைக் கேட்க மறந்த பொழுதிற்கும் வயது ஒன்றா?

தெரியவில்லை.

நம் மூதாதையரின் முணுமுணுப்பை அசட்டை செய்த பொழுதுக்கும் சுயநலம் மேலோங்கிய பொழுதுக்கும் வயது ஒன்றா?

அதுவும் தெரியவில்லை.

'உங்களுக்கு நிலம் விலைக்கு விற்கப்படும் ஒரு பொருள்.எங்களுக்கு அதுவே வாழ்க்கை.
தூய்மையான காற்றை,பெருகியோடும் ஆற்றை,மலைகளின் மெளனத்தைப் புரிந்து கொள்ளவும் ரசிக்கவும் தெரியாத அதிகார வர்க்கத்திடம் எப்படி இயற்கையை நாங்கள் ஒப்படைப்பது? அவர்கள் இயற்கையை விலைக்கு விற்கப் படும் பொருட்களைப் போலவே கருதுகிறார்கள்.

இங்கு உள்ள மரத்தை நீங்கள் வெறும் மரமாகப் பார்க்கிறீர்கள். நாங்கள் அதை எங்கள் மூதாதையர்களாகப் பார்க்கிறோம்.இங்கு பூத்துள்ள பூக்கள் இறந்து போன எங்கள் சகோதரிகளின் சிரிப்பு.காடு தான் எங்களின் வீடு.எங்களின் தாய் தகப்பன்.எங்களை நீங்கள் அதிகாரத்தின் துணை கொண்டு விரட்டி இதைக் கைப்பற்றக் கூடும்.ஆனால் இதன் புனிதத்தை நீங்கள் புரிந்து கொள்ளாமல் சிதைத்து விடுவீர்கள் என்பதற்காகவே நாங்கள் போராட வேண்டி இருக்கிறது.' என்றான் அமெரிக்கப் பழங்குடிகளின் தலைவன்.

இந்த இடத்தில் தான் நாம் தவறிழைத்தோமா?

சுயநலம் மேலோங்கிய அந்தப் பொழுது?
சாத்வீகக் குரலைப் புறக்கணித்தோமே அந்தப் பொழுது?
அம்புவில்லை துவக்குத் தோட்டா வென்று விட்ட பொழுது?
மூர்க்கம் முந்தியடித்து முந்திக் கொண்ட அந்தப் பொழுது?
அதிகாரம் கோலோச்சிய அந்த அலட்சியப் பொழுது?
மிதமிஞ்சிய இறுமாப்பு ஆட்கொண்ட அந்தப் பொழுது?

இருக்கலாம்; தெரியவில்லை.

ஆனால் பண்டய தமிழ் இனம் எவ்வாறெல்லாம் இயற்கையின் பாஷையைப் புரிந்திருந்தது என்று சற்றுப் பார்ப்போமா?

சங்க காலத்து மந்தாரப் பொழுது அது! சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கிடையே எப்போதும் பூசல்.வீரம் பொருந்திய படைதிரட்டிப் போருக்குத் தயாராக இருக்கும் பாண்டிய மன்னனிடம் வருகிறான் ஒரு குடியானவன். அவன் சமான்யன்.வாழ்வை நேசிக்கும் ஏழை.மண்ணோடு ஒட்டிய உறவு அவனுக்கு.அதிகாரம்,ஆதிக்கம்,போர்,பூசல் எல்லாம் அவனுக்குப் புரியாத சமாச்சாரம்.என்றாலும் ஓர் அசட்டுத் துணிவு அவனுக்கு.அணில் மண் கொண்டு வந்து கொட்டி ராமனுக்கு உதவியதே! அதைப் போல.ஏதோ அவனால் முடிந்தது!

அவனுக்குத் தெரியும் வெற்றி பாண்டியனுக்கே என்பது. அதனை எதிர் கொண்டு அவன் சொல்கிறான்."வேந்தே! கற்றவர்களும் சரி கல்லாதவர்களும் சரி உன்னைப் புகழவே செய்கிறார்கள்.அத்தகைய சிறப்புடையவன் நீ.உனக்கு ஒன்று சொல்கிறேன் சற்றே கேட்பாயாக! நீ எங்கள் நாட்டு வயல்களை, வயல் வெளிகளை எடுத்துக் கொள்; ஊரினை எரிக்க வேண்டுமென்று தோன்றினால் அதனையும் செய்;உன் வேலினால் மக்களைக் கொல்ல விரும்பினாலும் அதனை நீ செய்யலாம்.ஆனால் எங்கள் காவல் மரங்களை மட்டும் அழித்து விடாதே,அது உன் யானையைக் கட்டுவதற்குக் கூட பலமற்றது என்று கெஞ்சுகிறார் இவர்!

அந்த அழகான பாடல் இது தான்,

"வல்லவராயினும் வல்லுனராயினும்
புகழ்தலுற்றோருக்கு மாயோனன்ன
உரைசால் சிறப்பிற் புகழ் சால் மாற
நின்னொன்று கூறுவதுடையே னென்னெனின்
நீயே; பிறர் நாடு கொள்ளுங் காலை யவர் நாட்
டிறங்கு கதிர் களனி நின்னிளையருங் கவர்க
நனந்தலைப் பேரு ரெரியு நக்க
மின்னு நிமிர்ந்தன்ன நின் னொளிறிலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்
கடிமரந் தடித லோம்பு நின்
நெடுதல் யானைக்குக் கந்தாற்றாவே!"

வஞ்சித்திணையில் வரும் இப்பாடலை காவிரிப் பூம் பட்டிணத்துக் காரிக்கண்ணனார் பாடி இருக்கிறார்.மரங்கள் மீது அவர்கள் கொண்ட நேசத்தைப் பார்த்தீர்களா?

இயற்கையைத் தடுக்கும் ஆற்றல் நம்மிடம் இல்லை என்று பாடும் ஒரு புறநானூற்றின் 51 வது பாடல் "நீர் மிகின் சிறையும் இல்லை;தீ மிகின் மண்ணுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;வளி மிகின் வலியும் இல்லை...." என்று இயற்கையின் ஆற்றலினைச் சொல்கிறது. இயற்கையினை சீற்றத்தின் முன் நாமெல்லாம் சிறு துளி என்பதனை நமக்கு ஆழிப் பேரலையும் காட்டுத் தீயும், வெள்ளப் பெருக்கும், நில நடுக்கமும், சூறாவளியும் சொல்லிக் கொடுத்த வண்ணம் தானே இருக்கின்றன.

அவற்றின் இன்றய குரல் தான் நமக்கு அச்சம் ஊட்டுவதாக இருக்கிறது.அதுவே பின்னோக்கி அச்சத்தோடு பார்க்க வைக்கின்றது.

இங்கே சங்கத்துப் பெண்ணொருத்தி புன்னை மரத்தைத் தன் தோழி என்கிறாள். எப்படி?நற்றினையின் நெய்தல்-172 வது பாடல் அதனை நயமுற இப்படி நவில்கிறது.

"விளையாடு ஆயமொடு வெண்மல் அழுத்தி
மறந்தனம் துரந்த காழ் முளை அகைய
நிய் பெய் தீம்பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வையாகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம் புரிவான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே"

அதாவது ஒரு நாள் புன்னை விதைகளை நானும் அவளுமாக மண்ணுக்குள் புதைத்து விளையாடிக் கொண்டிருந்தோம்.அப்போது தாயார் எங்களை அழைத்ததால் அதனை அப்படியே போட்டு விட்டு ஓடி வந்து விட்டோம். அதன் பிறகு பெய்த மழையால் புன்னை விதை முளை விட்டு வளரத் தொடங்கி விட்டது. நாம் அதற்கு தேனும் பாலும் ஊற்றி எங்கள் தங்கை எனவே கருதி சிரத்தையோடு வளர்த்தோம்.

அம்மா எங்களைத் திட்டுவதென்றால் கூட'நும்மிலும் சிறந்தது நுவ்வையாகும்'என்றெல்லோ திட்டுகிறாள்.அவ்வளவுக்கு புன்னையை எங்கள் தங்கையைப் போலவே அவளும் மதிக்கிறாள். யாராவது தங்கையின் முன் காதல் சல்லாபத்தில் ஈடு படுவார்களா என்ன? அதனால் நான் இனி அந்தப் புன்னை மரத்தடிக்கு வரமாட்டேன் என்று தலைவி கூறியதாகத் தோழி தலைவனுக்கு உரைக்கிறாள். மரத்தைத் தன் தங்கையாக வளர்த்து அதன் முன்னால் சந்திக்க வரத் தயங்கும் கூச்சம் கொள்ளும் காதல் மகளீரைக் கொண்டிருந்தது சங்க காலம்.தாய் கூடவல்லவா தன் குடும்பத்துள் ஒருத்தியாய் புன்னை மரத்தை வரிந்து கொண்டு விட்டாள்.

இன்று எங்கே போனது அந்தப் பிணைப்பு?

இன்னொருத்தி ஊடல் கொள்கிறாள் முல்லைப் பூவோடு.அவளுக்குப் பெரும் கோபம் முல்லைப் பூவோடு.'முல்லையும் பூத்தியோ' என்று பேசுகிறாள் முல்லைப் பூவை.காரணம் சாந்தன் என்ற வீரன் இறந்து போனான்.மக்கள் துக்கத்தோடு இருக்கிறார்கள்.நாடே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. அவளின் மனமும் வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது.இந்த அழகான பாடல் புற நானூற்றில் 242வது பாடலாக அமைகிறது.பாடலைப் பாடிய புலவர் குடவாயிற் தீரத்தனார். பாடல் இது தான்.

"இளையோர் சூடார்;வளையோர் கொய்யார்
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான்;பாடிணி அணியாள்;
ஆண்மை தோன்ற ஆடவர்க்கடந்த
வல் வேற் சாந்த்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ? ஒல்லையூர் நாட்டே!"

என்று கேட்கிறாள் இப்பெண். அதாவது முல்லை மலரே! உன்னை இளையவர்கள் சூடிக் கொள்ள மாட்டார்கள்; வளையல்களை அணிந்த இளம் பெண்களும் பறிக்கப் போவதில்லை; யாழினை வாசிக்கின்ற பாணனும் பறிக்க மாட்டான்; பாடினியும் அதனைச் சூடிக் கொள்ளப் போவதில்லை;வலிய வீரனான ஒல்லையூர் நாட்டைச் சேர்ந்த சாந்தன் வீர மரணம் எய்திய பின்பு இந்த ஒல்லையூர் நாட்டில் (இந்த நாட்டுப் பிரஜையாய் இருக்கிற)முல்லையே நீ ஏன் வீணாகப் பூத்திருக்கிறாய்? வலிய வீரனான அவன் மரணமெய்தியதால் பகை நாட்டவர்கள் தான் களி கொள்வர்.மனம் மகிழ்வர்.நீ ஏன் மகிழ்ந்து பூத்திருக்கிறாய்? உனக்கு என்ன சந்தோஷம் என்று இப்படிக் கொள்ளையாய் பூத்துப் போய் கிடக்கிறாய்? என்று முல்லைப் பூவோடு கோவித்துக் கொள்கிறாள் இம்மகள்!

முல்லைப் பூவோடு கோவித்துக் கொள்ளும் இந்த உறவினளை என்னவென்பது?

இயற்கையோடு நம்மூதாதையர் எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?

அண்மையில் இணையத்தில் பார்த்த ஒரு கட்டுரை இப்படி முடிந்திருந்தது.'என்றேனும் ஒரு நாள் சில மணித் துளிகளாவது ஏதாவது ஒரு தாவரமாய் உங்களை நீங்கள் உருவகித்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் மீது இலைகளும் கிளைகளும் மலர்களும் காய்களும் கனிகளும் உருவாகியிருப்பதை கற்பனை பண்ணிப் பாருங்கள். ஒரு மரத்தின் மகத்துவமும் அதன் தாய்மை மிக்க தியாகமும் அப்போது புரியும்.'

இந்த இலையின் குரல் இந்த இயற்கையின் செய்தி இப்போது உங்களுக்குக் கேட்கிறதா?


ஒரு மரத்தை, அதன் தியாகத்தை, அதற்குரிய உன்னதத்தோடும் மரியாதையோடும் இனியும் எம்மால் பார்க்க முடிதல் கூடுமா?

அதில் துளிர்க்கட்டும் புது உலகு!

மனிதமும் சமாதானமுமான புது உலகு!!

Tuesday, May 31, 2011

பழ மரம்


”பயன்மரம் உள்ளூர்ப் பழுத்துஅற்றால் செல்வம்
நயன்உடை யான் கண் படின்”

என்பது ஒப்புரவறிதல் என்ற அதிகாரத்தில் வரும் ஒரு குறள்.அதன் பொருள் என்னவென்றால் உலக நன்மை அறிந்து உபகாரம் செய்யும் ஒரு அறிஞனிடம் பொருள் சேர்வது ஊரின் நடுவே இருக்கின்ற பழமரம் ஒன்று நன்கு கனிந்து பலருக்கும் பயன்படுவது போலவாகும் என்பதாகும்.

ஒரு மரம், தனி மரம், ஊரின் நடுவே நிற்கிறது.அது மழைநீரை உண்டு பொது நிலத்தில் விரிந்து நிற்கிறது.யாரும் பரிபாலிக்க வேண்டிய தேவை இல்லை.விடலைச் சிறுவரகள் வெய்யில் பொழுதில் அதன் நிழலில் தான் மாபிள் அடித்து விளையாடுகிறார்கள். மதியப் பொழுதில் வயதானவர்கள் அதன் நிழலில் குந்தியிருந்து ஊர் புதினம் பேசுகிறார்கள். பஞ்சாயத்துக் கூடுவதற்கும் அது தான் இடம்.இரவு நேரங்களில் காதலர் சந்தித்துக் கொள்ள தோதான இடமும் அது தான்.வெளியூரில் இருந்து வருபவர்கள் கூட அந்த பொது மரத்தை அடையாளம் வைத்தே இடத்தைக் கண்டு பிடிக்கிறார்கள்.இடம் காட்டும் வழிகாட்டிகள் கூட இடத்தைச் சரியாகச் சொல்ல அந்த மரத்தில் இருந்தே இடத்தைக் காண்பிக்க ஆரம்பிக்கிறார்கள்.குருவிகளும் பறவைகளும் கூடுகளைக் கட்டுகின்றன.குடியும் குடித்தனமுமாய் அங்கேயே வசிக்கவும் செய்கின்றன.

அந்த மரத்திடம் நிறையப் பழங்கள். பூத்துக் காய்த்துப் பழுத்து இனியனவும் சுவை மிக்கதுமான கனிகளையும் அது அம்மக்களுக்குக் கொடுக்கிறது.அதன் மூலம் அம்மரம் பெறுவதென்ன? எதுவுமில்லை அல்லவா? பயன் கருதா சேவை; கைமாறு கருதா உதவி என்பன இவை தானே? ஒரு பழ மரம் எத்தனை பெரிய தத்துவத்தை நமக்குச் சொல்லிய வண்னம் நிற்கிறது.கீதையின் தத்துவமே அதுவாகியெல்லோ இருக்கிறது.அது போல ஒரு மனிதனும் சமூகத்துக்கு பயன்பாடு உள்ளவனாக இருக்க வேண்டும் என்பது அக்குறளின் பொருள்.

இந்தப் பழமரம் போல ஒரு அரசன். சங்க காலத்தில் வாழ்ந்திருக்கிறான்.அவன் பாரி மன்னன்.அம்மன்னனை கபிலர் நமக்குக் காட்டுகிறார்.புறநானூற்றின் 119வது பாடல் அது.பாரியினுடய வள்ளல்மையை கூறவந்த கபிலர்,’நிழல் இல் நீளிடைத் தனிமரம் போல’ இரந்து வருபவர்களுக்கு அதாவது, நிழல் இல்லாத நீண்ட வழியில் தனி மரம் ஒன்று இருந்து நிழலும் கனியும் வழங்குவதைப் போல வள்ளல் தன்மையுடயவனாக விளங்குகின்றான் பாரி என்று குறிப்பிடுகிறார்.

அந்தப் பழமரம் போல யாரேனும் ஒருவரை நாம் இக்காலத்தில் காண முடியுமா?

ஒரு மரமாகக் கூடவா நம்மால் இருக்க முடியவில்லை?

இயற்கையை விட்டு அது சொல்லும் பாடங்களை எல்லாம் தவற விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோமோ?

(பாடசாலை மாணவர்களுக்காக எழுதியது சிறு மாற்றங்களுடன் copy & paste செய்யப் பட்டிருக்கிறது)

Monday, May 9, 2011

என்னை வளர்த்த மண்ணும் பசளையும்


தொடர்ச்சி.....

மீண்டும் பல்கலைக் கழகத்து வாழ்க்கைக்கு வருகிறேன்.

சிறப்புத்துறைக்குள் சென்ற பின்னர் வீட்டில் நானே ஏக போக ராணியாக இருந்தேன். அவர்களுடய பெரிய அறை தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாகங்களையும் நான் ஆக்கிரமித்தும் இருந்தேன்.அவர்கள் விறாந்தையில் போட்டிருக்கும் விருந்தினர்களுக்கான நாற்காலி என் பரீட்சைக் காலங்களில் வீட்டின் பின் புறத்து மாமர நிழலுக்கும் கிணற்றுக் கரையோரங்களுக்குமாக நகர்ந்த படி இருக்கும்.கதிரையில் உட்கார்ந்து விட்டு இரண்டு கைபிடிக்கும் குறுக்காக ஒரு அகன்ற பலகையைப் போட்டு விட்டு அதில் புத்தகத்தை வைத்துப் படிப்பது நல்ல வசதி.அமைதியான சூழல்,அன்பான தாய்,நல்ல சாப்பாடு,முழு சுதந்திரம்,பிரச்சினைகள் ஏதுமில்லாத மனம்! படிப்பதற்கு என்ன குறை?

இப்படியாக இருந்த வீட்டு சூழலில் படிப்பில் என்னோடு தோழிமாராக இருந்தவர்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.நீலா,தங்கேஸ்வரி,அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.(தற்போது லண்டனிலும் சுவீடனிலும் இருக்கிரார்கள்) அதில் நீலா பொதுப் பட்டப் படிப்பை தொடர்ந்தார். அநேகமாக 11-12 ஒரு விரிவுரை இருந்தால் அடுத்தது 2-3 ஆக இருக்கும்.இவர்கள் எல்லோரும் மதியம் சாப்பாட்டைக் கொண்டு நான் இருந்த வீட்டுக்கு வருவார்கள். ஒன்றாக இருந்து உண்போம்.பின்னர் சின்னத் தூக்கம் பிறகு சிரம பரிகாரம் ஒப்பனைகள் எல்லாம் செய்து கொண்டு அடுத்த ஊர்வலம் போவோம்.

இப்படியாக இருந்த ஒரு நாளில் நீலாவின் அக்கா மீரா அறிமுகமானார். அவர் பல்கலைக் கழக நிதித்துறையில் கடமையாற்றி வந்தார்.உணவு உண்பதற்காக வந்த அவரோடு நாளடைவில் நான் மிக்க நெருக்கமானேன். நம் இருவருக்கும் இடையே அப்படி ஒரு ஒத்த ரசனை இருந்தது.அரசியலில் இருந்து சினிமா வரை நமக்குள் வேறுபட்ட அபிப்பிராயங்கள் பெரும்பாலும் இருக்கவில்லை.அப்படி இருந்தாலும் இறுதியில் ஒரு இணக்கப் புள்ளியில் வந்து நிற்போம்.

நான் கலைப் படங்கள் பற்றிப் பேசும் போது அவர் திருமறைக் கலா மன்றத்தின் கலைப் படைப்புகள் பற்றிப் பேசுவார்.நான் படித்த கிட்லர்,முசோலினி,அலக்சாண்டர்,காந்தி பற்றி - அவர்களுடய ஆளுமைகள் - நாட்டை என்ன உலகத்தையே புரட்டிப் போட்ட அவர்களின் அதீத இயல்புகள் பற்றிப் பேசும் போது, அவர் இந்திரா காந்தியின் ஆளுமை பற்றிப் பேசுவார்.நான் வைதீகத்தின் குறை நிறைகளைப் பேசும் போது அவர் கத்தோலிக்கத் தமிழர் பற்றிப் பேசுவார்.பல்கலைக்கழகக் கல்வியை தொடராத அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது நிறைய.

அமைதி,மென்மை,அன்பு, அதே நேரம் ஆழம் நிறைந்தவர்.அவரது புன்னகை விடயங்களை நிராகரிக்கும்,அன்புசெய்யும்,புறக்கணிக்கும்,கடந்து செல்லும்,நட்புக் கொள்ளும்.மெளனமும் புன்னகையும் இத்தனை விடயங்களைச் செய்யும் சக்தி வாய்ந்ததா என்று அந்நேரங்களில் நான் வியப்பதுண்டு.அருகில் இருப்பவருக்கு மட்டுமே கேட்கும் படியாக மிக மென்மையாகப் பேசுவார்.மெல்லிய புன்னகையோடு எந் நேரமும் காணப்படுவார்.அநேக நேரங்களில் அவருக்கு கோபம் வந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவார் என்று நான் நினைப்பதுண்டு.அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவே இல்லை.என் வாழ்வில் அறிவாலும் தோழமையாலும் குணங்களாலும் என்னைக் கொள்ளை கொண்டு போனவர் ஒருவர் உண்டென்றால் அது அவர் ஒருவரே.அதன் பின்னரும் அவருக்கு முன்னரும் அவருடயதைப் போன்ற ஒரு நட்பு எனக்குக் கிட்டவில்லை.

அவர் கத்தோலிக்கர்.சைவத்தில் இருந்து தமிழைப் பிரித்து தமிழ் கத்தோலிக்கம் பற்றிய தெளிவை எனக்கு ஏற்படுத்தியவர் அவர் தான்.பொட்டு வைப்பது, பொங்கல் விழாக்கள் இந்துப் பண்பாடல்ல தமிழர் பண்பாடு என்று கற்றுத்தந்தவர்.மதங்களுக்கு வெளியே நின்று மதங்களை ஊடுருவிப் பார்க்கும் திறன் கொண்டவர்.திருமறைக்கலா மன்றம் அதன் செயற்பாடுகள் பற்றி நான் கார சாரமான விவாதங்களை நிகழ்த்துவேன்.நான் அதீத விமர்சனங்களை முன்வைக்கும் போதெல்லாம் புன்னகையோடும் நிதானத்தோடும் மாறாத குரலின் இனிமையோடும் எனக்கு பதில் தருவார்.இப்போது கண்டாலும்,’இப்பவும் அப்படியே தான் இருக்கிறீங்களா மீராக்கா?” என்று கேட்க ஆவல்.ஆனால்,1995ம் ஆண்டோடு தொடர்பு விட்டுப் போய் விட்டது.

அந்தக் கத்தோலிக்க திருமறைக்கலாமன்றம் திருக்குறளைக் கையில் எடுத்துக் கொண்டு அரசியலையும் உளவியலையும் பக்க பலமாகக் கொண்டு இந்துத் தமிழ் பண்பாட்டுக்கு எதிராக கத்தோலிக்கத் தமிழ் பண்பாட்டை நிறுவியது.அதற்கு அவர்கள் அரங்காற்றுக் கலையை ஊடகமாகப் பயன் படுத்தினார்கள்.யாழ்ப்பாணத்து விடுதலை அரசியலின் பின்னணியில் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அரங்காற்றுக் கலை மிக்க வீரியத்தோடு வெளிப்பட்டு நின்றிருந்தது.

கத்தோலிக்கக் குருமார்களால் சமூகத்தை விளங்கிக் கொண்டு வெளிவந்த ‘நான்’என்ற உளவியல் சஞ்சிகை அவர்கள் எவ்வளவு வல்லமை பொருந்தியவர்கள் என்பதற்கும் தூரதிருஷ்டி நோக்கோடு செயற்பட்டார்கள் என்பதற்கும் நல்லதொரு சாட்சி.அதே நேரம் சைவ சித்தாந்தத் தத்துவங்களையும் சைவர்களை விட அதிகம் விளங்கிக் கொண்டவர்களாக அக் குருமார்கள் விளங்கினார்கள்.

அது நிற்க,

இவ்வாறாகச் சிந்தனைச் சுவாரிசங்களோடும் நாட்டின் அரசியல் பிரச்சினைகளோடும் நான்கு வருடங்கள் ஓடி முடிந்தன.அப்போது ’திசை’ என்றொரு வாரப் பத்திரிகை மிக அமைதியான முறையில் மிகக் கனதியான பக்கங்களோடும் புதிய சிந்தனைகளோடும் புதிய பார்வைகளோடும் வெளி வந்து கொண்டிருந்தது.

ஒருவாறாக நான் பல்கலைக்கழகத்தின் இறுதி வருடத்தை அடைந்தேன்.அப்போது ஒரு ஆய்வுக்கட்டுரை ஒன்றை இறுதி வருடத் தேர்வுக்காக சமர்ப்பிக்க வேண்டி இருந்தது.அதற்கு எதனைப் பற்றி ஆய்வு செய்யலாம் என்ற கேள்வியோடு நான் இருந்த வேளை திசை பத்திரிகையில் ஒரு மூலையில் “நீர்கொழும்பில் சிங்களம் பேசும் தமிழர்கள்” என்ற தலைப்பில் ஒரு துணுக்குச் செய்தி இடம் பெற்றிருந்தது.எனது ஆய்வுக்கான தலைப்பு கிட்டியது இப்படித்தான்.

ஒரு பதிவொன்றின் பிறப்பு இப்படித்தான் ஆரம்பமாயிற்று!

அது இறுதி ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நேரம்.மூன்று மாதத்துக்குள் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்க காலக்கெடு இருந்தது.நான் பரீட்சையை முடித்த கையோடு ஆய்வுக்காக நீர்கொழும்பு பயணமானேன்.தலைநகர் கொழும்பில் இருந்து நீர் கொழும்பு பஸ் எடுத்து அங்கு சென்று அங்குள்ள மக்களோடு அளவளாவி விடயங்களைச் சேகரித்துக் கொண்டு
மீண்டும் கொழும்பு வருவதாக என் ஆய்வு தொடர்ந்து கொண்டிருந்த ஒரு நாளில் யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் இருந்து தந்தி ஒன்று வந்திருந்தது. அது உடனடியாக வந்து உங்களது’தற்காலிக உதவி விரிவுரையாளர்’பதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தக்வலைத் தந்தது.

இறுதித் தேர்வுக்கான ஒரு பாடப்பகுதியை இன்னும் சமர்ப்பிக்காத நிலையில் இவ்வாறான நியமனம் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்த, மறுநாள் ரயிலில் வவுனியா வந்து பின் ஒரு வாகனத்தில் யாழ்ப்பாணம் வந்து நியமனத்தைப் பெற்றுக் கொண்டேன்.

எனக்குக் கிட்டிய முதல் மாதச் சம்பளத்தில் அந்த ஆய்வுக்கட்டுரையை முடிக்கும் செலவை யும் பார்த்துக் கொண்டேன்.

இவ்வாறு பிறப்பெடுத்தது தான் “நீர்கொழும்பில் சிங்களம் பேசும் தமிழர்கள்” என்ற என் பதிவு!

தொடரும்.....

Monday, May 2, 2011

என்னோடு பயணித்தவர்கள்


தொடர்கிறது.....

இவ்வாறாக ஆரம்பித்த பல்கலைக் கழகப் பயணம் என்னோடு பயணித்த சிலரை இறக்கி விட்ட படியும்; புதிதாகச் சிலரை ஏற்றிக் கொண்ட படியுமாகச் சென்றது.

இந்த இடத்தில் நான் இருந்த வீடு பற்றியும் அன்னலட்சுமி அம்மா பற்றியும் நான் கட்டாயம் சொல்லியாக வேண்டும்.அவர் ஒரு ஏழைத் தாய்.மூன்று கெட்டிக்கார ஆண்பிள்ளைகளின் தாய்.தோட்டம் செய்து பிள்ளைகளைப் படிப்பித்து வந்த தாய்க் கரங்கள் அவரது. இலங்கையின் கல்வித்தரப் படுத்தலுக்குள்ளாலும்; வறுமையின் பிடியில் இருந்த போதும்; மகன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தை எட்டிய கெட்டிக் காரன்.

இருந்தும் என்ன? விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த போது இலங்கை இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப் பட்டான்.(தாயாரின் மனநிலையை சற்றே நினைத்துப் பாருங்கள்) அதனால் இரண்டாவது மகனை நிறையக் கடனைப் பெற்று சுவிற்சலாந்து நாட்டுக்கு அனுப்பி இருந்தா. மூன்றாவது மகன் குட்டிப் பயல். நான் அங்கு போன போது.தாய் செய்யும் தக்காளித் தோட்டத்துக்குள் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்.(இப்போது அவனும் ஒரு இலங்கையில் பட்டம் பெற்ற பொறியியலாளன்.)

இத்தனை சுமைகளையும் தாங்கிக் கொண்டிருந்த தாயை நான் முதலில் சந்தித்தது ஒரு வெள்ளிக் கிழமை.காலையும் மதியமும் சந்திக்கும் 11 மணியளவாக இருக்கும்.யாழ்பாணத்து இந்து மதத்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் சைவ போசணிகளாக இருப்பார்கள். அன்று அவர்களது சமையலறை கழுவப்பட்டு பாத்திரங்கள் மினுக்கப் பட்டு ஆசாரமான சமையல் ஆரம்பமாகும்.

அதுவும் அவ்வாறான ஒரு சமையல் பொழுதே.நான் அவரைக் கண்ட போது சமையலறை கழுவப் பட்டு, ஈரத்துக்காக நிலத்தில் சாக்கு விரிக்கப் பட்டு, அதன் மேல் பலகை போட்டு, சுற்றிவர பாத்திரங்களை வைத்த படி சமையலுக்காக முருங்கக்காய் வெட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது பல்கலைக் கழகத்தை அண்மித்திருக்கிற வீடுகள் பலவும் பக்க வருமானத்துக்காக வாடகைக்கு அறைகளை மாணவர்களுக்குக் கொடுத்திருந்த போதும் தன் பிள்ளைகளின் கல்வியின் நிமித்தம் தான் யாருக்கும் வீட்டின் அறைகளை வாடகைக்குக் கொடுக்க வில்லை என்றும்;குடும்பத்தில் நடந்த துக்க சம்பவங்களினாலும், சின்ன மகன் இப்போது சிறுவனாவனாக இருப்பதாலும், பணத்தேவைக்காக வாடகைக்கு உணவோடு அறை ஒன்றைக் கொடுக்க இம்முறை நினைத்திருப்பதாகத் தெரிவித்தார்.அத்துடன் நான் அங்கு இருக்கலாம் என்றும்; எனக்குப் பிடித்த எவரையேனும் எனக்குத் துணையாக அறையில் வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

விசாலமானதும் இரண்டு ஜன்னல்களைக் கொண்டதுமான அறை அது.அந்த நாளில் இருந்து சுமார் பத்து வருடங்கள் அந்தத் தாயாரோடு நான் வாழ்ந்திருக்கிறேன்.நானும் என் அறைத்தோழி புவனாவோடும் தொடங்கிய அந்த வாழ்வு, புவனா முதல் வருடத்தோடு பல்கலைக் கழகக் கல்வியை விட்டுப் போன அடுத்த வருடத்தில் இருந்து நான் தனிக்காடு ராணியாக ஆட்சி செலுத்தத் தொடங்கியதில் இருந்து ஆரம்பித்தது.

நானே அவரோடு முதலாவதாகவும் கடைசியாவதாகவும் இருந்த பெண்.

எனக்குப் பத்து வருடங்கள் சாப்பாடு போட்டு முழுச் சுதந்திரமும் தந்து என் தன் மகளைப் போல பார்த்துக் கொண்ட அந்தத் தாயுள்ளம் எனக்குக் கிட்டியது என் பூர்வ ஜென்மத்துப் புண்ணியமே. நிச்சயமாக!

இன்னொரு பிறவி என்று ஒன்றிருந்தால் நான் கைமாறு செய்யவேண்டியவர்கள் வரிசையில் என் கிராமத்துப் பாடசாலை,அதில் எங்கள் அதிபர் திரு லோகசிங்கம் அவர்களைப் பற்றிக் கட்டாயம் சொல்ல வேண்டும்.அவர் மிக்க கோபக் காரன்.அவர் பல பாடசாலைக்கு மாற்றலாகி மாற்றலாகிப் போகின்ற போதும் இறுதியில் மீண்டும் எங்கள் பாடசாலைக்கு வந்து சேருவார்.எங்கள் பாடசாலையோடு அவருக்கு அப்படி ஒரு விருப்பமும் ஈடுபாடும் இருந்தது.சிறு வயதில் அவரிடம் நான் நன்றாகவே அடி வாங்கி இருக்கிறேன்.(வீட்டுப் பாடம் செய்யா விட்டால் சில ஆசிரியர்கள் அவரிடம் நம்மை அனுப்பி விடுவார்கள்).ஆனால் அவரைப் போல பாடசாலையைக் காதலித்த அதிபரை நான் காணவில்லை.அவரது வாழ்க்கை எங்கள் பாடசாலை.அவர் தன் குடும்பத்துக்கு உழைத்ததை விட எங்கள் பாடசாலைக்கு உழைத்தது அதிகம்.

அது போல,நாளொன்றுக்கு இரண்டு தரம் மட்டுமே ஓடும் எங்கள் கிராமத்து பஸ்களில் றைவர்கள் கொண்டாக்டர்களைப் பற்றியும் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும்.அவர்களிடம் இருந்த பொறுமை, நேர்மை, அக்கறை, இரக்கம்,நற்பண்பு எவ்வளவு சனக்கூட்டம் என்றாலும் எல்லோரையும் ஏற்றிச் சென்ற அந்த மனம்,அவர்களிடம் நாங்கள் வாங்கிய பேச்சுக்களும்,அவர்களுக்கு நாங்கள் வைத்த பட்டங்களும் கொஞ்சமா நஞ்சமா? அங்கு தான் எத்தனை உரிமை,கோபம்,சண்டைகள்! கொண்டாக்டர் கோபம் வந்து ஏற்ற முடியாது என்று பெல் அடித்து விட்டாலும் நகராது நிற்கும் பஸ் -

இவையெல்லாம் தங்களுக்குக் கிடைத்த சம்பளத்துக்காகச் அவர்கள் செய்த ஒன்றல்ல. அதை எல்லாம் தாண்டி அவர்களுக்கென்று ஒரு மனம் இருந்தது.கடவுள் குடி இருந்த மனம்!

பஸ் பற்றிப் பேசுகின்ற போது குச்சி ஐஸ் நினைவுக்கு வருகிறது.கூடவே சறோ அக்காவும் நினைவுக்கு வருகிறா.சரியாகப் பாடசாலை விடுகின்ற போது குச்சி ஐஸ் விற்கும் துவிச்சக்கர வண்டி வந்து நிற்கும்.அப்போது பஸ்ஸின் காசும் குச்சி ஐஸ்ஸின் காசும் ஒரே அளவு.நானும் நல்ல சமர்த்துப் பெண்ணாக பஸ்ஸுக்குக் காசை வைத்துக் கொண்டு நிற்பேன். நேரம் போகப் போக ஐஸ்கிறீம் குடிக்கும் ஆவல் மீதுர பஸ் காசில் ஐஸ்கிறீம் வாங்கிக் குடித்து விடுவேன். பஸ் வந்து நிற்கின்ற போது தான் அழ ஆரம்பிப்பேன்.சறோ அக்கா - அப்போது பெரிய வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவர்.’உம்மோடா பெரிய கரைச்சல் ’என்ற பேச்சோடு எனக்கு டிக்கட் வாங்கி அழைத்துச் செல்பவர் அவர் தான்.ஒரு போதும் அதை நான் என் வீட்டில் சொன்னதில்லை. அந்தக் காசைத் திருப்பி அவவுக்குக் கொடுத்ததும் இல்லை.

அது போல பொழுதாகியும் பஸ் வரவில்லை என்றால் பஸ்நிலையத்துக்கு ஆஜராகி எல்லோரும் போய் சேரும்வரை நின்று அனுப்பி வைத்த பிரமச்சாரி ஆசிரியர்கள், என் உயர் வகுப்பு ஆசிரியர்கள் என்ற வரிசைக்கப்பால் அன்னலட்சுமி அம்மாவுக்கும் நிச்சயமாக இந்தப் பட்டியலில் ஒரு விசேட இடம் உண்டு.அவரோடு இருந்த அத்தனை காலங்களிலும் அவரோடு எனக்கு எந்த ஒரு கருத்து முரண்பாடும் வரவில்லை என்று சொன்னால் நம்புவீர்களா?

அவர்கள் எல்லாம் எந்தக் கைமாறு கருதியும் அதனைச் செய்யவில்லை.அதனால் தான் அவர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள் போலும்!அவர்கள் இயல்பாகவே அவ்வாறான சுபாவங்களோடு இருந்தார்கள். அது தான் அதன் அழகு.இவ்வாறான மனிதர்களை என் வாழ்நாளில் நான் கண்டுகொண்டது எனக்குக் கிட்டிய ஒரு பெரு வரமே!

ஒரு விடயத்தைச் சொல்ல வருகின்ற போது கட்டுடைத்துக் கொண்டு வருகின்ற இந்த இவ்வாறான நினைவுகளை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை.’கட்டுகள்’ தகர்க்கப் படுகின்றன. இவற்றை எழுதுகின்ற போது கண்கள் நிறைகின்றன.மனம் விம்முகின்றது.சொல்லாமல் இருப்பது ஏதோ ஒரு துரோகத்தனம் போல தெரிகிறது.அதனால் பதிவின் நோக்கத்தை விட்டு நான் அப்பால் சம்பந்தம் இல்லாத விடயங்களைப் பேசினாலும் அன்பர்கள் என்னை மன்னிப்பார்களாக.

என்னைப் பாதித்த இந்த ஆழுமைகளைப் பற்றிப் பேசுகின்ற போது சுபத்திரா ரீச்சரின் ஞாபகம் மனதில் வந்து முட்டுகிறது. அவவைப் பற்றிச் சொல்லாமல் எப்படிப் போவது? நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது 1976ம் ஆண்டு.புதிதாக என் பாடசாலைக்கு மனையியல் கற்பிக்க வந்த
அழகி.அப்போது அவ 20களின் ஆரம்ப வயதுகளில் இருந்திருக்கக் கூடும்.சேலை கட்டுவதில் ஆகட்டும் ;குடை பிடித்துக் கொண்டு நடப்பதில் ஆகட்டும் ;கற்பித்தலில் ஆகட்டும் ;அவரின் ஆளுமை தனி. அவர் எங்கள் வகுப்புக்கு வகுப்பாசிரியராக 10ம் வகுப்பு வரை வந்தது நாங்கள் செய்த பாக்கியம். அதே நேரம்,அவரை ரசித்த அளவுக்கு நான் படிப்பை ரசிக்காமல் போனது என் தலையெழுத்து.ஆனால் அதற்காக அவவிடம் நான் வாங்கிய அடி இருக்கிறதே அது தான் அவவை என் மனதில் என்றென்றைக்குமாக இருத்தி வைத்திருக்கிறது.

’வீட்டுப் பாடம் செய்யாத ஆக்கள் எல்லாம் இஞ்சால வரிசையாக வரலாம் ’என்கிற போது எனக்கு நடுக்கம் ஆரம்பிக்கும்.இரண்டாவது வரிசையில் மூன்றாவது இடம் என்னுடயது என்பதால் வரிசையில் இடையில் எங்கேனும் ஒரு இடத்தில் தவறாமல் நான் நிற்பேன்.எனக்கு முன்னால் நிற்பவருக்கு அடி விழும் போது எனக்கு பின்னால் நிற்பவரை எனக்கு முன்னால் விட்டு விட்டு அவரது இடத்துக்கு நான் நகர்வேன். இப்படியாக நகர்ந்து கடசியாக நான் வருகின்ற போது கையை நீட்டுவதற்கு முன்பாக கண்ணில் இருந்து பொட்டு பொட்டாகத் துளிகள் நிலத்தில் விழும். கையை நீட்ட மாட்டேன்.அவ, பச்சைத் தடியினால் என் கையை கரையில் இருந்து மேலாகத் தூக்கி விரல்களை நீட்டச் சொல்லுவார்.ஒரு அடியின் பின் கைகளை உதறிக் கொள்வேன்.கடசி ஆளாக நான் நிற்கிற காரணத்தால் என் மீதான கவனமும் பேச்சும் அதீதமாக இருக்கும். ஆனால் எல்லோருக்கும் 3 அடி என்றால் எல்லோருக்கும் 3 தான். அதில் மாற்றம் கிடையாது. ஆனால் விழுகின்ற பேச்சில் மாறுபாடுகள் நிகழும்.’நீர் பேசினாலும் பறவாயில்லை, என்னை உமக்குப் பிடிக்கா விட்டாலும் பறவாயில்லை,வீட்டில போய் சொன்னாலும் பறவாயில்லை.நீர் சரியா வீட்டுப் பாடம் செய்து கொண்டு வரும் வரைக்கும் அடி வாங்கத்தான் போறீர்’ என்பா.ஆனால் அவவோடு எனக்கு ஒரு போதுமே கோபம் வந்ததில்லை.

சிறு வயதுகளில் உங்களுக்கும் அப்படி ஒரு ஆசிரியரோ ஆசிரியையோ விருப்பத்துக்குரியவராக இருந்திருக்கக் கூடும். இருந்தால் சொல்லுங்களேன்!

நான் எதிர் பார்க்காமலே இந்தப் பதிவு என் வாழ்வில் இருந்து இறங்கிய பின்பும் மனதில் பதிந்து போயிருப்பவர்கள் பற்றியதாக அமைந்து விட்டது. இது திட்டமிட்டு எழுதியதல்ல. எழுத்து என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது.

இப்பதிவு நீண்டு விட்டதால் மீரா என்ற என் தோழி பற்றிய அறிமுகத்தோடு பதிவின் பயணத்தை நிச்சயமாக அடுத்த தடவை ஆரம்பிக்கிறேன். இனி மீராக்கா பற்றி மட்டும் தான் சொல்ல இருக்கிறது.(நம்புங்கள்:)

இது எல்லாவற்றுக்கும் இந்த நினைவுகளின் பிரவாகத்துக்கும் ‘பதிவொன்றின் பயணம்’தான் காரணம். :) அது தொடரும்.ஆனால் எப்போது அதை நான் எட்டப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது இருக்கிறது.

அக்‌ஷய பாத்ரத்தைப் புரிந்து கொண்டவர்கள் என்னுடய இந்த நினைவோடைக் குறிப்பில் நான் தொலைந்து போனதையும் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

தொடரும்.......:)

(படம்; நன்றி - கூகுள் இமேஜ்.)

Tuesday, April 26, 2011

பதிவொன்றின் பயணம்


1990ம் ஆண்டின் இறுதிப் பகுதி.

என் பல்கலைக் கழக வாழ்வின் இறுதியாண்டு.

நான்கு வருட கற்கை நெறி நாட்டின் போர் காரணமாக ஒரு வருடம் தள்ளிப் போய் இருந்தது.
சிறப்புத் துறையாக வரலாறை ஒரு பாடமாக எடுத்ததால் இறுதியாண்டில் ஒரு ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்க வேண்டி இருந்தது.

சிறப்புத் துறையாய் வரலாறை எடுத்துக் கொண்டதே ஒரு தற்செயல் தான்.சில தற்செயல்கள் எப்படி சில சந்தர்ப்பங்களில் வாழ்க்கையையே நிர்ணயித்து விடுகின்றது என்பதற்கு இது ஒரு சாட்சியாகவே எனக்கிருக்கிறது.

என் சிறு வயதுப் பிராயங்களில் படிப்பில் எனக்கு அத்தனை நாட்டம் இருந்திருக்கவில்லை.படிக்காமலே எடுத்த கல்விப் பொது தராதர சாதாரண தரத்தில் (G.C.E.O/L) என், கற்பித்தலில் விசுவாசம் உள்ள ஆசிரியர்களால் - அதில் சிறப்பாகச் சுபத்திரா ரீச்சரைச் சொல்ல வேண்டும். வகுப்பறைகளில் கேட்ட கேள்வி ஞானத்தைக் கொண்டும் கொஞ்சம் கொஞ்சம் வற்புறுத்தலுக்காகப் படித்ததைக் கொண்டும் 8 பாடங்களில் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய பாடங்களில் C தரத்துச் சித்தியினைப் பெற்றதன் விளைவாக ( தண்டனையாக இப்போது ஆங்கிலம் பேசும் நாட்டில் வாழ வேண்டி வந்ததை என்னவென்பது?:))கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் (G.C.E.A/L)கலைப் பிரிவை பலரின் ஏளனத்தின் மத்தியிலும் தேர்ந்தெடுத்தேன்.
அக்காலங்களில் வர்த்தகப் பிரிவும் கணிதப் பிரிவும் விஞ்ஞானப் பிரிவுமே பிரபலமாய் இருந்தது.(இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன்)

அதன் பின்பு தான் உண்மையில் கல்வி மீது நாட்டம் பிறந்தது.அதிபர் லோகசிங்கம் அவர்களின் முறையான கண்காணிப்பில்;ரியூசன் காச்சலே அண்டவிடாமல் காத்துக் கொண்டு எம்மை ஆகர்சித்த அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களின் சிறப்பான வழிகாட்டலில் பல்கலைக்கழக வாசம் முதல் தடவையிலேயே கிட்டியது.எங்கள் பாடசாலை வவுனியா மாவட்டத்தில் முதலாவது என்ற பெருமிதத்தை அது என் பாடசாலைக்கு வழங்கியிருந்தது.என் ஆசிரியர்களின் அன்றய பெருமிதம் என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாதது.

என்றென்றைக்கும் நான் என் ஆசிரியர்களுக்கும் என் பாடசாலைக்கும் கடமைப் பட்டவள்.

யாழ்பல்கலைக் கழகத்துக்குப் போன போது மீண்டும் பாடத்தெரிவு பற்றிய குழப்பம்.5 வயதில் கோயில் மண்டபத்தில் அரிசியில் எழுதிய அ நாவும் கோயில் பரீட்சயமும் ஆயுட் பரியந்தம் தொடரத் தக்கதே என்ற உண்மை புரிந்த போது அதனைத் தவிர்த்து வேறேதேனும் புதிதாகக் கற்றுக் கொள்ளும் ஆவல் எழுந்தது.

10ம் வகுப்பில் சமூகக்கல்வி கற்பித்த யோகி ரீச்சரின் அழகான கற்பித்தல் எனக்கு சமூகவியலின் பால் தீராத ஆவலை உண்டாக்கி இருந்து. ஆனாலும் உயர்தர வகுப்புக்கு நான் வந்த போது அவ்வாசிரியரின் இடமாற்றமும் புதிதாக ஒருவரும் நியமிக்கப் படாமையும் அப்பாடத்தை தொடர்ந்து எடுக்க முடியாமைக்கு ஒரு காரணமாயிற்று. ஆனாலும் அப்பாடம் பற்றிய ஆசை மனதோடு இருந்தது.

அப்போது பல்கலைக் கழகத்தில் கலைப் பீட மாணவர்கள் பொருளாதாரத்தை சிறப்புப் பாடமாக எடுக்கும் காச்சல் ஒன்று நிலவியிருந்தமையால் என் சக தோழிகள் அதற்குள் சென்றார்கள். நான் புவியியலின் பால் கரிசனை காட்டினேன். என்றாலும் அது அடிப்படை தகைமை இல்லாததால் எடுக்க அனுமதி கிட்டவில்லை.ஆனாலும் அப்போது ஒரு வார காலம் விருப்பமான விரிவுரைகளுக்குச் சென்று பார்த்து பாட நெறியைத் தேர்வு செய்யலாம் என்று ஒரு நடைமுறை இருந்தது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது ஓர் 1984ம் ஆண்டு ஒக்ரோபர் மழைக்காலம்.நான் தங்கியிருந்த அறைக்கப்பால் உள்ள அடுத்த வீட்டின் பின் புற அறையில் 4 மட்டக்களப்புப் பெண்கள் தங்கிக் கல்விகற்றுக் கொண்டிருந்தார்கள். ராகிங் பயத்தினால் நாங்கள் எல்லோரும் கூட்டாகவே சேர்ந்து வளாகத்துக்குள் செல்வது வழக்கம். அங்கிருந்த சக மாணவிகள் ஏஞ்சலா, கிரிசாந்தி,மற்றும் இருவருமாக போன ஒரு நாளில் சீனிய மாணவர்களின் ராகிங்கிற்குப் பயந்து ஓடி ஒதுங்கிய விரிவுரை வகுப்பு வரலாறு.

வரலாறு நன்கே பிடிபட, அந்த நாள் ஒரு காரணமாயிற்று. தற்செயலான சந்தர்ப்பங்கள் இப்படித்தான் அமைந்து விடுகிறது.எந்த ஒரு அடிப்படை ஞானமும் இல்லாமல் துணிந்து வரலாறை ஒரு பாடமாக ஒரு இலக்குமற்று விருப்பம் ஒன்றே காரணமாய் எடுத்தேன்.

பின்னாளில் அதனைச் சிறப்புப் பாடமாக எடுக்கும் அளவுக்கு அதில் ஆர்வம் கூடியது. பெறுபேறும் நல்லவிதமாய் அமைந்திருந்தது.வெளியில் இருந்து பார்ப்பவர்கள் சொல்வது மாதிரி பாடமாக்கல்களோ ஞாபகம் வைத்திருக்க வேண்டிய இலக்கங்களோ இல்லாதது அதன் மீது நாட்டம் கொள்ள என்னை இன்னும் தூண்டியது.நாடுகளும் மக்களும் பண்பாடும் வாழ்வியலுமாக எல்லாம் சேர்ந்த ஒரு பார்சலாக வரலாறு இருந்தது என்பது தான் உண்மை.

நாங்கள் இருவர் ஒரு அறையைப் பகிர்ந்து கொண்டிருந்தோம். என் தோழி பொருளாதாரத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்திருந்தாள். அவளது இன்னொரு தோழியும் (வாணி)அப்போது எங்கள் தோழியாக இருந்தாள். அவளும் பொருளாதாரத்தையே ஒரு பாடமாக எடுத்திருந்தாள். அதில் என் தோழி அப்பாடத்தில் சித்தியடையாததால் விரக்தியுற்று பல்கலைக் கழகத்தையே உதறி விட்டு ஆசிரியப் பணியில் புகுந்து கொண்டாள். மற்றய தோழி கனடா பயணமானாள். நான் சிறப்புத் துறை நோக்கி முன்னேறினேன்.

2 மொழி தெரிபவன் இரண்டு மனிதன் என்பார்கள்.ஏனென்றால் அவனுக்கு 2 விதமான வாழ்க்கை முறைகள் தெரியும்.2 விதமான உலகம் புரியும். ஆனால் வரலாறு படிப்பவனுக்கு நாடுகளின் எழுச்சியும் வீச்சியும் அதற்கான காரணங்களும் ஒவ்வொரு நாடுகளில் வாழ்க்கை முறை பண்பாடுகளும், அழகும் அவலட்சணமும் தெரியும்.

இந்த இடத்தில் - பல ஆண்டுகளைக் கடந்து விட்டதால் அனுபவத்தோடும் ஒரு விடயத்தை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.யாழ்ப்பாணத்து நிலம் வரண்ட நிலப்பரப்புக்குரியது.சுண்ணாம்புக் கற்கள் நிறைந்தது. ஆறு குளம் அற்றது.பிரயாசையான விவசாயம் இருக்கின்ற போதும், அதன் வாழ்க்கையும் பொருளாதாரமும் கல்வியையே மூலாதாரமாகக் கொண்டது.

அதனால் தானோ என்னவோ பணவருவாயையும் மதிப்பையும் ஒருங்கே தரக் கூடிய டொக்டர், எஜ்சினியர், எக்கவுண்டன் போன்ற பதவிகளைத் தரும் கல்வித்துறைகள் மிகுந்த பிரபலமாக விளங்கின. இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளிடம் போதிய வாய்ப்புகள் வளங்கள் இல்லாமையும் இதற்கு இன்னொரு காரணமே. ஆனாலும் இயல்பான நாட்டம்,திறமை இல்லாமல் பல மாணவர்கள் அப்பாடங்களுக்குள் சென்று வீணே தம் எதிர்காலத்தைப் பாழடிக்கின்றனர்.

கலைத் துறை சார்ந்து எல்லோரிடமும் ஓர் ஏளனப் பார்வையே இருந்த போதிலும்;அப்படியான நிலைமைகளை நானும் பல தடவை எதிர் கொண்ட போதிலும்; என்னை அது எதுவும் பாதிக்க வில்லை. காரணம் எனக்கு எது பிடிக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்ததாலும் அதில் இருந்த நாட்டத்தின் நிமித்தமும் எதுவும் எதற்கும் குறைவில்லை என்ற என் தனி மனித சித்தாந்தமும் அதற்கு மிகவும் கை கொடுத்தன. எனக்குப் பிடித்ததை செய்ய எனக்கு வீட்டில் இருந்த சுதந்திரத்தையும் கட்டாயமாக இங்கு சொல்லியாக வேண்டும்.இப்படியாக எனக்கு அதில் இருந்த ஈடு பாட்டின் காரணமாகத் துணிந்து அப்பாடத்தை எடுத்தது பின்னாளில் எனக்கு மிகுந்த திருப்தியை அளித்தது என்பதை இங்கு சொல்லித் தானாக வேண்டும்.

பின் நாளில் சிட்னிக்கு வரும் வரை உயர்வான இடத்தையே அத்துறை எனக்குத் தந்திருந்தது.

வீணான பகட்டுக்கும் பெயருக்கும் ஏன் நம் சமூகம் ஆட்படுகின்றது என்பதும்;அதற்கு ஏன் பயந்து சாகிறது என்பதும் கேள்வி கேட்கப் பட வேண்டிய விடயங்கள் ஆகும்.எத்தனையோ மாணவர்களின் எதிர் காலம் அதனால் மண்னாகிப் போயிருக்கிறது.என் மைத்துணன் ஒருவன் இத்தகையவர்களில் ஒருவன்.

சரி அது போகட்டும்.

இது வரலாறு எழுத வந்த வரலாறு.

வரலாறு படித்ததால் இது ஒரு சிக்கல்.எங்கு தொடங்கி எங்கு முடிப்பதென்று தெரியவில்லை.சுருக்கமாய் எதையும் சொல்ல முடிவதில்லை:)சுருக்கமாய் சொன்னால் ஏதோ பிஸ்னஸ் ரோக் மாதிரி ஒரு திருப்தி வருவதில்லை.

இது ’தற்செயல்கள்’ எப்படி வாழ்வை சில வேளைகளில் நிர்ணயித்து விடுகிறது என்பதற்கு என் வாழ்வில் நடந்த ஒரு உதாரணமே.

மிகுதியை அடுத்த வாரம் தொடர்கிறேன்.

இது நான் சொல்ல வந்த விடயம் ஒன்றுக்கான பின்னணியே!

தொடரும்....

Monday, April 18, 2011

கை படாத பழத் துண்டு


அண்மையில் அவுஸ்திரேலியப் பார்ட்டி ஒன்றுக்குப் போனேன்.

வெளி நாட்டினரின் பார்ட்டிகளைப் பற்றி தனியாகவே ஒரு பதிவெழுதலாம்.இது அதைப் பற்றியதல்ல வெனினும் அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல எனக்கு நீங்கள் இடம் தர வேண்டும்.

அவுஸ்திரேலியர்களுடய பார்ட்டிகளுக்குப் போனால் அங்கே வைக்கப் பட்டிருக்கின்ற உணவு வகைகளும் அலங்காரங்களும் தனியொரு விதமாக இருக்கும்.ஒரு பக்கம் பேக் செய்யப் பட்ட உணவு வகைகள் இருக்கும். அதன் அடுத்த கட்டமாக சண்ட்விட்ச்சுகள் அழகாக வெட்டப் பட்டு அடுக்கப் பட்டிருக்கும். அதனைத் தாண்டி வர, பேக் செய்யப் பட்ட உப்பு பிஸ்கட்டுகளும் டிப் என்று சொல்லப் படுகின்ற வகையறாக்களும் சீஸ் கட்டிகளும் இருக்கும். அதனையும் தாண்டி வந்தால் பழவகைகள் அழகாக தோலோடு கைபாடாது நறுக்கி வைக்கப் பட்டிருக்கும்.

அதிலும் பழ வகையறாக்கள் நிறம்,பழக்குடும்பம்,சுவை,என்று வகை பிரிக்கப் பட்டு பெரிய வாயகன்ற தட்டில் வைக்கப் பட்டிருக்கும்.உதாரணமாக றொக்மிலன், வோட்டர் மிலன்,ஹணிமிலன் ஒரு வகை.வாழைப்பழம், மண்டரின், திராட்சை போன்ற விதையற்ற - அப்படியே நாமாக உரித்துச் சாப்பிடக் கூடிய பழ வகைகள் இன்னொரு வகை.தோடம் பழம் தனியொரு வகை.இவ்வாறு அவைகளும் பிரிக்கப் பட்டிருக்கும்.

அதனையும் தாண்டிப் போக,உணவுக்குப் பின்பான இனிப்பு வர்க்கங்கள் கொலு வீற்றிருக்கும்.பிளேற்றுகள், கப்புகள், கத்திகள்,கரண்டிகள்,முள்ளுக் கரண்டிகள் அவையவற்றுக்குரிய இடங்களில் கம்பீரமாய் உட்கார்ந்திருக்கும்.

சம்பெயின்,திராட்சைரசம்,மதுரசம்,பழரசம்,தண்ணீர் இவை இருக்கிற இடம் தனியாக.

அவரவர் தனக்குத் தனக்குப் பிடித்தவற்றை தமக்குத் தேவையான நேரங்களில் எடுத்த படி தத்தமக்குப் பிடித்த இடங்களில் உட்கார்வர்.அண்மையில் சென்ற பார்ட்டி ஒன்றில் மேற்கூறிய வண்ணமாக உணவுப் பொருட்கள் இடம் பிடித்திருக்க, மென்மையான ஒளியில், வண்ணமான கலவையில்,ஒரே ரசனை கொண்ட பல்லின மக்களை கண்டு அளவளாவும் வாய்ப்புக் கிட்டியது.

அவர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகளும் தனித்தன்மை மிக்கதே!அவரவருக்கு செளகரிகமான ஆடைகள்.அவரவருக்குப் பிடித்த படி அவரவர்.நீளக் கூந்தல் கொண்ட ஆண்,ஆணைப் போல தலைமயிரை வெட்டிக் கொண்ட பெண்,நீல,மண்ணிற,பச்சை, கறுப்புக் கண்களைக் கொண்டோர், கறுப்பு, றோசாவர்ணம், மஞ்சள், மண்ணிற மனிதர்கள்.

இந்த வேறுபாடுகள் எல்லாவற்றுக்கும் அப்பால் அவர்களுக்குள்ளாக ஒளிர்ந்த படி இருக்கும் தனித்தன்மைகளே அங்கு பிரதானமாய்; பிடித்தமானதாய்;பிரகாசமானதாய்;சுதந்திரம் மிக்கதாய் ....அவையே அங்கு ஒளிரக் கண்டேன்.அவர்களைச் சுற்றி அவ்விடயங்களைக் கேட்கும்,பகிரும் ஆர்வத்தோடு சிலர். அது அழகானதொரு தனி வேறுலகம்.

கலைகளை நேசிக்கும் கலைஞர்கள்....
பெண்களை நேசிக்கும் பெண்கள்....
ஆண்களை நேசிக்கும் ஆண்கள்......
சுதந்திரத்தை நேசிப்போர்.....
இயற்கையை ரசிப்பவர்......
தன்னைத் தேடித்திரிவோர்.......
சேவையில் சுகம் காண்போர்.....
மிருகங்களின் உரிமைக்காகப் போராடுவோர்...
மனிதமே மகத்தானது என்போர்....
ஆத்மீகத்தில் விடை கண்டவர்கள்...
இவற்றில் எல்லாம் கடவுளைக் காண்போர்...
புத்திஜீவிகள், பத்திரிகையாளர் என நீண்ட பட்டியல் அது.

இப்படியாக அது ஒரு சுவையான பழக் கலவை.

இங்கு நான் போனேன் என்பதற்காகவே காலாசாரத்தின் காவலர்கள் என்னோடு மனஸ்தாபப் பட்டுக் கொண்டனர்.அதனால் அதனை இத்தோடு நிறுத்திக் கொண்டு விடயத்துக்கு வருகிறேன்.

அங்கு வெட்டி வைக்கப் பட்டிருந்த பழக்கலவையில் இருந்த அழகு என்னவென்றால் அவை கைபடாது வெட்டி வைக்கப் பட்டிருந்தமை தான்.அந்தப் பென்னாம் பெரிய விதைகள் இல்லாத றொக் மிலன் பாதியாகக் கீறப் பட்டு அது மேலும் நீளவாட்டாகக் கீறப்பட்டு பின்னர் அது குறுக்குத் துண்டுகளாக தோலோடு வெட்டி வைக்கப் பட்டிருந்தது.சிவப்பும் பச்சையும் கலந்த அதன் வண்ணம் மேலும் வெளிச்சத்தில் பிரகாசிக்க,அந்தக் கைபடாத தன்மை அதற்கொரு வசீகரத்தை அளித்துக் கொண்டிருந்தது.

நாம் கூட அதில் பழப்பக்கத்தை கை வைக்காமலே தோலினைப் பிடித்த படி உண்டு களிக்க முடியும்.

அதன் சுவை தனி.முள் இல்லா றோஜா மாதிரி இது கைபடாக் கனி.:)

நம்முடைய பார்ட்டிகள்;அதில் நாம் பேசும் விடயங்கள்;ஆடைகளில்,ஆபரணங்களில் நாம் காட்டும் அதீதம்,பணம், தொழில்,அந்தஸ்து இவற்றைச் சுற்றியதான சூழல்,உணவுகளில் வழிந்து நிற்கும் எண்ணை,அதில் நாம் சேர்க்கும் மசாலா வகையறாக்கள்,மூன்று வீடு வரை பரவும் சாப்பாட்டு மணம்-இவை பற்றி நான் பேசவில்லை.சும்மா நினைவுக்கு வந்தது அவ்வளவு தான்.:)அதனால் என்னோடு யாரும் கோவிக்க வேண்டாம்.

அந்தக் கைபாடாமல் வெட்டப் பட்ட பழம் போல ஒரு பாடலை இன்று உங்களோடு பகிர ஆசை.

புறநானூறு - பாடல் 57. பாடிய புலவன்; காவிரிப்பூம் பட்டிணத்து காரிக் கண்ணனார்.

பாடப் பெற்றவர்;பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன் மாறன்.

“வல்லார் ஆயினும்,வல்லுனர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையேன்; என் எனின்
நீயே,பிறர்நாடு கொள்ளும் காலை, அவர் நாட்டு

இறங்கு கதிர்க் களனி நின் இளையரும் கவர்க!
நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க!
மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்பு;நின்

நெடுநல் யானைக்குக் கந்து ஆற் றாவே!”

சொல் விளக்கம்;

வல்லார்- கல்வித்திறம் அற்றவர், வல்லுனர்-திறன் உடையவர்கள்,மாயோன் - திருமால்,மாறன் - பாண்டியன் நன்மாறன்,இறங்கு கதிர் - முற்றிச் சாய்ந்த நெற்கதிர்,இளையர் - வீரர், நைக்க - அழிக்க,ஒன்னார் - பகைவர், செகுத்தல் - கொல்லுதல், கடிமரம் - காவல் மரம்,தடிதல் - அழித்தல்,ஓம்பு - தவிர், கந்து - கட்டுத் தறி.

சாரம்;

இப் புலவன் அயல் நாட்டுப் புலவன். பாண்டிய மன்னன் தன் தாய் நாட்டின் மீது படையெடுக்கப் போகிறான் என்ற செய்து காதில் வந்து விழுகிறது.புலவனுக்குத் தெரியும் பாண்டியனின் படைபலம்,மற்றும் வீரம். போர் ஒன்று வந்தால் நாடு என்னவாகும் என்பதையும் ஏழைப் புலவன் நன்கறிவான்.

தன் நாட்டில் இருந்து இன் நாட்டுக்கு கால் நடையாக வருகிறான் புலவன்.வந்து மன்னனைக் காண்கிறான். கண்டு இவ்வாறு உரைக்கிறான்.

வல்லவர்களும் சரி எளியவர்களும் சரி உன்னைப் புகழவே செய்கிறார்கள். மாயோனை ஒத்த புகழுக்குரிய,அவ்வாறு உரைக்கத் தக்க சிறப்புடையவன் நீ.உனக்குச் சொல்வதற்கு என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது.

அது என்னவென்றால்,பிறருடைய நாட்டை நீ கவருகின்ற போது (நீ என்னவோ அதனைச் செய்யத் தான் போகிறாய்,அதனால்)உன் வீரர்கள் முற்றித் தலை சாய்த்துக் கிடக்கும் நெற்கதிர்கள், மற்றும் வயல் வெளிகளை அழித்துக் கொள்ளையடிப்பதாயின் கொள்ளையிடுக;அந்த நலம் விளைகின்ற பெரிய ஊரை நெருப்பிட்டு அழிக்க விரும்பினால் அதனையும் செய்க;நீயும் உன் வீரர்களும் உங்கள் ஒளி பொருந்திய நெடிய வேலால் போர் வீரர்களைச் சாய்ப்பினும் சாய்க்க;

ஆனால்,அந்தக் காவல் மரத்தை மட்டும் ஒன்றும் செய்து விடாதே! அது உன்னுடய யானையைக் கட்டுவதற்குக் கூட பலமில்லாதது மன்னவா!


இப் புலவனின் தாய்நாட்டின் மீதான பாசம் என்னை அலைக்கழித்த படியே இருக்கிறது.

உங்களுக்கு எப்படி?