Tuesday, June 28, 2016

கண்டறியாத கதைகள் - 6 - கடுக்கண் -






தமிழர் மரபில் பெண்கள் காதில் அணியும் அணிகலனை தோடு எனக் கூறுவது மாதிரி ஆண்கள் தம் காதுகளில் அணிவதை கடுக்கண் என அழைத்தனர்.

தமிழிய மரபின் வாழ்வியல் அம்சங்களை உற்று நோக்கினால் தமிழின் நுட்பமும் வாழ்வியலின் நுட்பமும் சொற்களினாலும் நடைமுறையினாலும் விளங்கியிருக்கக் காணலாம். ஆண் பிள்ளைகளின் பருவத்தை அவர்கள்

பாலன் - 7 வயதுக்கு கீழ்
மீளி - 10 வயதுக்குக் கீழ்
மறவோன் - 14 வயதுக்குக் கீழ்
திறலோன் - 14 வயதுக்கு மேல்
காளை - 18 வயதுக்கு கீழ்
விடலை - 30 வயதுக்குக் கீழ்
முதுமகன் - 30 வயதுக்கு மேல்

என்றும்;

பெண் பிள்ளைகளின் பருவத்தை அவர்கள்,

பேதை - 5 வயதுக்குக் கீழ்
பெதும்பை - 10 வயதுக்குக் கீழ்
மங்கை - 16 வயதிற்குக் கீழ்
மடந்தை -  25 வயதிற்குக் கீழ்
அரிவை - 30 வயதிற்குக் கீழ்
தெரிவை - 35 வயதிற்குக் கீழ்
பேரிளம் பெண் - 55 வயதிற்குக் கீழ்

எனவும் ஏழு ஏழு பருவங்களாகப் பிரித்திருந்தார்கள். அது போல அவர்கள் அணிகின்ற அணிகலன்களையும் தனித்தனியாகப் பிரித்திருக்கிறார்கள். ஆண்கள் அணியும் அணிகலன்கள் கீழ் வருமாறு வகைப்படுத்தப் பட்டிருந்தன.

 ஆண்களின் அணிகலன்கள் : வீரக் கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண், பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்துவடம்,. கடுக்கண், குண்டலம். ஆகியனவாகவும்;

அது போல பெண்கள் அணியும் அணிகலன்களை உறுப்பு ரீதியாக வகைப்படுத்தி கீழ் வருமாறு பட்டியலிட்டிருக்கிறார்கள்,

.1. தலையணி : தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.

2. காதணி : தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை,  கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல.;

3. கழுத்தணி : கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை, பிச்சியரும்பு மாலை, நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, தாழம்பூ அட்டிகை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்ட சரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.

4. கை அணிகலன் : காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு

5. கைவிரல் அணிகலன் : சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப் பூ

6. கால் அணிகலன் : மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய்க் கொலுசு, ஆலங்காய் கொலுசு

8. கால் விரல்  அணிகலன் : கான் மோதிரம், காலாழி, தாழ் செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி.

என்பவையே அவையாகும். இவர்கள் அணிந்த அணிகலன்களைப் பற்றியும் அவற்றின் தோற்றப் பொலிவுகள் பற்றியும் அநேக சான்றுகள் தமிழிய வரலாற்றிலே உள்ளன.  ஆனால் அவைகள் கடுக்கண் என்ற தலைப்பிற்கு அப்பால் செல்வதால் அதனை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

( இந்த தமிழர் அணிந்த பாரம்பரிய நகைகள் பற்றி அறிய விரும்புபவர்கள் மாதவி அணிந்த நகைகள் பற்றிய விபரத்தை சிலப்பதிகாரத்திலும் இலங்கையர் அணிந்த நகைகள் பற்றிய விபரங்களை பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய காதலியாற்றுப் படை என்ற நாட்டார் வாழ்வியலைப் பதிவு செய்த புத்தகத்திலும் காணலாம். ( http://akshayapaathram.blogspot.com.au/2014/03/blog-post_5692.html )

அவை நிற்க,

இந்துத் தமிழ் திருமணங்களின் போது மணமகனாகப் போகும் ஆண்மகனுக்கு இக் கடுக்கண் பூணும்  வைபவம் ஒரு சடங்காக அமைந்திருந்தது. மணமகனுக்கு தலைப்பாகை வைக்கும் சடங்குக்கு முன் கடுக்கண் பூணும் கிரியை நடக்கும். மணமகனை கிழக்கு முகமாக அமர்த்தி விநாயக வழிபாடு செய்து தேங்காய் உடைத்து இக் கடுக்கண் பூட்டு வைபவம் நடந்தது. அது மணமகனின் தாய்மானனால் நடாத்தி வைக்கப்பட்டது.

ஆனால் எப்போது காது குத்தும் வைபவம் நடைபெற்றது என்பது பற்றி அறிய முடியவில்லை.

அக்குபங்சர் என்ற சீன பாரம்பரிய மருத்துவமும் காது குத்துவது கண் பார்வையைப் பிரகாசமாக்கும் என நம்புகிறது. கூடவே காதுக்கும் ஒட்டுமொத்தமான உடல் ஆரோக்கியத்துக்கும் சம்பந்தம் உண்டென்றும்; அதனால் தான் காதின் உருவம் தாயின் வயிற்றில் இருக்கும் பூரண வளர்ச்சியடைந்த சிசு ஒன்றின் தோற்றத்தை ஒத்திருக்கிறதென்றும் அக்குபங்சர் மருத்துவம் கூறுகிறது.

பழங்காலத் தமிழ் ஆண்மகனார் ஒருவரது தோற்றம் தலையிலே குடுமியும் காதிலே கடுக்கண்ணும் நெற்றியிலே திருநீறும் மேல் உடல் சட்டை அணியாததாகவும் கீழ் உடல் வேட்டி அணிந்ததாகவும் இருந்திருக்கிறது.

பழங்கால ஆலய ஆண்சிற்பங்கள் நகை அணிந்திருப்பதைக் காணலாம். 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் தோடுடைய செவியன் என சிவனை விழித்துப் பாடியதும் இச் சந்தர்ப்பத்தில் மனம் கொள்ளத் தக்கது.

அது போல சிவனைக் குறித்த புராணக்கதை ஒன்று அசுவதரன், கம்பளதரன் என்ற இரண்டு கந்தர்வ இசை வல்லுனர்கள் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இருந்தார்கள் என்றும்; சிவன் என்ன வரம் வேண்டும் எனக் கேட்க,  'நாங்கள் இசைக்கின்ற பாடல்களை நீங்கள்  எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என வரம் கேட்க, அது எவ்வாறு சாத்தியப்படும் என யோசித்த சிவன் அவர்கள் இருவரையும் காதணியாக மாற்றி தன் காதுகளிலே அணிந்து கொண்டாராம் என்றொரு புராணக் கதை கூறுகிறது.

இதிலிருந்து ஆண்கள் காதணி அணியும் வழக்கத்தை பழங்காலம் தொட்டுப் பேணி வந்திருக்கிறார்கள் என அறியலாம்.

தமிழகத்தில் ஆனைமலை என்ற பகுதியில் வாழும் முதுவர் குல பழங்குடி மக்களிடையே இன்றும் ஆண்கள் கடுக்கண் அணியும் வழக்கமும் தலைமுடியைக் கொண்டையாக முடியும் வழக்கமும் உருமாலை என்றொரு மாலையை தலையிலே அணிவதும் இன்றுவரை வழக்கமாக இருந்து வருகிறது.

இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது தமிழகத்தில் இருந்து மலையகத்துக்கு புலம் பெயர்ந்தோரின் நாட்டுப்பாடல்களிலும் கடுக்கண் பற்றிய செய்திகள் உள்ளன. அந்தப் பாடல்கள் இவை தான்.

“சொல்லு சொலுன்னு மழைபெய்ய
துப்பெட்டி தண்ணி அலை மோத
சொகுசா வாராராம் நம்மய்யா கங்காணி
தோடு மின்னலைப் பாருங்கடி’’

“கலகலண்ணு மழை பெய்ய
கம்பளித் தண்ணி அலை மோத
காரியக்காரராம் நம்பய்யா கங்காணி
கடுக்கன் மின்னலைப் பாருங்கடி’’

“கலகலன்னு மழைப் பொழிய
கன்னங்களிரண்டும் கிளி கூவ
காரியக்காரராம் வள்ளடியான்
கடுக்கண் மின்னலைப் பாருங்களே’’

”சொல்லு சொலுன்னு மழைப் பொழிய
துப்பட்டி தண்ணி அலை மோதே
சொகுசுக்காரராம் வள்ளடியான்
தோடு மின்னலைப் பாருங்களே’’

இந்தப் பாடல்கள் வள்ளடிக்காரர் ஆலயம் அமைந்துள்ள அக்கராப்பத்தனையைச் சேர்ந்த லெட்சுமி தோட்டத்தில் இன்றும் பாடப்படுகின்றன.

இலங்கையில் 1958ம் ஆண்டில் இடம் பெற்ற இனக்கலவரத்தின் போது பெரும்பாண்மை இனத்தவர் தமிழர்களை தலையை முகர்ந்து பார்த்தும் ( நல்லெண்ணை வைத்து படிய வாரி இழுக்கும் வழக்கம் இருந்தது) காதிலே காதுத் துவாரத்தை அல்லது கடுக்கண்ணை வைத்தும்; வாளி எனச் சொல்லச் சொல்லி அவர்களது உச்சரிப்பைக் கொண்டும் அவர்களைத் தமிழர்களாக இனம் கண்டு கொண்டதாகவும் அதன் ஒரு நீட்சியாகவே தமிழ் ஆண்கள் காதில் துவாரமிடுவதையும் கடுக்கண் அணிவதையும் காலப்போக்கில் நிறுத்தத் தலைப்பட்டார்கள் என்றும் ஒரு குறிப்பு கூறுகிறது.

அதனை ஒத்தவாறாக தமிழகத்தில் காணப்பட்ட சாதி ஒடுக்குமுறையின் ஓரம்சமாக அங்குள்ள தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தோர் கொத்தடிமைகளாக கீழ் வரும் செய்யல்களைச் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. அவையாவன,

(பொதுக்!) கிணற்றில் நீர் எடுக்க தடை,
சுடுகாட்டில் தம் பிணம் எரிக்கத் தடை,
குளங்களில் குளிக்க தடை,
தெருக்களை பயன்படுத்த தடை,
மேற்சட்டை, வேட்டி, சால்வை அணிய தடை,
மீசைவிடத்தடை,
தாவணி, தங்க ஆபரணங்கள் போடத்தடை,
செருப்பு அணிய தடை,
குடுமி, கடுக்கண் போட தடை,
ரயில் பயணிக்க தடை,
பேருந்து, ரயில் இருக்க தடை,
பாடசாலையில் படிக்க தடை,
கோவில் பயன்படுத்த தடை,
பொது நிறுவனங்களில் உட்புக தடை,
மருத்துவ வசதி தடை,
வேற்று உழைப்பு வழிமுறை தடை,

இவ்வாறான தடைகள் கடுக்கண்ணின் முக்கியத்துவத்தையும் பயன் பாட்டையும் வர வர மங்கச் செய்து விட்டன என்றே கூற வேண்டும்.

எனினும் இன்றய காலங்களில் அதன் பயன்பாடு பிரபலமாக மீண்டும் புழக்கத்திற்கு வந்திருப்பதைக் காணலாம். அது நாகரிகமாகவும் ஓரினச் சேர்க்கையாளர்கள் தம்மை இனம் பிரித்துக் காட்டும் ஒரு அடையாளமாகவும் இப்போது ஆண்கள் காது குத்துவதும் கடுக்கண் அணிவதும் காணப்படுகிறது.

எனினும் ஆரம்ப காலத்தில் ஆண்கள் பாரம்பரியமாக அணிந்த கடுக்கண்ணிற்கும் நவீன யுக ஆண்கள் அணியும் கடுக்கண்ணிற்கும் பெண்கள் அணியும் தோட்டிற்கும் இடையில் என்ன வேறுபாடு காணப்பட்டது என்பது பற்றிச் சரியாகச் சொல்ல முடியவில்லை.

இருந்த போதும் கடுக்கண் என அழைக்கப்படும் பாரம்பரிய அணிகலன் தோட்டில் இருந்து சற்று வேறுபட்ட விதமாக முன்புறத் தோட்டையும் பின் புறத்தில் அமைந்திருக்கும் சுரையையும் இணைக்கும் விதமாக கீழ் சோணையோடு ஒட்டிய விதமாக ஒரு வளையம் இடம்பெறுவது உண்டென்பதுவும் அதுவே பெண்கள் அணியும் தோட்டிற்கும் ஆண்கள் அணியும் கடுக்கண்ணிற்கும் இடையே காணப்படும் பிரதான வேறுபாடெனவும் நம்பப் படுகிறது.

ஆனால் இன்றய ஆண்கள் அவ்வாறானதாக மாத்திரமன்றி தோடு போன்ற அமைப்பில் இருக்கும் அணிகலன்களையும் இன்று அணிவதைப் பெரும் பாலும் காணலாம்.

இதற்கு மேலைத்தேய ஆண்களும் விதிவிலக்கல்ல.

( அண்மையில் என் மச்சாள் மாலினியிடம் கேட்டு கொழும்பில் இருக்கிற நகைக்கடை ஒன்றில் இருந்து பெறப்பட்ட கடுக்கண்ணின் புகைப்படங்கள் தான் ஆரம்பத்தில் இருப்பது. அவருக்கு என் நன்றி)

Tuesday, June 14, 2016

ஆழமான வேர்களும் அகலமான சிறகுகளும்; பொறியாகும் பொறிகள்...



பொறி என்பது மெய், வாய் கண், மூக்கு, செவி என ஐந்தாகும். பொறி என்பது சிறு துகள் என்ற ஒரு கருத்தும் உண்டு. நெருப்புப் பொறி என்பது நெருப்பின் ஒரு சிறு மூலக்கூறு.

இங்கு நான் கூற வருவது நம் ஐம் பொறியை தூண்டி விடும் ஒரு சிறு பொறி குறித்த கருத்தாகும்.

பொறிகளைத் தூண்டும் பொறிகள்....

கடந்த 8.5.16 அன்று அன்னையர் தினம். அன்று சிட்னியில் 5வது ஆண்டாகச் சித்திரைத் திருவிழா. இந்த ஆண்டு தான் எனக்குப் போகக் கிட்டியது.’தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம்’ இந் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. குறிப்பாக அனகன் பாபு அவர்கள் முன்நின்று இந் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி நிறைவு செய்திருந்தார். வெற்றி கரமாக என்று நான் சொல்லும் இந்தச் சொல்லின் பின்னால் ஒரு பெரு வேலைப் பொதி அடங்கி இருக்கிறது.

பிரமாண்டமாக ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்ச்சியில் அந்தந்த இடங்களுக்கு பொருத்தமான ஆட்களை நியமித்து வாசலில் நின்று கரம் கூப்பி அவ்வளவு பேரையும் பண்பாட்டு இயல்போடு வரவேற்று ஆளும் கட்சி எதிர்கட்சி என வேட்பாளர்களையும் அங்கத்தவர்களையும் ஒரே மேடையில் ஏற்றியது மாத்திரமல்லாமல் இந்தியாவில் இருந்து நாட்டுப் புறக் கலைஞர்களை வரவழைத்து உள்ளூர் கலைஞர்களோடும் மேடையேற்றி, விற்பனை அரங்கங்கள், தகவல் கூடாரங்கள், கண்காட்சிகள், உணவுக்கூடாரங்கள், பூமாலைகட்டுதல், கோலம் போடுதல், பாரம்பரிய விளையாட்டுகள், பாரம்பரிய உணவுவகைகள், தானியங்கள், மூலிகைகள், மசாலாப் பொருட்கள், பழ வர்க்கங்கள், காய்கறி வகைகள், இலைவகைகள், மிருகங்கள், பறவைகள் - அவற்றின் தமிழ் ஆங்கிலப் பெயர்கள், பாரம்பரிய பாவனைப் பொருட்கள், துணி வர்க்கங்கள்....என ஒரு சிறந்த கண்காட்சியையும் ஒழுங்கு செய்து நடத்தி முடித்திருந்தார்கள்.

ஒரு வித பெருமையையும் பெருமிதத்தையும் சந்தோஷத்தையும் அந்த ஒரு பெரும் பழம்பெரு பாரம்பரிய விருட்சத்தின் வேரடியின் கீழ் வளர்ந்த ஒரு சிறு புல் நான் என்ற எண்ணத்தையும் வரவளைத்த அந்த நிகழ்ச்சிக்கும் அதனை நடத்திய பெருமக்களுக்கும் என் நன்றி உரியதாகும்.

அந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது பழங்காலத்தில் பாவிக்கப்பட்டிருந்த ஒரு மினுக்குப் பெட்டி. அதைப் பார்த்த கணம் ஒரு பொறி. அது எழுப்பி விட்ட சிந்தனைகள் இந்தப் பதிவிற்கும் இதற்கு முன்னரான மினுக்குப் பெட்டி பதிவிற்கும் காரணமாயிற்று.

வீடு திரும்பி அந்தக் குறிப்பிட்ட பாடலில் திளைக்கவும் மினுக்குப் பெட்டியைத் தேடி கூகுளில் அலையவும் அது கொண்டு சென்று பழமொழி400 இலும் திரிகடுகத்திலும் கொண்டு சென்று விடவும் அந்தப் பார்வைப் பொறி ஒன்றே காரணம்.

எது நம்மை வாசிக்கத் தூண்டுகிறது என்ற கேள்விக்கு இந்தப் பொறி கிழப்பி விடும் தூண்டுதலும் அதனோடு இணைந்த ஓர் இயல்பான ஆர்வமும் காரணமாக இருக்குமோ?

ஏன் நாம் வாசிக்க வேண்டும் என்ற கேள்வியும் அதைத் தொடர்ந்து எழவே செய்கிறது. தேடலோடு சம்பந்தப்பட்ட வாசிப்பு நம் நிலைப்பாட்டைச் சரிசெய்கிறது என்று சொல்லலாமா? எம்முடய தடுமாற்றங்களைச் சீர் செய்கிறது என்று சொல்லலாமா? வாழ்க்கையை வழிப்படுத்துகிறது என்று சொல்லலாமா? அரசியல் எதுவும் இல்லாத ஒரு நண்பனாய் அது நம்மோடு  இருக்கிறது; ஒரு நிறைவைத் தருகிறது; ஒரு திருப்தியைத் தருகிறது என்று சொல்லலாமா?

ஓம் என்பதே என் தனிப்பட்ட பதிலாக இருக்கிறது.

அப்படி என்றால் சமூக வலைத்தளங்கள் அவற்றைச் செய்கின்றனவா என்ற கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை.

அது நிற்க,

அதற்கு முதல் வாரம் 1.5.16 அன்று படைப்பளர் விழா நடந்தது. அங்கு நடைபெற்ற காலைக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய கலாநிதி.சந்திரலேகா. வாமதேவா அவர்கள் எதற்காக நமக்கு ஆழமான நம்முடய வேர்கள் பற்றிய அறிவு அவசியம் என்பது பற்றியும் அகலமாகச் சிறகு விரிக்க வேண்டிய இன்றய யுகத் தேவை பற்றியும் குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் நவீன யுகப் பிள்ளைகளுக்கு அதன் தெளிவான தார்ப்பரியங்களை ஊட்டி வளர்க்க வேண்டியதன் அவசியம் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்திருந்தார். நல்லதொரு பாதையை காட்டுவதைப் போல அது அமைந்திருந்தது. அத் தெளிவான கருத்துக்கள் குழப்பங்கள் பல நிறைந்த மேலைத் தேயக் கலாசார பாதைகளில் தடுமாறி வரும் பருவ வயதினரை தம் பிள்ளைகளாகக் கொண்டிருக்கும் தமிழ் பெற்றோருக்கு மிகப் பயனுடயதாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

அக்கருத்தரங்கில் கேட்ட கருத்து மனதில் அசை போட்ட படி இருக்க இன்று இந் நிகழ்வுக்கு போனது நாம் எத்தகைய ஒரு பாரம்பரிய வேரில் இருந்து வந்திருக்கிறோம் என்பதைச் சொல்ல போதுமானதாக இருந்தது. அது  நம் வேர்களை பண்பாட்டின் பெருமைகளை அதன் ஆழ அகலங்களை உணர உதவியதோடு பெருமையும் பெருமிதமும் கொள்ள வைத்தது.

அங்கு ஆடலோடு  இடம் பெற்ற இரண்டு பாடல்கள் என்னைக் கொள்ளை கொண்டன. அதனை அமைப்பாளர்களிடம் இருந்து பெற்று இங்கு பதிவேற்றுகிறேன்.

எத்தனை அழகு பாருங்கள்?!
துன்பக்குடத்திலிட்டு என்னை....



பகுத்தறிவு வாதங்கள் மற்றும் மேலைத்தேய கலாசாரம் கொண்டு வந்து சேர்க்கும் குழப்பங்கள் எல்லாவற்றிலிருந்தும் எங்களை முற்றிலுமாக விடுவித்துக் கொண்டு ஒரு பெருமித எல்லைக்குள் நமக்கே நமக்காக விளங்கும் சுகானுபவத்தை தரும் வல்லமை இப்பாடல் இசை குரல் அபிநயம் எல்லாவற்றுக்கும் இருக்கிறதென்பதை என்னைப் போலவே நீங்களும் உணர்வீர்கள் என நம்புகிறேன்.

பொறிகளைத் தூண்டி விடும் இத்தகைய பொறிகள் நம்மை வேறொரு எல்லைக்கு கொண்டு சென்று விடுகின்றன. அங்கிருப்பது சொர்க்கத்தின் கூறுகள்! அறமும் அகிம்சையும் அன்பும் சாந்தமும் நிறைந்த ஓர் சங்கமம்.

மரபின் மகத்தான மானுட நேசம்!! நமக்கான வரப் பிரசாதம்!!

அது ஓர் ஆத்மானுபவம்!

ஆடைக்குப் பின்னே தானே அணிகள் எல்லாம்?....

மனதின் - உள்ளத்தின் - ஆத்மாவின் - மனசாட்சியின் - சுகத்திற்குப் பின் தானே காசு, வீடு, பதவி, புகழ், பட்டாடோபம் எல்லாம்.....

இந்தப் பழமொழி கூட நமக்கே நமக்கான நம் மூதாதையர் சேர்த்து நமக்கு எழுதி வைத்து விட்டுப் போன சொத்து தான்.

சங்கமருவிய காலமான 3 - 6 ம் நூற்றாண்டிற்குள் எழுந்த பதினெண் கீழ்கணக்கு நூலான பழமொழி 400 என்ற அற நூலில் இருந்து வரும் வேர் அது.....

நான் உட்பட எத்தனை பேர் இதனை அறிந்திருக்கக் கூடும்? அவற்றில் பொதிந்து கிடக்கும் அனுபவ உண்மைகளை அவற்றை பின் வரும் தமிழனுக்காய் எழுத்தில் வைத்து விட்டுப் போன அவர் தம் சமூக சிந்தனையை அறிந்திருக்கக் கூடும்.

இதே காலத்திற்குரியதாக இருக்கிறது திரிகடுகம் என்றொரு நூல். சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்று மூலிகைகள் அடங்கிய மருத்துவ குணம் கொண்ட மூலிகையைத் திரிகடுகம் என்கிறார்கள். அது உடலுக்கு நலம் செய்கிறது.  அதனைப்போல மனதிற்கு நலம் பயக்கும் மூன்று கருத்துக்களைக் கூறி உயிருக்கு  நலம் பயக்கிறது  திரிகடுகம்.

அதிலே ஒரு பாடல், எது செல்வம் என்று இவ்வாறு கூறுகிறது,

“  பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும் - இம் மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு” - பாடல் 6 -

பொருள் என்னவெனில், ’பிறர் தன்னை உயர்த்திப் பேசும் போது நாணுதலும், தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும் போது பொறுத்துக் கொள்ளலும், பிறருக்குக் கைமாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வங்களாகும்.’

இன்றைக்கும் இச் செல்வம் எத்தனை தேவைக்குரியதாக இருக்கிறது?

வேரின் ஆழ அகலம் தெரியாமல் அகலச் சிறகு விரித்தலில் காட்டும் அவசரம் என்பது அத்திவாரம் பலம் இல்லாமல் வீடு கட்டுவதற்கு ஒப்பானது.

ஆபத்தானதும் கூட!

அறத்தையும் தர்மத்தையும் மண்ணின் சத்தென உறிஞ்சி அதற்குள்ளே மருத்துவம், தத்துவம், அறிவியல், கலைகள், மொழி,ஆத்மீகம் , யோகம்.... என அவற்றின் கூறுகளை உள்வாங்கி பெரு விருட்சமென தழைத்து நிற்கும் தமிழின் நிழலில்,

தமிழனாய் பிறந்ததற்காய்,
பெருமை கொள்வீர் மானிடர்காள்.....

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
-கணியன் பூங்குன்றனார்.

‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.
- பிசிராந்தையார்.

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்,
பயனில் மூப்பின், பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது ; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.
- நரிவெரூஉத் தலையார்.
(புறநானூற்றுப் பாடல்கள்)

அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி-பூக் கேழ் ஊர!
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே.
(நற்றிணை 10)

Friday, June 3, 2016

நினைவுகளின் / நிகழ்வுகளின் ஈரம்

சில மாதங்களுக்கு முன்னால் எழுத்தாளர் முருக பூபதி அவர்களிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.

ஒரு தடவை -  2009ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கு கலை இலக்கிய சங்கத்தின் அழைப்பின் பேரில் வருகை தந்திருந்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களோடும் இலங்கையில் இருந்து அதே சங்கத்தின் அழைப்பின் பேரில் வந்திருந்த மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்களோடும் அவர்களின் சிட்னி வருகையின் போது எடுத்த புகைப்படங்கள் உங்களிடம் உள்ளனவா? இருந்தால் தயவு செய்து எனக்கு அனுப்பி உதவுங்கள். நான் இக் கலைச் சங்கத்தின் வளர்ச்சியை புகைப்படங்களாக பதிவு செய்து வருகிறேன் என்பது அம் மின்னஞ்சலின் உள்ளார்ந்த சாரமாக இருந்தது.

டிஜிட்டல் உலகம் தகவல் குப்பைகளால் நிரம்பிக் கிடக்கிறது. இலவசமாகவும் வேண்டாதனவுமாக எக்கச்சக்கமான குப்பைகள் கணனிகளுக்குள்ளும் குவிந்து கிடப்பதாலும் டிஜிட்டல் சாதனங்களை அதன் புதிய போக்குக்கேற்ப அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டி இருப்பதாலும் ஏதோ ஒரு வித மாய ஓட்டத்தில் புதியன நோக்கி ஓட நிர்ப்பந்திக்கிறது டிஜிட்டல் உலகம்.

இந்த சாதனங்கள் ஒதுக்கப்படும் போது அல்லது ஏதோ ஒரு வைரஸ் தாக்கம் அதற்கு ஏற்படும் போது அவற்றோடு அழிந்து போகின்றனவாக சில சேர்த்து வைத்த பொருட்களும் காணாமலும் காலாவதியாகியும் போய் விடுகின்றன.

அவ்வாறு இந்தப் புகைப்படங்களும் போய் விட்டன என அவருக்கு தகவல் அனுப்பி இருந்தேன். அதற்கு அவரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. நவீன சாதனங்களின் ஆயுள் காலமும் நவீன வாழ்க்கை முறைகளும் அவருக்கும் புரிந்திருக்கும் தானே!

சில வாரங்களின் முன் ஒரு யூ.எஸ்.பி யைக் வீட்டில் சேர்த்து வைத்திருக்கிற இன்னொரு வகையான தகவல் குப்பைக்குள் எதையோ தேடப் போன போது கண்டு பிடித்தேன். சரி இதற்குள் என்னதான் இருக்கிறது பார்ப்போம் என எடுத்து வைத்து விட்டு வேறு சில வேலைகளில் தொலைந்து, பின்னொரு நாளில் மீண்டு வந்து போட்டுப் பார்த்தால் அவை புகைப்படங்கள்!

அவற்றுக்குள் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் கேட்ட படங்களும் சில! சந்தோஷத்திற்குக் கேட்பானேன்?

இந்த மனிதர் சிரத்தையோடு ஒரு விடயத்தைச் சேர்த்து வைக்கின்ற போது நம் பங்களிப்பாக இவை இருக்கட்டும் என அவர் கேட்ட புகைப்படங்களை அவருக்கு அனுப்பி வைத்து விட்டேன். உடனே அவரிடம் இருந்து பதில் வந்தது.

’உமது பக்கத்திலும் போட்டு விடுமன், பாத்தால் சந்தோஷமாக இருக்கும்’ -
‘ஓம், ஓம் போடுறன் போடுறன். - இது என் பதில்.

ஓம் என்று சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

மேலும் சில புகைப்படங்களைப் பார்த்த போது இன்று அந்த எழுத்தாளர்கள் உயிரோடு இல்லை என்பதும்; அதனை பின்னணியாகக் கொண்ட நிகழ்வுகளும் மனதில் எழ இந்த யூ.எஸ்.பி யும் காணாமல் போய் விட முன்னால் எங்கேனும் எப்போதும் பார்க்கக் கூடிய இடத்தில் சேமித்து விட வேண்டும் என்ற எண்ணம் மிக இங்கு வந்துள்ளேன்.

உங்களோடு இவற்றைப் பகிர்ந்து கொள்வதாகவும் அது இருக்கும் தானே?



மேலுள்ள இரு புகைப்படங்களும் 2009ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த எழுத்தாளர் விழாவின் போது எடுத்தது. அதில் எழுத்தாளர்கள் ஜெயமோகன் தெளிவத்தை ஜோசெப் டென்மார்க்கில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் ஜீவ குமாரன் மற்ரும் கலாநிதிகளான் நடேசன், ஆசி கந்தராஜா, பிரவீனன் ஆகியோடோடு அண்மையில் காலமான எழுத்தாளர் அருண். விஜயராணி அவர்களும் (அமர்ந்திருப்பவர்களில் வலம் இருந்து இரண்டாவதாக இருப்பவர்) இருக்கிறார்கள். அவர்களோடு கூடவே நானும்!






மேலே கானப்படும் 5 புகைப்படங்களும் அவர்கள் சிட்னிக்கு வந்திருந்த போது கடல்சூழ்ந்த நகர்புறத்தைப் பார்க்கப் போன பொழுதுகள்.


மேலே இருப்பவர் காவலூர்.ராஜதுரை அவர்கள். இன்று அவர் இல்லை. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த போது நான் அவர் வீட்டுக்கு (என் தேவை நிமித்தமாகத்தான் போயிருக்கிறேனே ஒழிய அவரைப் பார்க்கவென்று அல்ல என்பது இப்போது நினைத்துப் பார்க்கும் போது கஸ்ரமாக இருக்கிறது) போகும் போதெல்லாம் அவர் முகத்தில் மந்தகாசமான ஒரு புன்னகை மலரக் காண்பேன். அது எப்போதும் ஒரு அகமலர்வான புன்னகையாகவே இருக்கும். பேச்சும் ஒரு பக்கச் செயலும் இல்லாது போய் விட்ட போதும் எடுத்துத் தரும் புத்தகங்கள்; அவற்றினைப் பற்றி சொல்ல முயற்சிக்கும் அவர் எத்தனங்கள் மனதை உருக்க வல்லன.

விவேக சிந்தாமணியில் ஒரு பாடல் இருக்கிறது.

”தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானகத்து இடை இருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே!”

பொருள்;

மண்டூகம் - தவளை. தாமரைத் தடாகத்துக்குள் தாமரையோடு உடன் தவளை வசித்திருந்தாலும் தாமரையின் சிறப்பை அது அறிவதில்லை.ஆனால் வண்டானது காடுகளுக்குள் இருந்த போதும் தாமரையின் சிறப்பை அறிந்து வந்து மது உண்ணும்.அது போல பல காலங்கள் பழகி வந்தாலும் அறியாமையில் உள்ளவர்கள் அதனை கண்டு கொள்ள மாட்டார்கள்.ஆனால் அறிவுடைய கற்றவர்களோ எனில் (தூர இருந்த போதும்) சிறப்பினைக் கண்டு நாடி வந்து உறவாடி மகிழ்வர்.

இன்று இப்பாடல் எனக்கு மிகப் பொருந்திப் போகக் காண்கிறேன். வருத்தமாக இருக்கிறது. இப்படி எதனை விடயங்களை வாழ்க்கையில் நாம் என்றென்றைக்குமாகத் தவற விட்டிருக்கிறோம். 



மேலே இருக்கிற புகைப்படத்தில் காணப்படுபவர்  நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்.அவரோடு அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புச் சேவை நிலயத்திற்குச் சென்ற போது எடுத்த புகைப்படம் இது.


மேலே இருக்கிற இந்தப் புகைப்படம் இலங்கையின் சாகித்திய விருது பெற்ற நாவலின் சொந்தக் காரி தாமரைச் செல்வி நம் உயர்திணை ஏற்பாடு செய்திருந்த இலக்கிய சந்திப்பொன்றுக்கு விஜயம் செய்திருந்த போது எடுத்தது.

 கடந்த மாதத்தில் ஓர் நாள் மெல்போர்னில் இருந்து எழுத்தாளர் முருக பூபதி அவர்களிடம் இருந்து மேலும் ஒரு தொலைபேசி அழைப்பு. நான் சிட்னி வருகிறேன். கூட்டம் ஒன்று ஒழுங்கு படுத்த வேண்டும். ஓர் இடம் ஒன்று ஒழுங்கு படுத்தித் தர முடியுமா என்ற கேள்வியை அது கொண்டிருந்தது. நானும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் அது ஒரு ஞாயிறு மாலையாக இருக்க வேண்டும் அத்தோடு அது ஒரு தேநீர் சிற்றுண்டிகளையும் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அந்த உரையாடல் கொண்டிருந்தது.

எனக்கோ ஞாயிறு வேலை நாள். நம் இலக்கிய சந்திப்புகளையே செய்ய முடியாமல் பிற்போடப்பட்டுக் கொண்டு போவதற்கும் அது ஒரு பிரதான காரணம் என்பதை எப்படிச் சொல்வேன்? இடம் தேடும் இடர் பாட்டை எப்படிப் புரிய வைப்பேன்?  அதிலும் ஆர்வலர்கள் தொடரூந்து நிலையத்திற்கு அருகிலா? கார் பார்க் நிறுத்த வசதிகள் உண்டா என்று கோரும் நிபந்தனைகளையும் திருப்தி செய்தாக வேண்டுமே!

என்றாலும் அயல் மாநிலம் ஒன்றில் இருந்து வரும் ஒரு இலக்கிய உறவினனுக்கு இது கூட செய்ய இயலாவிடின் எப்படி? 

ஒரு இந்தியத்தமிழர் நடாத்தும் உணவு விடுதியில் ஒரு மாலை நேர சந்திப்புக்குச் சிற்றுண்டி தேநீர் வசதியோடு இடம் ஒதுக்கித் தரமுடியுமா என்று கேட்ட போது அவர் தாம் கடைமூடும் நேரமான 1.30 இலிருந்து 3.30 வரையான நேரத்தை மனமுவந்து தரத் தயாராக இருந்தார். அது எனக்கு வேலை நேரம். பறவாயில்லை என்று நேரத்தைப் பதிவு செய்து முற்பணம் கொடுத்து அதை அவருக்குத் தெரியப்படுத்தி விட்டு நான் பங்கு பற்ற முடியாத நிலைமையை எடுத்துக் கூறி உதவிக்காக ஒருவரை ஒழுங்கு படுத்திய செய்தியையும் தெரிவித்திருந்தேன்.

அவருடய கூட்டம் சரியாக 3.30க்கு முடிந்திருந்தது. நான் வேலை முடித்து அவசர அவசரமாக ஓடி 3.20க்கு வந்திருந்தேன். அந்தப் படம் கீழே வருகிறது.


இனி வரப் போவது ஒரு கலைப்பொழுது!

இயற்கையும் இலக்கியமும் இலக்கிய ஆர்வலர்களும் சந்தித்த ஒரு சங்கமம். அது மிகத் தற்செயலாகத் திட்டமிடாமல் நிகழ்ந்த ஒரு சந்திப்பென்றே சொல்லலாம். முருகபூபதி அவர்களுடய கூட்டம் நடந்ததைத் தொடர்ந்த ஒரு செவ்வாய் மாலை. தொலைபேசியில் அழைத்து எப்போது புறப்படுகிறீர்கள் என்று கேட்டேன். மறுநாள் மாலை 6.00 மணி தொடரூந்துப் பயணம் என விடை கிடைத்தது.

வழக்கம் போல வேலையில் ஈடுபட்டபடி  ஐம்பூதங்களால் ஆன உடல். மனம் வழக்கம் போல ஒரு சஞ்சார வெளியில். ஒரு விதமான குடைச்சல் குணாம்சத்தை  அது அன்று கொண்டிருந்தது. அயல் மாநிலத்தில் இருந்து ஒரு எழுத்தாளன் -  அன்போடும் மகிழ்ச்சியோடும் சொந்தம் கொண்டாடும் ஓர் இயல்பினன் - இந்த மனிதரை நான் சரியாகக் கவனிக்கவில்லையோ என்றொரு மனக்குரங்கின் கேள்வி. 

ஏதவது செய் ஏதாவது செய் என்றொரு ஓயாத குடைச்சல் உள்ளே! வேலையிலோ லீவு எடுக்க முடியாத நிலை. வருட விடுமுறையில் இருந்து ஒன்றைக் காரணம் சொல்லிக் கேட்டுப் பார்த்தால் என்ன? திடீரென ஒரு விடை புலப்பட்டாற்போல ஒரு வெளிச்சம். சாத்தியப்பாடுகளை தேடி ஓடியதன் நிமித்தம் நாள் ஒன்று அடுத்த நாளே சத்தியப்பட்டது.

சாத்தியப்பட்ட நேரம் மாலை 6.30 இருக்கலாம். அடடா எதிர்பாராமல் கிட்டிய இந்த நாளை அழகாக்க கீதாவும் கார்த்திகா அக்காவும் இருந்தால் இன்னும்  நல்லாக இருக்குமே என்று எண்ணமோட  அழைப்பெடுத்த போது அதுவும் இலகுவாகச் சாத்தியமாயிற்று. மனம் ஒரு வித துள்ளல் மனநிலையில். எங்களுக்கு மிகப்பிடித்தமான அருகிலேயே இருக்கும் ஓர் உயிரியல் பூங்காவில் சந்திப்பதாகத் தீர்மானமாயிற்று. 

அப்போது திடீரென இன்னொரு சிந்தனை உதயமாயிற்று. இலங்கையில் இருந்து ஓர் இதழியல் ஆசிரியரும் அவர் தம் துணைவியாரும் வந்திருக்கிறார்களே! அவர்களையும் அழைத்தால் என்ன? அவர்களுக்கும் ஓரிடத்தைப் பார்த்தாற்போலிருக்கும். நமக்கும் ஒரு இலக்கிய மாலையாக அது இருக்குமே என்ற சிந்தனை ஓடிய அக்கணம் கார்த்திகா அக்காவிற்கு அழைப்பு போயிற்று. மறுநாள் 11.00 மணியளவில் உணவுத்தயார் படுத்தல்களோடு தாம் தயாராக இருப்பதாக உடனடியாகப் பதில் வந்தது. எதிர் பாராமலே சுமார் 30 நிமிடத்துக்குள் தயாரான சந்திப்பு அது.

மே.18. 2016. உண்மையில் அது ஒரு அழகிய இலக்கிய மாலை. அரசியல் எதுவும் இல்லாத, அமைதியானதோர் வெளியில், இயற்கையோடும் உணவோடும் பானங்களோடும் சுடாத சூரிய வெளிச்சத்தில் நேர்மையான இலக்கிய உரையாடல்கள் இணைந்து கொண்ட நாள் அது. 

அங்கு எடுத்த படங்களையே கீழே காண்கிறீர்கள். அது ஒரு அற்புதமான மறக்க முடியாத நாள் என்றே சொல்வேன்.  பூபதி அண்ணாவை இறக்கி விடும் போது, இவைகள் தான் நாம் வாழும் கணங்கள் என்றேன் நான். என் மகள் பிரியா தந்த விருந்தைப் போலிருந்தது இன்று என்றார் அவர்.









கீழே வரும் இந்தப் படம் எதிர்பாரா தருணம் ஒன்றைக் கீதா.மதிவாணன் பதிவாக்கிய கணம்.


கீழே வரும் இப்படம் நான் பதிவாக்கிய ஒரு இலக்கிய தருணம்.


இது ஒரு நினைவுப் பதிவு! பகிர்வும்!

Saturday, May 14, 2016

இலக்கியச் சந்திப்பு - 25


வணக்கம் இலக்கிய உள்ளங்களே!

எல்லோரும் நலம் தானா?


பல மாதங்கள் வெறுமனே கடந்து போயின...புலம்பெயர்ந்த நாடுகளில் வேலையும் வாழ்க்கையும் நம் எல்லோரையும் ஓடிக்கொண்டே இருக்கப் பண்ணியதில் பல மாதங்கள் நம் சந்திப்புக்களை நிகழ்த்த முடியாமல் போய் விட்டது.


இருந்த போதும் பல இலக்கிய நிகழ்ச்சிகளும் கலை பண்பாட்டு நிகழ்வுகளும் வாராந்த மாதாந்த கூட்டங்களும் சிறப்பாக இங்கு நடந்த வண்ணமே உள்ளன. அவைகள் நம்மை உயிர்ப்போடு வைத்திருப்பதிலும் புளகாங்கிதம் அடைய வைப்பதிலும் தம் பங்கினை செவ்வனே ஆற்றியும் வருகின்றன. அங்கு நாம் சந்திக்கிற அன்பர்கள் எப்போது அடுத்த சந்திப்பு எனக் கேட்ட வண்ணமாகவே இருந்தனர்.நீங்கள் எல்லோரும் நம்மோடு பக்க பலமாக இருக்கிறீர்கள் என்பதை அப்போதெல்லாம் அறிந்து மகிழ்ந்தோம்.


இத்தோடு அண்மையில் ஈழத்தில் இருந்து இங்கு விஜயம் செய்திருக்கும் கடந்த 16 வருடங்களாக மாதம் தவறாது “ஞானம்” என்றொரு சஞ்சிகையை நடாத்திக் கொண்டிருக்கும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ”போர்க்கால இலக்கியம்”,”புலம்பெயர்ந்தோர் இலக்கியம்” என்ற இரு பெரும் தொகுதிகளை வெளியிட்டவருமான திரு. ஞானம். ஞானசேகரன் அவர்கள் அவரது 75வது அகவையைக் கொண்டாடும் முகமாக இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.


அவரைச் சிறப்பிப்பதோடு அவரிடம் இருந்து பல அனுபவத் தகவல்களையும் அறிந்து கொள்ளும் முகமாக ஒரு சந்திப்பினை ஏற்பாடு செய்திருக்கிறோம். “ஈழத்து இலக்கிய மரபின் இன்றய நிலை” என்பது சம்பந்தமாக அவரது பேச்சு அமைந்திருக்கும். அதனைத் தொடர்ந்து கருத்துக்களுக்கும் அனுபவப்பகிர்வுகளுக்கும் தக்க களமும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 


ஈழத்து இலக்கிய மரபும் அது காலா காலங்களில் எவ்வாறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது என்பதும் இன்றய கால கட்டத்தில் அது எவ்வாறான போக்குகளைக் கொண்டிருக்கிறது என்பதும் ஈழத்து இலக்கியம் சம்பந்தமாக ஒரு ஒரு சிறந்த பார்வையை அது நமக்குத் தரும் என்பது நமது நம்பிக்கை.

அதனைத் தொடர்ந்து தேநீர் சிற்றுண்டியோடு ஈழத்திற்கே தனித்துவமான கலை வடிவமாகக் காணப்படும் கூத்து மரபில் வெளிவந்த “இராவணேசன்” நாட்டுக் கூத்து ஒளிப்படக்காட்சி காண்பிக்கப் படும். அது ஈழத்தின் கிழக்கு மாகாணத்துப் நுண்கலைப் பீட பேராசிரியர் மெளனகுரு அவர்களால் நெறியாழ்கை செய்யப்பட்டு பலரின் பாராட்டைப் பெற்ற கூத்து வடிவமாகும்.


இந் நிகழ்வு சிறப்புற உங்கள் வரவை வேண்டி நிற்கிறோம்.


இந் நிகழ்வின் ஊடாக ஈழத்து இலக்கிய மரபு பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டமும் நமக்கே நமக்கான கலை வடிவமான கூத்தின் பாரம்பரிய சிறப்பினையும் கண்டு நம் பண்பாட்டின் வேர் பற்றிய தெளிவோடும் பயனோடும் நாம் இந் நிகழ்வினை நிறைவு செய்வோம் என்பது நம் நம்பிக்கை.


எல்லோரும் வாருங்கள்.

நடை பெறும் இடம்:Mayura Function and Event Center,

54 - 47, Boomereng Place, SEVEN HILLS - 2147
( புகையிரத நிலையத்திற்கு முன்பாக)

காலம்: மாதாந்த இறுதி ஞாயிறான 29.05.2016

நேரம்: 3.00 - 6.00 (நிகழ்வு சரியான நேரத்திற்கு ஆரம்பமாகி சரியான நேரத்திற்கு நிறைவு பெறும்)

உங்கள் எல்லோரது வரவையும் ஆவலோடு எதிர் பார்த்திருக்கிறோம்.
நன்றி.

Tuesday, May 10, 2016

கண்டறியாத கதைகள் - 5 - மினுக்குப் பெட்டி

மினுக்குப் பெட்டி என்ற சொல்லே தமிழர் பாவனையில் இருந்து மறைந்து விட்டது. க்ரியாவின் தமிழ் அகராதி (விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு) மற்றும் திருமகள் தமிழ் அகராதியிலும் கூட இந்தச் சொல் பதியப்படவில்லை. அந்த  இடத்தை ஆங்கிலச் சொல்லான  iron box  என்ற சொல் பிடித்துக் கொண்டதே இந்தப் பொருளும் இந்தச் சொல்லும் நம்மை விட்டு மறைந்து போனதைச் சொல்ல போதுமானதாக இருக்கும் என்பது என் எண்ணம்.

இப்பொருள் எப்போது எங்கு யார் உள்ளத்தில் முதன் முதல் தோன்றியது. எவ்வாறு பரவியது என்றும் அறிய முடியவில்லை.

மினுக்குப் பெட்டி என்பது ஆடைகளை அதன் சலவைக்குப் பின்பாக அதாவது தோய்த்து உலர்ந்த ஆடையில் காணப்படும் சுருக்கங்களை நீக்கி அதன் தையல் நுட்பத்தையும் துணியின் இயல்பான தன்மையினையும் அழகினையும்  தெளிவாக மேம்படுத்திக்  காட்டும் விதமாக ஆடையினை நேர்த்திப் படுத்தும் உபகரணமாகும்.

இந்தத் தொழில்பாடு ஒரு கலையும் ஆகும்.

தமிழரின் சமூகக் கட்டமைப்பில் ஒவ்வொரு தொழிலைச் செய்வதற்கு ஒவ்வொரு பிரிவினர் இருந்தமையும் அவர்களில் அநேகருடய தொழில்கள் கலைத்துவம் சார்ந்ததாக இருந்ததும் ஆனால் அதற்குரிய சமூக அங்கீகாரமோ அதற்குரிய ஜீவனோபாய பணப்பெறுமதியோ அக் காலங்களில் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதும் சமூகத்தில் அவர்கள் சிறப்பான முறையில் அததற்குரிய வகையில் மதிக்கப்படவோ இல்லை என்பதும் நம் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு கறை படிந்த கண்ணீர் துளி. அவர்களுக்குச் சமூகம் பெயர் சுட்டி இடம் காட்டி தூரமாய் நிற்க வைத்திருந்தது.

நகைகளை உருவாக்கிய கலைஞர்கள், சிகை அலங்காரம் செய்த கைகள், திருமண வீடுகளிலும் அமங்கல வீடுகளிலும் ஆலயங்களிலும் இசையால் அந்த இடங்களை நிறைத்தவர்கள், கடலில் போகும் நுட்பம் கண்டு  மரக்கலங்களில் ஏறி கடலில் மீன் பிடிக்கப் போன திண்ணிய தோள்கள், மரங்களில் ஏறும் வித்தையை லாவகமாகச் செய்தவர்களுமாக இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

மேற்சொன்ன  வகைப்பாட்டுக்குள் இதனைத் தொழிலாகச் செய்தவர்களும் அகப்பட்டுக் கொண்டார்கள் என்பதை சொல்வதற்காகவே சற்றே சொல்லையும் சொல்ல வந்த குறிப்பையும் விட்டு சற்று நீங்கிச் செல்ல வேண்டியதாயிற்று.

இந்தத் துணியை நேர்த்திப் படுத்தும்  கலையைத் தொழிலாகச் செய்தவர்கள் இந்தியாவில் தள்ளு வட்டிகளிலும் இலங்கையில் அவர்கள் துவிச் சக்கர வண்டிகளிலும் (உந்துருளி) தம் தொழில்களை ஆற்றி வந்தார்கள்.

நான் குறிப்பாக இங்கு குறிப்பிட விரும்புவது தொழிலாக அன்றி வீடுகளில் பாவனையில் இருந்த இந்த மினுக்குப் பெட்டியும் அதன் பாவனையும் பற்றிய குறிப்பாகும். வீடுகளில் பாவனையில் இருந்த இந்த மினுக்குப் பெட்டி பாரம் குறைந்த மின்சார அழுத்தி வரு முன்னர் பாவனையில் இருந்த ஒன்று.









உலர்வலய நாடுகளான குறிப்பாக  இந்தியா இலங்கை போன்ற தேசங்களில் பருத்தி பட்டு ஆடைகளே அநேகமாக பாவனையில் இருந்து வந்தன. பருத்தி ஆடைகள் நாளாந்த பாவனைகளுக்கும் பட்டு ஆடைகள் கொண்டாட்டங்களின் போதும் அநேகரால் பயன் படுத்தப்பட்டு வந்தன. இந்த ஆடைகள் குறிப்பாகப் பருத்தி ஆடைகள் வெய்யிலுக்குள் செல்லும் போது வியர்வையினை உறிஞ்சக்கூடியனவாகவும் காற்றினை உள்ளேயும் வெளியேயும் விடக்கூடியனவாகவும் இலகுவாக உலரும் தன்மை கொண்டனவாகவும் மென்மையான இலேசான தன்மையையும் கொண்டு விளங்கியவை. பருத்திப் பஞ்சினால் ஆக்கப்பட்ட இரசாயணக் கலவைகள் அதிகம் சேர்க்கப்படாத ஆடை வகைகளாக சேலைகள், வேட்டிகள், சால்வைகள், பிள்ளைகளின் சட்டைகள், பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளின் சீருடைகள், வீடுகளில் அணியப்படும் வீட்டு உடுப்புகள் என ஒரு வகை சார்ந்தனவாக இருந்தன.

இந்த மினுக்குப் பெட்டியில் மினுக்குவதற்கு முன்னர் சலவையின் போது துணிகளுக்குச் செய்யும் ஏற்பாடுகள் மிக விசித்திரமானவை. குறிப்பாக பருத்தி ஆடைகளுக்கு கஞ்சி போடுதல் என்றொரு நிகழ்வு நடைபெறும். வெள்ளை பருத்தி ஆடை எனில் அதன் வெண்மை நிறத்தைச் சீர் தூக்கிக் காட்டுவதற்காக நீலம் போடுதல் என்றொரு நிகழ்வும் இடம் பெறும். கிணற்றடியில் இது ஒரு கோலாகல நிகழ்வு.

ஆடையினை சவர்காரம் போட்டு தோய்க்கும் கல்லில் இட்டு நன்றாகக் கசக்கி தோய்த்த பின்னால் மூன்று தரம் நல்ல தண்ணீரில் சவர்காரத்தின் தன்மை போக நன்றாக அலசுவார்கள். அதன் பின்னர் சவ்வரிசியில் அல்லது கோதுமை மாவில் மிக மெல்லியதாக கட்டிகள் எதுவுமில்லாமல் அடுப்பில் காச்சிய கஞ்சியை ஒரு துணியில் வடித்து ஒரு வாளியில் வைத்துக் கொள்ளுவார்கள்.

துவைத்து பிளிந்து வைத்திருக்கும் ஆடையினை இறுதியாக இதற்குள் இட்டு துணியின் சகல இடத்திலும் கஞ்சி சீராகப் பரவும் வகையில் அலசி கொடியில் நன்றாக விரித்து உலர்த்துவார்கள். இத் துணி உலர்ந்த பின் கஞ்சியின் தன்மையால் மட மட என்றிருக்கும். துணியின் நீண்ட காலப் பாவனைக்கும் அதன் மினுக்கலுக்குப் பின்பான அழகுக்காகவும் மக்கள் இத்தகைய சிரத்தையை எடுத்துக் கொண்டார்கள்.

வெள்ளை துணி எனில் குறிப்பாகப் பாடசாலைப் பிள்ளைகளின் சீருடைகளுக்கு நீலம் போடுதல் என்றொரு நிகழ்வு நடைபெறும். இதுவும் மேற் சொன்னவாறு தோய்த்து உலர்த்துவதற்கு முன்னராக வாளியினுள் நீலத்தூளாக இருக்கும் நீலத்தை ( றோயல் நீலம் அப்போது இலங்கையில் பிரபலமாக இருந்த ஒன்று) ஒரு பருத்தித் துணியில் பொட்டலமாகக் கட்டி அதனை தண்ணீரில் வைத்துக் கலக்க அதன் நீல நிறம் தண்ணீரில் ஒரு சீராகக் கரையும். அதற்குள் இறுதியாக ஆடையை உலர்த்துவதற்கு முன்னர் ஆடையை அதன் சகல இடங்களிலும் சீராக அந்த இளநீல நிறம் பரவும் வகையில் நன்றாக மூழ்க வைத்து அலசி எடுத்து உலர்த்துவார்கள். உலர்ந்த பின்னர் அது நீலத்தின் சாயலால் தூய வெண்நிறத்தை அவ் ஆடை பெற்றிருக்கும்.

பட்டாடைகளுக்கு இந்த வேலைகள் இருக்காது. அவை தனியாகவும் சிறப்பாகவும் கவனிக்கப் பட்டு சாதுவாக நிழலில் உலர்த்தப் பெறும்.

இனித்தான் இந்த மினுக்குப் பெட்டிக்கு வேலை வரும். காலை 10.00 மணியளவில் ஆடைகளைத் தோய்த்து உலர்த்தினால் மதிய வெய்யிலில் அது காய்ந்து மாலையில் மினுக்கலுக்கு அவை தயார் நிலையில் இருக்கும்.

3 அல்லது 4 தடித்த துணிகளை - பெரும்பாலும் சுத்தமான கட்டில் விரிப்புகள் அவற்றுக்குப் பயன் பட்டன - மேசையில் விரித்து சமப்படுத்தி மினுக்குவதற்கு முதலில் இடத்தைத் தயார் படுத்துவார்கள். பின்னர் 4 அல்லது 5 உலர்ந்த தேங்காய் சிரட்டைகளை எரித்தால் கிட்டும் வட்ட வட்டமாய் சுருங்கிப் போன சிரட்டைத் தணல்கள் இந்த மினுக்குப் பிட்டிக்கு மிகத் தோதானவை. அவை நீண்ட நேரம் சூட்டை வைத்திருக்கத் தக்கனவுமாகும். அத் தணல்களை மினுக்குப் பெட்டிக்குள் போட்டு கொழுவியினால் பூட்டிய பின் மினுக்கலுக்குத் தயார் படுத்தப்பட்ட இடத்திற்கு எடுத்து வருவார்கள். கஞ்சி போட்டு உலர்த்தப்பட்ட உடுப்பெனில் அருகில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் வைத்துக் கொள்ளுவார்கள்.

இனி என்ன? மினுக்கல் தான். முதலில் தண்ணீரை இந்த மினுக்கல் பெட்டியில் தெளித்து சற்றே சூடு பார்த்த பின்னர் இரண்டாவது தடவையாக கீழே விரிக்கப்பட்டிருக்கும் துணியில் அழுத்தி மீண்டும் அதைச் சரி பார்த்த பின் ஆடையினை விரித்து - அது கஞ்சி போட்ட உடுப்பு எனில் அதற்கு சற்றே மெல்லியதாகக் கிண்னத்தில் இருக்கும் தண்ணீரையும் தெளித்து அதன் இயல்புத் தன்மைக்கேற்ப நீவி  மினுக்குப் பெட்டியினை  சீரான வேகத்தில் துணியின் மேல் அழுத்த உஷ்... என்ற ஒரு சத்தத்தோடு நீர் ஆவியாக துணியின் சுருக்கத் தன்மைகள் நீங்கி துணியின் இயல்பான அழகு மிளிரத் தொடங்கும். அழகு மின்னத் தொடங்கும். அதனால் இதற்கு மினுக்குப் பெட்டி எனப் பெயராயிற்று.

பட்டுத் துணிகளுக்கு இங்கும் தனியான கவனிப்பு இருக்கும். அவை சூடு பொறுக்க மாட்டாதவை. மென்மையான தன்மை கொண்டவையுமாதலால் இந்தப் பட்டாடைகளை மினுக்கு முன்னால் சூட்டினை சரி பார்த்துக் கொள்ளுதல் அவசியம். பெரும் பாலும் இந்தத் துணிகளை மினுக்குவதற்கு இப் பட்டின் மேல் மெல்லிய துணி ஒன்று விரித்து மினுக்குப் பெட்டியின் சூட்டினை அளவாகவும் பாதுகாப்பாகவும் பட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சாதனத்தின் கைப்பிடி சூட்டினைப் பொறுக்கத் தக்கதாக மரத்தினாலும் ஏனைய பாகங்கள் உலோகத்தினாலும் செய்யப்பட்டவை. இரும்பினால் செய்யப் பட்டவையே அனேகம்.  மூடிக்கும் கீழ்புறத்திற்கும் இடையில் காற்றுப் போய் வரத்தக்கதாக துவாரங்கள் இருக்கும். துவாரங்கள் இல்லாதவையும் உண்டு. அடிப்புறம் அழுத்த வாகாக முன்புறம் சற்றே கூராகவும் பின்புறம் அகலமாகவும் அதே நேரம் கனம் கொண்டதாகவும் இருக்கும். மேல் பக்க மூடியும் கீழ் பக்க பகுதியும் கொழுவியினால் இணைக்கப்பட்டிருக்கும்.

நெருப்புத் தணல் சில ஆடைகளை மினுக்கிய பின் சாம்பல் படர்ந்து அதன் சூட்டினைக் குறைத்து விடும். அத்தகைய சந்தர்ப்பத்தின் போது இம் மூடிக்கும் அடிப்புறத்திற்கும் இடையில் காணப்படும் துவாரங்கள் மூடியைத் திறக்காமலே வாயினால் ஊதி சாம்பல் படர்ச்சியை போக்க உதவின. அவ்வாறு இல்லாத மினுக்கிகளை வெளியே கொண்டு சென்று பாதுகாப்பாகத் திறந்து ஊதி சாம்பலை அகற்றிய பின் மூடி திரும்ப எடுத்து வரவேண்டியதாக இருக்கும்.

உடல் உழைப்பையும் நேரத்தையும் மிகவும் எடுத்துக் கொண்ட இந்த மினுக்குப் பெட்டியும் மினுக்குப் பெட்டிச் செயற்பாடும் அந்த ஆடையை போட்டுக் கொண்டு போகும் போது வெளிப்படும் மிடுக்கில் தொலைந்து போகும். அந்த மினுக்கப்பட்ட ஆடையின் பின்னால் அதனைக் காணும் ஒருவர் அறிந்து கொள்ளும் இம்மனிதர் பற்றிய பிம்பம் வசீகரமானதாகும்.

இன்று தான் எத்தனை விதமான சலவை முறைகள்....எத்தனை விதமான மினுக்கும் வகைகள்.... மினுக்குப் பெட்டிகள்.....

மின்சாரம் சகலருக்குமாக அன்றாட பாவனைக்கு வரக் கிட்டியதும்; மின்சார சாதனங்கள் மிக மலிவு விலையில் கிட்டியதும்; துணிகளின் தன்மைக்கேற்ப ஆழியினைத் திருப்பி விட்டு நீர் வேண்டுமெனில் அதற்கேற்ப நீர் தெளிக்கும் முடுக்கியை அழுத்தி மிக இலகுவாக ஒரே நேரத்திலும் குறைந்த நேரத்திலும் சீராக அதனைச் செய்கின்ற மாதிரியாக இப்போது பலவிதமான மினுக்கிகள் பாவனையில் உள்ளன.

என்றாலும் வெள்ளைச் சீருடைகளைக் கைகளால் தோய்த்து நீலத்தில் நனைத்து வெய்யிலில் உலர்த்தி இந்த அழுத்தியினால் அழுத்தி பாடசாலைக்குப் போட்டுக்கொண்டு போன காலங்கள் இந்த மினுக்குப் பெட்டியோடு  காலாவதி ஆகிப்போனது கொஞ்சம் கவலை தான்.

மீண்டு வர முடியாத பொருட்கள் மீண்டு வரமுடியாத காலங்களையும் காவிக் கொண்டு போய் விட்டன.

Wednesday, May 4, 2016