Monday, February 21, 2011

பழந் தமிழ்

’மாற்றங்கள் எப்போதும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.’அதற்கு மொழி ஒன்றும் விதி விலக்கல்ல.கால ஓட்டத்துக்கேற்றவாறு மொழியும் தன்னைப் பல வழிகளில் புத்துருக்கியும், சிலவற்றை விட்டொழித்தும், புதிய சிலவிடயங்களைப் பெற்றும் தன்னை நிலை நிறுத்தி வந்திருக்கிறது.சில சொற்கள் வழக்கொழிந்தும் புதிய சில சொற்கள் வந்து சேர்ந்தும் அது தன்னை வாழ் நிலையில் வைத்திருக்கிறது.

18ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த தமிழ் இது.அப்போதைக்கும் இப்போதைக்கும் தான் எத்தனை இடைவெளி! எத்தனை மாற்றம்!! என்று கொண்ட ஆச்சரியத்தின் விளைவு புனைவு கொண்ட இந்தப் பதிவு.

அப்போது பாவனையில் இருந்த சில சொற்களை வைத்து ஒரு சம்பவத்தைப் பின்னி இருக்கிறேன். சொற்களுக்கான பொருளைக் கண்டு பிடிக்க முடிகிறதா? முடிந்தால் சற்றே சொல்லிச் செல்லலாமே!

*********************************

ஞாட்புக்கு முற்பட்ட காலம் அது!

18ம் நூற்றாண்டு!!

சாளரத்தைத் திறந்து வெளியே பார்த்தாள் சந்தனா.அது ஓர் அதிகாலைப் பொழுது! மழை பெய்து ஈரலிப்பாக இருந்தது நிலம்.சில் என்ற குளிர்காற்று முகத்தில் வீசியது.தோட்டப் புறம் நிலவொளியில் மங்கலாய்த் தெரிந்தது.கிணற்றங்கரையை அண்டிய வெளியில் செம்மண் பூமியில் செழிப்பாய் வளர்ந்திருந்த துவர்க்காய் மரங்களும் கிஞ்சுகத்தில் படர்ந்திருந்த தாம்பூலவல்லிக் கொடிகளும் அதற்கருகாக அமைந்திருந்த காரவல்லிப் பந்தலும் கண்களுக்கு மங்கலாய்த் தெரிந்தன.தூரத்தே கொஞ்சம் புற்பதிகள் அசைவதையும் கண்கள் கண்டு கொண்டன.நேரம் அண்னளவாக 4.45 மணி இருக்கும் போலத் தோன்றியது.கீழ் திசையில் பிரகாசமாய் ஒரு நட்சத்திரம்.

புழைக்கடைக் கதவைத் திறந்து வெளியே வந்தாள் சந்தனா.வாய்க்காலும் வரம்புகளும் மரங்களுமான பெரிய வளவு அது.அங்கே வத்சலையும் வந்சமும் நின்றிருப்பது தெரிந்தது.முன்னொரு காலத்தில் பகடுகளும்,மேதிகளும், குரச்சைகளின் ஒலியுமாக இந்த இடம் களை கட்டி இருக்கும் என அறிந்திருந்தாள் சந்தனா.அவை எல்லாம் அழிந்து போய் இன்று அந்த இடத்தை வத்சலை நிரப்பி இருக்கிறது.

கிணற்றங்கரை நோக்கி விரைந்தாள் அவள்.அது சற்றே தொலைவு.கபோதம் ஒன்று விழித்துக் கொண்டு சிறகடித்தது.மண்டூகம் ஒன்று தூரமாய்க் கத்துவது காதில் வந்து விழுகிறது.அதற்கு,நேற்றய மழை தந்த குதூகலம் போலும்! மண்நிலம் மழையினால் கழுவுண்டு ஓலைகளையும் குப்பைகளையும் ஒரு புறமாய் ஒதுக்கி அவள் நடந்து போக வழி சமைத்திருந்தது. செம்பட்டுக் கம்பளம் போல நடைபாதை.தூரத்தே கச்சோதம் வெளிச்சத்தைச் சிந்தி சிந்தி மறைவதும் கண்ணுக்குத் தெரிகிறது.கடவுள் வழிகாட்டுகிறாரோ? அதிகாலைப் பொழுதுகள் அழகானவை; அலங்காரமானவை.மழையினால் கழுவுண்டு விடிகினற பொழுதுகள் இன்னும் அம்சமானவை.

உள்ளங்கால் ஈரம் உணர சில்லென வீசிய குளிர்காற்று முகத்தை வருடிச் சென்றது.சிமிக்கிகளைப் போல மந்தாரப் பூக்கள் பாதையின் இரு மருங்கும் தொங்கியிருக்க அவைகளுக்குள் சிற்சில சுரும்பும் கேசவமும் சிறகடிக்கும் ரீங்காரமும் காதில் விழுகிறது.கோகிலத்தின் குரலும் தூரமாய் கேட்கிறது.உடனே சந்தனாவுக்கு அவந்திகையின் நினைவு எழுந்தது.அண்மைக்கால சினேகிதமாய் அவளோடு ஒட்டி உறவாடும் உறவது.கசனத்தைக் கண்டு நேற்று அவள் தந்தை தன் பயணத்தை நிறுத்திச் சற்றே தாமதமாய் புறப்பட்டது அவளுக்கு ஏனோ சட்டென்று நினைவு வந்தது.ஏன் தந்தை இன்னும் சகுனங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தான் இன்னும் அவளுக்குப் புரியாத புதிர்.

ஓர் இளவரசியைப் போல இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும் உணர்ந்தவாறும் நடந்து சென்று கிணற்றில் தண்ணீரை முகர்ந்து தன் மீது விரைவாக ஊற்றித் தன்னை உவளித்து உலர்த்திக் கொண்டு வீட்டுக்குள் வந்து சேர்ந்தாள் சந்தனா.இனி அவள் தாமதிக்கக் கூடாது.அவள் நவநீத நிறம்.வலப்புற சூழி கொண்ட குந்தளம்.கங்கதம் கொண்டு அதனைச் சீர் செய்து கொண்டாள்.அருகிலே இருந்த படிமக்கலத்தின் உதவியோடு அங்கராகம் இட்டுக் கொண்டாள்.மாலதியும் மெளவலும் நினைவுக்கு வர அவையும் அங்கு அரங்கேறின.

படிமக்கலத்தின் முன்னால் உள்ள முக்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.அந்த யெளவன மங்கைக்கு செவிப்பூ வெகு வசீகரம்.அங்குலியில் உகிர் அழகாகச் சீர் செய்யப் பட்டிருந்தது.அவை மொட்டுக்களை ஒத்திருந்தன.அவள் ஒட்டமும் அதரமும் மாதுளம் பூ.உள்ளே இருப்பனவோ மாதுளை முத்துக்கள்.அருகே அழகைக் கூட்டிய படி அங்கிதம் ஒன்று.அது சிறுவயது விளையாட்டால் கிடைத்த பரிசு.கிலுத்தைத்தில் இருந்து கூர்ப்பரம் வரை அணிகள் அழகு செய்தன.அவள் சியாமளவல்லி. தவளவண்ண சேலையில் சோபிதமாய் அவள் நின்ற நிலை ஒரு கவிதை.முகமோ மஞ்சரி.அவள் கோகில வாணி,ஞமிலினதும் வெருகலினதும் தோழி.அவள் எகினத்தின் சாயல்.

ஆனால் அவளுக்கு வைரிகளும் இருந்தார்கள்.துந்துளம் அவள் பரம வைரி.பிபீலிகையும் நளிவிடமும் அவள் வீட்டின் விருந்தாளிகள் என்பதில் அவளுக்கு பலத்த ஆட்சேபம் இன்றுவரை இருக்கிறது.கூடவே இப்போது நிலந்தியும் சேர்ந்து விட்டிருக்கிறது.இது பற்றி எத்தனையோ தரம் அவள் தந்தையிடம் முறைப்பாடு செய்தாயிற்று. எனினும் எந்த விடயமும் இன்று வரை நடந்த பாடாயில்லை.

அதே போல அவளுக்குச் சில ஆசைகளும் இருந்தன.அரச கதைகளைக் கருத்தூன்றிப் படிப்பதால் விளைகின்ற ஆசைகள் அவை.சாரங்கத்தையும் நேமியையும் சிதகத்தின் கூட்டையும் காணவேண்டும் என்பது அவள் நெடு நாளைய கனவு.தோழி ஒருத்தி கொண்டு வந்து கொடுத்திருந்த சசலத்தைப் பார்த்து அவளுக்கு வியப்போ வியப்பு!சசலம் கொண்டு அவள் செய்யும் நுட்பமான தையல் வேலைக்கு அவள் தோழியர் கூட்டம் அடிமைப்பட்டுக் கிடக்கும்.கோமளவல்லியான அவள் ஞெள்ளல் பொருந்தியவள்.பொற்பும் போதமும் நிறைந்தவள்.பிங்கல அனிகலன்களை அவள் அணிந்து கன்னல் மொழி பேசி வந்தால் காண்போர் மனம் கொள்ளை கொண்டு போகும்.

அவள் புறப்பட்டு விட்டாள்.இனித் துச்சில் புறமாக ஓதம் வந்ததால் பங்கமுற்றிருந்த பகுதியைத் தாண்டி நடந்தால் சற்றே வெளிச்சம் தென்படும்.தால வரிசை செறிந்த மார்க்கம் புலப்படும்.அதனைக் கடந்தால் விடங்கம் அலங்கரித்த மறுகு வரும்.அதனூடு போனால் பாகசாலை தெரியும்.அவள் விரைந்து நடந்தாள். கபித்தமும் சிந்தகமும் அவ்விடத்தைச் சுற்றி வளர்ந்து இருந்தன.அவற்றினிடையே ஒன்றிரண்டு ஆசினியும் அலங்கரித்தன.அவை செழுமையைப் பறைசாற்றிய வண்னம் அந்த இடத்துக்கு ஒரு வித சோபிதத்தை அளித்துக் கொண்டிருந்தன.

பாகசாலையை நெருங்கியதும் உள்ளே சில ஆட்களும் குமுதமும் தெரிந்தன.ஏனென்றால் அது பாதிக் குந்தும் கூரையும் கொண்டமைந்த பாக சாலை.அதனால் அங்கு உலூகலம்,வட்டிகை,நவியம்,முசலம்,சூர்ப்பம், தாம்பு, குழிசி,என்பன கிடப்பதும் தெரிந்தன.ஞிகிழியில் இருந்து வந்த வெளிச்சத்தில் மும்மரமாய் வேலை செய்து கொண்டிருந்த தொண்டர்கள் தென்பட்டனர்.அவர்கள் மீது தென்பட்ட சுவேதம் தவள நிற பெளவம் போல மிளிர்ந்து தனிச் சோபையை அவர்களுக்கு அளித்துக் கொண்டிருந்தது.அது தொண்டுமை தந்த பரிசு அவர்களுக்கு.அது பக்தித் தொண்டுமை!


அதனருகே பதிவான சிறு குடில் பகுதி கீசகம் கொண்டு முழுமை பெற்றிருந்தது.அதற்கருகே நறுமருப்பும் உருளரிசிச் செடிகளும் இறும்பு போல அடர்ந்திருந்தன.அதற்குள் சசம் பதுங்கி இருப்பது வழக்கம் என்பது ஒரு சிலருக்கே தெரியும். சந்தனாவுக்கு அது தெரிந்திருக்க நியாயமில்லை.தெரிந்திருந்தால் அதுவும் வேண்டும் என்று கேட்டிருப்பாள்.

இவற்றை எல்லாம் பார்த்த படி ஞெள்ளல் கொண்ட பாவனபக்தியோடு மதுரமான சந்தனா சசியோடு விரைந்து நடந்தாள்.அவள் கம்பீர மகிஷி.சுதந்திர ராணி.இயற்கையோடு உறவாடும் உள்ளத்தினள்.பக்தி கொண்ட பாவை.அவள் மனமெல்லாம் நேமி நாதம் கேட்கும் ஆசை.

சயந்தன தரிசனத்துக்காகத் தான் இந்த அவசரமெல்லாம்.”

********************** *******

எங்கே, சொற்களுக்குப் பொருளைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

சுரும்பு -
கேசவம் -
கோகிலம் -
அவந்திகை -
கசனம் -

உவளித்து -
படிமக்கலம் -
நவநீதம் -
சூழி -
குந்தளம் -
கங்கதம் -
அங்கராகம் -
மாலதி -
மெளவல் -

அங்குலி -
உகிர் -
ஒட்டம் -
அதரம் -
அங்கிதம் -
கிலுத்தம் -
கூர்ப்பரம் -

சியாமளம் -
மஞ்சரி -
கோகிலம் -
ஞிமிலி -
வெருகல் -
எகினம் -

துந்துளம் -
பிபீலிகை -
நளிவிடம் -
நிலந்தி -

சாரங்கம்
நேமி -
சிதகம் -
சசலம் -
கோமளம் -
ஞெள்ளல் -
பொற்பு -
போதம் -
பிங்கலம் -
கன்னல் -

துச்சில் -
ஓதம் -
பங்கம் -
தால வரிசை -
மார்க்கம் -
விடங்கம் -
மறுகு -
பாக சாலை -
கபித்தம் -
சிந்தகம் -
ஆசினி -

குமுதம் -
உலூகலம் - வட்டிகை -
நவியம் -
முசலம் -
சூர்ப்பம் -
தாம்பு -
குழிசி -

சுவேதம் -
தவளம் -
பெளவம் -

சீசகம் -
நறுமருப்பு -
உருளரிசி -
சசம் -

மதுரம் -
சசி -
நேமிநாதம் -
சயந்தனம் -

12 comments:

  1. உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்

    வருகிறேன் பொருளுடன்

    கண்டிப்பாக‌

    ReplyDelete
  2. ஒருவாறாக கதையாய் படிக்கும் போது விளங்கியது போலிருந்த அர்த்தங்கள், எடுத்தெழுதி சவாலாய் தாங்கள் கேட்கையில்... மிரட்டுகிறது தோழி. எப்படியோ உங்க புண்ணியத்தால் வழக்கொழிந்த அழகு தமிழ்ச் சொற்கள் அறியக் கிடக்கின்றன. பழைமை பேசி ஐயா, பா.ரா. அண்ணா என யாராவது வந்து தெளிவித்த பின் மறுபடி வந்து கண்டுகொண்டால் போகிறது. என் சிற்றறிவிற்கு ஏதும் எட்டவில்லை தாயே...!

    ReplyDelete
  3. ஞாட்பு, துவர்க்காய் மரம், கிஞ்சுகம், தாம்பூல வல்லி(வெற்றிலைக் கொடி?), காரவல்லி(கற்பூர வல்லி?), வத்சலை, வந்சம், பகடு, மேதி, குரச்சை, கபோதம், கச்சோதம், பிபீளிகை, நளிவிடம், நிலந்தி, துந்துளம், வெருகல், எகினம், சசலம், ஞெள்ளல், ஆசினி, கபித்தம், சிந்தகம்...

    இவற்றுக்கும் விளக்கம் தந்தால் நலம்.


    அங்கிதம்- தழும்பு அல்லது மச்சம்

    ஓட்டமும் அதரமும் -மோவாயும், உதடுகளும்

    செவிப் பூ - தோடு அல்லது காதுமடல்

    அங்கராகம் - நெற்றிப் பொட்டு

    படிமக்கலம் - முகம் பார்க்கும் கண்ணாடி

    கங்கதம் - தலை வாரும் சீப்பு

    குந்தளம் - தலை முடி

    நவநீத நிறம் - கருமை

    உவளித்து - குளித்து

    சுரும்பு, கேசவம் -வண்டு, தும்பி

    கோகிலம் - குயில்

    கசனம்- பூனை

    ஒரு அனுமானத்தில் பெரும்பாலும் இவை சொல்லப் பட்டிருக்கின்றன. எத்தனை மதிப்பெண் நான் பெறுவேன்?!

    ReplyDelete
  4. வருடக்கணக்காகிறது திகழ் உங்களைக் கண்டு. நலமா?

    வாருங்கள் பொருளோடு.நானும் நிலாவும் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  5. நிலா,திகழ் வரும் வரைச் சற்றே காத்திருப்போமா?

    உங்கள் ஆர்வத்துக்கும் பகிர்வுக்கும் மிக நன்றி தோழி.பெரும்பாலானவை மிகச் சரி என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன்.

    சரியான விடையை முதலில் சொல்லியவர்களின் பெயரோடு பொருளையும் அல்லது பொருளோடு பெயரையும் இறுதியாகப் பதிவில் பதிவேற்றி விடுகிறேன்.

    மிக்க மகிழ்ச்சி நிலா.

    உங்கள் ஆர்வமிக்க முயற்சிக்கும் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  6. கோகிலா,அவந்திக்கா,மாலதி,சியாமளா,மஞ்சரி,
    கோமளா,குமுதா,மதுரா,சசி எனப் பெண்களுக்கும்;சாரங்கன்,சயந்தன்,நவநீதன் என ஆண்களுக்கும் பெயர் வைப்பதுண்டே!அப்படி நினைத்துப் பார்த்தாலும் சில சிலவற்றுக்குப் பொருள் கிட்டலாம்.

    நானும் அண்மைக்காலமாகத்தான் இச்சொற்களையும் அவற்றின் பொருளையும் கண்டெடுத்தேன்.:)

    ReplyDelete
  7. I love to have the fruit. It is so cute

    ReplyDelete
  8. :)
    புன்னகைக்கு நல்வரவு.:)

    ஒரு பொருள் தான் ஆனால்,பார்க்கின்ற பார்வைகள் எப்படி வேறு படுகிறது பாருங்கள்.

    எனக்கு இந்தப் படத்தைப் பார்த்ததும் இது புன்னகைக்கின்ற அழகிய பல்வரிசை இப்படி இருக்கும்;சொற்களும் ஒவ்வொரு முத்துக்களைப் போலவே என்றெல்லாம் எண்ணங்கள் ஓடின.

    நாங்கள் திகழுக்காகக் காத்திருக்கிறோம்.பாவம் நம்மோடு நிலாவும் காத்திருக்கிறார். அவர் வராத விடத்து நாளை இவற்றுக்கான பதில்களைத் தர எண்ணம்.

    புன்னகை கொஞ்சம் முயற்சிக்கலாமே!:)

    வரவுக்கு நன்றி புன்னகை. தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  9. அன்பு நிலா,
    முதலில் உங்கள் பொறுமைக்கும் முயற்சிக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றியும்.

    இதோ உங்களுக்கான விடைகள்;

    அங்கிதம்- தழும்பு அல்லது மச்சம் (சரி)

    ஓட்டமும் அதரமும் -மோவாயும், உதடுகளும்; சரி எனவே கொள்ளலாம்.(குறிப்பாக மேலுதடும் கீழுதடும்)

    செவிப் பூ - தோடு (சரி)

    அங்கராகம் - முகப்பூச்சு (பவுடர்)

    படிமக்கலம் - முகம் பார்க்கும் கண்ணாடி (சரி)

    கங்கதம் - தலை வாரும் சீப்பு (சரி)

    குந்தளம் - தலை முடி(குறிப்பாகப் பெண்ணின் கூந்தலைக் குறிக்கிறது.சரி)

    நவநீத நிறம் - உண்மையில் பொருள் நீங்கள் சொன்னதற்கு எதிரானது. வெண்ணை வண்ணம். சீஸ் - பாற்கட்டி நிறம்) நவநீத கிருஷ்னன் என்பது வெண்ணையை வைத்திருக்கின்ற கண்ணனைக் குறிக்கும்.)

    உவளித்து - குளித்து (குறிப்பாகச் சுத்தப் படுத்தி என்று சொல்லலாம்)

    சுரும்பு, கேசவம் -வண்டு, தும்பி (சரி)

    கோகிலம் - குயில்(குயில்)

    கசனம்- கரிக்குருவி என்பது சரியான விடை.பூனையை வெருகல் என்பதுண்டு)

    உங்களுக்கு என் வாஞ்சை மிகு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நிலா.உங்களால் உயிர்த்தேன்.

    நீங்கள் கேட்ட மற்றைய சொற்களுக்கான விடைகள்;

    ஞாட்பு - போர்
    துவர்க்காய் மரம் - பாக்குமரம்
    கிஞ்சுகம் - முள்முருக்கு (யாழ்ப்பாணப் பகுதிகளில் வெற்றிலைக் கொடி இந்த மரத்தில் தான் படர்ந்திருக்கும்.முழுக்க முழுக்க முள் நிறைந்தது. இதன் இலைகள் கால்நடைகளுக்கு மிகப் பிடித்தமானது.திருமணங்களோடும் இம்மரத்துக்கு நிறைய சம்பந்தம் இருக்கிறது)
    தாம்பூல வல்லி(வெற்றிலைக் கொடி?)நிச்சயமாக! காரவல்லி - பாவற்காய்
    வத்சலை - தாய்ப்பசு (வத்சலா என்று பெண்களுக்குப் பெயர் வைப்பதுண்டல்லவா? - அர்த்தம் இது தான்.தாய்ப்பசுவின் தாய்மை பிரசித்தம்.கன்றினை வாஞ்சையோடு நக்கி நக்கி அது பாலூட்டும்).
    வந்சம் -பசுக்கன்று
    பகடு -ஆண் எருமை
    மேதி -பெண் எருமை
    குரச்சை -குதிரைகளின் குளம்பு
    கபோதம் -புறா
    கச்சோதம் -மின்மினி
    பிபீலிகை - எறும்பு
    நளிவிடம் -தேள்
    நிலந்தி - நுளம்பு
    துந்துளம் - பெருச்சாளி
    வெருகல் -பூனை
    எகினம் - அன்னம்
    சசலம் -முள்ளம் பன்றியின் முள் (இதனால் குத்தி துவாரம் உண்டாக்கி பெண்கள் அதில் தையல் வேலைப்பாடுகள் செய்வார்கள்.நுட்பமானதும் அழகியதுமான வேலைப்பாடாக அது இருக்கும் -அக்கோபா வேலைப்பாட்டை ஒத்தது)
    ஞெள்ளல் -மேன்மை
    ஆசினி -ஈரற்பலாமரம்
    கபித்தம் - விளாத்தி மரம்
    சிந்தகம் - புளியமரம்

    ReplyDelete
  10. அவந்திகை -கிளி
    சூழி -உச்சி
    மாலதி -மல்லிகை
    மெளவல் -முல்லை
    அங்குலி -விரல்
    உகிர் -நகம்
    கிலுத்தம் -மணிக்கட்டு
    கூர்ப்பரம் -முழங்கை

    சியாமளம் -பச்சை
    மஞ்சரி -பூங்கொத்து
    ஞிமிலி -நாய்

    சாரங்கம் -சாதகப் பறவை
    நேமி - சக்கரவாகப் பறவை
    சிதகம் -தூக்கணாங்குருவி
    கோமளம் - இளமை
    பொற்பு - ஒப்பனை
    போதம் - அறிவு
    பிங்கலம் - பொன்
    கன்னல் - கரும்பு

    துச்சில் - ஒதுக்கிடம்
    ஓதம் - வெள்ளம்
    பங்கம் - சேறு
    தால வரிசை - பனைகளின் வரிசை. புற்பதி என்பதும் பனையையே குறிக்கும்.
    மார்க்கம் -நெடுந்தெரு
    விடங்கம் -வீதியை அலங்கரிக்கும் கொடி
    மறுகு - குறுந்தெரு
    பாக சாலை - மடப்பள்ளி

    குமுதம் - அடுப்பு
    உலூகலம் - உரல்
    வட்டிகை - கூடை
    நவியம் - கோடாலி
    முசலம் - உலக்கை
    சூர்ப்பம் - சுளகு
    தாம்பு - கயிறு
    குழிசி - கிடாரம்

    சுவேதம் -வியர்வை
    தவளம் -வெண்மை
    பெளவம் -முத்து

    சீசகம் - மூங்கில்
    நறுமருப்பு -இஞ்சி
    உருளரிசி -மல்லி (பொருத்தப் பாட்டைப் பாருங்கள்!)
    சசம் -முயல்

    மதுரம் -இனிமை
    சசி - கற்பூரம்
    நேமிநாதம் - தேர் உருளும் ஓசை
    சயந்தனம் - தேர்.

    ReplyDelete
  11. அம்மம்மம்மம்மா.... குதூகலமான நன்றிகளைச் சமர்பிக்கிறேன் தோழி தங்களுக்கு...!! இவ்வளவு 'பழம்'தமிழ்ச் சொற்களை மீட்டெடுத்தமைக்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவற்றை வழக்கில் மறுபடியும் கொணர நம்மாலான முயற்சிகளைச் செய்யலாம். ஏற்கனவே, தங்கள் HUCKLEBERRY FRIEND ('இடருய்தி' )பற்றிய ஐயம் தெளிவிப்பால் அதை வைத்து ஒரு கவிதை எழுதி, இன்றைய பதிவாய் எனது வலைப்பூவில் ஏற்றியிருக்கிறேன் என்பதையும் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன் தங்களிடம்.

    ReplyDelete
  12. ஆஹா!என் இனிய தோழியே!:)

    இதோ இப்போதே உங்கள் பதிவு பார்க்க வருகிறேன்.

    அன்பால் திக்கு முக்காட வைக்கிறீர்கள் என்னை!

    இவ்வாறு சுமார் 11,000 சொற்கள் இருக்கின்றன தாயே!சூடாமணி நிகண்டு என்றொரு அகராதியை நூலகம்.நெற்றில் பதிவிறக்கிக் கொள்ள முடிகிறது.அதில் அத்தனை சொற்களும் இருக்கின்றன.

    அதில் எனக்கு மிகவும் பிடித்த விடயம் என்னவென்றால் உதட்டில் கூட மேலுதடு, கீழ் உதடு, கூந்தலிலும் ஆண்மயிருக்கு ஒரு பெயர் பெண்மயிருக்கு ஒரு பெயர்,...இப்படி எவ்வளவு நுட்பமாக விடயங்களுக்குப் பொருள் கொண்டிருக்கிறார்கள் என்பது தான்.இப்படி நிறையச் சொற்கள்!!

    நாம் அவற்றை எல்லாம் பாவிக்காமல் வீணே விட்டு விட்டோம்.

    இந்த நுட்பம், ஆழம், அகலம் எல்லாம் தமிழின் அழகல்லவோ?.

    ReplyDelete