Saturday, July 13, 2013

தாய் தேசத்தில் எனக்காக எழுதப்பட்டிருந்த புது வருடம் - 6 -

பொற் கோயிலை விட்டு வெளியே வந்தோம். தாய் தேசத்து மக்கள் அன்று தண்ணீரால் அபிஷேகம் செய்யப்படுவார்கள் என்று தாய்த் தாய் நினைத்தாளோ என்னவோ வெய்யில் சுள் என்று கொழுத்தியது.

தாகத்தைத் தீர்த்துக் கொண்டாலும் பசியும் எடுக்கத் தொடங்கியிருந்தது. இனி சீனச் சந்தைக்குப் போய் பார்த்த வாறே ஏதேனும் வாங்கி சாப்பிடலாம் என்று நினைத்துக் கொண்டு வெளியே வந்தோம்.

வெளியே ஒரு பெரிய பெயர்பலகையில் இக்கோயிலைப்பற்றிய விபரங்கள் தாய் பாஷையிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்க அதனை நின்று வாசிக்கத் தொடங்கினோம்.




அப்போது ஒரு மனிதர் அவ்வழியே வந்து, நலமாய் உங்கள் நாட்கள் அமைந்திருந்ததா என்று வினாவி, தான் எங்களுக்கு ஏதேனும் வகையில் உதவமுடியுமா எனப் பணிவாகக் கேட்டார். கூடவே தன்னை ஒரு கைட் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். நாம் விபரப்பலகையைப் பார்த்துக்கொண்டிருந்தது அவ்வாறு அவரை வினாவத் தூண்டியிருக்கலாம்.

நாம் map கொண்டு போயிருந்தோம் என்ற போதும், கண்ணியமாகப் பேசியிருந்த அந்த மனிதரிடம் நாம் சீனச் சந்தைக்குச் செல்லவேண்டியிருக்கிறது என்றும் பாதை காட்ட முடியுமா எனவும் வினவினோம். அதற்கு அம்மனிதர் இன்று புது வருடம் என்பதால் கடைகள் யாவும் மூடப்பட்டிருக்கும் என்று கூறி அருகிலே ஒரு Black Budda வும் seeping budda வும் இருக்கிறார்கள். பெரும்பாலான பயணிகள் Golden Budda வைப் பார்த்து விட்டு அப்படியே திரும்பி விடுகிறார்கள் என்றும், அதுவும் பார்க்க கூடிய பார்க்க வேண்டிய ஒரு ஆலயம் தான் என்றும் கூறி அதனைப்பார்த்து விட்டு அப்படியே தாய் மசாஞ்சிற்கும் போய் விட்டு நீங்கள் இருப்பிடம் திரும்பலாம் என்றும் இன்று நீங்கள் பார்ப்பதற்கு அதிகமாக எதுவும் இருக்காது என்றும் கூறி, அருகில் நின்ற ருக்ருக் வண்டிக்காரரை அழைத்து இவ்வளவுக்கும் எம்மை அழைத்துச் சென்று விட்டு நம்மை நம் இருப்பிடம் கொண்டு சேர்க்க 30 பட் கொடுங்கள் என்று பேரமும் பேசி நம்மை வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தார்.

நமக்கு உள்ளூர வியப்பு! நம் இருப்பிடம் இருந்து தங்கப்புத்தரைப் பார்க்க வரவே 100 பட் பேசப்பட்டிருந்தது. இந்த மனிதர் எப்படி நம்மை இத்தனை இருப்பிடங்களுக்கும் அழைத்துச் சென்றுவிட்டு பின்னர் நம்மை நம் இருப்பிடம் கொண்டு சேர்க்கவும் 30 பட்களைக் கேட்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் இங்கு மொழிப்பிரச்சினை இருந்தது. அந்த ஓட்டுனர் மூலமாக நாம் அறிந்து கொண்டது என்னவென்றால் அவரது ருக்ருக் அரசாங்க ஆதரவில் ஓடுகிறது என்பதைத் தான்.

இப்போது சற்றுத் தூரம் நடந்து வந்து அவரது ருக்ருக்கில் ஏறிக் கொண்டோம். சுமார் 5 நிமிட நகர்வின் பின்னர் அமைதி சூழ்ந்த ஆளரவம் அதிகமற்ற கோயிலடியை வந்து சேர்ந்தோம்.

உங்களில் எத்தனை பேர் ஈழத்தின் வடபுலத்தில் அமைந்திருக்கின்ற நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்துக்குச் சென்றிருக்கிறீர்கள் என்று தெரியாது. எனக்கேனோ அந்தக் கோயிலுக்குப் போனதைப்போல ஒரு பூரிப்பு இந்தக் கோயிலை வந்தடைந்ததும் இருந்தது.

என்ன ஒரு அமைதி!
என்ன ஒரு தெய்வீகம்!

இந்தக் கோயில் அப்படியே என்னை ஆட்கொண்டு விட்டது என்றே சொல்வேன். இனியொரு தடவை தாய்லாந்துக்குப் போக ஆசைப்படுவாயா என்று கேட்டால் இல்லை என்பது தான் என் பதிலாக இருக்கும். ஆனால் இனியொருதடவை அங்கு போனால் என்ன முதலில் பார்க்க விரும்புவாய் என்று யாரும் என்னைக் கேட்டால் இந்தக் கோயில் என் விருப்பத் தெரிவில் முதலாம் இடத்தில் இருக்கும். அக்கோயிலின் படங்களையே கீழே காண்கிறீர்கள்.



















காந்தித் தாத்தாவும் அங்கு ஒரு ஓரமாக மதிப்பான இடத்தில் இருக்கிறார்.
















இந்த ஆலயத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது இந்தக் கோயிலில் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் இரண்டு பேர் வந்து கோயிலின் விபரங்களை நமக்கு அறியத்தந்தார்கள். நாம் கோயிலுக்கு வருகை தந்ததையிட்டு தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். பலரும் தங்கப்புத்தபகவானைப் பார்த்துவிட்டு திரும்பி விடுவதால் நாம் வந்தது தங்களுக்கு மனத்திருப்தியையும் சந்தோஷத்தையும் தருவதாகச் சொல்லி நமக்குப் போதிய விபரங்களைத் தந்து நம்பயணம் நலமானதாய் அமைய வாழ்த்தும் கூறி புது வருட நல்லாசிகளையும் சொல்லி சொந்தக்காரர்களைப்போல நம்மை வழியனுப்பி வைத்தார்கள்.

இப்போது நமக்கொரு சங்கடம் நேர்ந்தது. நாம் சிரமபரிகாரம் செய்து கொள்ளவேண்டியிருந்தது. தாகத்துக்கு அருந்திய பதார்த்தம் செய்த வேலை அது. விருந்தாளிகளைப் போல நம்மை உபசரித்த அந்த மனிதர்களிடம் சிரமபரிகாரம் செய்து கொள்ள இவ்விடம் வசதியிருக்கிறதா என விசாரித்தோம்.அதற்கு அவர்கள் தம்முடய இடத்தை விட ஒரு பிரசித்தி பெற்ற தங்கம் இரத்தினக்கற்களைச் சர்வதேசத்துக்கு விற்கின்ற பெரிய கடைத்தொகுதி ஒன்றிருக்கிறது. அங்கு சிறந்த தரத்தில் அவற்றுக்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அது உங்களுக்கு இன்னும் வசதியாக இருக்கும் என்று கூறி நம்முடய ருக்ருக் றைவரை அழைத்து நம்மை அங்கு அழைத்துச் செல்லுமாறு அவர்கள் அவருக்குக் கூறினார்கள்.

நமக்குப் பசி சற்றே தூக்கலாய் இருந்த போதும் அதற்கு முதல் இந்த வேலையை முடிப்பது அவசியமாக இருந்ததால் நகைகள் வாங்குகின்ற நோக்கம் இல்லாதிருந்த போதும் அந்த நகைக்கடைத்தொகுதிக்கு போனோம்.

போகிற பாதை எங்கும் தண்ணீர் அபிஷேகம் வஞ்சனையின்றி எல்லோருக்கும் கிட்டியது. தாய் மக்களுக்குத் தான் அதில் எத்தனை சந்தோஷம். தாத்தா பாட்டியில் இருந்து குழந்தைகள் வரை சந்திகளிலும் கடைத்தொகுதிகளின் ஓரங்களிலும் தம் வீடுகளுக்கு முன்னாலும் தண்ணீரை வைத்துக் கொண்டு போவோர் வருவோருக்கு தண்ணீரல் அபிஷிகம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களும் தண்ணீரில் தெப்பலாய் நனைந்திருந்தார்கள்.

கீழே இருக்கின்ற இந்தப்படம் மோட்டார் சைக்கிளில் போகிற ஒருவர் வைத்திருக்கின்ற தண்ணீர் துவக்கு.( ருக் ருக் ஒரு சிவப்பு விளக்கில் தரித்து நின்ற போது எடுத்தது )




சந்து பொந்துகளால் சுமார் 20 நிமிட நேரம் பயணிக்கிறோம். நாமும் நன்றாக தண்ணீரால் அபிஷெக்கம் செய்யப்பட்டோம் என்பதை நான் உங்களுக்குச் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். :) ருக்ருக் ஓட்டுனர் தண்ணீர் அடிக்க வேண்டாம் அடிக்க வேண்டாம் என்று சைகைக் காட்டியும் அதற்குப் பலன் இருக்கவில்லை. வாகனம் ஓட்டும் வழியெங்கும் நமக்கு தண்ணீர் எத்து நடக்கின்ற பொழுதிலெல்லாம் இந்த மனிதர் நம்மிடம் திரும்பிப் பார்த்துப் பார்த்து மன்னிப்புக் கேட்ட படி வந்தார்.



அந்த நகைக்கடைத்தொகுதியை வந்தடைந்தோம். அதன் வாசல் வழி எங்கும் வைக்கப்பட்டிருக்கின்ற கலைப்பொருட்களை படம் எடுத்துக் கொண்டேன். கடைப்பொருட்களை நாகரிகம் கருதி படம் எடுத்துக் கொள்ளவில்லை.




சிரம பரிகாரங்களையும் முடித்துக் கொண்டு வெளியே வந்த போது ருக்ருக் றைவர் அதே புன்னகை மாறாத முகத்தோடு நமக்காகக் காத்திருந்தார். பயனுடயதாக இருந்ததா என்ர அக்கறையான விசாரணையோடு நம்மை மசாஞ் சென்ரருக்கு அழைத்துச் செல்லத் தயாரானார். 

இப்போது நமக்குப் புதுசாய் ஒரு தேவை வந்தது. அது பசிக்கிறது; சாப்பிட வேண்டும் என்பது தான். உங்களுக்குத் தெரிந்த கடைகள் ஏதும் இருக்கிறதா என்று கேட்டோம்.அருகில் எதுவும் இல்லை. ஆனால் சற்றுத் தூரம் சென்றால் நல்ல ஒரு கடை இருக்கிறது அங்கு அழைத்துச் செல்லவா என்று கேட்டார். இந்த மனிதருக்கு கோபம் வந்தால் எப்படி இருப்பார் என்ரு சிந்தனை ஓடியது எனக்கு. காரணம் அந்த முகத்தில் கடுகடுப்பின் எந்த ரேகைகளும் சலிப்பின் எந்த ஒரு பின்னல்களும் அந்த முகத்திலும் நடத்தையிலும் இல்லை.

மீண்டும் சுமார் 30 நிமிட ஓட்டத்தின் பின் சுமார் 3.30 மணியலவில் ஒரு பெரும் முன் வளவு பின் வளவு கொண்ட மாமரங்கள் நிறைந்த வீட்டுப்பாணியிலான இடத்தில் நம்மைக் கொண்டு சென்று நிறுத்தினார்.

அந்த மனிதரும் சுமார் 30 பட்டுக்காக நம்மோடு அலைகிறாரே என்று விட்டு மேலும் அவரும் பசியோடு இருப்பாரே என்ற நினைப்பில் அவரையும் நம்மோடு உணவருந்த வருமாறு அழைத்தோம்.உடனே அதே புன்னகையோடு மறுத்த அவர் தன் மனைவி தனக்காக உணவு சமைத்துத் தந்திருக்கிறார் அது போதும் என்று விட்டு தான் இக்கரையின் நிழலில் ருக்ருக்கை நிறுத்தி விட்டுக் காத்திருப்பதாகவும் நம்மைப் போய் உணவருந்தி வருமாறும் நம்மை வழியனுப்பி வைத்தார்.

உணவு விடுதி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அநேகமானவர்கள் வெள்ளைக்காரர்களே. மது பியர் வகைகளுக்கான பகுதியையும் பாடல் ஆடல்களுக்கான பகுதியையும் அது உள்ளடக்கியிருந்தது. சாப்பாட்டுக்கான பகுதியை உள்ளேயும் வெளியேயும் புறத்தேயும் கொண்டிருந்த பெருந் தொகுதியில் ஒரு புறமாக ஒரு குடும்பத்தினருடய வீடும் அமைந்திருந்தது. சிறு குழந்தைகள் பீய்ப்பாய்களுக்குள் பெரியவர்கள் தண்ணீரை நிரப்பி விட நீராடி மகிழ்கிறார்கள். ஒரு வித வீட்டுச் சூழலில் வித்தியாசமான முறையில் ரசனையோடு செய்யப்பட்டிருந்த இவ்விடத்தில் வியாபாரமும் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.




நமக்கு உணவு வர நேரமாகி விட்டது. நாம் உணவருந்தி வெளியே வர சுமார் 4.30, 5.00 மணியாகி விட்டது. அப்போதும் இந்த மனிதர் நமக்காகக் காத்திருந்தார்.


இப்போது நாம் க:ளைத்துப் போயிருந்தோம். இருப்பிடத்துக்குப் போவோம் என்பது நமக்கான விருப்பமாக இருந்த போதும் ருக்ருக் றைவர் இப்போது நாம் போக வேண்டி இருக்கின்ற பாதை போக்கு வரத்துக்குத் தடை செய்யப்பட்டிருக்கிறது என்றும் (கொண்டாட்டத்தினால்) மாலை 6.00 மணிக்குப் பின்னரே அது பொது மக்களின் பாவனைக்கு மீண்டும் திறக்கப்படும் என்றும் கறி நாம் விரும்பினால் மத்திய புகையிரத நிலையத்தில் நம்மை இறக்கி விடுவதாகச் சொன்னார்.

நாம் ஏற்கனவே களைத்துப் போயிருந்ததால் புகையிரத நிலையத்துக்குச் செல்வதை நாம் விரும்பவில்லை. மேலும் மறு நாள் Day trip ஒன்றுக்கு ஒழுங்கு செய்வது நமது நோக்கமாக வேறு இருந்ததாலும் இரவுக்கு Lady Boy Show ஒன்றுக்கு ஏற்கனவே ஏற்பாடு செய்தும் இருந்ததால் இன்றய இந்த நேரத்தை விட்டால் நமக்கு மசாஜ் இற்குச் செல்ல சந்தர்ப்பம் வராதெனக் கருத்தி மசாஜ்சிற்குப் போகலாம் எனத் தீர்மானித்தோம்.

நாம் இப்போது போகவேண்டி இருந்தது மசாஜ்சிற்கு. அவருக்கு அந்தப் பாதை தெரியும் போலும். நேரடியாக அங்கிருந்து நம்மை மசாஜ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். 








சுமார் 2 அரை மணி நேரத்தின் பின்னர் இந்த மசாஜ் நிலையத்தில் இருந்து புதிய மனிதர்களாக வெளியே வந்தோம். இந்த புதிய மனிதர்களாக என்ற பதத்தைச் சற்றே அழுத்திச் சொல்லவே ஆசைப்படுகிறேன். ஏனென்றால் வாழ்க்கையில் முதன் முதல் மசாஜ் என்றால் என்ன என்பதை அன்று உனர்ந்து கொண்டேன். நீங்கள் எவரேனும் தாய் லாந்துக்குச் சென்றால் நல்ல ஒரு மசாஜ் நிலயத்துக்குச் சென்றுஅந்த அனுபவத்தைப் பெறாமல் திரும்பி வராதீர்கள்.
பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்பது மாதிரி மனம் வயிறு உடல் மூன்றும் நிறைந்த ஒரு மனநிலை நமக்கு!

வெளியே வந்த போது நமக்காக இவ்வளவு நேரமும் காத்திருந்த அந்த மனிதர் போய் விட்டிருந்தார். பணம் எதையும்  பெற்றுக்கொள்ளாமலே. நாம் ஏற்கனவே இந்த மனிதருக்கு ஒரு மேலதிக தொகை ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்று கருதிக் கொண்டிருந்த போதிலும்.

இந்த மனிதன் ஏன் எதிர் பட்டான்? ஏன் நம்மை இத்தனை இடங்களுக்கும் புன் முறுவல் பூத்த முகத்தோடு அழைத்துச் சென்றான் பிறகு ஏன் ஒரு சதமும் வாங்காமலே காணாமல் போனான் என்பதற்கு எனக்கு இன்று வரை விடை தெரியவில்லை.  இருப்பிடம் வந்ததும் இந்த மனிதனை படம் பிடித்திருக்கிறேனா என்று கமராவில் தேடினேன். ஆம் என்ற மனநிறைவான பதில் எனக்கங்கிருந்தது. அந்த மனிதர் தான் முன் இரு படங்களிலும் நீல நிற மேலாடையோடு காணப்படுகிறார். என் மொழி பெயர்ப்பில் தேவதூதன்! 30 பட்டுக்கு மனதில் ஏறி உட்கார்ந்து கொண்ட மாயவன்.

ஆசீர்வதிக்கப்பட்ட நாள் என்பது இது தானோ? புத்தபகவானின் நல்லாசிகளோடும் உபாதைகள் எதுவுமற்ற உடல் மன நிலைகளோடும் தாய் தேசம் தன் புதுவருட வாழ்த்துக்களை ஆசிகளால் நிறைத்து நமக்குத் தந்திருந்தது. குறிப்பாக எனக்கு!


இருப்பிடம் திரும்பிய போது ஹொட்டேலும் கொண்டாட்டத்தில்!



கதவுகளைப் புன்னகையோடு திறந்து விட்ட இளைஞனின் பெயர் ‘ஓம்’ என பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்த பெயர் பட்டியைப் பார்த்த படி உள் நுழைகையில் நேரம்  சுமார் ஏழு மணி இருக்கும்.இன்னும் சில மணி நேரங்களில் இரவுணவை முடித்து விட்டு "lady boy show' விற்குப் போக வேண்டும்.



தெய்வீகம் பொலிந்த கொண்டாட்ட நன்நாள்!

எனக்குள்ளேயும் வெளியேயும்.









9 comments:

  1. அழகான அருமையான படங்கள் மூலம் நாங்களும் பயணித்தோம்... நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. என் மொழி பெயர்ப்பில் தேவதூதன்! 30 பட்டுக்கு மனதில் ஏறி உட்கார்ந்து கொண்ட மாயவன்.//

    ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள்!

    அம்மனிதரை பதிவு செய்தது வெகு சிறப்பு. மறுபடியும் துவக்கத்துக்கு போய் நீல சட்டைக் காரரைப் பார்த்துக் கொண்டேன். 'தெய்வம் மனுஷ்ய ரூபேண' என்பதன் பொருளாக இவர். எதிர்பாராத இடத்தில் பிரதிபலன் கருதாது வந்து சேரும் உதவிகளை நமக்கான ஆசி என்றுதானே கருத வேண்டும்.

    படங்களின் அழகு மனம் நிறைத்தது மறுபடி.

    ReplyDelete
  3. பதிவினை வெளியிட்டு விட்டு மீண்டும் ஒரு தடவை வாசித்து சரி பார்த்து விட்டுத் திரும்பினால் நீங்கள் இருவரும் என் வீட்டில். அதுவும் ஒரு எதிர்பாராத சந்திப்புத்தான்.:)

    தொடரும் தனபாலரே! 4 நாள் பயணத்தை 4 மாதங்களுக்கும் மேலாக பதிவிடுவது என் ஒருத்தியினுடய சாதனையாகத் தான் இருக்கும் இல்லையா? :)இன்னும் எத்தனை மாதம் போகுமோ தெரியாது.

    மகிழ்ச்சி நிலா தோழி.ஆம். அது ஒரு ஆச்சரியம் தான்.அந்த மனிதர் அந்த இடத்தில் மறைந்து போய் மனதில் இடம் பிடித்து விட்டார்.

    தாய் லாண்டில் நான் கண்ட இன்னொரு விடயம் அந்த மக்களின் முகங்களில் நிரந்தரமாகக் குடியிருக்கின்ற ஓரு புன்னகை.எளிமையான வாழ்க்கைக்குச் சொந்தக் காரர்களாக இருக்கிற அந்த மக்களின் முகங்களில் தான் என்ன ஒரு நிறைவான புன்னகை!

    முறைப்பாடுகள் எதுவுமற்ற முகங்கள்! மேடம் மேடம் என்று அடிக்கொரு தடவை அழைத்துத் தான் ஒன்றைச் சொல்வார்கள்.

    அங்கு படிக்க ஒரு பாடம் இருக்கிறது.ஒரு சூட்சுமம் அங்கு ஒழிந்திருக்கிறது நிலா. அது எதுவென்று கண்டு பிடிக்க வேண்டும்.

    ReplyDelete
  4. ஆசீர்வதிக்கப்பட்ட நாள் என்பது இது தானோ?

    மனம் நிறைந்த அருமையான பகிர்வுகள்..
    பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. நன்றி செந்தாமரைத் தோழி.

    அழகான ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நாள் தான். பணத்தைச் சேமித்தேன் என்பதால் அல்ல. அந்த மனிதன் ஏன் இவ்வளவு நேரமும் நம்மோடு இருந்து விட்டு காசைக்கொடுத்து வழியனுப்பி வைக்கிற அந்த தருணத்தில் அதனை ஒரு உதவியாகச் ஒரு உல்லாசப்பயணிக்குச் செய்து விட்டுப் போனான் என்று தான் தெரியவில்லை.

    அதுவும் அந்த அவர்களின் புது வருட தினத்தில். சுமார் அரை நாள் தன் குடும்பத்தோடு அந்த மணித்தியாலங்களை குதூகலமாக அவன் களித்திருக்கலாம்.அது தான் மனதுக்கு கஸ்டரமாக இருக்கிறது.

    இப்போது என்னடாவென்றால் நம்முடய மனதில் ஏறி நிரந்தரமாக இருக்கை போட்டு உட்கார்ந்து விட்டான்.

    ReplyDelete
  6. அழகான படங்களுடன் அருமையான பயணப் பகிர்வு...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தாங்ஸ்ப்பா.
    வந்ததற்கும் சொன்னதற்கும்.

    ReplyDelete
  8. வாழ்க்கையின் சில தருணங்களில், நாம் சந்திக்கும் அற்புத மனிதர்கள் நம்மை விட்டு எந்நாளும் நீங்குவதே இல்லை. ஒருவித வியப்புடன் வாழ்நாள் முழுவதும் நம்மோடே பயணிக்கும் அவர்களுக்கு அது தெரிந்திருக்கும் வாய்ப்புக்கூட இருக்குமா தெரியவில்லை. மனம் விட்டு நீங்காத நினைவுகள்...எங்களோடு பகிர்ந்துகொள்வதன் மூலம் நாங்களும் அந்த இனிய நிகழ்வுகளைப் பங்கிட்டுக்கொள்கிறோம் உங்களுடன். நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  9. நன்றி கீதா.

    அந்த மனிதர்களின் பண்புகள் என்னை ஈர்த்த வண்ணமாகவே உள்ளது.

    அந்த தங்க புத்தர் கோயிலில் கலைப்படங்களை வியர்வை வழிய வழிய விற்றுக் கொண்டிருந்த ஏழை மனிதன் யாரோ ஒரு உல்லாசப்பயணியான என்னிடம் வைத்த ஒரு நம்பிக்கை,இந்த மனிதன் அநாயாசமாக கொடுத்து விட்டுப் போன தன் அரைநாள் காலம் - அதுவும் தங்கள் புதுவருட தினத்தில் -

    சமான்ய வாழ்க்கைக்குரிய இந்த மனிதர்களிடம் தான் என்ன ஒரு மன அழகு!

    பணம் இன்னும் தன் கொடிய கரங்களால் மனிதத்தைக் கொன்று போடாமல் சக மனிதன் பாலான நம்பிக்கையை நசித்து விடாமல் மக்களை வைத்திருப்பது தாய் தேசத்தின் சிறப்புப் போலும்!

    அந்த மக்கள் புரிகிற புன்னகையில் அந்த அழகு மிளிரும் கீதா. வாழ்க தாய் தேசம்!!

    ReplyDelete