Friday, December 30, 2022

The Great Lifco Dictionary

 



வெகு அபூர்வமாக நான் வைத்திருக்கும் பொக்கிஷங்களில் ஒன்று இந்த லிஃகோ அகராதி.1952 ம் ஆண்டு முதற்பதிப்பைக் கண்டு 1999ம் பதிப்பாக பதிவேறி 2002ம் ஆண்டு என்னை வந்தடைந்தது அது.

The Little Flower Company இந்திய ரூபாய்கள் 160 க்கு அப்போது இதனை விற்பனை செய்திருக்கிறது. மொத்தமான துணியினால் ஒட்டி அக்கறையோடு பைண்ட் செய்யப்பட்ட இந்த அகராதி “ suggestions for the improvement of this book or corrections will be gratefully welcome by the publishers - whose main aim is accuracy and service" என்ற முன்பக்க பதாகையோடு ஆங்கில; ஆங்கில; தமிழ் மொழி வளத்தோடு அமைந்திருக்கிறது.

இன்று எத்தனையோ விதமான அகராதிகள், online செயலிகள், கூகுள் translation என்று எத்தனையோ இலகுவாகவும் உடனடியாகவும் சுலபமாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய மொழிபெயர்ப்புக் கருவிகள் வந்து விட்டதால் உலக மொழிகளையே நொடிப்பொழுதில் மொழிமாற்றம் செய்யும் வசதிகளை நாம் கண்டடைந்து விட்டோம். 

இருந்த போதும் நேற்றய தினம் வருட இறுதியிலேனும் புத்தகத்தட்டைத் தூசி தட்டும் நிமித்தமாக இதனை வெளியே எடுத்துப் புரட்டிப் பார்த்த போது தான் அது எத்தனை சிரத்தையோடும் தகவல்களோடும் எக்காலத்திற்கும் பொருந்தி காலத்தை வென்று நிற்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை காண முடிந்தது.  

அது மொழிபெயர்ப்பை மட்டும் செய்யவில்லை. தமிழோடு தமிழ் தகவல்கள், பண்பாடு, நாகரிகம், பாரம்பரியம் என சகலவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. ஒரு சொல்லை எழுதும் போது அதற்கு எழுத்துகள் எவ்வாறாக அவற்றோடு இணைகின்றன, அதற்கான விதிமுறைகள் என்னென்ன என்ற தகவல், எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுவதற்கான விபரமான குறிப்புகளை ஒரு புறம் தருகிறது. 

ஒரு வசனம் அமைக்கும் போது பயன்படுத்த வேண்டிய குறியீடுகள்; அவை எங்கெங்கெல்லாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற தகவல் உள்ளது. எப்போதும் ஒற்றுமையில் அமைந்துள்ள சொற்கள், எப்போதும் பன்மையிலேயே காணப்படும் ஆங்கிலச் சொற்கள், எப்போதும் சோடிகளாக வரும் சொற்கள், சிறப்புப் பாவனைக்குரிய சொற்கள் என இவை போன்றவை தனியாக இனங்காட்டப்பட்டிருக்கிறது.

ஆங்கிலம் எத்துணை முக்கியமானது என்பது பற்றி லிஃகோ The Little Flower company எழுதி இருக்கும் கட்டுரை ஒன்று அது தன் தேசத்து மக்களை; இளைய சமுதாயத்தினரை எத்தனை அக்கறையோடு நேசிக்கிறது என்பதைப் பறை சாற்றுகிறது. ’We are interested not only in making you pass the examination, but also in shaping your mind and character’ என்று சொல்லும் அது தேசத்து இளைய சமுதாயத்துக்குக் கூறும் அறிவுரை மகத்தானதாக இருக்கிறது. அது பற்றி எல்லாம் எழுதப் புகுந்தால் இந்தப் பதிவே ஒரு அகராதி போலாகி விடும் என்பதால் கீழ் வரும் அவர்களின் வசனங்களோடு இதனை நிறுத்திக் கொள்கிறேன். ” We are proud to diclare that during the fifty years of our service to the student world, we have contributed our mite to elevate sons and daughters of india to be worthy citizens, by giving them sound and timely advice. many of our elders, we are sure, will tell you of this aspect of our service.

ஆங்கிலத்தில் நிபுணத்துவம் பெற்றுக் கொள்வதற்கான அறிவுரைகளில் இருந்து நோபல் பரிசு பெற்றோரின் விபரங்கள், சுதந்திரமடைந்த உலகநாடுகளின் விபரங்கள், உலக நாடுகளின் பாராளுமன்றங்களின் பெயர்கள், உலகத்தில் பிரபலமானவை, உலக நாடுகளின் நேர வித்தியாசங்கள், அளவை முறைகள், புத்தக அளவுகள், கணித குறியீடுகள், விதிமுறைகள், சொற்களின் மூலம் எங்கிருந்து வந்தது போன்ற தகவல்கள், சொற்களும் அதற்கான ஒலிஅமைப்புகளும் பற்றிய தகவல்கள், சொற்களைப் பிரித்தும் சேர்த்தும் வாசிக்கும் முறைமை பற்றிய தகவல்கள், வாழ்த்துக்கள் / முகமன் கூறும் முறைகள், மற்றும் நேரங்கள், ஒருவரை விழித்து அழைக்கும் பாணிகள், கடிதம் எழுதும் முறை, சில லத்தீன் சொல்லாடல்கள், உணவருந்தும் நேரங்களில் உணவு வகைமுறைகளுக்குப் பாவிக்கப்படும் சொல்லாடல்கள், ஷேக்ஸ்பியரின் 150 சொற்களுக்கான மொழிபெயர்ப்புகள், விஞ்ஞான விதிமுறை மற்றும் சொற்களுக்கான விளக்கங்கள், சில முக்கிய பத்திரிகைத் துணுக்குச் செய்திகள், சில தேர்ந்தெடுக்கப்பட்ட சொற் தொகுதிகள் என்று அது ஒரு வாழ்க்கைக் களஞ்சியமாகவே விளங்குகிறது. அவர்கள் உண்மையாகவே  ’shaping your mind and characte’. ஆங்கிலேயப் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் கூட அவர்கள் இந்த அகராதி வழியாக இந்தியத் தமிழர்களுக்கு ஊட்டி விட்டிருக்கிறார்கள்.

இனி தமிழ் மொழியில் இருக்கும் சிறப்புகளையும் அழகுகளையும் தொகுத்திருக்கும் முறைடோ இன்னும் அழகாக இருக்கிறது. தமிழ் இலக்கண அணிகள், உருபுகளுக்கான ஆங்கில பெயர்கள், வழக்கமாக உரையாடல்களில் இடம் பெறும் சிறப்புத் தமிழ் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்கள், இருப்பிட பாகங்களின் பெயர்கள், அன்றாடப் தமிழரின் பாவனைப் பொருள்களுக்கான ஆங்கிலச் சொற்கள், இடப்பெயர்கள், பலசரக்குப் பொருட்கள், நோய்கள், தானியங்களின் பெயர்கள், பழங்கள், காய்கறிகள், மரங்கள், பூக்களின் பெயர்கள், வேலைகள், ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன  மற்றும் மிருகங்களின் பெயர் அட்டவணை, ஜந்துக்களின் இரைச்சல்களின் பெயர்கள், கூட்டுப் பெயர்கள், நவரத்தினங்கள், ராசிகள், கிரகங்கள், மிருகக் குழந்தைகளின் பெயர்கள்,கணிதம், பல விதமான தமிழ் ஆங்கிலப் பழமொழிகள், எனப் பெருகிக் கிடக்கிறது விபரங்கள். கூடவே, விஞ்ஞான,பெளதீக, தாவர, உடலியல், இரசாயண,கணித, வரலாற்று, புவியியல், வர்த்தகம், அரசியல் சார்ந்த சொற்கள், என அறிவியல், தமிழ் கலாசாரத்தின் அம்சங்களையும் அது கொண்டிருக்கிறது.

6.9.1967ம் ஆண்டு டொக்டர். ராதாகிருஷ்ணன் ஆசிரியர்களுக்கு சொன்ன செய்தி ஒன்று இவ்வாறாகப் பதிவாகி இருக்கிறது. ‘The teachers should set an example to the puples by their behaviour....We should develop the habits of self - scrutiny and self- discipline......If proper attitudes are developed in our youth, we will certainly have a better future for our country'

கூடவே, வாசகர்களுக்கென சில முன்னைய கால இந்திய ஆண்மீக வாதிகளின் உன்னதமான பொன்மொழிகளைக் கட்டம் போட்டும் சொல்லி இருக்கும் இந்த அகராதி வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கான உந்து சக்தியையும் ஊக்க மருந்தையும் கூட அதன் வழியாகக் கொடுத்திருக்கிறது.

 மொழிபெயர்ப்புகளை எவ்வாறு செய்யவேண்டும் என்ற விரிவான தகவல்கள் மேலும் உபயோகமாக இருக்கிறது. முடிந்தால் அது பற்றி தனிப் பதிவாகவே எழுதத் தக்க அளவுக்கு அதில் பல உபயோகமான தகவல்கள் உள்ளன.

 ஆங்கில; தமிழ் மொழிகளை மட்டுமல்லாது அவற்றின் இயல்புகளையும் பண்பாட்டையும் வாழ்க்கை முறைகளையும் தன்னுள்ளே பொதித்து ஒரு வாழ்க்கைச் சுரங்கமாக அமைந்திருக்கிறது இந்த அகராதி.

எத்தனை செயலிகள் வந்தாலென்ன; எத்தனை சுகமாக அவை நம் விரல்களை வந்தடைந்தாலென்ன; இந்த லிஃகோ அகராதியை கையில் வைத்திருக்கும் போது ஒரு  வாழ்வியலையும் பண்பாட்டையும் வைத்திருப்பது போன்ற உணர்வு மட்டுமல்ல; பொதுநலமும், நாட்டு நலமும், சமூக நலமும், இளஞ்சமுதாயத்தினர் மீதான அக்கறையும் ஆதூரமும், மகத்தான  நாட்டுப்பற்றும், சேவை மனப்பண்மையும் கொண்ட ஒரு மனித கூட்டத்தின் மிகப்பெரும் மனங்களையும் பெரும் பேறினையும் கையில் தாங்கியிருப்பதைப் போல ஓர் எண்ணம்.

Hats Off to you guys!

உங்களாலேயும் தான் பாரதம் கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது!! 

அதன் அறம் சார்ந்த ஆத்மா இப்படியான தேசபக்தர்களாலும் தான் தூக்கி நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.

....

ஒரு குழந்தையை மடியில் கிடத்தியிருப்பதைப் போல ஒரு பண்பாட்டுப் பெட்டகத்தை என் மடியில் பெருமையோடு ஏந்தியிருக்கிறேன்.!

வாழ்க பாரத சமுதாயம்!! வாழ்க இனிது வாழ்கவே!!

No comments:

Post a Comment