Tuesday, May 5, 2020

உள்ளார உள்ளார; உல்லாலா உல்லாலா........


ஒரு மயிர் கொட்டியைக் கண்டால்
அதை வாழ விடுங்கள்
அதற்கும் இருக்கிறது
புத்தம் புதிதாய் ஒரு
வண்ணாத்திப் பூச்சி வாழ்க்கை

மொட்டுக்களையும் ஏன் பறிக்கிறீர்கள்?
 நிற மூர்த்தங்களையும்
வாசத்தின் கூறுகளையும் கொண்டு
குவலயத்துக்கான அழகை அது
கருத்தரித்துக் கொண்டிருக்கிறது
 தெரியாதா?

மண்புழுவைக் கண்டால்
அருவருப்பானேன்?
உங்கள் மண்ணை அது
ஊதியமில்லாமல் உழுகிறதே
புரிவதே இல்லையா?

கரப்பானைக் கண்டால்
காத தூரம் ஓடுவானேன்?
உங்களை ஒரு போதுமது
கடித்து விடுவதில்லையே!

முதியோரக் கண்டால்
புன்னகைக்காமல் போவதேன்?
உங்கள் எதிர்காலம் அங்கே
கைகுலுக்குவதை
நீங்கள் காண்பதேயில்லையா?

கடைசியாக ஒன்று,
யாரோ பயிர் செய்த
மாணிக்க வாசகங்களை
இலவசமாய் அறுவடை செய்து போகிறீர்களே
ஒரு கொமண்ட் போட்டுவிட்டுப் போகலாகாதா?

யசோதா.பத்மநாதன்
5.5.2020. மதியம். 1.00 மணி.  :)

( சற்றுமுன் கடைத்தெருவுக்குப் போன போது தன்னந்தனியாக ஒரு மசுக்குட்டி நான் போன பாதையை ; இப்பதான் ஒரு அரை மணி நேரம் முன்பு கடந்தது. அது தான் இந்தக் கவிதையை ( ? ) எனக்குள் விதைத்து விட்டுப் போனது. பாவம் ; சன நெருக்கடியான தெருவில் தப்பிச்சுதோ தெரியாது....)

( மேலும், ஒரு நல்ல கவிதை வாசிப்பவரையும் எழுதத் தூண்டும் என்று எங்கோ வாசித்த ஞாபகம். கடந்த சில நாட்களாக சில கவிதைகளோடு எனக்கும் சகவாசம். அது எங்கு போனாலும் என்னோடு கூடவே வருகிறது. எனக்குள்ளே தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை அது தட்டி எழுப்பி விட்டது. அதன் விளைவு தான் இது எல்லாம்....அவரை உங்களுக்கு தகுந்தபடி அறிமுகப்படுத்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அது வரை இந்தக் கத்துக்குட்டித் தனங்களை எல்லாம் நீங்கள் பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். :))

Saturday, May 2, 2020

கொரோனாவை நினைத்த படி...



கொரோனாவை நினைத்த படி
நடந்து போகிறான்
ஒரு வழிப்போக்கன்

பாதை எங்கனும்
சத்தமில்லா நிசப்தம்..

அவனுக்கோ
சட்டைப்பைக்குள் கனக்கிறது
புறாக்களின் வாழ்க்கையை
பார்த்த சலிப்பு....

குர் குர் சத்தங்கள்...
பகிர்ந்தமரும் மாடங்களில்
சல்லாப உரையாடல்கள்...
இளமையின் வழுவழுப்பில்
வழுக்கி விழும் அழகுகள்...
குறு குறு பார்வைகள்...
எதிர்க்கத் தெரியாத
அவைகளின் குணாம்சம்...
மனிதரோடு உறவாடி
பயமற்றுப் போன அன்னியோன்யம்...

கணவன் மனைவியென
பகிர்ந்துண்ட வாழ்வு...
முட்டையிட்டு குஞ்சு பொரித்து
பேறாக்கிய பெருமை...
தாயாகும் தந்தைமை...
தந்தையாகும் தாய்மை..

சகலதுக்கும் சகலருக்கும்
உரியதாகுமன்றோ
இந்த உலகு....

எனினும்,
எச்சம் எஞ்சும் மாடங்களை
சுத்தம் செய்யப் பஞ்சிப்பட்டு
அவைகளைக் கொல்லுமொரு
நஞ்சுக்கிண்ணம்!

தந்திரமாய் நஞ்சு வைத்து
கொல்லும் அந்தக் கைகளுக்கு
தெரிந்திருக்கக் கூடுமோ?
குஞ்சுகள் இன்னும்
இரைகளுக்குக் காத்திருப்பது குறித்து....
மாலை தேடி வரப் போகும்
ஜோடிப்புறா பெறப்போகும்
ஏமாற்றம் குறித்து....
மனித சகவாசத்தை
அவைகள் எவ்வளவு உண்மையென
நம்பின என்பது குறித்து...
அவைகளுக்கென்றும்
ஒரு வாழ்வு இருந்தது குறித்து
இன்னும் இன்னும்....
....................

இப்போதெல்லாம் மாடங்களில்
சத்தமே இல்லாத நிசப்தம்.
பாதை எங்கனும் காணும்
சத்தமில்லா நிசப்தம் போல....

சகலதுக்கும் சகலருக்கும்
உரியதாகுமன்றோ
இந்த உலகு....

அவனுக்கோ
சட்டைப்பைக்குள் கனக்கிறது
புறாக்களின் வாழ்க்கையைப்
பார்த்த சலிப்பு...

கொரோனாவை நினைத்த படி
நடந்து போகிறான்
ஒரு வழிப்போக்கன்.

யசோதா.பத்மநாதன்
2.5.2020.

Wednesday, April 29, 2020

கவிதை யாதெனில்...


கவிதை ஒரு சங்கீதம்
கவிதை ஒரு முரசொலி
கவிதை ஒரு பீரங்கி
பூ அம்பு
காலம் தீட்டும் ஓவியம்
இருட்டின் கண்
சூரியச் சிறகு.

உணர்வுகளின் சிரஞ்சீவிதம்
உயிரின் வியாபகம்
ஒரு குழந்தையின் அழுகுரல்
ஊமை தேக்கி வைத்த சொற்தொகுதி!.
மேலும் அது ஒரு பெருமூச்சு.

கவிஞனுக்கோ அது
துன்பத்தைக் கடக்கும் படகு
அவ்வப்போது
பாரத்தை இறக்கி வைக்கும்
சுமைதாங்கி
மேலும்
கண்ணீர் துடைக்கும்
கைக்குட்டை
சிலநேரம் குருடனுக்குக்
கிட்டிய கைத்தடி
போல்வதுமாகும்.

அபூர்வ சந்தப்பங்களில்
கவிஞன் யாவனெனில்
பிரபஞ்ச ரகசியம் ஒன்று
தன்னை வெளிப்படுத்த
தெரிவு செய்த
வரம் பெற்ற தாய்!

கண்ணுக்குத் தென்படாத
எழுத்துத் தேவதை
கொடுக்கும் ஒரு
வாஞ்சை மிக்க முத்தம்
கவிதை!

அது ஒரு குட்டிக் குழந்தை
அன்று பிறந்த
கோழிக்குஞ்சு
கடவுளின் பரிவட்டம்
இரங்கி தாய் கொடுத்த பால்.
தெரியாதவரையும் பார்த்து
புன்னகைக்கும் ஒரு
மழலை போல்வது.

தன்னைக் காட்டும் கண்ணாடி
மனசின் மொழிவடிவம்
சும்மா போகுமொரு
நிர்வாணம்.
மனுக்குல உணர்வுகளின்
வெளிச்சப்புள்ளி.
வழிப்போக்கனின் நாட்குறிப்பு.

உண்மையின் பிரகாசம்
பிரபஞ்சத்தின் சாயல்
அறத்தின்; தர்மத்தின்
நெற்றிக் கண்.
அவ்வப்போது
சீற்றத்தின் கூர் வாள்.

கோபம் போர்த்த
கவிதை ஒன்றைப்
போட்டுடைத்தால் அது
அன்பின் துகளெனவே
நொருங்கிச் சிதறும்.

அழும் கவிதை ஒன்றை
உடைத்துப் பாருங்கள்
அதுவும் அன்பென்றே
பெருகும்...

கடவுச்சீட்டின்றி பயணித்து
யாரோ ஒருவருக்கு
கொடுக்கும்
ஜீவித முத்தம் கவிதை.

இறுதியாகக் கவிதை என்பது
உயிர் உயிரோடு பேசும்
மொழிவடிவம்.
உயிர் தான் எழுதும்
 ஒரு சுயசரிதை
என்றும் சொல்லலாம்.

- யசோதா.பத்மநாதன்.-
29.4.2020.

( அண்மையில் சில கவிதைகளோடு உறவாட முடிந்தது. அதன் விளைவாக எழுந்தது இது.)

Sunday, April 19, 2020

யோகாசனம்


      
                                 
                                 



Thursday, March 5, 2020

உலகுக்கு வெளியே...


ஆங்காங்கே அலைந்துகொண்டிருக்கின்றன வயதானவர்களின் தனிமைகள்.

ஏக்கங்களும் கேட்கப்படாத கதைகளும் ஆதங்கங்கள் ஆச்சரியங்கள் என இன்ன பிறவுமாக அவை ஆங்காங்கே அலைந்து திரிகின்றன.

மேலும் அவை மனிதர் எறிந்த நூல் சிண்டுகளால் கால்களில் சிக்குண்டு தத்தித்திரிய முடியா புறாக்களின் தத்தளிப்பினைப் போல ஆங்காங்கே தத்தளித்த படியாகவும்.....

ஆஸ்பத்திரிகளில்.....

ரயில்களில்....

தரிப்பு நிலையங்களில்....

நம்மைப்பார்க்கும் அந்த ஏக்கக் கண்களில் இருந்து எம் கண்களுக்கு வந்து திரும்பும் அந்தச் செய்தி அந்தரத்தில் நமக்கும் வேண்டாமல் தொங்கித் திரிகிறது. அதைச் சுமந்தலைய எனக்கும் இஸ்டமே இல்லை....

எத்தனை ஏக்கங்களை என்னால் சுமந்தலைதல் கூடும்? எத்தனை பேருக்கு என் காதுகளை இரவல் கொடுக்க இயலும்?

புன்னகையின் பின்னே இருக்கும் அந்த வலியின் மின்னலை கண்ணில் இருந்து காதுக்குத் திருப்பும் வல்லமையை இந்த சமூகம் தனி ஒருவருக்கு அளிப்பதுமில்லை. அது குடும்ப உறவுகளுக்குள்  மட்டுமே பரிந்துரைக்கப்படத் தக்கது. அந்த உரிமை மறுப்புக்குப் பின்னே இருக்கக் கூடும் சொத்து மதிப்புக் குறித்த கணக்குவழக்குகள். உலகியல் குறித்த உன்னதக் குறிப்பேடுகள்.

குளிர்காலம் வரப்போகிறது என்று சட்டை பின்னுகிறாள் பாட்டி. அது  தன் பேத்திக்கோ அன்றேல் பூட்டிக்கோ....என்றேனும் ஒருநாள் பேத்திகளின் பூட்டிகளின் அம்மாக்கள் வரக்கூடும் பூச்செண்டுகளோடும்..... காதுகளைச் சற்று நேரம் இரவல் கொடுக்கவும் கூடும். பாட்டிக்குப் பின்னாலே இருக்கும் சொத்துமதிப்புகளை கண்களால் எடை போட்டபடி....

அவைகளின் போலிப்புன்னகைகள் விரைவில் வாடிவிடும் என்ற போதிலும் பாட்டிகளுக்கும் தாத்தாக்களுக்கும் பூக்கும் அந்த நாளொன்றின் புன்னகைப் பூக்களே போதுமானதாக இருக்கிறது இப்போதைக்கு. ஒன்றுமே இல்லாமல் இருப்பதை விடவும் அது போதும் தான்....

பின்னிய காலுறைகளும் தொப்பிகளும் சட்டைகளும் போர்வைகளும் அன்பு கொண்டு இழைக்கப்படுகின்றன. உன்னத சந்தோஷங்களை ஒவ்வொரு பின்னலும் உடுத்திக் கொண்டுள்ளன. அவைகள் கொடுக்கப்படும் போது தானே அதன் பெறுமதிகள் பெரு மதிப்புப் பெறுகின்றன.

காலம் கடந்த பின் போதிக்கின்றன அவைகள் அன்பின்; வாத்ஸல்யத்தின்; ஆதூரத்தின்; அந்தரங்கப் பெறுமதிகளை.....

அவைகள் போதிக்க கூடுமோ ’அன்பே சிவம்’ என்பதையும்...

பார்வைகளின் பின்னே தெரிகின்றன சொல்ல விரும்பும் பல கதைகள்.
புன்னகைகளின் பின்னே பிரகாசிக்கின்றன அனுபவ வெளிச்சம். பிரவகிக்கும் அந்த அனுபவ வெளிச்சம் கடலுக்குள் பெய்த மழையென... காட்டுக்குள் எறித்த நிலவென ஆகுதல் தகுமோ?

கொஞ்சம் சொன்னது கூறலும் மீண்டும் மீண்டும் தொனிக்கும் அதே பாணிப் பேச்சுக்களும் சொல்லுகின்றன எவ்வளவுகாலம் அவை சொல்லப்படாமல் தேங்கி இருந்திருக்கின்றன  என்ற செய்திகளை...

நமக்குத் தான் நேரமில்லை....எங்கே போகிறோம் என்று தெரியாமலே அலைந்த படியாகவும் அசையும் அசையாச் சொத்துக்களில் மனதைப் பறிகொடுத்த படியும் புகழ் அந்தஸ்து பணம் பதவி என விரட்டும் இவைகளின் வேகத்துக்கு ஈடு கொடுத்த படியும் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு தான் நேரமில்லை....

ஒருநாள் இவைகள் எல்லாவற்றையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடும் காலத்தை நோக்கி நகர்ந்தபடி இருக்கும் நமக்குத் தான் நேரமில்லை......

நின்று நிதானித்து வாழ்க்கையை; அதன் இயற்கையின் நியதிகளை புரிந்து, நம்மை மீள்பரிசோதனை செய்து, வாழ்க்கையைச் சரி செய்து, நிதானித்து கொள்ள; நமக்கான தனி வழியை தன்னம்பிக்கையோடு நிர்ணயித்துக் கொள்ள நமக்குத் தான் நேரமில்லை.....

எல்லோரின் பின்னே ஓடுவது சுகமும் தானே....

ஆனால் வாழ்க்கை கற்றுத்தருகிறது காதுகளின் தேவைகளை... இன்றியமையாமைகளை....

வாழ்க்கைக் காலம் மிக சொற்பமே என்பதனையும்....

உண்மையான சம்பாத்தியங்கள் என்பது காதுகளும், கண்களும், வருடும் கரங்களும், புன்னகைகளும், பரிவான சொற்களும் தான் என்பதை சொல்லுகின்றன முதியவர்களின் வாழ்க்கை எச்சங்களும் ‘முடிவுகள்’ நிர்ணயிக்கப்பட்டு  கட்டில்களில் மரணத்திற்காகக் காத்திருக்கும் மனித உயிரினங்களும்...

 4 வயது குழந்தையும், 26 வயது இளைஞனும், படித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவியும், இளம் குடும்பஸ்தனும், தேவதையை ஒத்த ஓரழகியும், கோடீஸ்வரர்களும், 3 சிறு குழந்தைகளின் தாயும், வயதான மூதாட்டியும் மூன்றாம் நபரைப் பார்த்தும் புன்னகைக்கும் ஓர் ‘சித்தம் அழகியனும்’ இன்னபிறருமாக...வயது, பால், இன, மொழி, மத வேறுபாடின்றி ஆக்களைச் சுமந்திருக்கிறது ஆஸ்பத்திரிகளின் பின்புறமாக அமைந்திருக்கும்  palliative care unit......

உண்மைகளைச் சுமந்த படியாகவும் உலகில் இருந்து ஒதுங்கிய படியாகவும்....

உலகில் இருந்து ஒதுங்கி நிற்கும் ஓர் உண்மைத் துறவி போல...

பரிநிர்வாணம் அடைந்து விட்ட புத்தனைப் போல.....

இங்கு சொல்லப்படாமல் அலைந்து திரிகின்றன பல செய்திகள்; காதுகளைத் தேடிய படி...

அநாதைகளாகத் திரிகின்றன அனுபவங்கள்....

சுவரில் மோதுண்டு மீளும் அந்த சொற் தொகுதிகள் அன்பில் தோய்ந்து போயுள்ளன. வாத்சல்யத்திலும் ஆதூரத்திலும் தோய்ந்தெழுந்த சொற்கள் விம்மித் திரிகின்றன. சில மன்னிப்புக் கோரல்கள் உரியவரிடம் போய் சேராமல் அலைவுறுகின்றன...சில காலம் கடந்தவையாகவும்....வாடிய பூக்களைப் போலவும் சருகானவையாகவும் கூட...

அவைகள் அத்தனையையும் பரிவோடு பொறுக்கி எடுத்து; அன்பாலே பின்னி எடுத்து; பத்திரப்படுத்த மாட்டேனோ? பக்குவமாய் அதை தேர்ந்தெடுத் துடுத்தி நான் மகிழ மாட்டேனோ; அந்த பரிவின் இதத்தாலே நான் நனைந்து போகேனோ........

இறுதியில் அத்தனையையும் கரைத்து, குடிக்கத் தக்கதோர் பாணமாக்கி, ஓர் அரக்கதாகமென சொட்டு விடாமல் குடித்து, இறுதியில் நானே அதுவாக ஆகி, கரைந்து, காணாமல் போகேனோ?

Wednesday, February 26, 2020

ஆஸ்பத்திரிகள்.....


’போதனா’ வைத்திய சாலைகள்.....

பாடசாலைகள் சொல்லிக்கொடுக்காத பாடங்களை சொல்லிக் கொடுக்கும் கல்விச் சாலை அது!

அவை புதிய உலகங்களையும் புதிய மனிதர்களையும் புதிய வாழ்க்கை ஒன்றினையும் அறிமுகப்படுத்துகின்றன; வாசல்களைத் திறந்து வைக்கின்றன.

வெளி மனிதர்களையும் - அவர்களின் வாழ்க்கைத் தெரிவுகளையும் - அதன் உள்ளார்ந்த பக்கங்களையும் வெளிப்படுத்துகின்றன.

மேலும், சகல மனிதர்களுக்கும் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் காத்திருப்புகளின் தார்ப்பரியத்தையும் போதிக்கின்றன.

வாழ்க்கையின் ’உண்மைகளைத்’ தோலுரிக்கின்றன.

உங்களுக்கு நானொன்று சொல்லவா?

வாழ்க்கையில் இக்கட்டுகளும் இயலாமைகளும் சோதனைகளும் வர வேண்டும்; வர விடுங்கள்.

வாழ்க்கையோடு எதிர்பாராமல் கைகுலுக்கும் அவைகளே நம் உன்னத நண்பர்கள். இதுவரை நாம் நம்பியவைகள் எல்லாவற்றையும் அலங்காரங்கள் ஏதும் இன்றி அப்படியே மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட ஒரு பழத்தைப் போல உள்ளங்கைகளில் பரிசளிப்பன.

அது ஒரு வரமாகும்.

வாழ்தலின் இன்னொரு பக்கம் அதன் மூலமாகவே விரிவு பெறுகிறது; உண்மைகள் புலர்வு கொள்ளுகின்றன! மலர்வு பெறுகின்றன.. அது வாழ்வின் அர்த்தத்தை; அதன் பெறுமதியை; இருப்பின் சிறப்பை; கொண்டாட்டத்தின் இன்றியமையாமைகளை சொல்லிக் கொடுக்கின்றது.
சந்தோஷத்தின் பெறுமதியை எடை போடவும் அதுவே சொல்லித்தருகிறது.

ஆஸ்பத்திரிகள்; ‘போதனா’ வைத்தியசாலைகள்.....

மனசாட்சி பேச ஆரம்பிக்கும் இடம்!

கடந்த காலங்கள்; அவ்வப்போது தட்டிக் குட்டி அடக்கி வைக்கப்பட்ட செய்த நன்மைதீமைகள் எல்லாம் தயக்கமின்றி எழுந்து நின்று நியாயம் கேட்கும். கூடவே, உண்மை தடைகள் ஏதுமின்றி எழுந்து நின்று வியாபகம் கொள்ளும்.

வைத்தியசாலைகள் மனிதனை தனக்குத் தானே நீதிபதியாக இருந்து பரீட்சைக்குட்படுத்த நிர்ப்பந்திக்கும்  பரீட்சைக் கூடம்!

மேலும், அது மனித நேயத்தைச் சொல்லிக் கொடுக்கும் கல்விச் சாலைகளுமாகும்....

தேவதைகளும் தெய்வங்களும் உலவும் இடம் ஆஸ்பத்திரி.
கைமாறு கருதா உதவி மற்றும் எதிர்பார்ப்பு இல்லாது வழங்கும் அன்பு - இவைகளின் பெறுமதி சார்ந்த ருசிகளை சொல்லித்தரும் அம்மா போன்றது  அது!

மறக்க முடியாத பக்கங்களை ஆஸ்பத்திரிகள் வாழ்க்கை மீது எழுதிச் செல்கிறன....

அவைகள் ஆத்மாவில் பதிவாகின்றன.

பிள்ளைகளும் பள்ளிச் சிறார்களும் வந்து கற்கவேண்டிய ‘வாழ்க்கைப் பள்ளிக் கூடம்’ ஆஸ்பத்திரி.

அது மெழுகு போன்ற  குழந்தை உள்ளத்தை கூர்உளியால் செதுக்கி சூட்சுமமான ஒளிபொருந்திய மனித உருவத்தைக் கொடுக்க வல்லதாக இருக்கிறது.

உள்ளே இருக்கும் இன்னொரு சூட்சும மனிதனை செப்பனிட்டுச் சீர் செய்கிறது; மேலும் மனிதனாக அவனை உருவாக்கிக் கொடுக்கிறது.

இலவசமாக....

அது அவனை உன்னத மனித ஜீவியாக தனக்குத் தானே தன்னை நல்லவனாக அறிமுகப்படுத்தும் அந்தரங்க நீதிபதி! ஒரு ஆத்மகரமான சுகானுபவத்தின் சுகத்தை; அதன் ஜீவிதத்தை அது உள்ளங்கைகளில் பரிவோடு  பரிசளிக்கிறது.

சமரசம் உலவும் இடமுமாக இருக்கிறது ஆஸ்பத்திரி. சக மனிதனை நிபந்தனைகள் இல்லாமல் நேசிக்கச் சொல்லிக் கொடுக்கும் ஆச்சிரமம் அது!

அதற்கு செலவில்லாத ஒரு குறைந்த பட்ச புன்னகை போதுமாக இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

அதனால் தான் ஆஸ்பத்திரி ஆதரவையும் அன்பையும் குறைந்த பட்சம் ஒரு புன்னகையையும் அதன் பெறுமதியையும் எடைபோட உதவும் தராசாகவும் சில சமயத்தில் மாறிப் புன்னகைக்கிறது.

’காலமாக’ - காலம் சொல்லிக் கொடுக்கும் பாடமாக - அது சமயா சமயங்களில் முடியுமானவர்களால் புரிந்து கொள்ளப்படுகிறது.

பள்ளிக்கூடம் மட்டுமா அது? இல்லை;

கைமாறு கருதா உதவிகள் -
நிபந்தனைகள் இல்லாத அன்புகள் -
புன்னகைகளோடும் உதவிகரமான இதயங்களோடும் நடமாடும் மனித உயிர்கள் -
ஆஸ்பத்திரிகளின் உன்னத அழகுகள்! அவை இருண்ட வானில் ஆங்காங்கே பிரகாசிக்கும் நட்சத்திரங்களைப் போல்வன.

சில உயிர்கள் விடைபெறுதலும் புதிய உயிர்களின் வரவுகளும் நடக்கும் மூல ஸ்தானம் ஆஸ்பத்திரி.

பிரிவுகளின் துயர்களும் கோபங்களின் ஆற்றாமைகளின் இயலாமைகளின் வலிகளும் ஏமாற்றங்களின் குரூர முகங்களும் ஆஸ்பத்திரிகள் கொண்டிருக்கும் இன்னொரு முகம் ஆகும்; உருவம் இல்லாமல் ஆங்காங்கே அலைந்து கொண்டிருக்கும் உணர்வுத்தொகுதி அது! ஆமானுஷமாய் அலையும் ஆவி போல்வது...
அது இருளே ஆகும்.

மனிதமும் மிருகாம்சமும் கலந்து ஒன்றாகச் சமைத்த கட்டிடக் கனி ஆஸ்பத்திரி.

அமுதமும் விஷமும் ஒன்றாய் கலந்து உருவான உருவம் அது!  பென்னாம் பெரிய வாழ்க்கை முகம் அது!!

என்றாலும் பயம் கொள்ள வேண்டியதில்லை. தன்னந்தனியாக சந்திக்க நேரும் குரூர மனித உயிரினத்தை விட அது ஒன்றும் பயப்படத்தக்க வஸ்து அல்ல.

ஒரு நல்ல ஆசிரியனைப் போல, பெரும்பாலான சமயங்களில் அது ஒரு வாழ்க்கைக் கல்லூரி. அவ்வளவே!

பெற்றோர்களே!,

உங்கள் பிள்ளைகளை ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து வாருங்கள். வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பக்கங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
இரக்கத்தையும் உதவியையும் ஆதரவையும் - அதன் பெறுமதிகளையும் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள்.
பிள்ளைகள் அவற்றின் ருசிகளை அறிய உதவுங்கள். கூடவே அவற்றின் இன்றியமையாமைகளையும்.

மனித வாழ்வின் விழுமியங்களை; இன்றியமையாமைகளை; பணமும் பணம் சார்ந்த வாழ்வும் வல்லமையோடு மறைந்து வைத்திருக்கும் நாங்கள் காட்ட விரும்பாத; அந்த விழுமியக்கனியை குழந்தைகளுக்குச் சுவைக்க கொடுங்கள்.

அவன் வல்லவனாகட்டும்;
நல்ல மனிதனாக உருவாகட்டும்!

‘சேவையே உன்னை மேலோன் ஆக்குகிறது’