அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்....
எவ்வாறான மாற்றங்களின் போதும், மாறாமல் மழைபொழிகிறது; வெய்யில் எறிக்கிறது; காற்று வீசுகிறது.
பூக்களும் பூக்கின்றன.
இந்த வருடத்து வசந்தகாலத்துப் பூக்களைப் பார்ப்போமா?
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்....
எவ்வாறான மாற்றங்களின் போதும், மாறாமல் மழைபொழிகிறது; வெய்யில் எறிக்கிறது; காற்று வீசுகிறது.
பூக்களும் பூக்கின்றன.
இந்த வருடத்து வசந்தகாலத்துப் பூக்களைப் பார்ப்போமா?
பல நாட்களாகி விட்டன இங்கு வந்து!
காலத்துக்குக் காலம் பருவங்கள் மாறுகின்றன; வருடங்கள் உருண்டோடுகின்றன; வயது ஒருபடி மேலேறுகிறது; பழையன கழிகின்றன; புதியன உட்புகுகின்றன.அனுபவங்கள் பாடங்களைச் சொல்லித்தந்தபடி நகர்கிறது.எல்லாம் அதனதன் போக்கில் நடந்தபடியே இருக்கின்றன.
![]() |
| மணிமேகலா |
மேலும் சில அபூர்வ நாட்களில் நூலகத்தில் இருந்து மற்றவர்களோடு சேர்ந்திருந்து புத்தகங்களைப் படிக்கப் பிடிக்கும்; இலியட், ஒடிசி என்ற கிரேக்க காவியங்களின் தமிழாக்கம் எல்லாம் நம் அறிவகங்களில் இருக்கிறதென்றால் பாருங்களேன்! அவைகள் எல்லாம் நமக்கு வித்தியாசமான சிந்தனை மரபுகளை, அவர்தம் வீரதீர செயல்களை; சாகச சிந்தனைப் புலங்களை நமக்கு அறிமுகப் படுத்துகின்றன.
அது போல இலவச 24 மணிநேர தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று சர்வதேச திரைப்படங்களை தொடர்ச்சியாகக் காட்சிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. மிக அபூர்வமான சிறப்பான திரைப்படங்களை அதில் எப்போதும் பார்க்கலாம். தமிழ்நாட்டுத் திரைப்படமான ‘காக்காமுட்டை’யையும் ஒருதடவை காட்டினார்கள். ஒவ்வொரு வாரத்துக்கு ஒவ்வொரு கருப்பொருளைத் தேர்ந்தெடுத்து அந்த வாரம் முழுவதும் உலக திரைப்படங்களில் அந்தக் குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்த திரைப்படங்களை திரையிடுவதும் உண்டு. நம்புங்கள் நண்பர்களே! இவ்வாறான திரைப்படங்களைப் பார்த்தீர்கள் என்றால் பெரும்பாலான தமிழ் நாட்டுப் படங்களின் மீதான மோகமும் காதலும் முற்றாகத் தீர்ந்து போவதோடு வெறுப்பே மேலோங்கிப் போகும். தமிழ்நாட்டு திரைப்படங்களின் சிந்தனைப் போக்கின் மீதான விமர்சனமே மனம் முழுக்க மிஞ்சி நிற்கும். தமிழ் தீவிர திரைப்பட ரசிகர்கள் இது குறித்து என்னை மன்னிப்பீர்களாக!
அது நிற்க!
எழுத்து வேலைகளும் அவ்வப்போது எனக்குப் பிடித்துப் போகும். சில நாட்களுக்கு சமூக வலைத்தளங்களை இரவு பகல் என்று பாராது மேய்ந்து கொண்டிருப்பேன். தத்துவ முத்துகளைச் சேகரிப்பேன். அவற்றில் பிடித்தவற்றை எல்லாம் ஓர் அழகிய கொப்பியில் சிரமம் பாராது குறிப்பெடுத்து வைத்துக் கொள்வேன். சோர்ந்துபோகும் சில நாட்களில்; எதுவும் செய்யப் பிடிக்காத பொழுதுகளில்; இந்தக் கொப்பியை எடுத்து மீண்டும் படித்துப் பார்ப்பேன். அது ஒரு தேநீரை போல; ஓரு நீரூற்றைப் போல, எனக்குள் உற்சாகத்தை உற்பவிக்கும். வாழ்த்து அட்டைகள் செய்வது இப்போது தொற்றிக் கொண்டிருக்கிற புதியதொரு ஆர்வக் கோளாறு. நான் நடத்தி வரும் முதியோர் குழுவுக்கு இந்த கிறாஃப்ட் வேலையை அறிமுகப் படுத்தியதில் இருந்து எனக்கும் தொற்றி விட்ட வியாதி இது.
இப்போது படங்களுக்கு வண்ணம் தீட்டும் பொழுது போக்கில் இருந்து விலகி அதனைத் தைத்துப் பார்த்தால் என்ன என்று தோன்றி, அதையும் தைத்துப் பார்த்து விட்டு அந்தப் போதையில் இருந்து விலகி, அவற்றை எல்லாம் உங்களுக்குச் சொல்லிப் போக வந்திருக்கிறேன்.
![]() |
| செழித்து வளர்ந்துள்ள கறிவேப்பிலைச் செடி |
![]() |
| மதாளித்து நிற்கும் வாழை |
![]() |
| கத்தரிச் செடி |
![]() |
| மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? |
![]() |
| மறைந்திருந்து தோட்டம் பார்த்துச் சொக்கிப் போயிருக்கும் புத்தர் |
![]() |
| தேனீக்களுக்காக மாத்திரமே விடப்பட்டிருக்கும் துளசிச் செடி. |
![]() |
| இது ஒரு மரம் தான் என்றால் பாருங்களேன்! |
![]() |
| கொத்தாகப் பூத்திருக்கும் றோசாச்செடி |
![]() |
| மறைந்திருந்து அழகு சேர்க்கும் றோசாச்செடி |
![]() |
| சின்ன இடத்திலும் செழித்துச் சிரிக்கும் கனகாம்பரம் |
![]() |
| மாதுளை |
![]() |
| முருங்கை |
![]() |
| இலங்கையில் முற்றாக அழிந்து போய் விட்ட முள்முருக்கு. |
பாடல்:
”கலம்செய் கோவே! கலம் செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன் மலர் அகன் பொழில் ஈமத்தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே!” - (புறம் 256)
- (பாடியவர் பெயர் தெரியாது)
தெளிவுரை:
ஈமத்தாழி (அந்தக் காலத்துச் சவப்பெட்டி) செய்யும் பெரியவரே!
வண்டிலின் சக்கரத்தோடு அமர்ந்திருக்கிற பல்லியும் சக்கரத்தோடு சேர்ந்து பயணிக்கிற மாதிரி, நானும் என்னுடய தலைவனோடு ( கணவனோடு) சேர்ந்து எல்லா இன்பதுன்பங்களிலும் சேர்ந்தே பயணித்து ( இதுவரை) வந்து விட்டேன்.
அதனால் அவருக்கு ஈமத்தாழி செய்யும் போது ( சவப் பெட்டி) அந்த ஈமத்தாழியில் எனக்கும் கொஞ்சம் இடம் வைத்து சற்றே அகலமாகச் செய்ப்பா. என்கிறாள் இந்தப் பெண்.
அளவு அழகாக இருக்கிறது இந்தப் பாடல் இல்லையா? முதலாம் நூற்றாண்டில் இப்படி ஓர் அழகிய கணவன் மனைவி இருந்திருக்கிறார்கள் பாருங்கள்!
இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து இருந்தது மாதிரி போகிற பயணத்திலும் தன் தலைவனோடு சேர்ந்தே போக விரும்புகிறாள் இந்தப் பெண்.
இந்தப் பாடலை இன்று தற்செயலாகப் பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை எனக்குத் தந்தவர் திருமதி. சந்திரலேகா. வாமதேவா அவர்கள். இன்று அவரைச் சந்திக்கச் சென்ற போது, அவர் தான் படித்த புறநானூற்றுப் பாடல் ஒன்று பற்றிப் பேசினார். அதை ஒரு தடவை பார்ப்போம் என்று புத்தகத்தைத் தட்டிய போது தான் இந்தப் பாடல் கண்ணில் தட்டுப்பட்டது.
ஆர்வம் திசைமாறி இங்கு கொண்டுவந்து விட்டு விட்டது.
வாழ்க்கைப் பயணமும் அது போலத் தானே!
மேலும், இந்தச் சவப்பெட்டி தொடர்பாக நடந்த ஒரு சம்பவமும் கூடவே நினைவுக்கு வந்தது. அது ஈழத்தின் போர் காலம். நான் அப்போது யாழ்ப்பாணத்தில் படிப்பின் நிமித்தம் தங்கியிருந்தேன். போர் உச்சமடைந்த காரணத்தால் ஊருக்குத் திரும்பிய போது பயணம் தடைப்பட்டு சாவகச்சேரியில் நம் உறவினர் ஒருவரின் வீட்டில் நிற்கவேண்டியதாகிப் போயிற்று.
எங்கும் போர் வாசனை! குண்டு வீச்சுகள்!! போர் தன் கோரமுகத்தை எங்கும் காட்டிய படி இருந்தது. சாவகச்சேரியில் கூட போர் விமானங்களும் குண்டு வீச்சுகளும் நிகழ்ந்த வண்ணமாகவே இருந்தது. அதனால் மக்கள் எல்லோரும் விளக்குகளை அணைத்து விட்டு வீடுகளுக்குள்ளும் பங்கர்களுக்குள்ளும் முடங்கியிருந்த காலம் அது! பலர் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம்பெயர்ந்து கொண்டும் இருந்தார்கள்.
என் உறவினர்களுக்கு இரண்டு சிறு பிள்ளைகள் இருந்ததால் அவர்கள் வீட்டை விட்டுச் செல்வதில்லை என்ற முடிவில் இருந்தார்கள். ஒருநாள் இரவு வீட்டுக்குள் மாத்திரம் ஒரு விளக்கை ஏற்றி வைத்து விட்டு எதிர்கால நிலைமைகள், போர்கால நிகழ்வுகள் குறித்து பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது தகப்பனார், உறுதிபட நாம் வீட்டை விட்டு எங்கும் ஓடப் போவதில்லை என்றும்; தற்செயலாகக் குண்டு விழுந்து தான் இறக்க நேர்ந்தால் தனக்கு ஒரு சவப்பெட்டி வாங்கி தன்னை எரித்து விட்டு நீங்கள் போனால் அது போதும் எனக்கு என்று தன் மகனாரிடம் கூறி, அதை மாத்திரம் செய்து விடு என்றார்.
இரண்டு மூன்று நாட்களில் போரின் உக்கிரம் மேலும் அதிகமாயிற்று. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் இடம்பெயர்ந்து விட்டார்கள். குண்டுகள் அருகருகாக விழ ஆரம்பித்து விட்டன. நமக்கும் இடம் பெயர வேண்டிய நிர்ப்பந்தம்.
என் மாமி ’இனி பிள்ளையளை வச்சுக் கொண்டு இருக்க ஏலாது; நாமும் வெளிக்கிடுவோம்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். இவற்றை எல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த மகன் சொன்னார், ‘அப்பா நாங்களும் இப்பவே ஒரு சவப்பெட்டியை வாங்கி வைத்திருப்போமா? தற்செயலாக ஏதாவது ஒண்டு நடந்து, எனக்குச் சவப்பெட்டி வாங்க முடியாமல் போயிற்றா பிறகு நான் என்ன செய்யிறது? என்று கேட்டார்.
.........இப்படி எத்தனை எத்தனை கதைகள்.......சில சுவைக்கத் தகுந்தவை,...சில சிரிக்கத் தகுந்தவை... சில கதைக்கத் தகுந்தவை... சில அசை போடத் தகுந்தவை.....சில மறக்க முடியாதவை..... சில மறக்கக் கூடாதவை......மேலும் சில மறக்கவே முடியாதவை.....