Wednesday, June 2, 2010

குழந்தைமை

30.05.2010 மாலை திரு. பாஸ்கரன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் இலங்கையில் இருந்து வருகை தந்திருக்கும் எழுத்தாளர் திரு.எஸ்.ரஞ்சகுமார் அவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று அம்பி உணவகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.மெல்போர்னில் நடைபெற்ற (22.05.2010) எழுத்தாளர் விழாவில் இடம்பெற்ற சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினைப் பெற்றுக் கொண்டவர் இவர் என்பதும் கோசலை,மோகவாசல் என்ற கதைகள் மூலமாக ஈழத்து மக்களுக்குப் பரீட்சியமானவர் இவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

அவரிடம் கொடுத்தனுப்பப் பட்டிருந்த எழுத்தாளர் விழாவில் வெளியிடப் பட்ட 'பூமராங்'என்ற புத்தகத்தை சகோதரன்.கானா.பிரபாவிடம் இருந்து பெற்றுக் கொண்டேன்.அடுத்தநாள் காலை தந்தையோடு வைத்திய நிலையத்தில் வைத்தியருக்காகக் காத்திருந்த நிமிடங்களில் வாசித்து முடித்த கதை ஆழியாள் எழுதிய 'ஒரு குட்டி இளவரசியுடனான வானவில் நாட்கள்'அதனைக் கதை என்று சொல்வதை விட ஒரு அனுபவப் பகிர்வென்றே சொல்லலாம்.

குழந்தைகளுடனான அனுபவங்கள் எப்போதும் சுவாரிஸமானவை.ரம்யமானவை.வியக்கவைக்கும் கற்பனைகள் நிரம்பியவை.அழகுவாய்ந்தவை.ஆழியாள் அக்கதையை இவ்வாறு முடிக்கிறார்.ஒரு குழந்தையுடனான அவரின் உரையாடல் இவ்வாறு தொடர்கிறது.

'....உனக்கு எந்த மாதிரியான நாள் பிடித்தமானது என்று கேட்கிறேன்.நீலமாய் ஆகாயம் தெரியும் நாட்களில் உனக்கு விருப்பம் என்கிறாய்.அதனால் தான் உன் சாப்பாட்டுத் தட்டத்திலும் அந்த நிறம் இருக்கிறது என்கிறாய். பிறகு நீல வானத்தை விடவும் கடும் நாவல் நிற வானில் வெள்ளி நிறத்து நட்சத்திரங்கள் மின்னும் நாள் தான் உனக்கு விருப்பம் என்கிறாய்.அப்படியான வானத்தை நீ பார்த்திருக்கிறாயா என்று என்னிடம் கேட்கிறாய்.இது வரை நான் பார்க்கவில்லை.உன்னைப் போலவே நானும் கடும் நாவல் நிற வானில் வெள்ளி நிறத்து நட்சத்திரங்கள் மின்னும் நாளைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறேன் என்றேன்.நீ சிரிக்கிறாய்.சில வாய்கள் மேலும் சாப்பிட்டு விட்டு மீண்டும் சிரிக்கிறாய்.இரவுகளில் நித்திரை கொள்ளப் போகும் போது கடும் நாவல் நிற வானையும் ஒளிரும் நட்சத்திரங்களையும் நினைத்துக் கொண்டு தூங்கினால் கனவில் அவை வந்து எம்மைக் குஷிப்படுத்தும். கனவில் தான் அது நடக்கும். உண்மையில் அதற்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை என்றாய்.ஏன் அப்படிச் சொல்கிறாய் என்றேன்.அப்படிக் காத்திருப்பவர்கள் முட்டாள்கள் என்றும் அதனால் தான் அவர்கள் தலையில் வெள்ளிகள் தோன்றி கண்கள் பூஞ்சையாகிப் போகின்றன என்றும் என் நரைத்த தலையைப் பார்த்துச் சொன்னாய்.'

எவ்வளவு அழகாயிருக்கிறது இந்தக் குழந்தைகள் உலகம் என்று பாருங்கள். இப்படித்தான் சுமார் 3 வருடங்களின் முன்னால் ஆண்டு 4 வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் பாடத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை அவ்வகுப்பு ஆசிரியர் விடுமுறையில் போனதால் எனக்கு வாய்த்தது.ஒரு நாள் உங்களுக்குப் பிடித்தமான விடயம் பற்றி 10 வசனங்கள் எழுதுமாறு கேட்டேன்.ஒரு சிறுவன் எழுதியிருந்தார்.இப்படி,

எனக்கு சித்திரம் விருப்பம்.
எனக்கு மிருகம் கீற விருப்பம்.
எனக்கு விருப்பமான மிருகம் முதளை.
எனக்கு முதளையின்ர பல் விருப்பம்.
நான் இப்ப பல்லி கீறினனான்.
இந்தப் படத்தில ஒரு பல்லி நடக்குது.
பல்லிக்குப் பசிக்குது.
அது பூச்சி தேடுது.
பூச்சி புல்லுக்கை இருக்குது.
பிறகு நான் படம் கீறுற ஆளா வரப் போறன்.'

இது போல யுகமாயினியில் எழுதும் இரா. எட்வினை எனக்கு நிரம்பப் பிடிக்கும். கடசியாக நான் பார்த்த கடந்த மாதச் சஞ்சிகையில் பல மாதங்களின் பின் அவரின் எழுத்தைக் காண முடிந்தது.பத்துக் கிலோ ஞானம் என்ற தலைப்பில் குழந்தைகளைப் பற்றிய அவர் அனுபவத்தை எழுதியிருந்தார்.அந்த உரையாடல் இப்படித் தொடர்கிறது.பேருந்தில் பக்கத்து சீட் குழந்தை அவள்.

'மாமா அந்தக் கோழி ரொம்ப அழகா இருக்குள்ளே?
ஆமாண்டா
உங்களுக்கு மந்திரம் தெரியுமா?
தெரியுமே..
அப்ப ச்சூ காளி மந்திரம் சொல்லி என்னை அந்தக் கோழிப் படமா மாத்துங்க பிளீஸ்?
எதுக்குடா கோழிப்படமா மாத்திட்டு கோழியாவே மாத்திடறேனே?
வேணாம் லூசு மாதிரிப் பேசாம என்னக் கோழிப்படமா மாத்துங்க.
ஏண்டா கோழியாவே மாத்திடறேனே?
மக்கு.. மக்கு.. கோழியா மாறினா.. அறுத்துருவாங்கல்லே?

அவளது ஞானம் அது.

வேண்டாத மனிதர்களையும் வேண்டாத பொருட்களையும் வைத்து விளையாடுபவர்கள் குழந்தைகள் என்றும் எங்கோ பார்த்தேன்.அதனால் தான் அவர்கள் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுகிறார்கள் போலும்.அவர்களது உலகில் கோபம் இல்லை,பொறாமை இல்லை,எரிச்சல் இல்லை,எதையும் ஒழித்து வைத்து நடக்கும் தன்மை இல்லை,குரூரம் இல்லை,கவலை இல்லை. எவ்வளவு ரம்யமானதாகவும் பரிசுத்தமானதாகவும் அது இருக்கிறது.

அதே கட்டுரையில் எட்வின் எழுதும் போது ஒரு பஸ் பயணத்தின் போது கிராமத்துக் கிழவியில் உரத்த குரலினாலான முறைப்பாடுகள் பஸ்ஸுக்குள் இருந்த எல்லோரையும் எரிச்சல் படுத்தியதால் அம்மூதாட்டி இறங்கும் போது எல்லோரும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட வேளையில் ஒரு குழந்தை மட்டும் "நீ பயப்படாம போ பாட்டி.குச்சி எடுத்து வந்து உனக்குச் சோறு போடாத அத்தையையும் மாமாவையும் வெளு வெளு என்று வெளுக்கிறேன்" என்று சொன்னதாக எழுதியிருந்தார்.

சிந்திக்க வேண்டிய கேள்விகளைப் போகிற போக்கில் சிந்தி விட்டு விட்டுப் போகின்றன குழந்தைகள்.எங்களைச் சிந்திக்கச் சொல்லி.
அவ்வளவு அழகும் பரிசுத்தமுமாக இருந்த அவர்களின் உலகம் எப்படிப் பிறகு தடம் புரண்டு போகிறது? எங்கு அந்த மாற்றம் நிகழ்கிறது? சமூகமும் குடும்பமும் சூழலும் குழந்தைகளிடம் எத்தகைய மாற்றங்களைச் யாரும் காணாத ஒரு பொழுதுகளில் செலுத்தி விடுகிறது. அவைகளில் எவை சரி எவை பிழை?அவர்களின் சுயாதீனமான சிந்தனைகளை எக் காரணிகள் தடைப் படுத்துகின்றன? நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது.வானொலியில் கேட்ட ஒரு கோமல் சுவாமி நாதனின் நகைச்சுவை ஒன்று ஞாபகம் வந்து போகிறது. அது இது தான்.

ஒரு சிறு வயதுக் குழந்தையின் முன்னால் ஒரு கிலுகிலுப்பையைக் காட்டுங்கள். அது என்னமாய் சிரிக்கிறது. அதையே ஒரு 80 வயதுத் தாத்தாவுக்கு முன்னால் காட்டிப் பாருங்க.அவருக்கு என்னமாய் கோபம் வருகிறது? எப்படி இருந்த தாத்தா எப்படி ஆகிட்டார் பாத்தீங்களா?

Wednesday, May 26, 2010

Super Singer Junior 2


தந்தை நலமாக வீடு வந்து சேர்ந்தார்.பெரியதொரு ஆறுதல் அது.

மகிழ்ச்சி என்னவென்றால் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது மட்டுமல்ல எனக்கு இன்னும் இரண்டு வாரங்கள் விடுமுறை இருப்பதும் தான்.

குளிர் காலம்;இவ்வாரம் முழுக்க மழை வேறு.தற்காலங்களில் குப்பையாக மலிந்து போயிருக்கும் படங்கள் 4 சேர்ந்தவை 50 சதங்களுக்கு ஏகபோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்க நான் ஐங்கரன் வீடியோவைத் துளாவியதில் பரிசோதனை முயற்சியாக வாங்கி வந்த D.V.D யின் பெயர் 'சுப்ப சிங்கர் யூனியர் 2'

மதிய உணவின் பின்பான செல்ல நித்திரையின் பின் மாலை நேரச் சிற்றுண்டியும் அவரவர் தேனீர் கோப்பைகளுடன் குடும்பமாக வரவேற்பறையின் வசதியான இருக்கைகளில் சாய்ந்து கொண்டோம்.ஒரு பக்கச் சுவர் பூராகவும் இடம் பிடித்திருந்த கண்ணாடி ஜன்னலுக்கப்பால் மழையும் மழையில் நனையும் மரங்களும் மங்கலான பொழுதும் அழகாய்த் தான் இருந்தன.மரங்கள் இலையுதிர்க்க இன்னும் காலம் இருக்கிறது.அதனால் அவை காற்றின் திசையை உரக்கச் சொல்லிய வண்ணம் இருந்தன.

டிஜிட்டல் டீவீ யில் காட்சி விரிய ஆரம்பித்தது.விஜய் TV யில் பாடும் ஆறு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர் சிறுமிகள் தம் ஆற்றலைக் காட்ட ஆரம்பித்தார்கள்.நடுவர்களாக பாடகர்கள் சித்ரா,மனோ,மற்றும் மால்குடி சுபா. இவர்களுடன் குரல்வள நிபுணர் திரு.ஆனந்.வைத்தியநாதன் அவதானிப்பாளராக இருந்தார்.

அல்கா,ப்ரியங்கா,சிறிநிஷா,நித்யசிறி,சஹானா என்று பெண்குழந்தைகள் கலக்க; ஆண்குழந்தைகள் வரிசையில் ரோஷன்,பால சாரங்கன்,சிறிகாந்,ஷரத்,பிரசன்னா,ஷ்ரவன் என்று கலக்கினார்கள்.

ஆஹா! என்ன அருமை! என்ன திறமை!

ரோஷன் பாடுகின்ற போது யாரோ இனிய வாத்யம் ஒன்றை மீட்டுவது போல இருக்கிறது அச்சிறுவனின் குரல்.ஹர்மொனியின் தளத்துக்கு மனங்களை இட்டுச் செல்லும் ஆற்றல் மென்மையும் இனிமையும் சுகமும் பொருந்திய அந்தக் குரலுக்கு நிறையவே உண்டு. அல்காவும் பிரியங்காவும் பாடும் போது தேனாறே பாய்கிறது காதுகளில்.ஷரத் பாடும் போது தென்படும் கைவிரல்களின் அசாத்தியமான வசீகரம் அச் சிறுவன் பியானோவோ அல்லது கீபோட்டோ இசைத்தால் அவ் விரல்கள் எவ்வளவு அழகாக அதில் நடனமிடும் என்று தோன்றும் கற்பனையை நிறுத்த முடியாதிருக்கிறது.'விரல்களின் இசை மீதான நடனம்' என்று ஒரு புது கலையே அதன் பின்னர் தோன்றக் கூடும்.மற்றவர்களின் திறமைகள் வியக்க வைக்கின்றன.ஆறு வயது சிறுவன் சிறிகாந் பாடும் போது அவனின் திறமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.அந்த வயதில் பாடல்களை பாடமாக்கி இசைக்கு சற்றும் பிசகாமல் பாடுவது என்ன அத்தனை லேசா?

இது ஒரு பாடல் போட்டி. 25 லட்சம் இந்திய ரூபாய்கள் பெறுமதியுள்ள வீடு பரிசு. அத்துடன் கூடவே சுப்பர் சிங்கர் யூனியர் 2 என்ற பட்டமும் தான்.இவர்களையும் இவர்களின் பாடல்களையும் பார்த்த பின் தான் பாடல்களுக்குள் இத்தனை சங்கதிகள் உள்ளன என்ற விடயமே எனக்குத் தெரிந்தது.எத்தனை நுட்பம்! எத்தனை நயம்! எத்தனை சங்கதிகள்!அதனை அக்குழந்தைகள் உடனடியாகப் பிடித்துக் கொள்கிற கெட்டித் தனம்!....அப்பப்பா... வியக்காமல் இருக்க முடியவில்லை.

நடுவர்களில் குறிப்பாக மனோ பற்றிக் கட்டாயம் சொல்ல வேண்டும்.அவரது spirit மிக உயர்வானது.அவர் குழந்தைகள் மீது காட்டுகிற நேசம்,அன்பு,பற்று... அவர்கள் நொந்து விடக் கூடாது என்று கொள்கிற அக்கறை... பிள்ளைகளை இலகுவாக்கி அதே நேரம் சொல்ல வேண்டியதை நோகாமல் சொல்லும் பாங்கு ...இனி எப்போதேனும் மனோவின் பாடலைக் கேட்க நேர்ந்தால் குரலோடு கூடவே நல்ல மகிழ்வான குணங்களோடு சேர்ந்த மனோ நினைவுக்கு வந்து போவார்.அதிலும் குறிப்பாக 6 வயது சிறுவன் சிறிகாந் விடை பெறும் போது அக்குழந்தையோடு அவர் கலந்து கொண்ட நிமிடங்கள் மிகப் பெறுமதியானவை. பாடகி சித்ரா மிக நுட்பமான பார்வைக்குரியவராக இருந்தார்.தொழில் துறை சார்ந்த அனுபவத்தோடு கூடிய அவரது கருத்துரைகள் வளரும் அக்குழந்தைகளுக்கு மிக உபயோகமாக இருந்திருக்கும்.

பாலசாரங்கன் விடை பெற்ற நிமிடம் உணர்வு பூர்வமாக இருந்த அதேவேளை அச்சிறுவனின் ஆளுமையும் அந்த நிலையை அவன் எதிர் கொண்ட விதமும் அச் சூழலைக் கையாண்ட நேர்த்தியும் பெரியவர்களுக்கே இயலாதவை.சுற்றியிருந்த எல்லோரும் நெகிழ்ந்த போதும் நள்ளிரவில் விரியத் தயாராக இருக்கும் குண்டு குண்டான மல்லிகை மொட்டுக்களைப் போன்ற பற்களால் அச்சிறுவன் காட்டிய புன்னகை அதற்குள் ஒழிந்திருந்த ஒருவித அமானுஷமான குண இயல்பு அது ஓர் ஆத்மாவின் புன்னகை என்பதை நிச்சயம் பார்வையாளருக்குச் சொல்லியிருக்கும்.

இவையெல்லாம் அவர்களுக்கு இறைவன் அளித்த அருங் கொடைகள் என்பதில் சந்தேகமில்லை. அல்லது அவை அவ் ஆத்மாக்கள் பலபிறப்புகளால் பெற்று வந்த வரங்களாகவும் இருக்கலாம்.அத்தனை அற்புதமும் கச்சிதமுமாக அமைந்திருந்தது அது.

மார்கழியில் இந்தியா போகும் போது அல்கா,ப்ரியங்கா,ரோஷன், பாலசாரங்கன்... இவர்களைக் கட்டாயம் சந்தித்தாக வேண்டும்.ரோஷனின் குரலும் சாரங்கனின் புன்னகையும் பிரசன்னாவின் கண்களும்,ஷரத்தின் நேர்த்தியான கைவிரல்களும் அல்கா,பிரியங்காவின் தேன் குரலும் உலகத்து அளவு கோல்களால் அளக்கப் பட முடியாதவை.இவற்றையெல்லாம் பார்த்தும் கேட்டும் வெகுமதிகள் அளித்தும் உச்சி மோர்ந்து என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டும் வரவேண்டும்.அப்போது தான் என் மார்கழிப் பயணம் நிறைவு பெறும்.என் ஆத்மா திருப்தியுறும். உண்மையாக.அவர்கள் தேவதைகளால் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறார்கள்.அவர்களின் திறமைகள் அசாதாரணமானவை.

இன்னும் பார்க்க நிறைய இருக்கின்றன.

வெளியே இன்னும் மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது.முற்றிலும் வேறானதோர் உலகில் நான்.

Thursday, May 20, 2010

நாளுக்கு ஒரு நன்மை- அ. முத்துலிங்கம்

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தந்தையாரின் சத்திர சிகிச்சை காரணமாக வைத்திய சாலைக்கும் வீட்டுக்குமாக ஓடியதில் நாளாந்த வேலை வெகுவாக மாறிவிட்டது.இப்போது தேறி வருவது மிகுந்த ஆறுதலை அளிக்கிறதெனினும் குறைந்த பட்சம் இன்னும் இரண்டு வாரத்துக்கு ஓட்டம் இவ்வாறே இருக்கப் போகிறது.

அது வரை உங்களுக்காக நான் அடிக்கடி வாசிக்கச் செல்லும் எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்களின் வலைத் தளத்தில் இருந்து பெறப்பட்ட ஒரு நனைவிடை தோய்தலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அவரது வலைத் தளம் amuttu.com




நான் அப்போது பொஸ்டனில் இருந்தேன். எங்கள் வீட்டில் இரண்டு விதமான ஆட்கள் இருந்தார்கள். உட்கார்ந்து வேலைசெய்துவிட்டு நின்று இளைப்பாறுபவர்கள்; நின்று வேலை செய்துவிட்டு உட்கார்ந்து இளைப்பாறுபவர்கள். நான் மூன்றாவது வகை. நின்று இளைப்பாறிவிட்டு உட்கார்ந்து இளைப்பாறுபவன்.

அப்படியிருக்க அன்று அதிகாலை சூரியன் எழும்ப முன்னர் நான் எழும்பிவிட்டேன். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அந்த நேரத்தில் யார் தட்டுவார்கள் என்று நான் யோசிக்கவில்லை. திறந்துவிட்டேன். பார்த்தால் என்னிலும் உயரமான ஒரு whitetail deer. ஆண் மான் என்றபடியால் இரண்டு பக்கமும் கிளைவிட்டு பரந்த கொம்புகளை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு நின்றது. நான்கு கால்களையும் சரிசமமாக ஊன்றி பக்கவாட்டில் நின்று முகத்தை மாத்திரம் திருப்பி என்னை பார்த்தது. வீட்டு அபாய மணியை அணைக்க மறந்துவிட்டதால் அது அலறத்தொடங்கியது. வீட்டில் அன்று தூங்கிய அத்தனை நின்று இளைப்பாறுபவர்களும், உட்கார்ந்து இளப்பாறுபவர்களும் ஓடிவந்தார்கள். அப்ஸராவும் ஓடிவந்து என்னைக் கடந்து போனாள். நான் அவளைத் தூக்கிய பிறகும் அவள் கால்கள் ஓடிக்கொண்டிருந்தன. இந்தச் சத்தத்திலும் கலவரத்திலும் மான் துள்ளித் திரும்பி ஓடிவிட்டது. அபாய மணியை அணைத்துவிட்டு மற்றவர்கள் திரும்ப படுக்கைக்குப் போய்விட்டார்கள். அப்ஸரா மாத்திரம் என்னுடன் தங்கினாள்.

அவளுக்கு வயது ஐந்து. அறிவாளி. பிரச்சினைகள் என்றால் நான் ஆலோசனை கேட்பது அவளிடம்தான். எதற்காக மான் வந்து கதவை தட்டியிருக்கும் என்றேன். அது திரும்பி ஓடிவிட்ட துக்கம் என்னிலும் பார்க்க அவளுக்கு அதிகம். கண்களில் நீர் தளும்பி நின்றது. வீட்டுக்கு பின்னால் இருக்கும் காட்டில் பல மான்கள் வாழ்ந்தன. அவ்வப்போது அவை வரும், ஆனால் கதவை தட்டுவதில்லை. அப்ஸரா யோசித்துவிட்டு காலை வணக்கம் சொல்வதற்காக இருக்கலாம் என்றாள். நான் சரி அப்படித்தான் இருக்கும் என்று சொல்லி சிரிப்பு காட்டினேன். அவளும் சிரித்தாள். வந்த கண்ணீரைக் காணவில்லை. எப்படியோ கண்ணீரை கண்களால் உறிஞ்சி உள்ளே இழுத்துவிட்டாள்.

பெற்றோர் தூங்கும்போது முழு வீடும் அவளுக்குத்தான் சொந்தம். 'இன்று என்ன நல்வினை?' என்றாள். பூஞ்செடிக்கு தண்ணீர் ஊற்றலாம் என்று சொன்னேன். அவள் சின்னத் தலையை ஆட்டிவிட்டு போனாள். நாளுக்கு ஒரேயொரு நன்மை செய்தால் போதும் என்பது அவள் கற்றுக்கொண்டது.

நான் சிறுவயதில் படித்த பள்ளிக்கூடத்தில் ஒரு வாத்தியார் படிப்பித்தார். காந்தி வாத்தியார் என்று பெயர். ஐந்தடி நாலு அங்குலம் உயரம் இருப்பார். மேல்சட்டை அணியமாட்டார். இரண்டே இரண்டு வேட்டிகள் அவரிடம் இருந்தன. ஒன்று கிழிந்தால்தான் இன்னொரு புதிசு வாங்குவார். காந்திபோல ஒரு போர்வைதான். உரத்துப் பேசத் தெரியாது. சிரிக்கும்போதுகூட இரண்டு ஸ்வரத்தில் மட்டும் சிரிப்பார். காந்தி வைத்திருந்ததுபோல உயரமான தடியை அவர் வைத்திருக்கவில்லை. மற்றும்படிக்கு காந்தியைப் போலவே நடந்துகொண்டார். அவர் என் அண்ணனைப் படிப்பித்தார்; தங்கையை படிப்பித்தார்; தம்பியை படிப்பித்தார். ஆனால் என் வகுப்பை அவர் படிப்பிக்கவே இல்லை. ஆனாலும் எனக்கு அவரிலே பிரியம் இருந்தது. அவர் அந்த வயதில் எனக்கு சொன்னது 'ஒரு நாளைக்கு ஒரு நன்மை செய்தால் போதும்' என்பது. அது சொல்லி பல வருடங்களாகிவிட்டது என்றாலும் அதை இன்னும் அவ்வப்போது நான் கடைப்பிடித்து வந்தேன். அப்ஸராவுக்கும் சொல்லியிருந்தேன். பெரிதாக ஒன்றும் இல்லை. பெரியவர்களுக்கு வணக்கம் சொல்வது; அஞ்சல் பெண்ணுக்கு நன்றி கூறுவது; முன்பின் தெரியாத ஒருவரைப் பார்த்து முறுவல் செய்வது. அவ்வளவுதான். அப்ஸரா ஒவ்வொரு செடியாக தண்ணீர் ஊற்றி வந்தாள். செடிக்கு போன தண்ணீரிலும் பார்க்க வெளியே அதிகமாக நீர் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் என் நண்பர் தொலைபேசியில் அழைத்திருந்தார். ஏதோ பேச்சில் காந்தி வாத்தியாருடைய பெயர் வந்தது. அவரும் மனைவியும் கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்றார். எனக்கு காந்தி வாத்தியாருடன் 50 வருடங்களுக்கு மேலாக தொடர்பே இல்லை. எனினும் இன்றைய என் நன்மை இதுதான் என்று தீர்மானித்து நண்பரிடம் முகவரி பெற்று காந்தி வாத்தியாருக்கு என்னால் இயன்ற சிறு தொகை பணம் அனுப்பிவைத்தேன். இங்கே சிறுதொகை ஆனால் இலங்கையில் அது பெரும் கொடை. அனுப்பியதுடன் அதை மறந்துபோனேன்.

அவர் பற்றிய சின்னச் சின்ன சம்பவங்களை மறக்க முடியவில்லை. நான் புதுப் பாடப் புத்தகம் வாங்கியதும் அதற்கு மாட்டுத்தாள் கடதாசியில் உறைபோட்டு கொண்டுபோய் என்னுடைய பெயரை எழுத காந்தி வாத்தியாரிடம் கொடுப்பேன். புத்தகங்களில் பெயர் எழுதித் தருவது அவர்தான். அவர் என் பெயரை நான் எதிர்பார்த்த மாதிரி முன்பக்கத்திலோ, மட்டையிலோ எழுதாமல் இருபதாம் பக்கத்தில் எழுதினார். ஏன் என்று கேட்க பதில் சொல்லவில்லை ஆனால் 'புத்தகம் பத்திரம்' என்றார். அப்பொழுது எங்கள் பள்ளிக்கூடத்தில் புத்தகங்கள் களவு போய்க்கொண்டிருந்தன. இரண்டே இரண்டு நாளில் என் புத்தகமும் களவு போனது. நான் காந்தி வாத்தியாரிடம் போய் முறைப்பாடு செய்தேன். அங்கே படிப்பித்த எல்லா வாத்தியார்களிலும் இவரிடம் தான் பிரம்பு என்ற பொருள் இல்லை, அடிக்கவும் மாட்டார். ஆனாலும் இவரைத்தான் நான் தெரிவு செய்தேன்.

மாணவர்களிடம் அவர் கேட்கும் முதல் கேள்வி 'இன்று என்ன நன்மை செய்தாய்?' ஒரு நாளைக்கு ஒரு நன்மை என்பது அவர் உபதேசம். ஒரு மாணவன் 'ஏன் சேர் இரண்டு நன்மை செய்யக்கூடாதா?' என்று கேட்டான். அவர் 'அது பேராசை, ஒரு நாளைக்கு ஒன்று போதும்' என்பார்.

காந்தி வாத்தியார் எங்கள் வகுப்புக்குள் நுழைந்து எல்லோருடைய புத்தகங்களையும் வாங்கி ஒற்றையை தட்டிப் பரிசோதித்த பின்னர் திருப்பி கொடுத்துவிட்டு போனார். பள்ளிக்கூடம் முடிந்த பிறகு என்னையும், எப்பொழுதும் வகுப்பில் கடைசி வாங்கில் குடியிருக்கும் கிருட்டிணபிள்ளை என்பவனையும் தன் வகுப்பறைக்கு கூப்பிட்டார். கிருட்டிணபிள்ளை உயரமானவன். ஒரு கண்ணாடி யன்னலுக்கு பின்னால் நின்று முகத்தை அழுத்திப் பார்ப்பதுபோல சப்பையான முகம். அவன் முன்னாலே ஏதோ பரிசு வாங்கப் புறப்பட்டதுபோல நடந்துபோக நான் பின்னால் போனேன். அவனுடைய புத்தகத்தில் இருபதாம் பக்கம் கிழிக்கப்பட்டிருந்தது. அந்தப் புத்தகத்தை எடுத்து காந்தி வாத்தியார் என்னிடம் தந்தார். அவனுக்கு ஒரு புதுப் புத்தகம் தன் காசில் வாங்கிக் கொடுத்தார். கிருட்டிணபிள்ளை ஓர் அடி பின்னுக்கு நகர்ந்து விம்மத் தொடங்கினான். காந்தி வாத்தியார் சொன்ன அறிவுரை இதுதான். 'நீ படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது நல்லது. ஆனால் களவெடுத்ததுதான் பிழை.' அங்கே நடந்த விசயம் எங்கள் மூவரையும் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது.

அவர் வெள்ளிக்கிழமைகளில் முழு நாளும் உபவாசம் இருப்பது மாணவர்களுக்கு தெரியும். 'பசிக்காதா சேர், உங்களுக்கு நோய் பிடிக்காதா?' என்று கேட்பார்கள். அவர் சொல்வார், போன சனிக்கிழமையில் இருந்து அடுத்த வெள்ளிக்கிழமை நான் விரதம் என்பது எனக்கு தெரியும். என் வயிற்றுக்கும் தெரியும். அது தன்னைத் தயார் செய்துவிடும். எதிர்பார்ப்புத்தான் பசியைக் கொண்டுவருகிறது. எங்கள் ஊரில் வரும் நோய்களில் பாதிக்குமேல் தண்ணீரால் வருபவை. தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள், பாதி நோய் போய்விடும் என்பார். அனைத்து மாணவர்களும் வீடுகளில் போய் தங்கள் தாய்மார்களை தொந்திரவு செய்வார்கள். தண்ணீரைச் சுடவைத்தால்தான் குடிப்பேன் என்று அடம் பிடிப்பார்கள். அடுத்தநாள் பெற்றோர்கள் தலைமையாசிரியருக்கு முறைப்பாடு கொண்டுவருவது நிச்சயம்.

காந்தி வாத்தியாருக்கு கடிதம் போட்டு பல வாரங்களாகியும் பதில் இல்லை. அவர் இருப்பது திருக்கோணமலையில். அங்கே நிலவரங்கள் சரியில்லை என்று தமிழ் தினசரிகளில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆள் கடத்தலும் குண்டு வெடிப்புகளும் குறைந்தபாடில்லை. கடிதம் போய்ச் சேர்ந்ததோ என்றுகூடத் தெரியாது. ஒரு பதில் வந்தால் நிம்மதியாக இருக்குமே என்று நினைத்துக்கொண்டேன்.

ஆறு மாதம் கழித்து அப்ஸரா ஒரு நீலநிற வான்கடிதத்தை தூக்கிக்கொண்டு வந்து அஞ்சல் பெண் தந்ததாகச் சொல்லிக் கொடுத்தாள். அஞ்சல் பெண்ணுக்கு நன்றி சொன்னாயா என்று கேட்டேன், சொன்னேன் என்றாள். அன்றைய நாளின் நன்மை அவளுக்கு முடிந்துவிட்டது. வான்கடிதத்தை பிரிப்பதற்கு நிறைந்த பொது அறிவும், பொறுமையும் தேவை. சிறு கவனயீனமும் கடிதத்தை மூன்று துண்டுகளாக கிழித்துவிடும்.

காந்தி வாத்தியார்தான் எழுதியிருந்தார். ஒரு 15 வயதுப் பெண்ணின் கையெழுத்துப்போல ஓர் எழுத்தோடு ஒன்று முட்டாமால் வட்ட வட்டமான எழுத்துக்கள். 'அன்புள்ள ஐயா' என்று கடிதம் தொடங்கியதும் எனக்கு துணுக்கென்றது. நான் என்னை யாரென்று அவருக்கு நினைவூட்டுவதற்காக என் தங்கையைப் பற்றியும், தம்பியைப் பற்றியும், அண்ணனைப்பற்றியும் எழுதியிருந்தேன். நான் அவரிடம் 'சத்திய சோதனை' புத்தகம் பரிசு பெற்றதையும் ஞாபகப்படுத்தியிருந்தேன். 'தங்களுடைய கடிதம் எனக்கு பெரிய மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தந்தது. அத்தோடு அதிசயமாகவும் இருந்தது. தங்கள் கடிதத்தை என் மனைவிக்கு வாசித்துக் காட்டினேன். அவர் மிகவும் சந்தோசப்பட்டார். இரண்டு நாள் கழித்து அவர் சிவபதம் அடைந்தார். அவருக்கு வயது 84. எனக்கு 90 நடக்கிறது.' இப்படி தொடர்ந்து அவர் பல விசயங்களை நீலக் கடிதத்தின் ஓர் ஓரத்தில் இருந்து மறு ஓரம் வரை நெருக்கி நெருக்கி, கடிதத்தின் முழுப்பெறுமதியையும் பெறும்விதமாக எழுதியிருந்தார். தான் வெள்ளிக்கிழமைகளில் நீராகாரம் மட்டுமே அருந்துவதாகவும் கடந்த 65 வருடங்களில் ஒரு நாள்கூட அதில் தவறியதில்லை என்றும் எழுதியிருந்தார். நடப்பது கஷ்டமாக இருக்கிறதாம். யாரோவுடைய சைக்கிள் பாரிலும், மோட்டார்சைக்கிள் பின் சீட்டிலும் அமர்ந்து வெளியே பயணம் செய்வதாகவும் தூர இடம் என்றால் ஓட்டோவில் போவதாகவும் கடிதத்தில் கூறியிருந்தார்.

'ஒரு நாளில் 24 மணி. ஆறு மணி சாப்பாட்டுக்காக உழைக்கவேண்டும். ஆறு மணி சுயகருமங்கள். ஆறு மணி நித்திரை. ஆறு மணி நாட்டு மக்களுக்கு சேவை.' சனங்களுக்கு சேவை செய்யாத ஒவ்வொரு மணி நேரமும் கடவுளிடமிருந்து தூரமாகவும், மரணத்துக்கு கிட்டவாகவும் தான் நகர்வதை உணருவதாக அவர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவருடைய இந்தக் கொள்கையில் கடந்த 65 வருடங்களில் ஒரு மாற்றம்கூட இல்லை என்பதையும் எனக்கு தெரிவித்திருந்தார்.

காந்தி வாத்தியார் கடிதத்தை இப்படி முடித்திருந்தார்.

'தாங்கள் மனமுவந்து மன நிறைவோடு அனுப்பிய பணம் வங்கிமூலம் பெற்றுக்கொண்டேன். நீங்கள் உங்களைப் பல வகையிலும், பல நிகழ்ச்சிகளிலும் நினைவூட்டி எழுதி அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். ஆனால் நீங்கள் யாரென்று எனக்கு ஞாபகமில்லை. என்னை மன்னியுங்கள்.'

நன்றி; எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.

Wednesday, May 5, 2010

இயற்கையும் மனிதனும்












காற்றின் மொழி ஒலியா இசையா?
பூவின் மொழி நிறமா மணமா?
கடலின் மொழி அலையா நுரையா?

Wednesday, April 21, 2010

சொல்லக் கூடாத ஒன்பது விடயங்கள்


ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று யாரிடமும் சொல்லக் கூடாத விடயங்கள் என்று ஒன்பது விடயங்களைப் பட்டியலிட்டிருக்கிறது."ஸூபாஷித ரத்ன பாண்டாகாரம்" என்பது அந்த ஸ்லோகம் காணப்படும் நூலின் பெயர்.ஸ்லோகம் இது தான்.

"ஆயுர்விருத்தம்,க்ருஹசித்ரம்,மந்த்ர மெளஷத மைதுனே,
தானம், மானாப, மானெளச நவ கோப்யானி காரவேத்".

இதன் பொருள் என்னவென்றால்,தனது வயது,சொத்து,சிறந்த மந்திரம்,நல்ல மருந்து,கணவன் மனைவியின் ப்ரியம்,மற்றும் வீட்டில் நடந்த சண்டை,தானம்,தனக்கேற்பட்ட புகழ்,மற்றும் அவமானம்,இந்த ஒன்பது விடயங்களையும் ஒருவருக்கும் கூறக் கூடாதாம்.(நன்றி தினக்குரல்.)

பொதுவாகப் பெண்களிடம் வயதையும் ஆண்களிடம் வருமானத்தையும் கேட்கக் கூடாது என்று கூறுவார்கள்.இப்போது பெண்களும் வேலைக்குப் போவதாலும், ஆண்களும் இளைமையோடு(!?) இருப்பதாலும் அதனை இருபாலாரிடமும் கேட்காதிருப்பதே நல்லது போல் தோன்றுகிறது.

சிறந்த மந்திரமும் நல்ல மருந்தும் சொன்னால் என்ன? நல்லது தானே! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று மகிழ்ந்திருப்பது ஏன் கூடாது?

கணவன் மனைவியின் ப்ரியம், மற்றும் சண்டைகளை வெளியே சொல்வதைத் தவிர்த்தலே பல வேளைகளில் நலம் போலத் தோன்றுகிறது.குடும்பப் பிரச்சினைகள் சில,பல வேளைகளில் பெரிதாவது பிறரின் தலையீடுகளால் தானே!ஒரு பழமொழி ஒன்று ஞாபகம் வருகிறது.கணவன் மனைவி இருவரும் கத்திரிக்கோல் மாதிரியாம்.அடிக்கடி எதிர் எதிர் பக்கமாக இயங்குவார்களாம். ஆனால் யாரையும் இடையில் வர விட மாட்டார்களாம்.:)மூன்றாவது மனிதர்கள் அதனைப் புரிந்து கொள்வது நல்லது.

மற்றும் தானம், புகழ், இவற்றைச் சொல்லாது இருப்பதால் யாருக்கு என்ன நட்டம் வந்து விடப் போகிறது? சொல்லாதிருப்பது பெருந்தன்மையன்றோ!

இறுதியாக அவமானம். அதனை நீங்கள் சொல்லவே வேண்டியதில்லை. அது தன் பாட்டில் வளர்ந்து விருட்சமாகி உங்களுக்கே தெரியாத விடயங்களை எல்லாம் சொல்லித் தரும்.

பண்டைய பாரதம் மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது இதை.

Thursday, April 15, 2010

இயற்கையின் வண்ணங்கள் தரும் எண்ணங்கள்


ஒரு சிறு பூச்சி வீதியோரம் எவ்வளவு உற்சாகமாக கமறாவுக்கு முகம் கொடுக்கிறது பாருங்கள்!

அடுத்து வரும் ஒரு வாகனத்தில் அதன் தோற்றமே தெரியாமல் அது அடி பட்டு விடக் கூடும்.என்றாலும் அதன் அழகும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அதனை வெளிப்படுத்தும் அதன் ஆற்றலும் அழகாக இருக்கிறதில்லையா?

அது உற்சாகமா? என்னை ஒன்றும் செய்து விடாதே என்ற வேண்டுதலா? அல்லது மனிதனைக் கண்ட வியப்பா? அல்லது அது சொல்லும் ஏதோ ஒரு மொழியா?

தெரியவில்லை.

தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்!

மின் தபாலில் வந்தது இப் படம்.

இது போல சிறு குருவியாக இருக்கும் தூக்கணாங் குருவியும் அதன் தூக்கணாங் குருவிக் கூடும் அதன் நேர்த்தியும் மூன்று அறைகள் கொண்ட அதன் உள் வீட்டு அமைப்பும் வீட்டுக்கு வெளிச்சம் வர அது கொண்டு போய் ஒட்டி வைக்கும் மின்மினிப் பூச்சிகளும் ....

எத்தகைய ஒரு மதி நுட்பம் அதன் சின்னஞ்சிறு தலைக்குள்!

யார் சொல்லிக் கொடுத்தார் இவை எல்லாம்? அதன் கூட்டை போல் ஒன்றை மனித வலுவால் பின்னி எடுக்க முடியவில்லையே!

இயற்கையின் வனப்புத் தான் எத்தனை அழகு!

நன்றி மணி.இந்தப் படம் 'எழிலாய் பழமை பேச' என்ற வலைப் பூவில் இருந்து நன்றியோடு பெறப்பட்டது.

இது போல பறவைகளின் நேச உணர்வு, நட்புறவு இன்னுமொரு அழகு. அவை யார் சொல்லிக் கொடுத்தும் வந்ததில்லை. பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்புப் பிராணிகளில் அத் தன்மை இயல்பாக அமைந்திருக்கும்.தமக்குள் ஒரு சுமூகமான உறவை அவை பேணிக்கொள்ளும். நாய்,பூனை,கோழி,தாரா,ஆடு,மாடு,இவைகளோடு அவர்கள் என்ன மொழியில் பேசிக் கொள்கிறார்களோ தெரியாது. ஆனால் தம் வீட்டு மனிதர்களைப் போலவே சக ஜீவராசிகளையும் அவை அடையாளம் கண்டு கொள்கின்றன.தம் பாசையில் நேசிக்கின்றன.

அண்மையில் ஆனந்த விகடனில் ஜனா என்பவர் இப்படி ஒரு கவிதை எழுதி இருந்தார்.

'எஜமானி குழந்தை பெற்று விட்டாள்'
ரைகரும் ரோஸியும் கிசுகிசுக்கின்றன
சந்தோஷமாய் வால்களை ஆட்டிய படி
அக்கம் பக்கத்து மனிதர்களை
அன்று மட்டும் முறைக்காமல்
வாலாட்டி வரவேற்றுக் கொண்டே இருந்தன
வீட்டு மனிதர்களைப் போலவே!

என்ன ஒரு அருமையான விலங்குலகம்!

இந்தப் படமும் மின் தபாலில் வந்தது தான்.

அது போல பறவைகளின் தாய்மை உணர்வு மிகப் பிரசித்தி வாய்ந்தது.பருந்திலிருந்து குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழியும், தாய்ப் பசுவிலிருந்து பாலினை மனிதன் கறக்கும் போதே பிள்ளைக்கு பாலை ஒழித்து வைக்கும் தாய்ப்பசுவும்,குஞ்சுக்கு இரை கொடுக்கும் பறவைகளும் நாம் அன்றாடம் சந்திப்பவை தான்.

இதனைச் சொல்லும் போது ஒரு அனுபவம் ஞாபகத்துக்கு வருகிறது.முன் ஒரு முறை எங்கள் வீட்டில் செல்வி என்றொரு தாய் பசு கன்று போட்டிருந்தது.காலையில் உணவு தேடச் சென்ற தாய்ப் பசு பின்னர் வீடு திரும்பவில்லை. (அதற்குப் பல காரணங்கள்! எல்லையோரக் கிராமம் என்பதால் சிலர் இதற்காகவே காத்திருந்து மாட்டை இறச்சிக்கு தடம் போட்டு பிடித்துச் சென்றிருப்பார்கள்.)சற்று நேரத்திலெல்லாம் அது வந்து கன்றுக்குப் பால் கொடுக்கும். அருகாகவே தான் எங்கேனும் மேய்ந்து கொண்டு நிற்கும். ஆனால் அன்று வரவில்லை. எல்லா இடமும் தேடிப் பார்த்தாயிற்று. அதனைக் காணோம்.கன்றுக்கோ பசி.இது ஜேசி இனத்தைச் சேர்ந்தது.

மாலையில் மற்றய மாடுகள் பட்டிக்கு வந்து சேர்ந்தன.நம்மிடம் சீமாட்டி என்றொரு மாடும் ஒன்று நின்றது. அதுவும் கன்று போட்டிருந்தது. இரண்டு கன்றுகளையும் அவிட்டு விட்டோம். இரண்டும் இரண்டு பக்கமும் ஓடிச் சென்று பாலைக் குடிக்க தாய் சீமாட்டி இரண்டுக்கும் பாலைக் கொடுத்துக் கொண்டு நின்ற காட்சி மனதை விட்டு என்றும் அகலாதது. மனதை நிறைத்த காட்சி அது.செல்வியின் கன்றையும் தன் பிள்ளை போல் வளர்த்தெடுத்து தந்தது அப் பசு!

அது சீமாட்டி தான்!

இப்படி விலங்கு, பறவைகளின் சாம்ராஜ்ஜியங்களுக்குள் எத்தனையோ வண்ணங்கள்,அழகுகள் செய்திகள் ஒழிந்து போயுள்ளன.

நமக்குத் தான் அவற்றை எல்லாம் பார்ப்பதற்கு நேரமில்லை.

இப்போதெல்லாம் அரசாங்கங்களும் நாடுகளும் கட்சிகளும் பசுமைப் புரட்சி என்றும் சூழல் வெப்பமடைவதைத் தடுக்கும் பொருட்டும்,இயற்கையோடு வாழும் வாழ்க்கையைப் பரிந்துரை செய்கின்றன.
இரசாயணங்களும், மின்சார பாவனைகளால் பாவிக்கப் படும் உபகரணங்களும், வா
கனங்களும் இல்லாத பூமியும்; போட்டிகளும் ஏமாற்றுகளும்,ஆடம்பரங்களும் இல்லாத அன்பும்,அகிம்சையும்,எளிமையும் சக பிராணியில் நேசமும்,மன நேர்மையும் கொண்ட மக்களும் பெருகும் போது தான் அது சாத்தியப் படும் போலத் தோன்றுகிறது.


எல்லோருக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Monday, April 5, 2010

ஏகாந்த வேளைகள்



காலை வேளைகள் ஏகாந்தமானவையாக இருக்கின்றன.மனம் உறக்கத்திலிருந்து விழித்து அதிகாலையில் தன்பாட்டில் கால்கையாட்டி கண்ணுக்குப் புலனாகாத யாரோடோ விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையைப் போல தன்னைத் தானே வேடிக்கை பார்த்து மகிழ்கிறது அது.கடந்து போன காலங்களில் வந்து போன மனிதர்களை, நண்பர்களை,சம்பவங்களை, என்னைப் புடம் போட்டுப் பார்த்துக் கொள்ளவும்;அந்த குழந்தையைப் போலவே மகிழவும் இது உதவுகிறது.

நேற்றைய தினம் காலை வேலை.பெண்களும் ஆண்களுமாய் கூடி கல கல என்று சந்தைக் கூட்டமாய் இரைச்சலாய் இருக்கிறது பிரமாண்டமான அந்தக் கட்டிடம். என்னென்று தான் இவ் அதிகாலை வேளையிலேயே பேசி ஆர்ப்பரிக்க இத்தனை விடயங்கள் இவர்களுக்கு இருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது.

அவர்களால் நேசிக்கப் படுகின்ற ஒருத்தியாக இருக்கின்ற பொழுதுகளிலும் கூட அவர்களில் இருந்து பல விதங்களிலும் வேறுபட்டவளாகத் தான் நான் இருக்கிறேன்.இருந்து வந்திருக்கிறேன்.வைத்திருக்கிற வாகனங்களால், அணிகின்ற உடை ஆபரணங்களால்,தோற்றத்தைப் பார்த்து எடைபோடும் வயதுகளால் - இப்படி கண்களால் அவர்களது வாழ்வு தீர்மானிக்கப் படுகிறது.தோற்றங்களால் ஆனது அவர்களின் உலகம்.வீடும் வாகனமும் தோற்றமும் பணமும் தான் எவ்வளவு விரைவாக மனிதர்களை எடை போட வைத்து விடுகிறது!பயம், பதட்டம், சந்தேகம்,தந்திரம்,தேவை கருதிய பற்று, கிடைக்காது என்கிற போது அவதூறு என்று விஷ்னுவின் சுதர்சன சக்கரம் சிறப்பாகவே சுற்றுகிறது.


கண்ணுக்குப் புலனாகாத அமானுஷங்களால் ஆகியிருக்கிறது என்னுடய உலகம்.அறிவினால்,ஒருவரிடம் இருக்கிற குணங்களால், இக்கட்டுகளை எதிர்கொள்ளும் திறத்தினால்,ஆளுமைகளால், நேர்மையான தன்மையினால், கோழைமைகள் இல்லாத வீரிய உண்மைத் தன்மையினால்,தன் குறை நிறைகளை அடையாளம் கண்டு கொண்ட - அதுவே நான் என்று ஏற்றுக் கொண்ட - முகமூடிகள் இல்லாத இயல்பான மனிதர்களால்,என் உலக மனிதர்கள் தெரிவு செய்யப் படுகிறார்கள்.அதனால் என் உலகத்து மனிதர்கள் மிகச் சொற்பமானவர்களாக இருக்கிறார்கள்.

ஆனாலும் தனிமை என்னை எப்போதும் வசீகரித்தே வந்திருக்கிறது.பாதுகாப்பு என்பதனால் இருக்குமோ? யாரும் என்னைக் காயப்படுத்தி விட முடியாது என்பது காரணமாய் இருக்குமோ?புத்தகங்களும் தனிமையும் சிறந்த கூட்டாக என்னோடு எப்போதும் பயணித்திருக்கின்றன.சில வேளைகளில் நெருங்கிய பந்தங்களில் இருந்து நானாக விலகிச் செல்லவும் அவை துணை நின்றிருக்கின்றன.

எல்லாவற்றையும் விட இந்த தனிமையான ஏகாந்த வேளைகள் என்னை நான் சுய விமர்சனத்துக்கு உட்படுத்திக் கொள்ளவும் மனச்சாட்சியோடு கை கோர்த்து மகிழ்ந்திருக்கவும்,நிரம்பவே உதவுகின்றன.சொர்க்க வெளியில் சஞ்சரிக்க முடிகிறது.'இது வரை நான் அறிந்து யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை' என்று தனிமையில் மனச்சாட்சி சொல்ல கேட்டிருக்கும் நிலை தான் உலகத்தில் மிக உயர்வான நிலை போலத் தோன்றுகிறது.

மகிழ்ச்சியைத் தருகின்றது இந்த ஏகாந்த வேளைகள்!