Thursday, January 21, 2021

தன்மை நவிற்சி அணி - 12 - ( 27.12.2020)

 SBS அரச வானொலியில் கடந்த வருடம் மாதம் ஒருதடவை ஒலிபரப்பாகி வந்த நம்ம தமிழ் - அணிகள் அறிமுகம் - நிகழ்ச்சியில் கடந்த டிசெம்பர் மாதம் நிகழ்ந்த இறுதி நிகழ்ச்சி இது. கீழ்வரும் link ஐ அழுத்துவதன் மூலம் அதன் ஒலிபரப்பை கேட்கலாம்.

sbs வானொலியில் தன்மை நவிற்சி அணி

அப்படிக் கேட்க விரும்பாதவர்கள் விரும்பினால் கீழே உள்ள  எழுத்துவடிவத்தை வாசிக்கலாம்.

......................................

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…..



https://www.youtube.com/watch?v=g5rxdBRSik8

இப்பாடலை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம் இல்லையா? இந்தப் பாடலுக்கும் நிகழ்ச்சியில் பேச இருக்கும் தன்மை நவிற்சி அணிக்கும்  என்ன சம்பந்தம்? 

ஒரு சம்பந்தம் இருக்கிறது. உள்ளதை உள்ளவாறு சொல்வது தன்மை நவிற்சி அணி. அதாவது, எவ்வகைப்பட்ட பொருளையும் அதன் உண்மைத்தன்மையை விளக்குவதற்கு ஏற்ற சொற்களைக் கொண்டு அதன் இயல்புத்தன்மை மாறாதவாறு பாடப்படுவன தன்மைநவிற்சி அணியின் ஆகும்.

‘எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்

சொல்முறை தொடுப்பது தன்மையாகும்’ 

என்பது தண்டியாசிரியர் இவ்வணிக்குத் தரும் விளக்கமாகும். பொருளின் இயல்பை நேரில் பார்த்தது போல தோன்றுமாறு உள்ளதை உள்ளபடி விளங்கச் சொல்வது இவ் அணியில் சிறப்பான இயல்பு.

இப்போது இவ்வணியில் வெளிவந்த சில சினிமாப்பாடல்களைக் கேட்போமா?

1.இன்னும் கொஞ்சநேரம் இருந்தாத்தான் என்ன…


https://www.youtube.com/watch?v=I8UrKhurkuk

2.கருப்பு நிறத்தழகி உதட்டு சிவப்பழகி….


https://www.youtube.com/watch?v=NDNjEMHeHi4

3.உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு..


https://www.youtube.com/watch?v=wqSYBDggWis

4. கறுப்புத் தான் எனக்கு புடிச்ச கலரு...

https://www.youtube.com/watch?v=Cj2XKo7zodA

5. ஊர்வசி ஊர்வசி….(4.20 -4.40)

https://www.youtube.com/watch?v=2lRX7zNSgX4

இப்பாடல்களில் எல்லாம் கவிஞர் தான் சொல்லவரும் கருத்தை எந்த விதமான மேற்கோள்களும் இல்லாமல் இருப்பதை இருந்தவாறாக காட்டியிருக்கும் பாங்கு எளிமையான இந்த அணிக்கு சில சினிமாப்பாடல் உதாரணங்கள்.

பொருளணியிலே தண்டியாசிரியர் குறிப்பிடும் இந்த தன்மை நவிற்சி அணியிலே பொருள் நவிற்சி அணி, குண நவிற்சி அணி, இன நவிற்சி அணி, தொழில் நவிற்சி அணி என விரிவான சில உட்கட்டமைப்புகளும் உள்ளன. 

பொருள் நவிற்சி அணி என்பது ஒரு பொருளின் புறத்தோற்றத்தில் தெரியும் தன்மையை விபரிப்பது. அதாவது வெளிப்படையாகக் கண்ணுக்குப் புலப்படும் தோற்றத்தை அதன் இயல்பு மாறாது சொல்லுதல் பொருள்நவிற்சி அணியாகும். 

உதாரணமாக சிவனின் புற உருவத்தை கூறும் 

நீல மணிமிடற்றன் நீண்ட சடைமுடியன்

நூலணிந்த மார்பன் நுதல்விழியன்.... என்ற இப்பாடல் அடிகள் அதற்கு

ஓர் உதாரணமாகும்.


பொட்டுவைத்த முகமோ….

https://www.youtube.com/watch?v=Wem89JUffyE

குணத்தன்மையணி என்பது ஒரு பொருளினுடய உள் இயல்பினை விளக்குவதாகும். உதாரணமாக, உள்ளம் குளிர, உரோமம் சிலிர்த்து, நுரையும் தள்ள, விழி நீர்அரும்பத், தன்மறந்தாள்…என்று வரும் பாடலடியில் ஒருவருடய குண இயல்பு - உள்ளார்ந்த குணாம்சம் ஒன்று உள்ளவாறு சொல்லப்படுகிறதல்லவா? அது குணத்தன்மையணியாகும். இந்த சினிமாப்பாடல் அதற்கு சொல்லக்கூடிய ஒரு நவீன உதாரணம். 

.குமாரி என் நெஞ்சு விம்மி பம்மி நிக்குது குமாரி…

https://www.youtube.com/watch?v=fuLc6Z4ID1U&lc=UgjIubfiFAFzm3gCoAEC

அடுத்தது இனத்தன்மையணி. இனத்தன்மை என்பது தனக்கேயான இனத்தின் இயல்பை விளக்குவது. உதாரணமாக பாம்பு ஒன்றின் இயல்பை இப்படியாக ஒருபாடல் விளக்குகிறது.

பத்தித் தகட்ட கறைமிடற்ற பைவிரியும்

துத்திக் கவைநாத் துளையெயிற்ற - மெய்த்தவத்தோர்

ஆகத்தான் அம்பலத்தான் ஆரா அமுதணங்கின்

பாகத்தான் சாத்தும் பணி.

இதில் பாம்பு இனத்தினுடய இயல்பு விபரிக்கப்படுகிறது. அதாவது, ஒழுங்குற அமைந்த கோடுகள் கொண்ட வயிற்றினை உடையன.நஞ்சு நிறைந்ததால் கரிய கழுத்தை உடையன.விரிந்த படத்தில் பிறையை ஒத்த புள்ளிகளை பெற்ரவை.மேலும், இரண்டாகப் பிளவுபட்ட நாக்கை உடையன. நஞ்சை பிற உயிர்கள் மீது செலுத்தவல்ல நுண்ணிய துளைகொண்ட பற்களைக் கொண்டவை என்பது இப்பாடலின் பொருளாகும்

  பெண் இனத்தினுடய இயல்பை வேடிக்கையாக விபரிக்கும் இந்த சினிமாப்பாடலும் கூட அதற்கு ஒரு உதாரணம் தான்.

பொம்பளைங்க காதலத்தான் நம்பி விடாதே….( 1.25 - 3.03)…


https://www.youtube.com/watch?v=_VLmEIsvVHE

தொழில் தன்மையணி என்பது தொழிலைப் பேசுவது.

சூழ்ந்து மூரன்றணவி வாசம் துதைந்தாடித்

தாழ்ந்து மதுநுகர்ந்து தாதருந்தும் – 

என்ற இந்தப் பாடலடியில் வண்டினுடய தொழில் சொல்லப்படுகிறது. விவசாயத் தொழிலின் மேன்மையை சொல்லும் இப்பாடல் அதற்கு இன்னொரு உதாரணம்.

விவசாயி… விவசாயி… 0.39 – 1.15.

https://www.youtube.com/watch?v=bewqv9G6YX0

உள்ளதை உள்ளவாறாக விபரித்த இந்த தன்மைநவிற்சி அணியோடு நிறைவுக்கு வரும் அணிகள் குறித்த இந் நிகழ்ச்சியினை நிறைவு செய்யும் முன்பாக இதுவரை காலமும் இந் நிகழ்ச்சிக்கான நேரத்தையும் சுதந்திரத்தையும் பல்வேறு விதங்களில் உதவியையும் ஒத்தாசையையும் தந்து நிகழ்ச்சியினை மெருகு படுத்தி குரல் வெற்றிடங்களைச் சொல்லுக்குச் சொல் சரிபார்த்து பாடல்களை தோதான இடங்களில் இணைத்து அதனை நிறைவான நிகழ்ச்சியாக்கி நேயர்களுக்கு வழங்கியதில் எஸ்பிஏஸ் இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் றைசெல் அவர்களுக்கு ஒரு பாரிய பங்குண்டு. அவருடய உழைப்புக்கும் அர்ப்பணிப்பு நிறைந்த  அவருடய தொழில் நிபுணத்துவத்துக்கும் நம்மதமிழ் ஊடாக என் மனமார்ந்த நன்றி 

இந் நிகழ்ச்சியை இதுவரைக் கேட்ட எஸ்பிஏஸ் நேயர்கள் அனைவருக்கும் பிறக்க இருக்கின்ற புத்தாண்டு நல்வாழ்த்துகளைக் கூறி விடைபெறுகிறேன். 

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்....

https://www.youtube.com/watch?v=1LrOTWoh7vs



Friday, January 15, 2021

தமிழர் அறம் குறித்த சிந்தனைகள்

 தமிழர்; தமிழ்; அவற்றின் பெருமை; வாழ்வு எல்லாம் அதன் தொன்மையிலும் போற்றுதலிலும் இல்லை; மாறாக அது சொல்லிச் சென்ற பொருளிலேயும் அதனை நம் நடைமுறை வாழ்வில் பயன்படுத்துவதிலேயுமே  தங்கி உள்ளது என்று இப்போதெல்லாம் தோன்றுகிறது.

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ் குடி’ என்று சொல்வதெல்லாம்   எத்தனை பேதமை? - வீண் பெருமை!

அண்மையில் அறம் குறித்த சிந்தனை மேலெழுந்த போது தமிழ் அறம் குறித்து  இலக்கியங்களில் குறித்து வைத்த சிந்தனைகள் தமிழின் மேன்மையினை இன்னொரு தளத்துக்கு உயர்த்துவதாகப் பட்டது. இலக்கிய வழி நெடுகிலும்; கடந்து வந்த தமிழ் பாதை எங்கினும்; அது, வாசம் வீசும் வண்ணம் தமிழ் பாதையின் இரு மருங்கிலும் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருந்ததைக் காண வாய்த்தது.

அது உலகு தழுவிய எல்லோரையும் சமனாகப் பேணும் பாண்மையில் எல்லோரையும் சகோதர வாஞ்சையோடு அணைத்துக் கொண்ட பாவனையில் பூத்திருந்தது. அடடா அதன் வாசனையில் தான் எத்தனை, எத்தனை சுகந்தம்!  தமிழனின் அறிவின் விசாலத்துக்கும் சிறப்புக்கும் மன மேன்மைக்கும் அதுவல்லவோ எடுத்துக் காட்டு!.Hormony ஐ அனுபவம் செய்யும் ஒரு வாழ்வியலை தமிழ், இப் பூஉலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறது போலவும்.....

முதலாம் நூற்றாண்டுத் தமிழன் அதனை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றான். இப்படிச் சொல்ல எத்தனை பெரிய உயர்வான பண்பும் மேன்மையும் அறிவு விசாலமும் பக்குவமும் தேவைப்பட்டிருக்கும். அப்பாடல் மொத்தமுமே அழகு தான். ஒரு வாழ்க்கையைப் பக்குவமாய் வாழ வேண்டிய அத்தனை வாழ்க்கைச் செல்வங்களும் மொத்தமாய் அந்தப் பாடலில் அமைந்திருக்கிறது. அடக்கத்தையும் உண்மைச் செல்வத்தையும் வாழ்வின் இயல்பையும் வாழும் வழியையும் கூறும் அப்பாடல் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பைத் தருவதே இல்லை.

   யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)
 ( கணியன் பூங்குன்றனார்.)

இதனைச் சொல்லும் இச் சந்தர்ப்பத்தில் பிசிராந்தையாரை மறந்து கடந்து போக முடியுமா? அவர் சொல்லும் நரை இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழும் வழியை எத்தனை தரம் வாசித்தாலும் மனம் கடந்து போகத் தயங்கவே செய்யும்.

     ‘’யாண்டு பலவாக நரையில ஆகுதல்
   யாங்காகியர் என வினவுதிராயின்
   மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
   யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
  அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
  ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
  சான்றோர் பலர் யான் வாழும் ஊரே’’

  ’ சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல’ (புறம் - 31) எனக் கோவூர்கிழார் அறத்தின் தலைமை கூறுவார். அவரவருக்கு உரித்தாக விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக ஆற்றுதலே அறம் என சங்க காலம் போற்றியதை புறம் 312 பட்டியலிட்டுள்ளது. கொடையறம் அரச இயல்பாக மலர்ந்திருந்ததைக் கடை 7 வள்ளல்களைப் பற்றிய பாடல்கள் விபரிக்கக் காண்பது ஒன்றும் தற்செயல் அல்லவே! ‘வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்; நடு நள் யாமத்து பகலும் துஞ்சாது கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவர்க்கும் உண்பது நாழி; உடுப்பவை இரண்டே அதனால் செல்வத்துப் பயனே ஈதல் தான்  என்று நக்கீரர் சொல்வது வாழ்வை முழுமையாக பார்த்து பிளிந்து தந்த அறச் சாரமல்லவா? 

பாளி, வடமொழி சமூகங்களில் சமயம் சார்ந்து கல்வி அமைந்திருக்க, தமிழ் சமூகத்தில், சங்க காலத்து தொகை நூல்களில் செய்யுள்களை இயற்றியவர்கள் ஒரு குலத்தார் அல்லர்; ஒரு இடத்தார் அல்லர்; ஓர் இனத்தார் அல்லர்; அந்தணர் சிலர், அரசர் பலர், வணிகர் பலர், வேளாளர் பலர், இரவலரும் உளர், புரவலரும் உளர், ஆண்பாலரும் உளர், பெண் பாலரும் உளர், ஐந்திணைத்தலை மக்களும் உளர், நிலை மக்களும் உளர், வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டவர் உளர், வெவ்வேறு வாழ்க்கை நிலை கொண்டவர் உளர், கூடல் உறையூர் கருவூர் முதலான பேரூர்களில் பிறங்கியவர் உளர், அரிசில் ஆலங்குடி முதலாக வெள்ளூர் வேப்பத்தூர் ஈறாக சிற்றூர்களில் திகழ்ந்தவரும் உளர்.” என்பார் தனிநாயகம் அடிகள் (தமிழ்தூது பக் 32)

அதே நேரம் மன்னர், மருத்துவர், கணியர், பாணர், தச்சர், கொல்லர், குயவர் என பல நிலை மக்களும் புலவர்களாக விளங்கியதையும்; தொகை நூலில் காணப்படும் 459 புலவர்களில் 22 பெண்பாற் புலவர்களும் சமூகத்தில் கல்விப்புலமையோடு திகழ்ந்திருக்கிறார்கள்.

எத்தகைய சமத்துவ சமூகமாக; கல்வி அறிவு பெற்ற, பெரும் சமூக வாழ்வை இந்த சங்க மக்கள் வாழ்ந்திருத்தல் கூடும்!  ’யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல; நின் பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்” என்று சொல்லும் பரிபாடல் வாழ்க்கையின் மான்பு அத்தனையையும் அப்பாடலுக்குள் அடக்கி அறவழியினை அறைகூவி விட்டது.

மேலும், ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றும்  ’பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி’ என்றும் வாழும் வழியை அறத்தோடு வாழ்ந்து காட்ட தமிழ் வள்ளுவன் தந்த வாய்ப்பாடு திருக்குறளாகும். சமகாலத்தில் நாகரிகத்தில் மிக உயர்ந்த நிலையில் வைத்து எண்ணப்படும் கிரேக்க, ரோம நாகரிகங்களில் தனி மனித; தம் நாட்டுப் பெருமை குறித்து பெருமிதப்பட்டுக் கொண்ட சமுதாய வாழ்வு நிலவிய போது; இங்கோ வள்ளுவன் தமிழ், தமிழ் நாடு என்று கருதாமல் முழு உலகுக்குமான சிந்தனையோடு அவன் சிந்தனை மிளிரக் காணலாம். இங்கு மனித சமுதாயத்தை - உலக மனித குலத்தை மட்டுமன்றி சகல ஜீவராசிகளையும் தன்னுடய உயிரைப்போன்ற சமத்துவத்தோடு மதித்து வாழ வழி காட்டியதாக தமிழ் சிந்தனை மரபு ஊற்றெடுக்கிறது. உலகு, உலகம்,  வையகம்,  உயிர்கள், உயிர்க்கு, மன்னுயிர், பல்லுயிர்  போன்றனவே வள்ளுவன் பாவித்த மேலும் சில சொற்பதங்களாகும்.

 அறம் என்றால் நல்வினை என்பது பொருளாகும். நல்லவற்றைச் செய்வதும் தீயவற்றைக் களைவதும் என அதற்கு மேலும் பொருள் விரிக்கலாம். உயிர்கள் மீதான இரக்கம் என்பதை அதன் மையப் பொருளெனவும் கொள்ளலாம்.

அறம் என்பது பிறப்போடும் குடிப் பண்போடும் சேர்ந்தே வருவது என்பதை ஒளவை ’கொடையும் தயையும் பிறவிக்குணம்' என்று சொல்வதில் இருந்து அறிகிறோம். ஒரு தடவை நற்பண்பு மிக்க செல்வர் ஒருவர் இல்லத்திற்கு புலவர் ஒருவர் சென்றாராம். அவர்களது குழந்தை நடைவண்டியில் நடைபயின்று கொண்டிருக்கும் பருவம் அது. புலவரைக் கண்டதும் குழந்தை நடைவண்டியை தள்ளியபடி மெதுவாக நடந்து வந்து, தன் நடை வண்டியை மகிழ்ச்சியோடு புலவருக்கும் கொடுத்ததாம். உடனே புலவர் மனம் நெகிழ்ந்து,’ நடை கற்கு முன் கொடை கற்றாயே’ என்று பாடி உருகினார். கொடையும் தயையும் பிறவிக்குணம் என்பது இத்தால் அறியப் படுகிறதல்லவா? பிறப்பில் இருந்தே அறவாழ்வு தொடங்கி விடுகிறது என்பது தெரிகிறதல்லவா?

தமிழர் தம் வாழ்வின் சகல துறைகளிலும்  அறமே மையமாக நின்று செயற்பட்டுக்கொண்டிருந்தது.. இல்லறம், துறவறம், காதலறம், போரறம், அரசியலறம் என அறம் என்பது எல்லாச் செயல்களிலும் நீக்கமற நிறைந்து நின்றது. எல்லாவற்றிலும் அறம் விளங்க வேண்டும் என விரும்பியவன் தமிழன். வள்ளுவனின் காலம் அறநெறிக்காலம் எனவே வழங்கப்பட்டது. அந்த அளவுக்கு அறம் தமிழன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மேலோங்கி இருந்தது. அறத்தின் வழி பொருளும் பொருளின் வழி இன்பமும் ஈட்டற்பாலன என்பதால் அறம் பொருள் இன்பம் மூன்றையும் உள்ளே வைத்து எக்காலத்துக்கும் எல்லோருக்கும் - உலகத்தில் வாழும் சகலருக்கும் பொருந்தும் வண்ணம் வாழ்க்கை நெறியை படைத்தார் வள்ளுவன்.

அறம் என்பது சிந்தனை, பேச்சு, செயல்பாடு ஆகிய  மூன்றினாலும்  செய்யப்படுவதாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பினும் மனம் என்ற ஒன்றைக் கொண்டிருப்பதால் மனிதன் என அழைக்கப்படும் மனிதனின் மனமே - அது கொண்டிருக்கும் நினைவும் சிந்தனையுமே  அறத்தின் மிக இன்றியமையாத அடிப்படை  எனப் புரிந்து கொண்டிருந்தது தமிழ் சிந்தனை மரபின் ஆரம்ப காலம். அதனால் தான் வள்ளுவர் அதனை   ‘மனத்துக்கண் மாசில னாதல்’  (குறள் 34) மனதிலே முதலில் குற்றமற்ற சிந்தனைகள் உள்ளவனாக இரு என அறத்தை வலியுறுத்துகிறார்.

இளங்கோ அடிகள் அரச குலத்தில் பிறந்து, தனக்கு அரசுரிமை கிடைக்கும் என்று சோதிடன் சொன்ன சொல்லினை ஏற்க மறுத்து, அதனை தம்பியாகிய நான் தரியேன் அது அண்ணனுக்கே உரியது என தனக்கான தர்மத்தின் - மனசாட்சியின் - அறத்தின் வழி நின்று, உறுதி கூறி, அதற்கான தகுதியை தன் அண்ணனுக்குரியதென கொடுத்து, எழுது கோலைத் தூக்கி, தமிழ் இலக்கியத்தை தூக்கி நிறுத்திய துறவியாக இலக்கியத்தில் நிலைத்திருப்பவர். அவர் அறத்தை வாழ்ந்து காட்டிய செம்மல்.  அவர் சொல்லும் சிலப்பதிகார காவியத்தில் அவர் அரசியல் அறம் பற்றி உரைக்கிறார்.’அறம் பிழைத்தார்க்கு அறமே கூற்றாகும்’ என்பது சிலப்பதிகாரத்தின் சுருக்க தர்க்க  வசனமாகும்.

பின் வந்த மணிமேகலை பசித்துயர் போக்குவதைத் தன் தலையாய அறமாகப் போற்றியது. (மணி 13) ஆதரவற்றோரைப் பேணுவது அதன் அறச் சாரமாகும். சமணமும் கிறீஸ்தவமும் அறமென எழுத்தறிவித்தலை கையிலெடுத்த காரணத்தால் இத்தனை கல்விச் செழுமையை தமிழ் இன்றைக்குக் கொண்டிருக்கிறது. இவர்கள் மொழி அறிவித்தலையும் அவற்றைப் பேணிக் கொடுத்தலையும் தலையாய அறமாக போற்றினர்.

காணுகின்ற அத்தனையிலும் கடவுளைக் கண்டு கொண்டவன் தமிழன். இயற்கையில் இருக்கிற எல்லாமே கடவுளின் அம்சம் எனக் கொண்டதனால் இயற்கையினையும் சகல உயிர்களையும் கடவுளாகக் காணவும் மதிக்கவும் போற்றவும் செய்தான்.

‘தீயினுள் தெறல் நீ! பூவினுள் நாற்றம் நீ!
கல்லினுள் மணியும் நீ! சொல்லினுள் வாய்மைநீ!
அறத்தினுள் அன்பு நீ! மறத்தினுள் மைந்த நீ!
வேதத்துமறை நீ! பூதத்து முதலும் நீ!
வெஞ்சுடர் ஒளியும் நீ! திங்களுள் அளியும் நீ!
அனைத்தும் நீ! அனைத்தின் உட்பொருளும் நீ!
உறையும் உறைவதும் இலையே உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை!
முதல்முறை இடைமுறை கடைமுறை தொழிலில்
பிறவாப் பிறப்பிலை! பிறப்பித்தோர் இலையே!

என்று சொல்லும் பரி பாடல் அதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு. மேலும், கடவுள் அம்சம் எங்கெங்கெல்லாம் சார்ந்திருக்கிறதென்பதை கீழ்வரும் பரிபாடல் புலப்படுத்துவது சங்ககாலத்தமிழனின் உலகை இறை சார்ந்து பார்க்கும் சினேகபாவத்துக்கு மற்றுமோர் எடுத்துக் காட்டு.

‘ நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள;
நின், தண்மையும் சாயலும் திங்களுள;
நின், சுரத்தலும் வண்மையும் மாரியுள;
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்துள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவையுள;
நின் தோற்றமும் அகலமும் நீரிலுள;
நின், உடுவமும் ஒலியும் ஆகாயத்துள;
நின், வருதலும் ஒடுக்கமும் மருத்திலுள;
அதனால், இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்
ஏம மார்ந்த நிற் பிரிந்து
மேவல் சான்றன எல்லாம்’

இயற்கையின் அம்சங்கள் யாவையும் இறையின் அம்சமாகக் காணும் மனிதன் அவைகளை எத்தனை பவித்திரத்தோடும் மரியாதையோடும் பேணி இருப்பான் என்பதையும் கூடவே உணரமுடிகிறதல்லவா? அதனால் தான் ’யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்றது திருமந்திரம். 

வீடுகள் திண்ணைகளோடு பொலிய, படலைகளில் ஆவுரோஞ்சிக் கற்கள் முளைத்திருக்க, முற்றங்கள் கோலங்களால் வடிவு பெற்றதும் கூட இந்த அறச் சிந்தனையின் விளைவு தானே? சூரியனுக்கு நன்றி சொல்லவும் மாடுகளை தெய்வமென போற்றவும் தெரிந்து கொண்டது கூட அதன் விளைவு தானே? இதே நேரம் மேலைத்தேயம் கேற்றினைப் பூட்டி நாயை காவலுக்கு வைத்திருந்தது என்பது எத்தனை பெரிய சிந்தனை முரண் இல்லையா?

பெண்ணின் நிலை குறித்து ‘அன்னாந்து ஏந்தியவனமுலை தளரினும்’ என்று தோழி தலைவனைக் கண்டு என் தோழியை நீ எப்படிப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று பாடியபோதிலும் சரி; பின்நாளில் பாரதி தாசன் தன் ’குடும்பவிளக்கு’ பகுதியில் முதியோர் காதல் பற்றிப் பேசும் போது சொன்ன

‘ புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்;
தள்ளாடி விழும்மூ தாட்டி
மதியல்ல முகம வட்கு
வறள் நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக் கின்பம் நல்கும்?
இருக்கிறாள் என்பதொன்றே”

இங்கெல்லாம் அன்பும் அறமுமே மேலோங்கி இருக்கக் காண்கிறோம்.

அதன் பின் வந்த இந்து சமயக் கோட்பாடுகளிலும் ‘தென்னாடுடய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்றே பாடக் காண்கிறோம். ’உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ என்றே அவர்கள் இறைவனைத் துதிக்கிறார்கள். ’அன்பே சிவம்’ என்பதே இந்து சமயத்தின் சாரம். பாடல் வழியான பிரார்த்தனைகள் முடிந்த பின் உலக முழுமையும் வளம் பெற வேண்டி பாடும் புராணத்திலும்’ வான்முகில் வளாது பெய்க! மலிவளம் சுரக்க! மன்னன் கோல் முறை அரசு செய்க! குறைவிலாது உயிர்கள் வாழ்க! என்றே சொல்லச் கேட்கிறோம்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்று வையகம் என்று மேன்மை பெற பாடும் வண்ணங்கள் யாவும் தமிழுக்கும் அதன் சிந்தனை மரபுக்கும் செழுமை சேர்ப்பன. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுவும், ’வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளலார் இரங்கும் போதும், தமிழ் மானுடமே உயிர்க்கிறதல்லவா? உயிர் மேல் கொண்ட அன்பின் செழுமையை அறத்தின் அழகை சொல்லாமல் இருக்க முடியுமா?

இத்தகைய காலப்பகுதிகளில் மேலைத்தேயங்கள் குறிப்பாக கிரேக்க ரோம பேரரசுகள் தனிமனித பெருமை; தன் நாடு குறித்த பெருமிதம்; உடற்பலம்; சிற்றின்ப நுகர்ச்சி; தனிமனித சுதந்திரம் இவைகளை மேல் நிறுத்த தமிழ் பேசு நல்லுலகமோ தனக்கென வாழா பிறர்கென வாழும் தன்மை, ’யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல; நின் பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்” ( பரிபாடல்) என்று வலியுறுத்தல் காண்கிறோம்.ரோமர்கள் தம்மைப்பற்றிய பெருமையில் நிமிர்ந்து நிற்க, தமிழோ உலகு தழுவிய அறச் சிந்தனையில் உயர்ந்து நின்றது.

உலக மனப்பாண்மை, விருந்தோம்பல், பிறர்மீதான அன்பு, ஈகை, தனக்கென வாழா பிறர்கென வாழும் தன்மை, மானம் என்றால் உயிரையும் கொடுக்கும் மாண்பு, மனத்தூய்மை, விடாது முயலல், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்னும் மனப்பாண்மை, பொறை, தயை, நல்லொழுக்கம், சகிப்புத் தன்மை, உலகப்பொதுமை போன்றன தமிழின் பண்பு நலம் என்பார் தனிநாயகம் அடிகளார்

பின் நாளில் கூட வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்று பாரதி கேட்பது கூட தமிழுக்கோ தமிழனுக்கோ அல்ல. மாநிலத்துக்கே அல்லவா? காக்கை, குருவி எங்கள் ஜாதி என்றவன் அல்லவா அவன்?! ‘ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்’ ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ ஆகியவற்றை கனவு கண்டவன். அவற்றினை மேலான அறமாக வரிந்து கொண்டவன் பாரதி. அதர்மங்களுக்கெதிரான போர் கொடியை பெண்களுக்காகவும் நாட்டுக்காகவும் தூக்கிச் சொற்போர் செய்தவன்.



அறம் குறித்த மேற்கோள்கள்கள்:


அறத்தின் இலட்சணம் அறியாதவரே, 'அறம் செய்தோம், கூலி எங்கே?' என்று இரைந்து கொண்டிருப்பர். மாரிஸ் மாட்டர்லிங்க்.

பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்கிறான். -ஸெனீக்கா.

குளிர் மிகுதிதான். கந்தை உடைதான்! ஆனால் என் ஒழுக்கம் எனக்கு உஷ்ணம் தரும். -ஜான் டிரைடன்.

அறிவு மட்டும் கூறும் வழியில் செல்லற்க. ஆன்மா முழுவதும் ஆணையிடும் வழியில் செல்க. -லியோ டால்ஸ்டாய்.

அறத்திற்குத் தலைசிறந்த வெகுமதி அதனிடத்திலேயே கிடைக்கும்; மறத்திற்குத் தலைசிறந்த தண்டனையும் அதனிடத்திலேயே கிடைக்கும். -பழமொழி.

பேரின்ப வீட்டை அடையும் நெறி துறவறம் அன்று; அனவரதமும் அறச்செயல் ஆற்றுவதேயாகும்.-ஸ்வீடன் பர்க்.

ஒருபொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு; நாம் செய்யும் நற்செயலே அது. -மாரிஸ் மாட்டர்லிங்க்.

எல்லா நல்ல காரியமும் பேச்சும் பணம் பெறாமல் செய்யப்பட வேண்டும் என்பதே இறைவன் திருவுளம் என்பது தெளிவு. -ஜான் ரஸ்கின்.

என்ன செய்யலாம் என்று வக்கீல் கூறுவது விஷயம் அன்று; என்ன செய்யவேண்டும் என்று அறிவும், அறமும், அன்பும் கூறுவதே விஷயம். -பர்க்.

அற வாழ்வின் அளவுகோல் விசேஷ முயற்சிகள் அல்ல; தினசரி வாழ்க்கையேயாகும்.-பாஸ்கல்.

விரும்ப வேண்டியவற்றை விரும்பவும், வெறுக்கத் தகுந்தவற்றை வெறுக்கவும் செய்யுமாறு நன்னெறியில் செலுத்தப்படும் அன்பே அறமாகும். -ஸெயின்ட் அகஸ்டைன்.

நாம் அறநெறியில் நிற்கும் ஒவ்வொரு சமயத்திலும் ஏதேனும் இன்பம் அதிகரிக்கா விட்டால், ஏதேனும் துன்பம் குறைந்திருக்கும் என்பது உறுதி. -பென்தம்.

நமது உணர்ச்சியின் தன்மை, விசாலம் ஆகிய இரண்டின் அளவே நமது ஒழுக்கமாகும். -ஜார்ஜ் எலியட்.

நன்மை ஒரு நல்ல வைத்தியன். ஆனால், தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன். -எமர்ஸன்.

நமது செயலின் விளைவுகளை நாம் ஏற்றுக்கொள்ளும் முறையே நமது ஆன்மாவின் உயர்வை அளக்குங் கோலாகும். - ஜான் மார்லி.


Wednesday, January 6, 2021

மடக்கு அணி - 11 - ( 29.11.2020 )

 கடந்த இரு மாதங்களுக்கு முன் SBS தமிழ் வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சியின் ஒலி வடிவத்தை கீழ் வரும் link இல் அழுத்திக் கேட்கலாம்.

 SBS வானொலியில் மடக்கு அணி


                           மடக்கு 16.6.20

இலக்கியங்களில் அழகுணர்ச்சியை சொற்களைக் கொண்டே அமைத்து அதனை பொருள் நயமும் ஓசைநயமும் விளங்குமாறு செய்தனர் தமிழர். செய்யுளில் சொற்களின் அமைப்பு, அதன் வைப்புமுறை, சொற்களைக் கொண்டு பொருள் கொள்ளும் முறை என்று நுட்பமாக அவற்றுக்கு இலக்கணங்களும் அவர்கள் வகுத்துள்ளார்கள். அவை சொல்லணி, பொருளணி என இரு பெரும் பிரிவுகளுக்குள் அடங்குவன.

அந்தவகையில் வரும் சொல்லணிகளான எதுகை, மோனை, சிலேடை, பின்வருநிலை,மடக்கு, அந்தாதி என்பவற்றுள் ஒன்று இந்த மடக்கு என்பதாகும். சிலேடைக்கும் மடக்குக்கும் பின்வரு நிலை அணி என்ற இந்த மூன்று சொல்லணிகளுக்கும் இடையில் இருக்கும் நுட்பமான சில வித்தியாசங்கள் உள்ளன.

சிலேடை என்பது ஒரு சொல்லே செய்யுளில் வரும் போது இரண்டு விதமாகவும் பொருள் கொள்ளக் கூடியது. உதாரணமாக ’சென்னை வரவேற்கிறது’ என்பதை ’சென்னை வர வேர்க்கிறது’  என்று சொல்லலாம். அதாவது இங்கு ஒரு வசனத்திலேயே இரு பொருளும் அமைந்திருக்கும்.

ஆனால் மடக்கில் அடுத்ததடவை அதேசொல் வரும் போது அது வேறொரு பொருளைத் தருவதாக இருக்கும். அதாவது மடக்கில் வரும் சொல் மறுதடவை வரும் போது அதே சொல் வேறொரு பொருளைக் குறிப்பதாக வருவது. அப்படியென்றால் பின்வருநிலையணியில் அது எப்படி வருகிறது?  பின்வரு நிலைஅணியில் ஒரே சொல் அடுத்தடுத்த இடத்தில் வரும் போதும் தனித்தனியாகவும் கூட அது ஒரே அர்த்தத்தையே கொண்டிருக்கும்.

உதாரனமாக 200 வது திருக்குறளை எடுத்துக் கொண்டால் அது

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயனிலாச் சொல்.’ (குறள் எண் - 200)

அதில் சொல் என்ற சொல் பல இடங்களில் வந்தாலும் அது சொல் என்ற ஒரு அர்த்தத்திலேயே வருகுதல் காண்க. இதுவே பின்வருநிலை அணியாகும்.

வடமொழியில் மடக்கு என்பதை யமகம் என்று அழைப்பார்கள். சொற்களை எழுத்தெழுத்தாகப் பிரித்தும் கூட்டியும் முன்பின்னாக மாற்றியும் பொருள்கொள்ளக்கூடியதாக அமையப்பெறும் சொல்லணிகளிலே அழகு வாய்ந்தது மடக்கு. புலமைக்கும் மொழிஆழுமைக்கும் சொல்விளையாட்டுக்கும் வழிவிட்டுக் கொடுப்பது மடக்கு.

மடக்குஎன்றால்என்ன?

மடக்குஎன்பது ’எழுத்துக்களது தொகுதி பிறஎழுத்தாலும் சொல்லாலும் இடையிடாதும் இடையிட்டும் வந்து பெயர்த்தும் வேறுவேறு பொருளை விளைவிப்பது மடக்கு என்னும் அலங்காரமாகும்’ என்று தண்டியலங்காரம் அதற்கு விளக்கம்கூறுகிறது. அதாவது ஓர்எழுத்து அல்லது ஒருசொல் மீண்டும்மீண்டும் வந்து வெவ்வேறு பொருள் வருமாறு அமைத்தல் மடக்குஆகும்.

ஊதாஊதாஊதாப்பூ…



https://www.youtube.com/watch?v=IbyWiib5ZxQ

ஆனாலும் சிலேடைக்கும் மடக்குக்கும் பின்வருநிலைஅணிக்கும் என்று மூன்று சொல்லணிகளுக்கும் இடையில் நுட்பமான வித்தியாசம் உள்ளது.

’அரவம்அரவம்அறியுமா’ என்றவசனத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் முதலாவது அரவம் பாம்பையும் இரண்டாவது அரவம் என்றசொல் சத்தத்தையும் குறிப்பதாக ஒருவசனத்தில் ஒரேசொல் இருவேறுஅர்த்தத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளதல்லவா? அதுதான்மடக்கு. 

இப்போதுமடக்குவகையில்அமைந்தபாடல்ஒன்றுகேட்போமா?

ஆடவரெலாம்ஆடவரலாம்....

https://www.youtube.com/watch?v=w5DjkjH8qME

ஆடவரெலாம்ஆடவரலாம்என்பதில்வரும்ஆடவரெலாம்என்பதுஇருவேறுஇடங்களிலும்இருவேறுபொருள் தாங்கிவருவதைக்கண்டீர்களா?

மடக்கணியில் இலக்கியவகை சார்ந்த பாடல்கள் அனேகம் உள்ளன. 

திருக்குறள்,கம்பராமாயணம்தொடக்கம்பக்திப்பாடல்கள் ஈறாக அநேகபாடல்கள் இந்தமடக்கணி வகையில் உருவாகி வந்துள்ளன. இராமாயனத்தில் அமைந்துள்ள பாடல் ஒன்று இது.

'வண்டலம்புநல் ஆற்றின் மராமரம், 

வண்டலம்புனல் ஆற்றில் மடிந்தன; 

விண்டலம் புகம் நீங்கிய வெண்புனல், 

விண்டலம் புக நீள் மரம் வீழ்ந்ததே." (32). 

இந்தப் பாடலில் வண்டலம்’ என்பது முதல் இரண்டு அடிகளிலும் விண்டலம்பு என்பது ஈற்று இரண்டடிகளிலும், பாடலடிகள்  மடங்கி வந்துள்ளன. இப்பாடலைப் பின்வருமாறு பிரித்துக் கொள்ளல் வேண்டும்: 

 'வண்டு அலம்புநல் ஆற்றின் மராமரம், 

வண்டல் அம்புனல் ஆற்றில் மடிந்தன; 

விண்டு அலம்பு கம்.நீங்கிய, வெண் புனல் 

விண்கலம் புக நீள் மரம் வீழ்ந்தவே' 

அதாவது, அனுமன் எறிந்த மரங்களுள், வழிப் பாதையிலிருந்து மரங்கள் சில வண்டல் நீர் பொருந்திய ஆற்றில் விழுந்தன. அனுமன் உயரே தூக்கியெறிந்த நீண்ட மரங்கள் விண்ணிலே புக விண்னகத்திலே ஒடுகின்ற நீர் சிதறி அகலும்படி ஆகாய கங்கையில் வீழ்ந்தன.’ என்பது அதன் பொருளாகும்.

கவி காள மேகத்தாரின் பாடல் ஒன்று மடக்கணியில் இப்படியாக அமையப்பெற்றுள்ளது.

’வண்ணம் கரியனென்றும் வாய்வேத நாரியென்றும்

கண்ணன் இவனென்றும் கருதாமல் -மண்ணை

அடிப்பது மத்தாலே அளந்தானை ஆய்ச்சி

அடிப்பது மத்தாலே அழ!’

இதிலே மூன்றாம் அடியில் வரும் அடிப்பதுமத்தாலே என்பது (காலின் அடிப்பகுதியால்) அடிப்பதும் அத்தாலே என்றும்; இறுதியடியில் வரும் அடிப்பதுமத்தாலே என்பதில் அடிப்பது( தயிர்கடையும்) மத்தாலே என்றும் வருதல் காண்க.

1889ம்ஆண்டில் ஈழத்திலுள்ள.கொல்லங்கலட்டி என்றஇடத்தைச் சேர்ந்த பூ. பொன்னம்பலப்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்ட மாவையமகஅந்தாதி ஒன்று மாவைக் கந்தனை துதிசெய்வதாக மடக்கணியில் இப்படியாக வருகிறது.

’வானில வானிலவும் பொழின்மாவையின் மாணருள்செய்

வானில வானிலயம் புகுந்தேத்தல் செய்வாய் மலர்க்கோ

வானிலவானிலமால் குளிர்நீரெரி வன்னி சல 

வானிலவானிலயப் பொருளா மவன் மன்னடியே’

அதாவது

வானத்திலுள்ள மதிமண்டலத்தின் கண் அவாவி நிற்கும் சோலை சூழ்ந்த மாவைப்பதியின்கண் மிக்க திருவருளைச் செய்பவனாகிய முருகனுடய இடமாகிய கோயிலின் உள்ளேசென்று அவன்திருவடிகளை ஏத்துவாயாக. தாமரைமலரினல் இருக்கும் இறைவனாகிய பிரமதேவனது சத்தியலோகம் உட்பட நிலமும் பெரிய குளிர்ந்தநீரும் எரிகின்றதீயும் அலைகின்ற காற்றும் ஆகாயமும் அவனுடய பெருமையுற்ற திருவடியில் ஒடுங்கும் பொருள்களாகும்’ என்பதுஅப்பாடலின் உள்ளே அமைந்திருக்கும் கருத்தாகும்.

கந்தாநீஒருமலைவாசி.....



https://www.youtube.com/watch?v=UIMvJH9LL30

3.49 – 6.55   

மடக்கணியில் பல இலக்கியப் பாடல்கள் உள்ளன. உதாரணமாக மருத்துவநூல் ஒன்றில் அமையப் பெற்றிருக்கும் மடக்குஅணிஒன்றை இப்போது காண்போம்.

பத்தியத்தை நோயை யனுபானத்தை லங்கணத்தைப்

பத்தியத்தை முன்மருகன் பண்ணிலிற்கேள் - பத்தியத்தை

யேகமாயார்த்தாலு மேறாச்செவிபோல

யேகமாயார்த்தாலு மெய்''20

இந்தவெண்பாவில், பத்தியத்தை என்னுஞ்சொல் மூன்றுஇடங்களில் அமைந்திருக்கிறது. யேகமாயார்த்தாலும் என்னுஞ்சொல் இரண்டிடங்களில் அமைந்திருக்கிறது.

முதலாமடியில் வரும் பத்தியத்தை என்பது, பிணிநீங்கும் வரை கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறையான பத்தியத்தையும், இரண்டாமடியில் வரும் பத்தியத்தை என்பது, பத்தி+இயம்+அத்தை எனப்பிரிந்து, பத்தியமுறையைப் பற்றி அத்தையிடம் என்றும், தனிச்சொல்லில் வரும் பத்தியத்தை பத்து+இயம் +அத்து+ஐஎனப்பிரிந்து, பத்துவிதமான இசைக்கருவிகள் சேர்த்து இசைக்கும் இசையை என்றும் பொருளமையப் பெற்றிருக்கிறது.

ஏகமாயார்த்தாலும் என்பது, ஒருமுகமாக முழங்குகின்றபோது என்றும், ஏக+மாய் + ஆர்த்து எனப்பிரிந்து பார்த்தால் போய்விட, கெட்டு, ஆரவாரம்செய்து என்னும்பொருளில் மாறிமாறி நின்று பொருளமைக்கும்.

இந்தப்பாடலின் பொருள்என்னவென்றால் பிணி நீங்குகின்ற வரைக்கும் கடைப்பிடிக்கவேண்டிய பத்தியமும், பிணியினுடைய வகையும், துணைமருந்தான அனுபானத்தையும், நோய்நீங்கத்துணைபுரியும் பட்டினியைப் பற்றியும், மாமியார் முன்னே மருமகள் செய்யும் பணிவுடன் நோயாளிக்கும் செய்க. மருமகன் மாமியாருக்குச் செய்யும் மரியாதையை ஏற்றுக்கொள்ளும் மாமியாரைப்போல நோயாளி பத்தியமுறைகளை ஏற்றக்கொள்ளவும்.  பலவிதமான சத்தத்துடன் கூடிய முழக்கத்தின்போது சொல்லுகின்ற சொல் காதில் நுழையாததைப்போல இருந்தால், நோய்கள் ஆரவாரம்செய்துகொண்டு உடலைக் கெட்டுப் போய்விடச்செய்யும் என்பதால், பத்தியம்முக்கியம்என்பதைஉணர்க’ என்னும் பொருளை இது உரைக்கிறது.

வித்துவத் திறமைக்கு களம் அமைத்துத்தரும் இத்தகைய பாடல்கள் உடைத்துப் பொருள்அறியவேண்டியவை.

இன்றய காலங்களில் சினிமாக்களிலும் இந்த அணியினை புகுத்தி சில பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. 

கொஞ்சும் கிளி பாட வச்சான்...


https://www.youtube.com/watch?time_continue=182&v=VnmD2j3bEng&feature=emb_logo

2.40 – 3.00 

இப்போது ஒலித்த இப் பாடல் வரிகளில் மடக்கின் எழில் கொஞ்சுகிறது அல்லவா? .மடக்குஅணியின் அழகை வெளிப்படுத்தும் பல பாடலகள் கொண்ட கதம்பத்துடன் விடைபெறுகிறது இன்றய நம்மதமிழ்.

தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை....

https://www.youtube.com/watch?v=FvRlKreWTX4&lc=UghmL7M5AUy2zngCoAEC

1.40 – 2.00 


 ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்...


https://www.youtube.com/watch?v=tXU1r0OVf3g

(8.05 – 8.22 )


உதய கீதம் பாடுவேன்.....

https://www.youtube.com/watch?v=Om3lOwdgxcw

(2.04 – 2.10 )  


திருமண மலர்கள் தருவாயா....

https://www.youtube.com/watch?v=528O3U7qMco

Thursday, December 17, 2020

season's Greetings

 


செட்டைகளை உதிர்த்தபடி

உயரப்பறக்கின்றன பறவைகள்.

இலைகளை உதிர்த்தபடி

உயர்கின்றன மரங்கள்.


மலர்ந்தும் மறைந்தும் போகின்றன பூக்கள்.

கனிந்தும் பிறகு கரைந்தும் உதிர்கின்றன கனிகள்.


காலம் காய்த்த காட்சியென

உதிக்கின்றனர் சூரிய சந்திரர்.

நாட்களை உதிர்த்து 

நகர்கின்றன காலங்கள்.


பாலில் இருந்து நீரைப் பிரிக்கவும்

கடல்நீரில் இருந்து உப்பைப் பிரிக்கவும் 

அறிந்தே பிறக்கின்றன

அன்னமும் பென்குவினும்.


மழை,கார் இருட்டிலும்

கொப்பிழக்கப் பாய்வதில்லை மந்திகள்.


சூரியனை நோக்கி விழித்திருக்கும் புற்கள்

முறைப்பாடுகள் செய்வதில்லை.


சேவலின் கம்பீரம் பேட்டிடத்து இல்லை.

பசுவின் சாந்தம் காளையிடத்து இல்லை.

விரையும் குதிரைக்கு கொம்பு இல்லை

பாடும் குயிலுக்கு அழகில்லை

யானைக்குத் தன் பலம் தெரிவதில்லை

புறா தன் இணை பிரிவதில்லை.


சுயாதீனமாய் திரியும் உயிரினங்கள்

பருமனே இல்லை.


பாருங்கள்,

காலத்தால் அன்றி கனிவதே இல்லை 

பழங்கள் மரத்தில்.


சங்கு என்னவோ சுட்டாலும்

வெண்மையையே தருகிறது.


உலகப் பண்பாட்டையே

உருட்டி விளையாடுகிறது

கண்ணுக்கே தெரியாத 

நுண்ணுயிர் ஒன்று.


இலவசக் காட்சியென

வாழ்க்கைக் கோலங்களை

 விரித்து வைக்கிறது பிரபஞ்சம்.


பின்புறமாக பறக்கவல்ல

ஹம்மிங் பறவை,

மூன்று விழிமடல்கள் கொண்ட ஒட்டகம்,

விழி திறந்த படி தூங்கும் டொல்பின்,

கால்களால் சுவை அறியும்

வண்ணாத்திப்பூச்சி,

இரண்டு கண்களாலும் இரண்டு காட்சிகள்

காணும் ஓணான்,

பிறந்த நிமிடமே பறக்கும் தேனீ,

வெட்டும் துண்டுகளில் இருந்தெல்லாம் 

உயிர்க்கும் நட்சத்திரமீனெனெ

இவைகளெல்லாம் 

கற்றுக் கொடுக்கிறன 

வாழ்க்கை வினோதங்களை


அவரவர்க்கான வல்லமைகளையும் 

புதிர்மிக்க இரகசியங்களையும்

இதற்குள் எங்கோ தான்

ஒழித்து வைத்துள்ளது இயற்கை....


கற்றபடியும் பெற்றபடியும்

தொடர்கிறது வாழ்க்கை.


இன்னும்,

குழந்தை உயிரினங்கள்

தவழும் மடியிலெல்லாம்

 நிறைந்தே கிடக்கிறது

கடவுளின் புன்னகை.


நீரூற்றி, கவனித்து நட்ட விதைகள்

நலிவின்றித் தருகின்றன கனிகள்.

அவைகளின் விதைகளில்

துளிர்க்கின்றன விருட்சங்கள்.


கவனிப்பிலும் அன்பிலும் 

உயிர்க்கிறது உலகு.


season சிரிக்க 

சிந்துகிறது வாழ்க்கை!


Season's Greetings!



யசோதா.பத்மநாதன்

13.12.2020.

Sunday, December 6, 2020

ஆறு....

 அகம் நகுதல் - உள்ளம் உவகை கொள்ளுதல் - உள்ளம் புன்னகைத்தல் - இப்படி ஒரு சம்பவத்தை ஏதேனும் ஒரு முறையேனும் நிச்சயம் நாம் அனுபவம் செய்திருப்போம்.

உவகை கொண்ட தருணங்கள், அகம் நகை செய்த தருணங்கள் பல இன்றைக்கும் எனக்கு ஞாபகத்தில் உள்ளன. கடந்த வெள்ளிக் கிழமை நடந்த அகம் உவகை கொண்டு ஆறாக பெருகி ஓடிய தருணம் ஒன்று இது.



                      ஆறு

சில நாட்கள் உன் வகுப்புக்கு நான் வரவில்லை.

அடுத்த வகுப்புக்குள் நுழைந்த தருணம் ஒன்றில்

நீ ஓடி வந்து வழி மறித்தாய்.

விழியெல்லாம் ஆர்வத்தைக் கோலி

பதினெட்டுப் பற்களிலும் புன்னகை தேக்கி

'ஒன்றைத் தொடு' என்றாய்.

நீலம் என்றேன்.

மேலுமொன்றைத் தொடு என்றாய்

பூ ஒன்றைத் தொட்டேன்.

மேலும் ஒன்றைத் தொடப் பணித்தாய்.

இரண்டைத் தொட்டேன்.

ஆறைத் தொடு; ஆறைத் தொடு என்று துள்ளினாய்.

ஆறைத் தொட்டேன்.

அதை விரித்து,’யூ ஆர் த குயின்’

என்றதைச் சொல்லி விட்டு

பரட்டை மயிர் துள்ளித் துள்ளி விழ

குதித்தோடிச் சென்றாய்.


உன்பின்னால் பெருகி ஓடியது

ஆறு....

Tuesday, November 24, 2020

தற்குறிப்பேற்ற அணி - 10 - ( 26.10.2020 )

   கடந்த மாதம் SBS வானொலியில் ஒலிபரப்பான ‘தற்குறிப்பேற்ற அணி’ குறித்த நிகழ்ச்சியினை இங்கு பதியத் தாமதமாயிற்று. மன்னிக்க.

SBS வானொலியில் தற்குறிப்பேற்ற அணி

    ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் அந் நிகழ்ச்சியில் எழுதியது முழுவதையும் இணைத்துக் கொள்ள முடியாத காரனத்தால் எழுதியதன் எழுத்துப் பிரதியினையும் இத்தோடு பிரசுரம் செய்கிறேன். 

சில நேரங்களில் இறுதி நேரங்களில் இடம்பெறும்    சமூக மாற்றங்கள்      நிகழ்ச்சியிலும் இறுதி நேர மாற்றங்களுக்கு உட்பட வேண்டி   வரும். இதிலும் அப்படித்தான். இந் நிகழ்ச்சி நடந்த போது சிறந்த பின்னணிப்பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் காலமாகி இருந்தார். அவரால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டதாக அமையப்பெற்ற இந் நிகழ்ச்சியில் அவரை நினைவு கூர்ந்தது மிக்க மன நிறைவைத் தந்த ஓர் தற்செயல் நிகழ்ச்சி!    

.......................................

          தற்குறிப்பேற்ற அணி            

அணிகளின் வரிசையிலே இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது தற்குறிப்பேற்ற அணியாகும்.

தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன? 

கவிஞன் தான் கருதும் பொருளை இயல்பாக நடக்கும் பொருள் ஒன்றின் மேல் ஏற்றி பாடுவது தற்குறிப்பேற்ற அணியாகும். உதாரணமாக

https://www.youtube.com/watch?v=1eTFoIwr74w

இளையநிலா பொழிகிறதே..

இளைய நிலா பொழிகிறதே பாடல்

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ….

இப்பாடல் வரியில் முகில் அலைவதும் அது மழையாகப் பொழிவதும்  இயல்பாக நடைபெறும் நிகழ்ச்சி. அதற்கு கவிஞன் தான் கருதும் ஒரு காரணத்தை கற்பித்து இதனால் தான் இது என்று புது அர்த்தம் கற்பிப்பதை தற்குறிப்பேற்ற அணி என்று சொல்லலாம். 

“பெயர் பொருள் அல்பொருள் எனஇரு பொருளினும்

இயல்பின் விளை திறனன்றி அயலொன்று

தான் குறித்தேற்றுதல் தற்குறிப் பேற்றம்”(தண்டி-56 ) என்று தற்குறிப்பேற்ற அணிக்கு இலக்கணம் சொல்லும் தண்டியலங்காரம்.

அதாவது பெயரும் பொருள், பெயராத பொருள் என்னும் இருவகைப் பொருளிலும் இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஒழித்து, கவிஞர் தாம் கருதிய வேறு ஒரு காரணத்தை அவற்றின் மீது ஏற்றிச் சொல்லுதல் தற்குறிப்பேற்றம் என்னும் அணியாகும்.

இந்த அணியைப் பயன் படுத்தி தமிழ் இலக்கியங்கள் பல இடங்களில் சிறப்புப் பெற்றிருக்கிறது. சங்க இலக்கியங்களில் இருந்து, சிலப்பதிகாரம், பெரிய புராணம், கம்பராமாயணம், நளவெண்பா, முத்தொள்ளாயிரம் என்று தமிழ் இலக்கியங்கள் இத் தற்குறிபேற்ற அணியினால் தம்மை அலங்காரம் செய்து கொண்டிருப்பது காணும் தோறும் களிப்பு தர வல்லது. நம் நவீன திரைக்கலைக் கவிஞர்களும்

https://www.youtube.com/watch?v=tOkFty1_Umk

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்

பூவில் வண்டு கூடும் பாடல்

https://www.youtube.com/watch?v=-K178KOmy2k

நீதானே எந்தன் பொன் வசந்தம் ( 2.08 – 2.17)

நீதானே எந்தன் பொன் வசந்தம் பாடல்

https://www.youtube.com/watch?v=Nt-0Oj-vfbo

நதியில் ஆடும் பூவனம்

நதியில் ஆடும் பூவனம் பாடல்

https://www.youtube.com/watch?v=OOE8Ogxrqo4

இது ஒரு நிலாக்காலம்

இது ஒரு நிலாக் காலம் பாடல்

https://www.youtube.com/watch?v=yIPxZtuUb0k

பூவே இளைய பூவே

பூவே இளைய பூவே பாடல்

என்று இப்படிப் பலவாக இந்த அணியை நன்கு பயன்படுத்தி உள்ளனர். 

இப்படியாக நீளும் திரை இசையின் வரிசையில் வரும் இந்தப்பாடல் முழுக்க முழுக்க தற்குறிப்பேற்ற அணியை கையாண்டு புனையப்பட்டிருப்பது மேலும் இவ்வணிக்கு அழகு சேர்ப்பது.

https://www.youtube.com/watch?v=GmYlUUNn6fw

வானமெங்கும் தங்க விண்மீன்கள் 

வானமெங்கும் தங்க விண்மீன்கள் பாடல்

கவிஞருடய கற்பனை உள்ளமும் அவர் தம் ஆற்றலும் வெளிப்பட இவ்வணி பலவாறாக துணை செய்திருக்கிறது இப்பாடல்கள் வழி நாம் அறிந்திருப்போம். அதனை இலக்கியங்கள் தோறும் கூட கண்டு கண்டு களிப்புறலாம்.

முத்தொள்ளாயிரத்துக் காட்சி ஒன்று இது.

யானைகள் போர்க்களத்தில் பகைவர்களின் மார்புகளைக் குத்துதல் என்பது இயற்கையாக நடைபெறும் ஒன்று தானே?. ஆனால் இந்த யானைகளோ பகைவர்களின் மார்பினை ஓலையாக்கித் தங்கள் தந்தங்களை எழுத்தாணிகளாகக் கொண்டு, இந்நிலம் எம்மன்னனனுக்கே சொந்தம் என்று எழுதுவதாகக் கவிஞர் தன் குறிப்பினை அச் சம்பவத்தில் ஏற்றி,

“மருப்பூசியாக மறங் கலைவேல் மன்னர்

உருத்தகு மார்பு ஓலையாகத் திருத்தக 

வையகம் எல்லாம் எமதென்று எழுதுமே

மொய்யிலைவேல் மாறன் களிறு” (முத்தொள்ளாயிரம் - பா.எண்-60)

என்று தற்குறிப்பேற்ற அணிக்கு அழகு செய்துள்ளார். அவ்வாறு  கவிஞர்கள் தற்குறிப்பேற்ற அணியை எழுத்தாணியாகவும் தம்கற்பனை வளத்தை கொண்டு தமிழ் இலக்கிய ஏடுகளை அழகாக்கிய தருணங்களை இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

இது முத்தொள்ளாயிரத்தில் வரும் இன்னொரு காட்சி.

சேரனின் நாட்டில் உள்ள வீடுகளின் வாசல் கதவுகளில் இருக்கிற கதவுக் குமிழ்கள் தேய்ந்து போய் கிடக்கின்றன. அது இயற்கையாக திறந்து திறந்து பூட்டுவதால் தேய்ந்து போன குமிழ்கள். ஆனால் கவிஞரின் கண்களுக்கோ அது வேறுவிதமாகப் புலப்படுகிறது.  அது ஒரு காட்சியாக கவிஞனுக்குத் தெரிகிறது. சேரமன்னன் தேரேறி பவனி வரும் போது மகள் கண்டால் அவளுக்கு காதல் நோய் வந்துவிடுமென தாய் கதவை தாழ் போடுகிறாளாம். மகளோ தாய் சென்றவுடன் தாள்பாழைத் திறக்கிறாள். அன்னை தாழ் போட மகள் தாழ் திறக்க காதல் பயிர் வளர குமிழ் தேய்கிறதாகத் தெரிகிறது கவிஞனின் கற்பனைக் கண்களுக்கு. தற்குறிப்பேற்ற அணியில் அது ‘தாயார் அடைப்ப, மகளிர் திறந்திட தேயத் திறந்த குடுமியவே’ என்று வருகிறது அவ்வரி.(முத்தொள்ளாயிரம் 10)

இனி நாம் நளவெண்பாவுக்கு போவோமா?. அங்கே ஒரு கடற்கரைக்காட்சி. நளன் கடற்கரை ஓரமாக நடந்து செல்கிறான். அரவம் கேட்டு நண்டுகள் கரையில் இருந்து கடலுக்குள் ஓடி மறைகின்றன. இது இயல்பாக நடைபெறும் காட்சி தான். ஆனால் கவிஞனுக்கோ அது வேறொரு விதமாகத் தெரிகிறது. தன் குறிப்பினை – தான் சொல்ல வந்த கருத்தினை அந் நிகழ்ச்சியில் ஏற்றி இவ்விதமாகச் சொல்கிறான்.

காரிருளில் கானகத்தே காதலியை கைவிட்ட

பாதகனை பார்க்கப் படாதேன்றோ – நாதம்

அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி

ஒளிக்கின்ற தென்னோ உரை. 

அதாவது, மனைவியை கானகத்தே தனியாக விட்டு விட்டு செல்லும் பாதகனைப் பார்க்கக் கூடாது என்று நண்டுகள் ஓடி ஒழிகின்றனவாம். என்பது கவிஞர் கையாண்ட சொல்லோவியம்.

இப்போது இராமாயணத்திலே ஓருகாட்சி காணப் போவோம். இராமன் வில் வளைத்துச் சீதையை மணக்க வேண்டி, விசுவாமித்திர முனிவருடனும், தம்பி இலக்குவனுடனும் மிதிலை மாநகரம் செல்கின்றான். அந்நகரத்து அருகில் செல்லும்போது, நகர் மதில் மேல் உள்ள கொடிகள் காற்றில் அசைந்தாடுகின்றன. கொடிகள் காற்றில் அசைந்தாடுவது இயல்பாக நிகழும் நிகழ்ச்சி தானே? ஆனால் கம்பருக்கோ, மதில் மேல் உள்ள கொடிகள் அசைந்தாடுவது, சீதையை விரைவில் வந்து மணம் புரியுமாறு இராமனைக் கை காட்டி அழைப்பது போல உள்ளது என்று தம் குறிப்பை கொடியில் மீதேற்றி கூறுகிறார். இதனை,

............ செழுமணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச்

செங்கண் ஐயனை ஒல்லை வா 

என்று அழைப்பது போன்றது என்கிறார்.

இது போல ஒரு காட்சியினை நாம் சிலப்பதிகாரத்திலும் காணலாம். ’போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட’என்கிறார் அங்கு இளங்கோ. 

அதாவது, அங்கு கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருகிறார்கள். வருகிற போது மதுரையின் மதில்கள் மேல் கொடிகள் இயல்பாக அசைகின்றன. அதனை  இளங்கோ அடிகள் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் அதனால் வராதே வராதே என சொல்வதைப் போல அசைகின்றன என்று தன் குறிப்பினை கொடி அசையும் இயல்பின் மீது ஏற்றிக் கூறுவது அறிந்து கொள்ளத்தக்கது. 

வானவில்லின் எழில் கோலம் ஒன்று முத்தொள்ளாயிரம் தந்த புலவனுக்கு இப்படியாக தெரிகிறது. அண்ணாந்து பார்க்கின்றான் புலவன். வானில் வர்ணங்களின் ஜாலமாக வானவில் தெரிகிறது. அதனைக் கண்ட புலவனின் கற்பனை வேறுவிதமாக ஓடுகிறது. சேரனுக்கு அஞ்சித் தான் விண்ணவர் சேரனின் கொடியான விற்கொடியினை  அங்கு அழகாக வரைந்து வைத்துள்ளனர் என்று, 

“வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன் 

வில் எழுதி வாழ்வார் விசும்பு”(முத்தொள்ளாயிரம் - பா.எண்-5)

என்ற பாடல் வரிகளில் பதிந்து வைத்துள்ளார். மழைபெய்து முடித்தவுடன் வானில் வானவில் தோன்றுவது இயற்கை. ஆனால் சேரனின் வீரச்சிறப்பைப் பறை சாற்ற புலவர் வலிமையிற் சிறந்த வானோர் கூட சேரனுக்கு அஞ்சி, அவனுக்குப் பணிந்து திறை செலுத்தி அவன் சின்னமாம் விற்கொடியினை வரைந்து அவனை மகிழ்விக்கின்றனர் என்று உலகில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிப் பாடியுள்ளார்

https://www.youtube.com/watch?v=Ux0LERGc1cc

இது ஒரு பொன்மாலைப்பொழுது

இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடல்

இப்படி ஒரு வானவில்லைக் கண்ட நாம் இடிமுழங்கி மழைபொழியும் காட்சி ஒன்று ஒரு பக்தனுக்கு எப்படி தெரிகிறது என்று பார்க்காமல் போக முடியுமா? இது ஓர் தமிழ் பக்தி இலக்கியக் காட்சி.

முன் இக் கடலைச் சுருக்கி, எழுந்து, உடையாள்

என்னத் திகழ்ந்து, எம்மை ஆள் உடையாள் இட்டு இடையின்

மின்னிப் பொலிந்து, எம் பிராட்டி திரு அடிமேல்

பொன்னம் சிலம்பில் சிலம்பி, திருப் புருவம்

என்னச் சிலை குலவி, நம் தம்மை ஆள் உடையாள்

தன்னில் பிரிவு இலா எம் கோமான் அன்பர்க்கு

முன்னி, அவள் நமக்கு முன்சுரக்கும் இன் அருளே

என்னப் பொழியாய், மழை ஏல் ஓர் எம்பாவாய்!

மாணிக்க வாசகருக்கு  வானத்திலே ஒரு காட்சி தெரிகிறது. அது மழை வரப்போகிற காட்சி. வானில் கருமேகம் சூழ்ந்து மின்னல் வெட்டுகிறது, இடி இடிக்கிறது, மழை பொழிகிறது, வானவில் தோன்றுகிறது, அது அவருக்கு 

மேகமே, நீ முதலில் இந்தக் கடலைக் குடித்துச் சுருக்கினாய், பிறகு மேலே எழுந்தாய், உமையின் கருமேக  நிறத்தைப் பெற்றுத் திகழ்ந்தாய். பிறகு எங்களை ஆளும் உமையின் சின்ன இடையைப்போல் அழகிய மின்னல்களை வெட்டினாய். உமையின் பாதங்களில் உள்ள தங்கச் சிலம்பைப்போல் இடிச் சத்தம் செய்தாய். நீ வரையும்  வண்ண வானவில்லோ உமையின் அழகிய புருவத்தைப்போல் தோன்றுகிறது. எங்களை ஆட்கொள்ளும் அந்த உமையவளை எப்போதும் பிரியாதவன் சிவபெருமான். அந்தச் சிவனுடைய அன்பர்கள் கேட்பதற்கு முன்பாகவே உமை அள்ளி அள்ளித் தருகின்ற அருளைப்போல, நீயும் மழையாகப் பொழிகிறாய்!

என்பதாகத் தோன்றுகிறது. 

இப்படி ஒரு மழைக்காட்சி இன்றய கவிஞர் உள்ளத்தில் அந்திமழையாக தற்குறிப்பேற்ற அணியில் ஏறி இப்படி ஒலிக்கிறது.

https://www.youtube.com/watch?v=iNi4SNm2RIo

அந்திமழை பொழிகிறது

அந்திமழை பொழிகிறது பாடல்

இப்போது பெய்த இந்த இலக்கிய மழையில் நனைந்த படியே சிலப்பதிகார காட்சி ஒன்றுக்கு வருவோமா?. இங்கு வைகைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கண்ணகி, கோவலன், கவுந்தியடிகள் மூவரும் ஒரு படகொன்றில் ஏறி வையை ஆற்றைக் கடந்து மதுரை மாநகர் செல்கின்றனர். இரு மருங்கிலும் சோலைகளில் உள்ள மரங்கள் உதிர்த்த மலர்களைச் சுமந்து கொண்டு வையை பெருகி ஓடுகிறது.அது இயற்கையாக நிகழும் நிகழ்ச்சி. ஆனால் அதனை இளங்கோவடிகளோ அது கண்ணகிக்கு வரப் போகும் துன்பத்தை அவ் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி முன்பே அறிந்தவள் போல வருந்தி அழுத கண்ணீரே ஆறாக ஓடுகிறது என்றும்; அதனைப் பிறர்க்குத் தெரியாமல் மறைக்க வேண்டி மலர் ஆடை போர்த்துக் கொண்டு செல்கிறாள் என்றும் கற்பனை நயம் தோன்ற வேறு ஒரு குறிப்பை ஏற்றிக் கூறுகிறார். இதனை,

வையை என்ற பொய்யாக் குலக்கொடி

தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்

புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்

கண் நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி

(புறஞ்சேரி இறுத்த காதை,170-173)

என்ற அடிகளால் அறியலாம்

இப்படியாக மலர்களால் தம்மை மறைத்துக் கொண்டு ஓடும் வைகையைக் கண்டதும் முத்தொள்ளாயிரத்தில் இருக்கும் ஒரு மலர்காட்சி நினைவுக்கு வருகிறது. தற்குறிப்பேற்ற அணியினால் அலங்காரம் செய்யப்பட்ட அந்தப் பாடல் இது தான்.

கார்நறு நீலம் கடிக்கயத்து வைகலும்

நீர்நிலை நின்ற தவம்கொலோ – கூர்நுனைவேல்

வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்

கொண்டிருக்கப் பெற்ற குணம்.(75)

கார் காலம். நல்ல மணம் கொண்ட நீல நிறக் குவளைப் பூ தினந்தோறும் நீர்நிலையின் மத்தியில் நின்றபடி தவம் செய்கிறது. எதற்காக? கூரான நுனி கொண்ட வேலை ஏந்தியவன், வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்தவன், விரைந்து செல்லும் குதிரையைக் கொண்டவன், பாண்டியன் வழுதியின் மார்பைச் சேரும் பெருமைக்காகதான் அந்தக் குவளை மலர் தவம் இருக்கிறதோ?

சாதாரணமாகக் குளத்தில் நிற்கிறது குவளை மலர். அதன்மீது ‘பாண்டியன் மார்பைச் சேர்வதற்காகத் தவம் செய்கிறாயோ’ என்று புலவர் தன்னுடைய குறிப்பை / கற்பனையை ஏற்றிச் சொல்வதால் இந்தப் பாடல் தற்குறிப்பேற்ற அணியில் அமைந்துள்ளது. இந்தப் பாடலின் மையக் கருத்தைச் சற்றே நீட்டி இன்றய கவிஞர் வைரமுத்து இப்படியாகச் சொல்வார்.

https://www.youtube.com/watch?v=CTkKDJNOUjI 

வெள்ளிமலரே, ( 1.11 – 2.00 )

வெள்ளி மலரே பாடல்

யசோதா.பத்மநாதன். 20.06.2020.


Saturday, November 14, 2020

நேர்ஸிங் ஹோம்

 இப்படி ஒரு வார்த்தைப் பிரயோகம் தமிழ் பண்பாட்டுக்குள் அண்மையில் புகுந்த ஒன்றுதான். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் வெளிநாட்டு வாழ்க்கையும் பணத்தை மையமாகக் கொண்ட நுகர்வுக்கலாசாரமும் புகுந்துவிட்டபின் தமிழ் பண்பாடு சார்ந்த வாழ்வு என்பது சின்னாபின்னப்படுத்தப்பட்டு விட்டது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகள் மற்றும் நகர் புறங்களில்...

அதனால் 70, 80 களில் இருக்கின்ற வயதானவர்களுக்குத் தான் இந்தத் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அவர்கள் இத்தகைய கலாசார மாறுதல்களுக்குப் பழக்கப்படாது வாழ்ந்துவிட்டவர்கள். பிள்ளைகள் தம்மைக் கடசிவரை கைவிடாது காப்பாற்றுவார்கள் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். வயோதிபமும் அந்த நம்பிக்கையும் அவர்களைக் கைவிடும் போது அவர்கள் துவண்டு போவது வருத்தம் தருவது.

இந்த வாழ்க்கை முறை நம்மை வந்தடைந்து பலவருடங்கள் ஆயிற்று. எனினும், நாம் இன்னும் அதனை ஒரு சொல்லத் தகாத வார்த்தையாக; பிரயோகிக்க தயங்கும் ஒரு வார்த்தையாக; கேட்க விரும்பாத ஒரு சொல்லாக அதனை நாம் பரிபாலித்து வருகிறோம். 

குறிப்பாக 50களில் இருக்கிறவர்கள் இவை குறித்து இனி வெளிப்படையாகப் பேச முன்வரவேண்டும். நடைமுறை வாழ்க்கையினையும் அதில் இருக்கும் நன்மை தீமைகளையும் அலசி ஆராய்ந்து இன்னொருவரில் - அது தன் சொந்தப் பிள்ளையாக இருந்தாலும் கூட அவர்களுக்கு வயோதிபத்தில் பாரமாக இல்லாது தமக்கான பாதையை முதலிலே தீர்மானித்து அதற்கேற்ப தம் மனதை அதில் எழும் எண்ணங்களை மறுபரிசீலனை செய்து தம்மைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிள்ளைக்கு நான் என்ன எல்லாம் செய்தேன்! அவர்கள் என்னைப் பார்க்க வேண்டியது அவர்களது கடமை என்ற விதமான எண்ணப்பாங்கையும் தங்கியிருத்தல் போன்ற இன்னொருவருக்கு பாரமாக இருக்கும் காரியத்தைப் பற்றியும் நாம் இனி சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

மேலும் ஒரு வயோதிபர் ஒருவர் நேர்ஸிங் ஹோமில் இருக்கிறார் என்றால் அவரை ‘பாவமாய்’ பார்க்கும் தன்மையையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

நேர்ஸிங் ஹோம் கள் நன்றாகவே செயற்படுகின்றன. உயர்தர சேவைகளை சொந்தப் பிள்ளைகளை விட தரமானதாக வழங்குகிறார்கள். துறைசார்ந்த வல்லுனர்கள் அங்கு 24 மணி நேரமும் செயற்படுகிறார்கள். இதனை நாம் ஏன் இன்னும் புரிந்து கொள்ள மறுக்கிறோம்? ஏற்றுக்கொள்ள இயலா மன முரண்களோடு அல்லாடுகிறோம்?

பார்க்க ஒருவர் இல்லாத போது, பாதுகாப்பும் சிறந்த  24 மணி நேர சேவையும் வழங்கும் இத்தகைய இடங்களில் பெற்றோரை பிள்ளைகள் விடுவதென்பது பிள்ளை மீதான ஒரு  குற்றப்பார்வையாக பார்க்கப்படுவது ஏன்?

இன்னும் ஒரு 10 வருடத்தில் நான் சென்று தங்க ஏற்ற ஒரு நேர்ஸிங் ஹோமை நான் இப்போதே தெரிவு செய்து விட்டேன். அது தனி அறையாக; தனியான குளியலறை வசதிகளோடும் தமிழ் ஒலி/ஒளிபரப்புச் சேவை; தமிழ் உணவு வசதிகளோடும் 24 மணி நேரமும் தமிழில் உரையாடி வைத்திய வசதியைப் பெறத்தக்க தமிழ் வைத்தியர்கள் கொண்ட இடமாகவும், சொந்தமாகவே நகம் வெட்டுவோர், தலைமுடி திருத்துவோர், மருந்தகம் போன்ற வசதிகளை  தன்னுடனேயே வைத்துக் கொண்டிருக்கிறது அந்த மையம். உடற்பயிற்சி மையங்கள், நேர்ஸிங் வசதி மற்றும் ஒவ்வொரு நாளும் படுக்கை விரிப்புகள் மாற்றி தோய்த்து உலர்த்தி ஆடைகளை தரும் வசதிகளோடும் வேளைக்கு வேளை தமிழ் கலாசார நிகழ்வுகள் நடக்கும் இடமாகவும், பல தமிழ் வயோதிபர்கள் வாழும் மையமாகவும் அது இருக்கிறது. பொத்தானை அழுத்தியவுடன் பராமரிப்பாளர்கள் பெளவியமாக புன்னகையோடு வந்து என்ன வேண்டும் என்று கேட்கிறார்கள். தகுந்த செளகரிகங்களை அக்கறையோடு செய்து விட்டுப் போகிறார்கள். 

எல்லாவற்றுக்கும் மேலாக படு சுத்தமாக அளவான பொருட்களோடு பெரு நிலப்பரப்பில் கம்பீரமாக அது அமைந்திருக்கிறது.

 மாலை நேரங்களில் விளையாட, உரையாட வசதிகள் உள்ளன. தனியாகவோ கூட்டாகவோ முதியவர்கள் விளையாடத்தக்க விளையாட்டுகளாக அவை இருக்கின்றன. வேளா வேளைக்கு வண்டிலை உருட்டிக் கொண்டு தேனீர் வேண்டுமா பிஸ்கட் வேண்டுமா என்று கேட்கும் பணியாளர்களின் தமிழ் கேட்க மிக இனிமையாக இருக்கிறது.

அது எனக்கு பெருத்த ஆறுதலைத் தருவதற்கு இன்னொரு காரணம் அது எம் ஓய்வூதிய வருவாயில் 85 % ஐ மட்டுமே இவற்றுக்காகப் பெற்றுக் கொள்ளுகிறது என்பதும் தான்.

இனி நேர்ஸிங் ஹோம் பற்றி புதிய ஓரு விழிப்புணர்வு வர வேண்டும். 

அது சென்று சேர ஏற்ற ஓர் இடம் தான்.

யார் யாரெல்லாம் வருகிறீர்கள்? :)

இனி ஒரு பின்னிணைப்பு:

அண்மையில் வாசிக்கக் கிடைத்த ’கனலி’ இதழ் இம்முறை யப்பானிய மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக பிரசுரமாகி இருக்கிறது. அருமையான அவர்களின் இந்தப் பிரயத்தனம் மிக்க நேர்த்தியோடும் சிறப்பாகவும் தமிழை வந்தடைந்திருக்கிறது. 

அதில், வெளிவந்துள்ள  யப்பானிய மொழிபெயர்ப்புக் கவிதைகள் சிலவற்றை இங்கே பகிரத்தோன்றியது. பகிரவும் சேகரிக்கவும் ஏற்றவையாக அவை இருக்கின்றன.

1.

இலட்சியத்துடன் இருப்பது 

களைப்பூட்டுவதாக இருக்கிறது.

தன்னைத்தானே பார்த்துக் கொள்ளட்டும் 

என்று விட்டு விட்டேன் இந்த உலகத்தை.

எனது சேமிப்பில் பத்து நாளுக்கான அரிசி

கணப்பு அடுப்புக்கருகே ஒரு கட்டுச் சுள்ளி இருக்கிறது.

இனி எதற்கு ஞானத்தையும் மாயையும் பற்றிப் புலம்ப வேண்டும்?

கூரையில் விழும் இரவு மழையை கவனித்தபடி

கால் இரண்டையும் நீட்டிக் கொண்டு

செளகரிகமாக அமர்ந்திருக்கிறேன்.

........................

2.

இந்தப் புதையலை மூங்கில் புதரில் இருந்து கண்டுபிடித்தேன்.

கிண்ணத்தை ஊற்று நீரில் கழுவி,

பின்பு அதனைச் சரி செய்தேன்.

காலைத் தியானத்திற்குப் பிறகு, எனது

கஞ்சியை அதில் எடுத்துக் கொள்கிறேன்.

இரவில் எனக்கு அது வடித்த சாற்றையோ சோற்றையோ தரும்.

கீறலுற்றது; உடைந்தது; வானிலையால் தாக்கப் பட்டது; நெளிந்தது.

இருந்த போதிலும் அது என்னுடய

மேன்மை மிக்க கையிருப்பு.

( Ryokan 1758 - 1821) 

.....................

அவ்வளவு நின்மதி இந்தப் புத்தாண்டில். 

மனம் காலியாயிருக்கிறது

ஏதோ என் ஒட்டுமொத்த கடந்த காலமும்

மறைந்து விட்டதைப் போல!

( Takuboku Ishikawa 1886 - 1912 )


1. 

காத்திருப்பது எதற்காக?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும்

குவிந்து கொண்டிருக்கின்றன

நிறைய உதிர்ந்த இலைகள்

.....

2.

மலையின் மெளனத்திற்கு மேலே

அமைதியான மழை!

(  taneda Santoka 1882 - 1940)


மொழிபெயர்ப்பு: வே.நி. சூர்யா. நன்றி கனலி)

 இணைப்புக்கு கனலி இங்கே அழுத்துங்கள்.