Friday, August 27, 2010

மின்னாமல் முழங்காமல் வந்த மழை


லைசன்ஸைப் பார்த்துப் பார்த்து போய்க் கொண்டே வேலைத்தலம் போய்ச் சேர்ந்தேன் என்று சொன்னேன் தானே! அதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் இதை.


இப்போது கொஞ்சம் என் வேலை இடத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். அது ஒரு அரச திணைக்களம்.தபால் திணைக்களம்.பல்லாயிரம் ஊழியர்கள் கண்டம் முழுவதும் வேலையில் இருக்கிறார்கள்.அதில் நான் ஒரு சிறு துளி.அது மக்களுக்குப் பல பிரிவுகளில் பல சேவைகளை வழங்குகிறது.நான் வேலை செய்கின்ற பிரிவின் பிரதான வேலை தனிப்பட்ட நிறுவனங்களுக்கு வருகின்ற போகின்ற தபால்கள்,பாசல்களைப் பெற்று அவற்றை பிரித்து பகுத்து (உட்பிரிவுகளின் படி)அவர்களுக்கு அனுப்பி வைப்பது காலையில் வேலை செய்கின்றவர்களுடய வேலை.(5 மணி நேரம்.6-11)

மாலையில் 5 மணி நேரம் வேலை செய்கின்றவர்கள் காலையில் பிரித்து வைத்து விட்டுப் போன தபால்கலைத் திணைக்கள ஊழியர் மூலமாகக் கொடுத்தனுப்பி விடுவதும்,அவர்களிடம் இருந்து வருகின்ற தபால்கள்,பாசல்கள்,உள்நாட்டு வெளிநாட்டு கடுகதிக் கடிதங்கள் போன்ற வற்றை அவர்களுக்கான சலுகை விலையில் கணனியில் பதிவு செய்வதும்;ரசீதை அவர்களுக்கு அன்றே அனுப்பி வைப்பதும் அவர்களது வேண்டுகோள்களுக்கேற்ப தபால் திணைக்களத்து பொருட்களைக் கொள்வனவு செய்து அனுப்பி வைப்பதுமாகும். சில வேளைகளில் அவசர காரியமெனில் கூரியரை ஒழுங்கு படுத்தி அந்த பொருள் குறிப்பிட்ட நேரம் போய்ச் சேர ஒழுங்கு செய்வதும் மாலையில் வேலை செய்பவரது பொறுப்பு.

நான் சொனி நிறுவனத்துக்கும் அரச பாதுகாப்பு திணைக்களத்துக்குமான வெளியே செல்லும் தபால்களுக்குப் பொறுப்பாக இருந்தேன்.(இது நான் சொல்வது சுமார் 10 வருடங்களுக்கு முந்திய கதை)

இந்தச் சந்தர்ப்பத்தில் பல நூற்றுக்கணக்கான அரச தனிப்பட்ட நிறுவனங்கள் பல ஒப்பந்த அடிப்படையில் நம் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்ட படியால் அவர்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப் பட்டிருந்தன. திடீரென நம் தலைமையகம் இவற்றைத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு இப்பகுதி வேலைகளை விற்று விட்டது. அதனால் அங்கு வேலை செய்த தபால் திணைக்களத்து ஊழியர்களுக்கு 3 வாய்ப்புகளைத் தந்திருந்தார்கள்.

1.குறிப்பிட்டளவு சன்மானத்தைப் பெற்றுக் கொண்டு வேலையில் இருந்து நீங்கிச் செல்லலாம்.
2.புதிய நிறுவனத்தோடு அதே அளவு சம்பளத்தில் சேர்ந்து கொள்லலாம்.
3. வேறு இடத்துக்கு மாற்றம் தரும் வரை தாமதிக்கலாம்.

நான் 3 வது தீர்மானத்தை எடுத்திருந்தேன்.(அது பிரித்தானிய கொலனிக்குள் நம் நாடு இருந்ததன் எச்சம்.:)

அதனால் இப்போது எனக்கு என் வேலையோடு, புதிய நிறுவனத்துக்கு வேலையைக் கற்றுக் கொடுக்க வேண்டிய வேலையும் இருந்தது.5 மணி நேரம் என்பது தரப்பட்டிருக்கின்ற வேலையைச் செய்து முடிக்கவே போதுமானதாக இருக்கும். அதற்குள் புதிதாதச் சில வேலைகளும் சேர்ந்து கொள்வதால் 12 - 5 மணி வரையுமான வேலை சில வேளைகளில் கூடுதலான நேரத்தையும் எடுக்கும். ஆனாலும் வரவுப் பதிவேட்டில் 12 - 5 என்றே பதிந்து செல்வது வழக்கம்.நானே ராணி நானே பொறுப்பு என்பதால் வந்த ஒரு வித பொறுப்புணர்வு என்று சொல்லலாம்.எப்போவாவது இருந்து விட்டு முகாமையாளர் வருவார். நலமா? வேலை எப்படி? என்று கேட்டு விட்டுப் போவார். அவ்வளவு தான். வேலை கை நழுவிப் போக இருப்பதால் வந்த அசிரத்தை என்றும் இதனைக் கொள்ளலாம்.

இனி விடயத்துக்கு வருகிறேன்.(ஆலாபனை எல்லாம் முடிந்து விட்டது)வழமை போல் வந்து கையெழுத்திட்டுப் பொருட்களைப் பொறுப்பேற்று வேலை ஆரம்பித்து சுமார் 2 மணி நேரம் இருக்கும். என் முகாமையாளர் மைக்கல் பிறவுன்( எங்கள் முன்னாள் பிரதமர் கெவின் ரட் மாதிரி இருப்பார்) வந்தார். எமக்கிடையிலான் உரையாடல் கீழ் கண்டவாறு இருந்தது.

நலமா யசோதா?
நலம் நீங்கள் எப்படி மைக்?
(அதற்குப் பதில் இல்லை)வேலை எப்படிப் போகிறது?
வழமை போல.
பிரச்சினை ஏதேனும் உண்டா?
இது வரை இல்லை. சுமூகமாகப் போகிறது.
புது நிறுவனத்தினர் உன்னோடு எப்படி நடந்து கொள்கிறார்கள்.
நட்போடும் ஒத்துழைப்போடும்.
நேரம் உனக்குப் போதுமானதாக இருக்கிறதா?
சற்றுக் கடினம் தான் ஆனாலும் சமாளிக்கக் கூடியதாக இருக்கிறது.
முழு நேரமாக வேலை செய்ய உனக்குச் சம்மதமா?
என்ன? போஸ்டிலா?
ஆம் நாளையில் இருந்து உன்னால் அதனை ஆரம்பிக்க முடியுமா?
!!!!!!உண்மையாகத் தான் கேட்கிறாயா?
ஆமாம். ஒருவர் ராஜினாமாச் செய்திருக்கிற படியால் அதனையும் சேர்த்து நீ செய்ய வேண்டி இருக்கும்.
நேரம்?
9 - 5.
நிச்சயமாக. என்னை நீ தெரிவு செய்ததற்கு நன்றி.
நாளை காலை வேலை ஆரம்பிக்கு முன்பாக என் காரியாலையத்துக்கு வந்து உன் நியமனக் கடிதத்தைப் பெற்றுச் செல்.வாழ்த்துக்கள்.

முழு நேர வேலைக்குத் தவம் கிடந்த நான் எப்படி உணர்ந்திருப்பேன் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

மின்னாமல் முழங்காமல் பெய்த மழை அது.

அது என் வாழ்வுக்கான சுபீட்சமான பாதை திறக்கப் பட்ட நாள்.

நவம்பர் மாதம் 22ம் திகதி.

Thursday, August 19, 2010

லைசன்ஸ் எடுத்த கதை


சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் ஒரு சிறுகதை படித்தேன். அது சுரேந்திரநாத் என்பவர் எழுதிய தீராக் காதல் என்ற கதை.அது இப்படித் தொடங்குகிறது."கடவுள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு மகா அற்புதமான தருணத்தை எங்கேனும் ஒழித்து வைத்திருப்பார்.எனக்கு அது..." என்று ஆரம்பிக்கும்.

என்னுடய வாழ்விலும் வந்த ஓர் அற்புதமான தருணம் இது.அப்போது நான் பகுதி நேரமாக பிற்பகல் 12 மணி தொடக்கம் 5 மணிவரை வேலைக்கு (நகர் புறம் என்பதால் தொடர் தொடரூந்தில்) பயணித்துக் கொண்டிருந்த காலம்.அதனால் காலையில் இருந்த நேரத்தை கார் பழகுவதற்கு ஒதுக்கிக் கொண்டேன்.ஒரு மணி நேரம் பழக 35 டொலர்கள் கொடுத்து பழகிப் பரீட்சைக்கு மேலும் காசு கட்டி பரீட்சை நேரம் ஓடுவதற்காக காருக்கு வாடகையாக(பழகிய கார் என்றால் ஓடுவது சுலபமில்லையா)மேலும் பணம் கொடுத்து பழகிய காரையே வாடகைக்குப் பெற்று, பரீட்சைக்கு முதல் 2 மணி நேரம் பயிற்சியும் பெற்றுத் தயாராகக் காரியாலயத்தில் குந்தியாயிற்று.

பரீட்சகர் வெளியே வந்து என்னை வருமாறு அழைத்த கையோடு எனக்குப் பதட்டம் ஆரம்பமாயிற்று.என் பயிற்சியாளரிடம் வாழ்த்தினையும் திறப்பையும் பெற்றுப் பரீட்சகருடன் நடந்து வெளியே வந்தேன்.காரை எடுக்குமாறு கூறினார் பரீட்சகர். எனக்கு காரை எப்படித் திறப்பதெனத் தெரியவில்லை.பாருங்கள் பல மாதங்கள் பயிற்சி பெற்ற அதே காருக்கு எப்போதும் திறந்தவாறே கார் இருப்பதால் எனக்கு காரை திறக்கும் வழி தெரியவில்லை.(றிமோட் கொன்றோல்)அட இந்தச் சின்ன விடயம் கூட எனக்குத் தெரியவில்லையே என்று மனம் அலுத்துக் கொண்டது.நான் முழித்துக் கொண்டு நிற்க,போய் உன் பயிற்சியாளரை அழைத்து வா என்றார் பரீட்சகர்.மனம் கணக்குப் போட்டது.சரி ஒரு பிழை.முதற் கோணல் முற்றும் கோணலாயிற்றே.மனம் சோர அவரை அழைத்து வந்தேன்.

அவர் வந்து அசட்டுப் புன்னகையோடு திறந்து விட,காரை ஸ்டாட் பண்ணினேன். காரியாலய வளாகத்தை தாண்டி இடது புறம் திருப்பு என்று ஆணை பிறந்தது.அந்த இடத்தில் இருந்த ஸ்ரொப் சைன்னுக்கு கிவ் வே கொடுத்து இடது புறம் திருப்பினேன்.ப்ரீட்சகர் அதனைக் குறித்துக் கொண்டதை 'மூன்றாவது கண்'கவனித்துக் கொண்டது.மனம் அடச் சீ 2 வது பிழை என்றது. தொடர்ந்து கொமாண்டிங் தந்து கொண்டே இருந்தார் பரீட்சகர்.

முன்னால் தரித்து நிற்கிற காருக்குப் பின்னால் றிவேர்ஸ் பாக் செய்து விட்டு நீ சரி என்று நினைத்த பின் எனக்குக் கூறு என்றாள். இதற்கு மிகக் கடும் பயிற்சி எடுத்துக் கொண்டாலும் சற்று நான் இடறுகின்ற இடம் இது. எனவே வலு அவதானமாகவும் ஆறுதலாகவும் சரியாகவும் பாக் பண்ணினேன்.அதில் எனக்கொரு ஆறுதல்.கெட்டிக்காரி என்று எனக்கு நானே மனதுக்குள் ஒரு சான்றிதழையும் கொடுத்து விட்டு பாக் பண்ணியாயிற்று என்றேன் கியர் றிவேஸில் இருக்கத் தக்கதாக.சரி இனி எடுக்கலாம் என்றாள். கியரை டிறைவ்வுக்குக் கொண்டு வரும் போது நினைத்தேன். சரி மூன்றாவது பிழை.

அதன் பின் மனம் ஒரு தெளிவான தீர்மானத்துக்கு வந்திருந்தது. சரி இம்முறை லசென்ஸ் கிடைக்கப் போவதில்லை.அடுத்தமுறை கவனமாக பார்ப்போம் கிட்டத் தட்ட 120 டொலர்கள் கொடுத்து 3 தவறுகளைப் படித்திருக்கிறேன் என்று மனம் தீர்ப்பினை வழங்க, அதன் பின் தெளிவான நிதானத்தோடு கார் சுமூகமாக ஒரு தவறுகளும் நேராமல் இருப்பிடத்தை வந்தடைந்தது.

தீர்ப்புக்குக் காத்திருக்கின்ற அப் பொழுதில் பயிற்றுனர் பரீட்சை எப்படி என்று கேட்டார். நான் மூன்று தவறுகளைச் சொன்னேன்.மனம் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தது.அது தன்னை எப்போதும் சிறப்பாகத் தயார் படுத்திக் கொள்கிறது.மனதுக்குத் தெரியாத தவறு என்று ஒன்று இருக்கிறதா என்ன? அது தன்னைச் சரியாக இடம், சூழல், நிலைமை - இவற்றிற்கமைவாகத் தன்னைத் தானே சிறப்பாகத் தகவமைத்துக் கொள்கிறது.

மறு நாள் பயிற்சிக்கு நேரத்தை பயிற்றுனரிடம் குறித்துக் கொண்டு, தொடர்ந்து சிற்றிக்கு வேலைக்குப் போக வேண்டி இருப்பதால் நானே காரை ஓட்டி ரயில் நிலையம் வரை போகிறேன் என்று அவரிடம் வேண்டுகோளையும் விடுத்து விட்டுக் காத்திருந்தேன். 10 நிமிடங்களின் பின் அழைப்பாணை வந்தது.

பதில் இவ்வாறு இருந்தது."கொன்கிறாஜுலேஷன்ஸ்.யூ பாஸ்ட் த டெஸ்ட்".

ஒரே தடவையில் சித்தியடைந்த என் மன நிலையைப் பிறகு சொல்லவும் வேண்டுமா?

குதூகல மனதோடு அந்தப் புதிய லசென்ஸை அடிக்கடி திறந்து பார்த்துக் கொண்டே வேலைக்கும் போய்ச் சேர்ந்தேன்.காணுகின்ற மனிதர்கள்,மரங்கள்,வாகனங்கள் எல்லாம் அழகாக இருந்தன.நானும் ஒரு கார் வாங்கி....என்று கற்பனை விரிய பிடித்தமான கார், வண்ணம், மொடல் என்று மனம் ஒரு புதிய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது.

உண்மையில் கார் லசென்ஸ் என்பது, புது உலகுக்கான திறப்புத் தான்.சுதந்திரம் கைப்பிடிக்குள் வந்த நாள் அது.

கொஞ்சம் பொறுங்கோ, அடுத்த வாரம் வரை.சொல்ல இன்னுமொரு பாதி இருக்கிறது. அது அடுத்த வாரம் தொடரும்.அதையும் சொன்னால் தான் இந்த நாளின் அற்புதம் பூரணமாகும்.:-)

Wednesday, August 11, 2010

ஒரு பயணக் குறிப்பு


கடந்த ஒரு வாரமாக இது வரை தோன்றியிராத ஓர் உருப்படியான கேள்வி எனக்குத் தோன்றியது.அது உணவுண்ணும் போதும் தனியாக வேலை செய்கின்ற போதும் உறக்கத்துக்குப் போகும் போதும் என்னை துரத்திக் கொண்டே இருந்தது. அந்தக் கேள்வி இது தான்.

நான் ஏன் எழுதுகிறேன்?

ஒரு விதமான தேடலா என்று கேட்டால் அதற்கு இல்லை என்றே பதில். ஏனென்றால் ஓர் அசாதாரணமான வடிவத்தில் வர்ணப் பேனாவோடு தனியாக ஒரு கொப்பி இருக்கிறது பிடித்தவற்றை எல்லாம் எங்கெல்லாம் காண்கிறேனோ அப்பப்போது இதில் மறக்காமல் பத்திரப் படுத்திக் கொள்கிறேன்.பேப்பர் கட்டிங்குகள் என்று வேறு தனியாக இருக்கிறது.தவிரவும் மற்றவர்கள் பார்வைக்குக் கிட்டாத வகையில் ஒரு வலைப்பூவும் வைத்திருக்கிறேன். கட் அண்ட் பேஸ்ட் பண்ணிப் பத்திரப் படுத்த.ஆதலால் தேடலுக்கு இல்லை என்பதே பதில்.

எல்லோரும் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேனா என்று கேட்டால் அதற்கும் ம்......இல்லை என்றே பதில்.ஆனால் எனக்குப் பிடித்த பதிவர்கள் பின்னூட்டினால் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.

பொழுது போக்க? ம்கூம்.அவசரமான பல வேலைகளைக் கூட ஆறப் போட்டுவிட்டு இதற்குள் இருந்திருக்கிறேன்.முடிந்தவரை ஒவ்வொரு புதனும் பதிவு போட வேண்டும் என்று முனைப்பாக ரொம்பப் பொறுப்பாக இருந்திருக்கிறேன்.

வேற......தெரியேல்ல.

இதுவும் ஒரு விதமான பனிக்குணமாக இருக்கலாம்.

இது வரை அதற்குப் பதிலே கிடைக்கவில்லை.இந்த யோசனைக்குத் தொடரும்... போட்டு விட்டிருக்கிறேன்.

சரி போகட்டும்.என்னுடைய பதிவுகள் சராசரியாக எப்படி இருக்கின்றன என்று யோசித்துப் பார்த்தேன்.ஒரு சிலவற்றைத் தவிர ஏனையவை ஒரு சித்தாந்த தத்துவார்த்தமானவையாக இருக்கின்றன.ஆனால் எனக்குப் பிடிப்பவை எது என்று கேட்டால் தங்களைத் தாங்கள் யார் என்று வெளிப்படுத்துபவையாக இருக்கின்ற பதிவுகள் எனக்குப் பிடிக்கின்றன.எனக்குப் பிடிக்கின்ற பதிவுகளுக்கும் என்னுடய பதிவுகளுக்கும் இடையே பாரிய வித்தியாசம் இருப்பது அப்போது புலப்பட்டது.என்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றது.நான் சற்று மாற வேண்டி இருக்கிறதோ என்று தோன்றுகிறது.விருட்சமாய் வளர்ந்து நிற்கிற நான் ஐ பிடிங்கி வேறொரு விதமாய் நட்டு விட முடியுமா என்று உள்ளே ஒரு அசரீரி கீட்கிறது:)ஓம் ஓம் என்கிறது மனம்.

ஆனாலும் சற்றே இலகுவாக ஏதாவது இன்று எழுதலாம் என்று மனதுக்கும் எனக்கும் ஒரு உடன்பாடு தோன்றி இருக்கிறது இன்று.

நேற்றய தினம் வேலையால் வரும் போது மழைத் தூறலும் இருட்டுமாக இருந்தது.90 zoon இல் 4 லேன்களில் போய்க் கொண்டிருந்த வாகனங்களும் அதே வேகத்தில் வந்து கொண்டிருந்த 4 லேன்களின் வாகனங்களும் ஓரே சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தன.எதிர் பக்கத்தில் வந்து கொண்டிருந்த வாகனங்களில் சில தம் ஹெட் லைட்டினால் சிக்னல் போட்டுக் காட்டிக் கொண்டு போயின.அது ஒரு வித வாகனப் பண்பாடு. வீதிப் பண்பாடு என்று சொல்வது கூடுதல் பொருத்தம்.ட்றைவர்களுக்கு மட்டுமே தெரிந்த பாஷை அது. 'வாகனப் பொலிஸார் எங்கேயோ நிற்கிறார்கள் கவனம்' என்பது அதன் அர்த்தம்.என் வேகத்தைப் பார்த்தேன் சராசரியாக 90ல் இருந்ததில் மகிழ்ச்சி.

(ஒரு முறை இப்படித்தான் தமிழர் ஒருவர் வாகனப் பொலிசார் நிற்கிறார்கள் என்று எதிரே வந்து கொண்டிருந்த வாகனத்துக்கு லைட்டினால் சைகை காட்டினாராம் பகல் பொழுது அது.அவர் சைகை காட்டிய வாகனம் மப்டியில் வந்து கொண்டிருந்த பொலிஸ் வாகனமாம்.அதனால் பொலிஸ் அவரை நிறுத்தி ஏன் லைட் சைகை காட்டினாய் என்று கேட்க இவர் ஒரு மாதிரியாகச் சமாளிக்க அது நல்ல வேடிக்கையாக இருந்தது என்றார்.)

நினைத்தது போல் கிட்டத் தட்ட 10 மைல் தள்ளி இருட்டுக்குள் சிவப்பு நீல வெளிச்சம் தெரிந்தது.மிகவும் மறைவான இடத்தில் நிறுத்தப் பட்டிருந்த காரில் இருந்து அந்த வெளிச்சம் வந்து கொண்டிருந்தது.அருகை நெருங்கிய போது பிடிபட்டிருந்த ஒரு காரும் நீலச் சீருடைப் பொலிஸாரும் தெரிந்தனர்.பிடி பட்டிருந்த மனிதர் 3 பொயிண்ட்ஸ் ஐயும் 350 டொலர்களையும் இழந்ததுடன் சற்றே தன் வேலைக் களைப்போடு நின்மதியையும் தொலைத்திருப்பார் என்று தோன்றியது.வோனிங் சைன் தந்த வாகனங்களை - அதன் டைறைவர்களை நன்றி சொல்லத் தோன்றியது இப்போது எனக்கு.மொத்தமாக எல்லோருக்கும் இருக்கின்ற 11 பொயின்ஸ்சும் இழக்கப் படாதிருந்த 350 டொலர்களையும் நினைத்துப் பார்த்தேன்.நின்மதியாக இருந்தது.

நின்மதியை எது எது எல்லாம் தீர்மானிக்கிறது பாருங்கள்!

Wednesday, August 4, 2010

வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்


"வாழ்க்கைக்கான பாடம் வகுப்பறைக்கு வெளியே தான் இருக்கிறது"என்று சொல்வார்கள்.அதனை யாரும் சொல்லித் தருவதில்லை. நாமே சமூகம்,சூழல்,குடும்பம், நண்பர்கள்,அனுபவங்கள் வாயிலாகக் கற்றுக் கொள்கிறோம். அதனால் தான் நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்றனர். நல்ல நண்பர் வட்டம் வேண்டும் என்றனர்.குடும்பங்களுக்குள் வன்முறை கூடாதென்றனர்.அறம், பண்பாடு,சமயங்கள் தோன்றின.சட்டங்கள்,தண்டனை முறைகள் பிறந்தன.ஒழுங்கும் விதியும் அமுல்படுத்தப் பட்டன.

புலம் பெயர்ந்த பின்பும், சமூக ஊடாட்டத்தின் போதும், வாழ்க்கை தந்த அனுபவங்களின் போதும் நான் கண்டு கொண்டதென்னவென்றால் ஒருவர் தன் பிள்ளையைத் தன் காலில் தான் நிற்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான்.அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி; பணமுள்ளவராக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி;கல்வியறிவுள்ளவராக இருந்தாலும் சரி இல்லாதவராக இருந்தாலும் சரி;மன உறுதியும் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் வலுவும் உள்ள பிள்ளையாக; தனக்கு தன் தேவைகள் விருப்பங்கள் இவற்றை இனங்கண்டு கொள்ளத் தக்க பிள்ளையாக - அதில் தெளிவான தீர்மானம் உள்ள பிள்ளையாக;இலக்கினைக் கண்டடைந்து அதை நோக்கி பயணிக்கும் திடமுள்ளவனாக; உறுதியாக பிரச்சினைகளை எதிர் கொள்ளும் தீரம் மிக்கவனாக;வெற்றியில் நிதானமாய் இருக்கத் தக்கவனாக;தோல்வியில் துவண்டு போகாதவனாக; அப்பிள்ளை இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

சமூகத்தையும் வாழ்க்கையின் சுக துக்கங்களையும் பிள்ளைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்; மாற்றம் ஒன்றே மாறாதது என்ற உண்மையையும் பிறர் கையில் எதற்கும் தங்கியிருக்காத தன்மையையும் தன்னைப் புரிந்து கொள்ளும் தெளிவையும் அதே நேரம் அன்பு, மனிதப் பண்பு,எளிமை,சினேகிதத்துவம்,சேவை போன்ற பண்புகளையும், பிள்ளைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.தவறுகளில் இருந்து எழுந்து நடக்கும் வித்தை தெரிந்தவனாக பிள்ளை வளர வேண்டும்.

ஒவ்வொரு பிள்ளையிடமும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கிறது.அதனை அடையாளம் கண்டு அதில் அவன் தன் ஆற்றலைக் காட்ட பெற்றோர் உதவ வேண்டும்.புலம் பெயர்ந்த நாடுகளில் பிள்ளைகள் பாடசாலை தவிர விளையாட்டு, ரியூஷன், நீச்சல், கலை அதிலும் வின்ரர் விளையாட்டு சமருக்கு வேறு விளையாட்டு என பிள்ளைகள் பிள்ளைகளாக இல்லாமல் அவர்களது நேரங்கள் பெற்றோரால் களவாடப் படுகின்றன. பெற்றோரின் ஆசைகள் எல்லாம் பிள்ளையில் திணிக்கப் படுகின்றன. அதிலும் ஒரு பிள்ளையாக மட்டும் இருந்து விட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடும்.

தன் பிள்ளை எல்லாவற்றிலும் திறமை உள்ளவனாக வர வேண்டும் என்று பெற்றோர் ஆசைப் படுவது இயல்பு தான். ஆனால் பிள்ளை பிள்ளையாக இருக்க வேண்டும் என்பதும் கவனிக்கப் பட வேண்டியது முக்கியம்.கல்வி கற்கும் இயந்திரமாக பெற்றோர் ஆட்டி வைக்கும் பொம்மையாக பெற்றோரின் ஆசைகளின் வடிகாலாக இருப்பதால் பிள்ளை வளர்ந்த பின் பணம் கொட்டும் ரெல்லர் மெஷினாக மட்டுமே இருப்பான்.மகிழ்ச்சியை அவன் டொலரில் தான் காண வேண்டியிருக்கும்.

பிள்ளைக்கு இல்லாத ஒரு கனவுலகத்தை சிருஷ்டித்துக் காட்டும் பெற்றோரும் உள்ளார்கள்.பணத்தின் மதிப்பு,தம் தேவைகள் எது என்பது பற்றிய தெளிவு,சிக்கனம் இவைகளும் கவனிக்கப் படவேண்டியவை.தமக்குரிய கஷ்டங்களை மறைத்து தம் தகுதிக்கு மீறி பிள்ளைக்கு வேண்டுவனவற்றை எல்லாம் கொடுத்து வாழ்க்கையைப் பற்றிய தவறான முன்னுதாரணமாக அவர்கள் ஆகி விடுவதுமுண்டு.இதனால் திடீரென ஒரு சரிவு வரும் போது அதனை பிள்ளையால் எதிர் கொள்ள முடியாது போய் விடக் கூடும்.சில வேளை பணமில்லாவிட்டாலும் படம் பார்க்கப் போக வேண்டும் என்பது முக்கியமாகத் தோன்றக் கூடும்.ஒரு வேளை உணவை விட ஒரு பிள்ளைக்கு புது உடுப்பு கூடுதலான தேவையாக இருக்கக் கூடும்.அதனால் இயல்பாக இருப்பதும் அதனை பிள்ளைக்கு தெளிவாக காட்டுதலும் கூட முக்கியமானது தான்.கனவுகளைக் காணட்டும் ஆனால் யதார்த்தத்தில் இருக்கட்டும்.Think globaly;Act localy.

கலையோ விளையாட்டோ ஏதாவது ஒன்றில் - அது பிள்ளைக்கு மட்டும் பிடித்தமானது எது என்பதைக் கண்டு அதில் மட்டும் அவனை ஈடு படுத்தினால் பிள்ளைக்கு நேரம் மிச்சமாவதுடன் முழுவதுமாக ஒரு விடயத்தில் தன் ஈடுபாட்டைக் காட்டவும் அது ஏதுவாக இருக்கும்.சில வேளை தனிமையும் கலை மூலமான வெளிப்பாடுகளும் சிறந்த மன வலி நிவாரணி என்பதை பெற்றோர் அறிவது நலம். குடும்பத்துக்கான நேரமும் அதே முக்கியத்துவத்தோடு உணரப்பட வேண்டியது தான்.

அண்மையில் இளம் குடும்பஸ்தரான பொறியியலாளர் (2 ஆண் குழந்தைகளின் தந்தை) குடும்பப் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி சொல்வது என்ன? கல்வி,வேலை, வீடு, குடும்பம் எல்லாம் இருந்தும் மனப்பலம் இல்லாமையும் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் பலமின்மையும் அம்மனிதரை இறப்புக்குத் தூண்டி விட்டது போலும்.

இங்கு கல்வி இருந்து பயனென்ன? கல்விக்கூடங்கள் எதனை நமக்குக் கற்றுத் தருகின்றன? அங்கு விடு பட்ட விடயங்களான மன உறுதி, பிரச்சினைகளை எதிர் கொள்ளும் வலு,சமூக அழுத்தங்கள்,சமூகத்தின் இயல்புகள், தன்னை அறிதல்,தன் மீது நம்பிக்கை கொள்ளுதல்,சுயமரியாதை,மகிழ்ச்சியின் பாதை,வாழ்க்கையின் மாற்றங்கள் வளர்ச்சிகள் சிதைவுகள் -போன்ற இயல்புகளை எதிர் கொள்ளுதல் எவ்வாறு,போன்ற விடயங்களை நாம் எங்கிருந்து கற்றுக் கொள்ளப் போகிறோம்? விடுபட்டிருக்கின்ற இத்தகைய விடயங்களைப் பிள்ளைகளுக்கு யார் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?

இதில் இருக்கின்ற ஒரு ஆபத்து என்னவென்றால் சமூகத்தில் இருக்கின்ற பண்பாட்டுக் கோட்பாடுகளும் பெண்கள் மீதான அழுத்தங்களும்,பொருளாதாரம் ஒருவரிடம் மட்டும் குவிந்திருப்பதும் மக்களிடம் சிலவற்றுக்கெதிராக எதிர்த்து நிற்கும் வலுவைக் கொடுக்கவில்லை. தன்னம்பிக்கையை வளர்க்க அவை உதவவில்லை.அதனால் பலமிழந்தவர்களாக சமூக நீரோட்டத்தோடு அடித்துச் செல்லப் படுபவர்களாகவே பலர் உள்ளனர்.வாழ்க்கையோடு சமரசம் ஏற்றுக் கொள்வதோடு அல்லது சகித்துக் கொள்வதோடு முடிவுக்கு வருகிறது.மகிழ்ச்சியற்ற முகங்களுக்கு சமூகம் ஏற்றுக் கொள்ளத் தக்கதான முக மூடிகள் கச்சிதமாகப் பொருந்துகின்றன.வாழ்க்கை வண்ணமயமானது என்று சமூகத்துக்குக் காட்டுவதிலேயே காலம் கரைந்து விடுகிறது.மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கவும் எதிர்கொள்ளவும் யாரும் தயாராயில்லாமல் இருக்க கல்வியும் தன் பங்கை ஆற்றி இருக்கிறது.

அண்மையில் வாசித்த ஆப்பிரகாம் லிங்கன் பாடசாலைக்கு தன் மகனை அனுப்பிய போது ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதம் மிக முக்கியம் வாய்ந்ததென்றே தோன்றுகிறது.இது தான் அவர் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்.

எவரும் முற்றிலும் நேர்மையானவர் அல்லர்;உண்மையானவர் அல்லர்--இதை அவனுக்குச் சொல்லுங்கள்.

தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியைக் கொண்டாடவும் கற்றுக் கொடுங்கள்.

பெருமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

மனம் விட்டுச் சிரிக்கும் இரகசியம் அவனுக்குத் தெரியட்டும்.

டம்பப் பேச்சுக்கு அடிமை ஆவது எளிது என்பதை அவன் சிறு வயதிலேயே அறியட்டும்.

புத்தகங்களின் விரோதங்களை அவனுக்கு உணர்த்துங்கள்.

இயற்கை விநோதங்களை அலசி ஆராய அவனுக்கு நேரம் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட ,தோற்பது கண்ணியமானது என்பதனைக் கற்றுக் கொடுங்கள்.

எத்தனை பேர் கூடி 'தவறு'என்றாலும்,சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும்,உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடக்கக் கற்றுக் கொடுங்கள்.

துன்பத்தில் அவன் சிரிக்கட்டும்.அத்துடன் கண்ணீர் விடுவது அவமானம் இல்லை என்பதை உணர்த்துங்கள்.

குற்றங்குறை கூறுபவர்களை அவன் அலட்சியப் படுத்தட்டும்.அத்துடன் அளவுக்கு அதிக இனிமையுடன் பேசுபவரிடம் எச்சரிக்கையாகவும் இருக்கச் சொல்லிக் கொடுங்கள்.

உரக்கக் கத்தும் கூட்டத்திற்கு அவன் செவி சாயாமல் இருக்கட்டும்.தன் மனதுக்கு 'சரி' என்று தோன்றுவதை துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

அவனை மென்மையாக நடத்துங்கள்.அதற்காகக் கட்டித் தழுவாதீர்கள்.

எப்போதும் எதிலும் ஆவல் மிக்கவனாக இருக்க அவனுக்குத் தைரியம் ஊட்டுங்கள்.தொடர்ந்து தைரியசாலியாக இருக்க விடாமுயற்சியைக் கற்றுக் கொடுங்கள்.

தன்னம்பிக்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.அப்போது அவன் மனித சமுதாயத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனாக இருப்பான்.

இவையெல்லாம் மிகப்பெரிய ,கடினமான நடைமுறைகள்தான்.ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.ஏனெனில் இனிமையான என் மகன் மிகவும் சிறியவன்.

Wednesday, July 28, 2010

தங்கப்பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதித்தது போலே


மகா பாரதத்தில் ஒரு இடம் வருகிறது.

கங்கை கன்னியுடல் தரித்து மானிட உலகத்துக்கு வருகிறாள். அவளின் அழகில் மோகித்த சந்தனு மகாராஜா அவளை மணம் புரிந்து கொள்ள வேண்டுகிறான்.அவள் தன்னுடைய நிபந்தனைகளைச் சொல்கிறாள்.மகாராஜாவும் அதற்கு சம்மதிக்கிறான்.
சந்தனு மகாராஜாவின் மனைவியானாள் கங்கை.

அவர்களுடய இல்லறம் பற்றி மகாபாரதத்தில் ஒரு இடம் வருகிறது. சந்தனு மகாராஜாவின் மனைவியான கங்கையின் இல்லறக் குண இயல்பு பற்றியது அது.

"கங்கா தேவியினுடய வினயமும், ஒழுக்கமும்,உபசாரமும்,கூட இருக்கும் போதும் இல்லாத போதும்,ஒரே மாதிரியாக தன்னிடம் அவள் காட்டிய அன்பும்,அரசனுடய இதயத்தைக் கவர்ந்தன."

"கூட இருக்கும் போதும் இல்லாத போதும் ஒரே மாதிரியாக தன்னிடம் அவள் காட்டிய அன்பு"
ஒரு நுட்பமான பதிவு என்றே தோன்றுகிறது.இது ஒரு அரிய குண இயல்பு.உள்ளார்ந்த சுடரின் ஒளி அது.உண்மையின் பிரகாசம்.உண்மையாக இருத்தலின் அழகு அது.ஒரு மனிதனிடம் இருக்க வேண்டிய குண அழகு.சொத்து.அது தனக்கும் தன்னை வரிந்தவனுக்கும் அவள் கொடுக்கும் வெகுமதி.

இதே மாதிரியான வினயமும், ஒழுக்கமும், உபசாரமும், அகச் சுடரும் கொண்ட ஒரு பெண்ணை அண்மையில் வாசித்த ஒரிசா நாட்டுக் குறுநாவல் தந்தது.நாவலின் பெயர் கடமை. அந்த அரிய கதையைத் தந்தது யுகமாயினி இதழ் 32.மே 2010 சஞ்சிகை.மூலக் கதையாசிரியர் ஜே.பி. தாஸ் அவர்கள்.ஆங்கில வழியிலிருந்து அதனைத் தமிழில் மொழியாக்கம் செய்திருந்தார் சுப்ரபாரதி மணியன் அவர்கள்.(கட்டாயம் பெண்கள் வாசிக்க வேண்டிய குறு நாவல் அது)

அதில் வருகிற கதை நாயகி 17 வயதில் திருமணம் செய்து கொண்ட கிராமத்து அடக்கமும், அப்பாவித்தனமும், தனக்கென வரிந்து கொண்ட வாழ்க்கை நியமங்களையும் கொண்ட பெண்.
நகரம் பற்றிய பயங்கள் நிரம்பியவள்.சந்தனு மகாராஜாவைப் போலவே அவனும் நல்ல கணவன். நகரின் வேலை நிமித்தம் நகருக்கு வருகிறார்கள்.வெளியே போய் மற்ற பெண்களைப் போல நடமாடி வர அனுமதித்த போதும் வீட்டை விட்டு தனியே போக அவள் ஒரு போதும் விரும்பியதில்லை.அவளை ஒரு ஆசாரமிக்க ஒரு இஸ்லாமியப் பெண்ணாகக் கற்பனை பண்ணுங்கள்.

ஒரு நாள் கணவன் வேலைக்குச் சென்ற பின் கதவு தட்டப் பட்டது.அவள் கதவைத் திறக்க மறுத்து விட்டாள். கணவன் வந்த போது அது பற்றித் தெரிவித்தாள். அதற்கு அவன் அது தபாற்காரனாக இருக்க வேண்டும்.இதோ தபால் வெளியே கிடந்தது எனக் காண்பிக்கிறான்.வேறொரு நாள் அதே போல கதவு தட்டப் பட்டது.அவள் தபாற்காரனாக இருக்க வேண்டும் என்று நினைத்து கதவைத் திறக்காது தபாலைக் கதவுக்குக் கீழே போட்டு விட்டுப் போகும் படி கூறுகிறாள்.ஆனால் அது சுகயீனம் காரணமாக சீக்கிரமாக வீட்டுக்கு வந்து விட்ட அவள் கணவனாகும்.

கணவன் இருக்கின்ற போதும் இல்லாத போதும் ஒரே மாதிரியாக இருக்கின்ற பண்பினைப் பெற்ற துணை அது.உண்மையின் ஒளிர்வு.நேர்மையின் பிரகாசம்.அமைதியின் ரகசியம்.வாழ்க்கையின் சுபீட்சம் அதற்குள் இருக்கிறது."உண்மையாய் இருத்தல்" என்பதுவே அது.

அது இயல்பாகவும் இயற்கையாகவும் வெளிப்படுகின்ற போது அழகாகிறது.வாழ்க்கைத் துணையும் இல்லத்தின் அறமும் இவ்வாறு இருந்தால் அழகாகுமில்லையா?

Wednesday, July 21, 2010

வரலாற்றுப் பாதையில் தவறவிட்ட ஆட்டுக் குட்டி - 2.



சிங்கள மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப் பட்ட இன்னுமொரு அழகான கவிதை இது.மஹேஷ்.முனசிங்ஹ என்ற கவிஞர் தான் இதையும் எழுதியிருக்கிறார். ரிஷான் ஷெரீப் இதனை அழகுற மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்.உயிர்நிழல் 32ல் வெளியாகியிருக்கின்ற 11 மொழிபெயர்ப்புக் கவிதைகளில் இதுவும் ஒன்று.

மஹேஷ் முனசிங்ஹவின் பாடு பொருளும் அதனைச் சொல்ல அவர் எடுத்தாளும் மொழி நயமும் தைரியமும் தனித்துவமும் கொண்டவை.பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களுக்கே சரி பிழைகளை தனக்கே உரித்தான உணர்வுகளின் மொழியினூடாகச் சொல்வதற்கு அசாத்தியமான துணிச்சலும் நேர்மையும் தார்மீக உணர்வும் வேண்டும்.அது அவ்வளவு எளிதானதல்ல.உண்மையான வீரன் ஒருவனால் மட்டுமே அது சாத்தியமாகும்.அது அவருக்குச் சாத்தியப் பட்டிருக்கிறது.

கவிதையின் பேசு பொருள் போரும் போரின் பின்பான ஒரு மனச்சாட்சியும் (அது பக்தியும் தர்மமும் நிறந்த பெளத்த மனிதனின் குரல்).ஒரு இராணுவ வீரனின் குரல் எனவும் கொள்ளலாம் இதனை.போரின் வெற்றியை அரசு பறை சாற்றிய பின் புத்த கோயிலுக்குப் போகிறான் இந்த இராணுவ வீரன். கடவுளோடு (புத்தரோடு)பேசுகிறது அவனின் மன சாட்சி. உண்மைகளின் - சத்தியத்தின் ஒளியில் அவன் நடுங்குகிறான்.கவிதையின் தலைப்பு இது தான்;

ஊனமுள்ள இராணுவ வீரனும் புத்தரும்


முதியோர்
காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள் - வயது வந்தோர்
பிணக் குவியல்களை
நிறைய நிறையக் கண்ணுற்றேன்

பாவங்களை ஊக்குவிக்கும்
துறவிகளின் உருவங்களைக் கண்டேன்
பிரித் நூலும் கட்டப் பட்டது

'நாட்டைக் காக்கும்' எனக்குக் காவல் கிட்டவென
பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து.

விழி சதை இரத்தமென தானம் செய்து
உங்களிடம் வந்துள்ளேன்

ஆனாலும் புத்தரே
உங்களது பார்வை மகிமை மிக்கது

கிராமவாசிகளுக்கு மறந்து போயிருக்கும்
மனைவி குழந்தைகளோடு
நலம் வேண்டிப் பாடும்
சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே
என் தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்

கண்ணெதிரே தோன்றுகின்றனர்
என்னால் கொல்லப் பட்ட மனிதர்கள்
ஆங்காங்கே வீழ்ந்து கிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்

நூறு ஆயிரமென
நான் கொன்றொழித்திருப்பது
என்னையே தானா?

பாளிச் செய்யுளை இசைக்கின்ற
சிறிய பிக்குகள்
பின்னாலிருந்து
நீங்கள் தரும் புன்முறுவல்
தென்படாதிருக்க
இரு விழிகளையும் மூடிக் கொள்கிறேன்

கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்
வணங்குவதற்குக் கூட உயர்த்தாமல் இருக்கின்றேன்.

கவிதையில் முரண்கள் பேசப் படுகின்றன.போரில் கொல்லப்பட்ட அப்பாவிகளின் உயிர்கள் அவனின் கண்முன்னே வருகின்றன.முதியோர்,காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள்,வயது வந்தோர் என்று தொடரும் பட்டியலில் யாரோடு தான் போரிட்டேன் என்பதும் உண்மையும் அவனை நெருடுகின்றன.நிராயுத பாணிகளான அப்பாவிகளின் முகங்கள் அவனைக் கேள்வி கேட்கின்றன. 'பாவங்களை ஊக்குவிக்கும் துறவிகள்' என கொல்லாமையைப் போதித்த புத்தனின் வழி வந்த துறவிகளின் முரண் பேசப் படுகிறது.'நாட்டைக் காத்தல்'என்ற பெயரின் பின்னால் தாயும் தாய்மையும் விலைப்பட்டுப் போனது சொல்லப் படுகிறது. இவற்றை எல்லாம் தாண்டியும் புத்தர் மகாபுருஷர் என்பது அந்த வீரனுக்குப் புரிந்திருக்கிறது.'என் தலையை ஊடுருவும் உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்' என்பது ஒரு தனித்துவ மொழி.அது பெரும்பாண்மையான எல்லோரையும் தாண்டி அவனுக்கும் புத்தருக்கும் மட்டுமே புரியும் மனசாட்சியின் மொழி.உண்மையான பெளத்தனின் புரிதலுக்கு மட்டுமே உரித்தானது.

ஆங்காங்கே வீழ்ந்து கிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்
அவனுக்குப் புரிகிறது யாரைத் தான் கொன்றேன் என்பது. எல்லோரையும் அப்பாவி மனிதர்களாய்க் காண்கிறான்.எல்லோருக்குமே எனது முகம் என்று சொல்வதில் தொனிக்கும் சோகம்; மென்மையும் ஆழமும் அதே நேரம் அதிலிருக்கும் மனிதமும் அக்கவிஞனின் அழகியலின்,திறமையின் வீரியத்தை சொல்லி நிற்கிறது.

'நூறு ஆயிரமெனக் கொன்றொழித்திருப்பது என்னையே தானா?' என்ன ஒரு சொற்கட்டு!அது சொல்லி நிற்கும் அர்த்தங்கள் தான் எத்தனை!என்னுடைய ஆத்மாவையல்லவா நான் கொன்றொழித்து விட்டு இங்கு வந்து நிற்கிறேன் என்று தர்மத்தின் வழியிலிருந்து தவறிய தன்னையே காண்கிறான்.புத்தரைப் பார்க்க முடியாமல் அவன் கண்கள் அச்சம் கொள்கின்றன; கரங்கள் உயர மறுக்கின்றன. கூனிக் குறுகி புத்தனின் முன்னால் நிற்கிறான் இந்த இராணுவ வீரன்.

ஆனால் இலங்கை தேசம் அதனை வெற்றி எனக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

உண்மை புத்தனின் முன்னால் ஊனமுற்றுக் கிடக்கிறது.

ரிஷான் மிக அழகாக இதனை மொழி பெயர்த்திருக்கிறீர்கள். சிறப்பான இக்கவிதைத் தெரிவுக்கும் தமிழுக்கு இதனைக் கொண்டு வந்தமைக்கும் என் தோழமை மிக்க நன்றிகள்.அந்த சிங்களக் கவிஞனுக்கு என் மரியாதை கலந்த வணக்கங்களும் உரித்தாகட்டும்!

அண்மையில் ஒரு ஹைக்கூ வாசித்தேன்.

"இருண்ட காட்டுக்குள்
வானம் தோன்றி மறைகிறது
அரைக் கணம்
மின்மினிக் கூட்டங்கள்"

உங்களதும் சகோதரி பஹீமாவினதும் மொழிபெயர்ப்புப் புத்தகத்தை வாசிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

மொழிபெயர்ப்பு என்பது ஒரு படைப்பை விடப் பெரியதும்;வலியதுமாகும்.அதற்கு ஒரு சீரிய நோக்கும் ரசனையும் ஆற்றலும் தன்னலமற்ற தன்மையும் வேண்டும்.நன்றி அதனை சாத்தியமாக்கும் எல்லோருக்கும்.

Wednesday, July 14, 2010

வரலாற்றுப் பாதையில் தவற விட்ட ஆட்டுக்குட்டி - 1

அண்மையில் கையில் கிட்டிய 'உயிர்நிழல்' சஞ்சிகையில் வாசிக்கக் கிடைத்த சிங்களத்திலிருந்து ரிஷான் ஷெரீப் பாலும் பஹீமா ஜெஹானாலும் தமிழாக்கம் செய்யப் பட்ட இரண்டு கவிதைகள் சிங்கள மக்களின் - குறைந்த பட்சம் இளகிய மனம் கொண்ட - மனித நியாயங்களை இன உணர்வுக்கப்பால் இருந்து சந்திக்கும் கவிஞனை தமிழ் உலகுக்கு அடையாளம் காட்டின.

அது நொந்து போயிருக்கும் தமிழ் மனங்களுக்கு சிறிது ஆசுவாசத்தையும் கூட அளிக்க வல்லதாக இருந்தது.அந்தக் கவிதைகளோடு சேர்த்து இனி வரும் சில வாரங்களுக்கு மேலும் சில கலைப் படைப்புகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்வது என் விருப்பம்.

அதற்கு முதல் தமிழும் சிங்களமும் தெரிந்த அன்பர்கள் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுதல்
தமிழ் இலக்கியத்துக்கும் சிங்கள இலக்கியத்துக்கும் வளம் சேர்க்கும் என்பதற்கும் அப்பால் மொழியால் பகை கொண்ட இரு இனங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வைக்க ஒரு பாலமாகவும் அது இருக்கும்.

இன்று உங்களோடு பகிர இருக்கின்ற கவிதை சிங்கள மொழியில் மஹேஷ்.முனசிங்ஹ என்ற கவிஞர் எழுதியது. அதனைத் தமிழாக்கம் செய்திருக்கிறார் பஹீமா ஜஹான்.இதனைப் பிரசுரம் செய்திருகிறது உயிர்நிழல் இதழ் 32.

இக் கவிதையின் களம் வன்னியில் 'மனிதாபிமான' நடவெடிக்கையின் போது கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட கற்பிணித் தாயொருவரின் புகைப்படத்தைப் பார்த்த ஒரு சிங்களக் கவிஞன் ஒருவரின் உணர்வுகள்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சமும் ஒன்று உண்டு. நாம் (தமிழர்) 'இன அழிப்பு' என்று வரையறுப்பதை அவர்கள் (சிங்களவர்) 'மனிதாபிமான' என்ற சொற் தொடரால் வரையறை செய்கின்றனர்.முரண்பாடு என்பது இந்த இடத்திலிருந்தே ஆரம்பமாகி விடுகிறது போல் தோன்றுகிறது.ஆனாலும் எனது பேசு பொருள் அரசியலல்ல; மாறாக இலக்கியமே!அத்துடன்,இது பற்றிப் பேசுவதற்கு என்னிடம் வல்லமையும் போதிய அறிவும் பரீட்சயமும் இல்லாமையால் அதனைத் தவிர்த்து கவிதைக்குள் நுழைகிறேன்.

பிறக்காத கவிதை



கண்களைக்கூடத் திறக்காத
குருவிக் குஞ்சொன்று
தாயின் கற்பத்துக்குள்ளேயே
சதை வேடர்களுக்கு
இரையானது
வெடித்துத்
துண்டுகள் வேறாகிய
தொப்புள் கொடியின் மேலாக
எச்சில் படுத்தப் படாத இறகொன்று
இரத்தம் தோய்ந்து வெளிப்பட்டது.

பச்சிளம் உதடுகளில்
கறப்பதற்குத் தழும்பிப் பார்த்திருந்த
முலைக்காம்புகள் ஊடாக
கண்ணீரை ஒத்த பாற்துளிகள் வழிந்தன
குருதியோடு குருதி கலந்து
தாய்ப்பாலின் நிறமடைந்து
பேசாத பெருநிலமும்
பெருமூச்செறிந்து
விம்மியழுதது கேட்டது

பிள்ளை கனவுகள் கண்டிருக்கும்
பாற்சிரிப்பு முகத்தில் பூத்திருக்கும்
தாய் கனவுகள் வளர்த்திருப்பாள்
வெள்ளைச் சிரிப்பை மெல்லக் கேட்டிருப்பாள்
வெறி பிடித்தவர்கள் வந்து
கனவுகளை வெடிக்கச் செய்திருக்கலாம்
தசைத் துண்டுகள் மீது
ஊறிக் கலைந்து சென்றிருக்கலாம்

உன்னைப் பலி கொண்ட காட்டுமிருகங்கள்
கொள்ளையடிக்கிறார்கள்
பிறந்த பூமியை
மோப்பம் பிடிக்கிறார்கள்
நித்தமும் இரத்த சுவை வேட்டைகளை
பிறந்திருந்தாலும்
வாழ்வொன்று எங்கே இருக்கும்
பறக்கின்ற வானத்தையும்
அவர்கள் எடுத்திருக்க

அழாமலே இருக்கிறேன்
வன்னி அதிக தூரமெனக்கு.பொறுத்திருக்கிறேன்
அசையாத
பச்சிளம் இறகை நோக்கி
கனவொன்றில்
எனது கையினைக் கொண்டு சென்று
விரலை (அது)பற்றுமோ என
பார்த்திருக்கிறேன்.



சில குறிப்புகள்:-


1. இக் கவிதையில் வரும் 'வன்னி அதிக தூரமெனக்கு' என்ற வரி சொல்லி நிற்கும் அர்த்தங்கள் ஏராளம்.ஒரு இனத்தால், மொழியால், இடத்தால்,மனதால், பகை உணர்வால் மிகவும் பிளவுபட்டு போரில் நேருக்கு நேர் மோதிக் கொண்டிருக்கும் போது மனிதம், நியாயம்,உண்மை - இவற்றுக்கு அங்கு இடமேது?

தமிழ் மக்களின் மனதுக்குத் தூரமாக என்ற அர்த்தத்திலும் இதனைக் கொள்ளலாம்.

கையாலாகத தன் நிலை எனவும் கொள்ளலாம் இதை.

2. மிக அழகாகத் தமிழில் இதனைக் கொணர்ந்த சகோதரி பஹீமா வுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகளும் வாழ்த்துக்களும்.

3......
மூலப் பிரதியில் 'நித்தமும் இரத்த சுவை வேட்டைகளை' என்று ஒரு வரி அமைக்கப் பட்டிருந்தது.அதனை 'நித்தமும் இரத்த வாடைகளை'என்று அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று தோன்றியது.

4.'வாழ்வொன்று எங்கே இருக்கும்'என்பதன் பின்னால் வினாக்குறியும்(?)'அவர்கள் எடுத்திருக்க' என்பதன் பின்னால் வியப்புக் குறியும்(!) போடப்பட்டிருந்தால் கவிதை சொல்ல வரும் உணர்வுகளை அக்குறியீடுகள் இன்னும் சற்று அழுத்திச் சொல்ல வல்லதாக இருந்திருக்குமோ என்றும் தோன்றியது.


அவரிடம் எனக்கு சில ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள், விண்ணப்பங்களும் உண்டு.

1.சிங்கள பாஷையில் வந்திருக்கும் இவ்வாறான அல்லது பிரபலமான கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து ஒரு காலத்தின் பணியை நீங்கள் ஆற்றுதல் வேண்டும்.இருபாஷைகளையும் அறிந்து வைத்திருக்கின்ற அதே நேரம் சிறந்த கவிஞையாகவும் பிரகாசிக்கிற உங்களால் அதன் சிறப்பும் மென்மையும் நளினமும் மாறாமல் அதனை எடுத்துவர முடியும். இழைக்கப்பட்ட மன வலிகளுக்கப்பால் பெருந்தன்மையும் புரிதலும் கொண்ட பெண்ணிடம் கேட்கும் ஒரு விண்ணப்பம் இது.

11.அது போலவே தமிழில் வெளி வந்திருக்கிற கவிதைகளையோ கலைப்படைப்புகளையோ கூட பெரும்பாண்மையான இனத்தவர் மத்தியில் எடுத்துச் செல்வதால் ஒரு பரஸ்பர புரிந்துணர்வுக்கு வழி சமைக்கலாமில்லையா சகோதரி?

111. அவ்வாறு ஏற்கனவே நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்றால் அதற்கான எதிர்வு கூறல்கள் எவ்வாறு இருந்தன என்று அறிய ஆவலுடையேன்.



அடுத்தவாரம் ரிஷான் ஷெரீப் மொழி பெயர்த்த ஒரு கவிதைப் பகிர்வு இடம் பெற இருக்கிறது.